Saving a Cow

Sivapathasekaran

20161014_101223

It so happens that the Almighty makes us to realise that we are blessed to serve Him. We come to know about this fact however we excel in executing our plans. Many times we miss the goals for unknown reasons. We are thrilled when we are blessed so suddenly even though we are not aiming to do a particular service. This is what exactly happened when the milk vendor knocked our doors last week and pleaded for our help to save a cow which was scheduled to reach the butcher’s hands the very next day.

The request for financial help came at a short notice. It was at that time I remembered the assistance made by a well wisher who donated an amount to be gifted for the protection of cows. This contribution came some six months back. Though he was anxious to know where the assistance was utilised, a decision could not be taken at that time for reasons, not known to me.But I was certain that the delay was made purposefully for a genuine reason to be known later.

As it was my habit to check the genuineness of the information provided, I paid a visit to his cattle shed , about 1 km from my place. It was on the banks of a river which had turned out to be the carrier of drainage wastes. The shed housed 13 cows and the new entrant was seen tied at a separate place near the shed. When I was convinced that he owned the cows and supplying milk regularly to his customers, I handed over the financial help to him with the request that the animal would be taken utmost care. I returned home with the satisfaction that the life of the Cow was extended this way. I looked at Her before leaving the shed. She looked at me for quite some time, perhaps gratefully.

I wrote to my friend who contributed for the protection of Cows by narrating the story with the picture of the animal thus saved. Pat came the reply that it was incidentally his birthday and there could not be a better gift than this. I once again thanked The Almighty to bless Ardhra Foundation to serve in this manner.

Posted in News | 1 Comment

அம்பரும் அம்பர் மாகாளமும்

Ambar4

பிரமபுரீசுவரர் ஆலயம், அம்பர்

சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட்சபை, சென்னை.

முன்னுரை:அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல் என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன் அருகிலுள்ள அம்பரையும்     நாம்  தரிசிக்கலாம்.
                                                                               அம்பர்
சங்க நூல்களான புறநானூறு , நற்றிணை மற்றும் திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம் அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.
தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே – பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .
என்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.

Ambar1

அம்பர் ஆலய பிராகாரம்

தலப்பெயர்கள்: மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.
Ambar (5)மூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால், அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் , பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
தீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல தீர்த்தம் ஆகியவை .
ஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.

Ambar3

அம்பர் ஆலய ராஜ கோபுரமும் நந்தியும்

கோயில் அமைப்பு: அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.

தென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.
கன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

Ambar (7)

திருஞானசம்பந்தர் அருளிய அம்பர் தேவாரத் திருப்பதிகக் கல்வெட்டு 

மாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர் பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

Ambar2

சமயாசாரியர்கள்

சுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.
கட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.
தல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள் வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார். நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:
” இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா? என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று… ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது.” இப்புராணம் 15 படலங்களையும் 1007 செய்யுட்களையும் கொண்டது.
சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச் சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.

இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்.
பிரமன் அருள் பெற்றது: ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக நிலத்தை அகழ்ந்து பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, ” நீயே பரம்” எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.
பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, ” அன்னமாம் பொய்கை” எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினான்.
காளி வழிபட்டது: துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.
கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான் அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.
சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், ” நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்” எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.
விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.
மன்மதன் வழிபட்டது: தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.
நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.
அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன் கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப் பேரின்பமுற்றான்.
சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
தரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார் மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த
தேவாரத் திருப்பதிகம்

பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே. 1
மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 2

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.3

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 4

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே 5.

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 6

இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே. 7

எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே. 8

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 9

வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே. 10

அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 11
திருச்சிற்றம்பலம்
                                     

                                                              அம்பர் மாகாளம்

Ambar_Magalam 025

ராஜகோபுரமும் திருக்குளமும்- அம்பர் மாகாளம் 

அம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்றைப் பெற்ற தலம்.
கோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம்.

Ambar_Magalam (4)

இரண்டாவது கோபுர வாயில்,அம்பர் மாகாளம்

மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.
முதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.

Ambar_Magalam 023

சுவாமி விமானம், அம்பர் மாகாளம்

மூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்
வழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.
கல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

Ambar_Magalam 038

வைகாசி ஆயில்யம்- சுவாமி புறப்பாடு,அம்பர் மாகாளம்

திருவிழாக்கள்: வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது . திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகங்கள்:
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 2

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. 3

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. 4

அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 5

பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 6

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 8

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 9

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே. 10

வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே. 01

அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்தலைப் படுவாரே. 02

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே. 03

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே. 04

நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே. 05

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே. 06

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே. 07

பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே. 08

உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே. 09

பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
பரவுதல் செய்வோமே. 10

மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே. 11
திருச்சிற்றம்பலம்
பண் – சாதாரி
திருச்சிற்றம்பலம்
படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 1

கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .2

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 4

புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 5

பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 6

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .7

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே. 8

வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 9

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே. 10

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல்                                      அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ     டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்னநம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்

Posted in Resources | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-4

திருநின்ற சருக்கம் 

  திருநாவுக்கரசு  நாயனார்

Appar swamigal

திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ

வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்

பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேருலகில்

ஒரு நாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

–பெரிய புராணம்

பெண்ணை ஆற்றினால் வளம் கொழிக்கும் திருமுனைப்பாடி நாடு சைவ நெறியை நிலை நிறுத்திய திருநாவுக்கரசு நாயனாரும் சுந்தர மூர்த்தி நாயனாரும் திரு அவதாரம் செய்த சிறப்பினை உடையது. அந்நாட்டிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில்  விருந்தோம்பும் பண்பு மிக்க புகழனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் மாதினியார் என்ற  அம்மையார். இவ்விருவருக்கும் பெண்மகவாகத் திருமகள் போல் தோன்றியவர் திலகவதியார் என்பவர். இவர் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பிறகு,   சைவம் தழைக்கவும், கலைகள் தழைக்கவும், உலகிருள் நீக்கும் கதிரவன் போல மருள் நீக்கியார் என்ற மகனார் அவதாரம் செய்தார். சுற்றத்தார்கள்  அனைவரும் மகிழ்வுற்று அக்குழந்தைக்காக மங்கல வினைகள் பலவும் செய்தனர். மருள்நீக்கியார் குழந்தைப்பருவத்தைக் கடந்தவுடன் புகழனார் அவருக்கு உரிய சடங்குகளைச் செய்வித்துக் கல்வி கற்கத் தக்க ஏற்பாடுகள் செய்தார். முன்னைத் தொடர்பினால் மருள்நீக்கியார் பல கலைகளை எளிதில் கற்றார்.

திலகவதியாருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆன தறுவாயில் அவரை மணம் புரிய விரும்பிக் கலிப்பகையார் என்பவர் பெரியோர்களைப் புகழனாரிடம்  அனுப்பி வைத்தார். தமது குலத்துக்கு ஒத்து இருந்தபடியாலும், சிவபக்தி உள்ளவராக இருந்ததாலும், அரசனுக்காகப் போர்க் களத்தில் வீரத்துடன்    போர் புரிபவராக இருந்ததாலும் குணநலன்கள் மிக்கவராகவும் இருந்ததாலும், அவரே தமது மகளுக்கு ஏற்றவர் என்று எண்ணிய புகழனார்,  கலிப்பகையாருக்குத் திலகவதியாரை மணம் செய்து கொடுக்க இசைந்தார்.

அந்த சமயம் வடநாட்டு அரசன் ஒருவன் தென்னாட்டின்மீது படை எடுத்து வரவே,அரசனது ஆணைப்படிப் போர்க் களம் சென்ற கலிப்பகையார், நீண்ட   நாட்கள் கடும்போரிட்டார். அதே நேரத்தில்,புகழனார் கொடிய நோயால் உயிர் நீத்தார். கற்புக்கரசியாகிய அவரது மனைவியார் தமது கணவருடன் உடன்   கட்டை ஏறினார். பெற்றோரை இழந்த திலகவதியாரும்,மருள் நீக்கியாரும் துயரக்கடலில் மூழ்கியவராய் அவர்களுக்கு இறுதிக் கடன்களைச்  செய்தனர்.

போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் சேரவே, திலகவதியார் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார். கலிப்பகையாருக்கென்று   தம்மை மணம் பேசியிருந்தபடியால், “அவருக்கே உரியவள் ஆயினேன். ஆகவே எனது உடலை அவரது உயிருடன் சேர்ப்பேன்” எனத் துணிந்தார்.    ,

இதைக் கேட்டுக் கலங்கிய மருள் நீக்கியார் தமது தமக்கையாரின் திருவடிகளில் வீழ்ந்து கண்ணீர் மல்கக் கதறினார். “ தாய் தந்தையரை இழந்த பிறகு   உம்மையே அவர்கள் வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தாங்களும் என்னைத் தனியாக விட்டு விட்டுச் சென்றால் நான் உயிர் வாழ  மாட்டேன்” என்றார். தம்பி உயிர் வாழ வேண்டும் என்ற தயாவினால், பொன்னும் மணியும் கொண்ட நாணை நீக்கி, அனைத்து உயிர்களிடமும் அன்பு   செலுத்துபவராகத் தவ வாழ்க்கை வாழ்வதை மேற்கொண்டார் திலகவதியார்.

சில காலங்கள் சென்ற பின் சமண மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மருள் நீக்கியார் சமண சமயத்தைச் சார்ந்தார். அருகிலுள்ள பாடலிபுத்திர  நகரிலிருந்த சமண குருமார்களிடம் சமண சமய நூல்களைக் கற்று , அதில் தேர்ச்சி பெற்றுத் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்.

சிவபெருமானிடம் அன்பு கொண்ட திலகவதியார் கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகைக்குச் சென்று திருவீரட்டானேசுவரர் கழல் பணிந்து  வைகறையில் கோயில் முன்பு  அலகிட்டும், மெழுக்கியும், பூமாலைகள் தொடுத்துத் தந்தும், பலவாறு திருப்பணிகள் செய்து வந்தார். அந்நிலையில்,தமது   தம்பியார் பாதை மாறிச் சமண சமயம் சென்றது அவருக்கு மாளாத்துயரைத் தந்தது. அதிலிருந்து தம்பியை மீட்டு  நன்னெறி அருளவேண்டும் என்று   நாள்தோறும் வீரட்டேசப் பெருமானிடம் விண்ணப்பித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, “ நீ கவலை நீங்குவாயாக. முற் பிறவியில் உனது தம்பி ஒரு முனிவனாக நம்மை அடையத் தவம் செய்தபடியால் இப்போது அவனுக்குச் சூலை நோயைத் தந்து அவனை  ஆட்கொள்வோம்” என்று அருளிச் செய்தார். அதன்படி வடவைத் தீ போன்ற கொடிய சூலை நோய் மருள்நீக்கியாரின் வயிற்றைப் பற்றியது.

சமணர் பள்ளியில் இருந்த தருமசேனரைச் சூலை நோய் மிகவும் வாட்டி வருத்தியது.சமண சமயத்தில் கற்ற மந்திரங்களால் அதனைத் தீர்க்க முடியாது போகவே, மயங்கி மூர்ச்சித்தார். சமண குருமார்கள் மந்திரித்த நீரை அவர் குடிக்குமாறு செய்தும் பயனில்லாது போயிற்று. மயிற்பீலியால்   உடல் முழுதும் தடவியும்,நோய் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாட்டி வதைத்தது.இனி எதுவும் செய்ய இயலாது எனக் கூறிக் கைவிட்டனர்.

அப்போது தருமசேனருக்குத் தமக்கையின் நினைவு வந்தது. தமது நிலையை சமையல் செய்பவன் மூலம் தமக்கையாருக்குத் தெரிவித்தார். அவனைக்         கண்ட திலகவதியார், “ தீங்கு ஏதேனும் நேர்ந்ததோ?” எனக் கலந்கியவராகக் கேட்டார். அதற்கு விடையாக, தருமசேனரைச் சூலை நோய்  பற்றியதையும், சமணர்கள் எதுவும் செய்ய இயலாது கை விட்டதையும், தமக்கையார் உடனே வந்து பார்க்க வேண்டும் என்ற விருப்புடன் தருமசேனர்   தன்னைத் தூது அனுப்பியதையும் வந்தவன் கூறினான். அதனைக் கேட்ட திலகவதியார்,     “ நன்னெறியில் நில்லாத சமணர் பாழிக்கு யான் வர மாட்டேன். இதனை   எனது தம்பியிடம் தெரிவிப்பாயாக” என்று கூறினார். அவனும் திரும்பிச் சென்று த ருமசேனரிடம்  அப்படியே எடுத்துரைத்தான். தமக்கையின் பதிலை அறிந்த  தருமசேனருக்கு சிவபெருமானின் திருவருள் கிட்டும் காலம் வந்தபடியால், “ இப்போதே சென்று தமக்கையாரின்  திருவடிகளைச் சேர்வேன்.” என எண்ணி த் தான் உடுத்த பாய், குண்டிகை, மயில்பீலி ஆகியவற்றைத் துறந்து விட்டு அவ்விரவே புறப்பட்டுத்   திலகவதியார் வசிக்குமிடத்தை அடைந்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.    “ சூலை நோயிலிருந்து விடுபடும் வழியைத் தாங்களே காட்டி  அருள வேண்டும்” என்று வேண்டினார். தம்பியாரின் நிலைக்கு இரங்கிய திலகவதியார், அவருக்குப் பஞ்சாட்சரத்தை ஓதித் திருநீறளித்தார். பிறகு  அவரைத் திருவதிகை வீரட்டானத்து இறைவருக்குப் பணி செய்யுமாறு அருளிச் செய்தார்.

தமக்கையின் சொற்படியே மருள்நீக்கியாரும் திருக்கோயிலுக்குள் சென்று கோயிலை வலம் வந்து, பெருமானது திருச் சன்னதியை அடைந்து வீழ்ந்து  வணங்கினார். சிவபெருமானது திருவருளால் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு அவருக்கு எழுந்தது. சூலை நோய் நீக்கி அருளுமாறு பெருமானிடம் விண்ணப்பித்த பாமாலையே அது.

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.

என்று அத்திருப்பதிகத்தின் முதல் பாடல் அவரது திருவாயிலிருந்து திருவருளால் தோன்றியது. அதன் பயனாக சூலை நோய் அவரை விட்டு அகன்றது.

கருணைக்கடலான இறைவனது திருவருளைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கி நிலமுற வீழ்ந்து வணங்கினார். அப்போது இறைவனது வாக்கு    “ இனி உனக்குத் திருநாவுக்கரசு என்னும் நாமம் எழுலகிலும் விளங்குவதாக” என்று வானிலிருந்து அசரீரியாக எழுந்தது. இராவணனுக்கும் அருள் செய்த     பெருங்கருணை அடியேனுக்கும் அருளியதோ என்று எண்ணி எண்ணி வியந்தார் நாவுக்கரசர். இவ்வாறு உலகம் உய்யவும் சைவம் தழைத்தோங்கவும்   இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற நாவரசர், தனது திருமேனியில் திருநீறு, உருத்திராக்கம் ஆகியன பூண்டு, கையில் உழவாரம் என்னும் படையை ஏந்தி  பெருமானிடம் மாறாத அன்புடன் கைத்தொண்டு செய்து வந்தார். இக்கருணையைக் கண்ட திலகவதியாரும் மனமகிழ்ந்து, திருவருளைத் துதித்திருந்தார்.

திருநாவுக்கரசர் சமணத்தை நீங்கிச் சைவரானதைக் கேள்விப்பட்ட சமண குருமார்கள் மனம் புழுங்கினர். தமது சமயத்திற்கு ஆபத்து வந்துவிட்டதோ  என்று அஞ்சினர். இதனை அரசன் அறிந்தால் அவனும் சைவனாகி விடுவானே எனக் கவலையுற்றனர். பல்லவ அரசனை அடைந்து,” தருமசேனர் பிணி  வந்ததாகக் கூறிக் கொண்டு சைவராகி விட்டார்” என்று திரித்துக் கூறினர். இதைக் கேட்டுக் கோபம் கொண்ட மன்னனிடம் சமணகுருமார்கள், அவரைத்  தண்டிக்க வேண்டும் என்று சொல்லியதும், அரசனும் தருமசேனரைத் தனது சபைக்கு அழைத்து வர அமைச்சர்களை அனுப்பினான்.அரசனது  கட்டளையை அமைச்சர்கள் திருநாவுக்கரசரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர், “ சிவபெருமான் ஒருவனுக்கே மீளா அடிமைத்திறம் பூண்டமையால் நீர் அழைக்கும் வகையில் யாம் இல்லை” என்று பொருள் படுமாறு,” யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் “ எனத் துவங்கும் திருத்தாண்டகத்தைப்   பாடி,  அவர்களுடன்  வருவதற்கு மறுத்துக் கூறினார். இதனை அறிந்த சமணர்கள் பல்லவ மன்னனிடம் சென்று, சிறிதும் இரக்கமின்றி நாவரசரை    நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இடுமாறு கூறினர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளை இட்டான். அரசனது ஏவலாளர்கள்   வெந்தழலைக் கக்கும் நீற்றறையில் அவரை இட்டு மூடித் தாளிட்டு அதனைக் காவல் புரிந்தனர். ஆனால் நாவுக்கரசரோ சிவபெருமானது திருவடிகளைச் சிந்தித்த வண்ணம் நீற்றையினுள் வீற்றிருந்தார். பெருமானது கருணையால் அந்த நீற்றறை இளவேனில் காலத்தில் வீசும் தென்றல் காற்றுப் போலவும்,  குளிர்ந்த தடாகம் போலவும் மாலை நேரத்துச் சந்திரனைப் போலவும், குற்றமற்ற இனிய வீணையின் ஒலியைப் போலவும் இன்பம் தந்தது.இவ்வாறு   பெருமானது கருணையில் திளைத்த திருநாவுக்கரசர்,

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி தீங்கு எதுவும் இன்றி இனிது வீற்றிருந்தார். நீற்றறையைத் திறந்து பார்த்த சமணர்கள் அதிசயித்து நின்றனர்.பின்னர் சமண குருமார்கள் அரசனிடம் சென்று,” இவ்விதம் தரும சேனர் பிழைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அத்தகைய சக்தியை அவர் சமண சமயத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டுவிட்டார். ஆகவே அவரை நஞ்சூட்டிக் கொல்ல வேண்டும் “ என்றனர். அரசனும் அதற்கு உடன் பட்டான்.

கொடிய விஷம் கலந்த பால் சோற்றைத் திருநாவுக்கரசர் உண்ணும்படி செய்தார்கள். ஆலால விஷம் எம்பெருமானுக்கு அமுதமானதால்  அவனடியார்களுக்கும் அமுதமாகவே ஆகும் என்று சொல்லி அதனை உண்டார் வாகீசர். அதனால் அவருக்கு எந்த விதமான தீங்கும் நேரவில்லை.

( “ பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவதுதான் அற்புதமோ?” என்பார் சேக்கிழார் பெருமான்).

நஞ்சுண்டும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்ட சமணர்கள், அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி ,நாவுக்கரசர் மீது மதம் பிடித்த யானையை ஏவி இடறச்  செய்ய வேண்டும் என்றார்கள். அரசனின் கட்டளைப்படி மத யானை நாவரசர் மீது ஏவப்பட்டது. எதற்கும் அஞ்சாதவராகப் பெருமான் திருவடிகளைச்   சிந்தித்து, “ சுண்ண வெண் சந்தனச் சாந்தும் “ எனத் துவங்கும் பதிகம் பாடி “ அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை “    என்றருளினார். ஏவி விடப்பட்ட யானையானது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கிஎதைக் கண்ட பாகர்கள் அதை அங்குசத்தால் குத்தி மீண்டும்   நாவரசர் பால் ஏவினார்கள். ஆனால் யானையோ பாகர்களைத் துதிக்கையால் வீசி எரிந்து விட்டு, சமண குருமார்களைத் தாக்கி அவர்களைத் தாக்கியது.

யானையினின்று தப்பி ஓடிப் பிழைத்த சமணர்கள் மேலும் ஓர் உபாயம் செய்தனர். திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ள வேண்டும் என்று  அரசனிடம் கூறி அதற்கு அனுமதியும் பெற்றனர். அதன்படி நாவுக்கரசரை ஓர் கல்லோடு கட்டிப் படகில் ஏற்றி கடலுக்கு அழைத்துச் சென்று   தாங்கள் எண்ணிய செயலை நிறைவேற்றி விட்டுத் திரும்பினார்கள். அந்நிலையிலும் அஞ்சாத திருநாவுக்கரசர் அஞ்செழுத்தைப் போற்றித் துதி செய்து                          “ சொற்றுணை வேதியன் “ எனத் துவங்கும் பதிகம் பாடினார். அவ்வாறு அவர் பதிகம் பாடியதும், அவரைக்கட்டியிருந்த கல்லானது தெப்பம் போல்   மிதந்தது. பிறவிக்கடலில் இருந்து கரை ஏற்ற வல்ல அஞ்செழுத்தானது இக்கடலில் ஒரு கல்லைத் தெப்பமாக்கி அடியவரைக் கரை ஏற்றியதில் வியப்பு   ஏதும் இல்லை.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

கடல் அரசனான வருணன் தனது அலைகளாகிய கைகளால் தாங்கியபடியே திருப்பாதிரிப்புலியூர் என்ற தலத்தின் அருகாமையில் கொண்டு வந்து   சேர்த்தான். அவ்வாறு செய்வதற்கு வருணன் என்ன தவம் செய்தானோ?

கரையேறிய நாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்துளியிருக்கும்  சிவபெருமானது திருக்கோயிலை வணங்கி,      “ ஈன்றாளுமாய் “ எனத் துவங்கும் திருப்பதிகத்தைத் தோன்றாத்துணையாய் அடியவர்களுக்கு விளங்கும்  பெருமான் மீது பாடினார். அங்கிருந்து புறப்பட்டுத்  திருமாணிகுழி, திருத்தினை நகர் ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, கெடில நதியைக் கடந்து   திருவதிகையை அடைந்தார்.அவரது வருகையை அறிந்த திருவதிகை நகர மக்கள் அந்நகரை அலங்கரித்துத் திருநாவுக்கரசரை  மகிழ்ச்சியுடன்   எதிர்கொண்டுவரவேற்றனர்.

தூய வெண்ணீறு அணிந்த மேனியராக உருத்திராக்கம் அணிந்த கோலத்துடன் இடைவிடாது சிவபெருமானையே துதிக்கும் மனத்துடன் ஆனந்த நீர்   பொழியும் கண்களும், திருப்பதிகம் பாடும் செவ்வாயும் கொண்ட திருநாவுக்கரசர் திருவதிகையின் திருவீதிகளில் புகுந்தார். அடியார்கள் எல்லோரும்   வாகீசப் பெருந்தகையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அடியார்கள் தொடர, நாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்து உறையும் பெருமானது   திருக்கோயிலை  அடைந்தார். தான் முன்பு சமண் வலைப்பட்டு ஈசனை இகழ்ந்துவிட்டேனே என்று உள்ளம் வருந்தி, ஏழைத் திருத்தாண்டகம் பாடிப்  பெருமானைப் பணிந்தார். அங்கு தங்கிய நாட்களில் உழவாரத் தொண்டு செய்தும் தமிழ் மாலைகளால் இறைவனை வழிபட்டும் பணி செய்து வந்தார்.

சமணர்களது மொழிகள் பொய் என உணர்ந்த பல்லவ மன்னன் சமணர் பள்ளிகளை நீக்கி விட்டுத் திருவதிகையில் குணபரவீச்சரம் என்ற       திருக்கோயிலைக்  கட்டுவித்துச் சைவன் ஆனான்.

திருவதிகைக்கு அண்மையிலுள்ள திருவெண்ணை நல்லூர் , திருக் கோவலூர், திருவாமாத்தூர் ஆகிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகங்களால்      துதித்துப் பெண்ணாகடத்துத் தூங்கானை மாடத்தே எழுந்தருளியிருக்கும்  சுடர்க் கொழுந்தீசரைத் துதிக்கச் சென்றார்  தாண்டக வேந்தர். “சமண மதத்தில்  சார்ந்திருந்த அடியேனது பழி நீங்குமாறு உமது முத்திரையை இட்டருள வேண்டும்” என்று பெருமானிடம் வேண்டினார் வாகீசர்.

பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்

என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என்மேல் பொறி; மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே

எனத் துவங்கித் திருப்பதிகம் பாடியவுடன், இறைவர் அருளால் எவரும் அறியாதபடி ஒரு சிவ பூத கணம் வந்து அவரது தோள்களில் சூலக் குறியையும்     ரிஷபக் குறியையும் பொறித்தது. சிவபெருமானது திருவருளால் நெகிழ்ந்த வாகீசர் பலநாட்கள் அங்கு தங்கிப் பணி செய்து வந்தார். பின்னர் அங்கிருந்து     புறப்பட்டுத் திருநெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் ஆகிய சிவத்   தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடித்  தில்லை நகரைச் சென்றடைந்தார்.

மறைகளையும் பிற கலைகளையும் ஓதும் அந்தணர்கள் நிறைந்த தில்லைப்பதியை அடைந்த திருநாவுக்கரசர் சிவமே நிலவிய திருவீதிகளை வலம் வந்து  ஏழ் நிலைகளைக் கொண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்தார். திருக்கோயிலை வலம் வந்த பின், பேரன்பு பொங்கக் கனக சபையில் ஆனந்த தாண்டவம் புரியும்  பெருமானைத் தரிசித்துப் ஆனந்த வெள்ளம் மேலிட உவகைக் கண்ணீர் பெருக்கிப் பலமுறை வீழ்ந்து வணங்கினார். தன்னை நோக்கி, “ என்று வந்தாய்” என்று  பொன்னம்பலவன் கேட்பது போன்ற திருக்குறிப்புத் தோன்றவே, “ ஒன்றி இருந்து நினைமின்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும், “கருநட்ட கண்டனை” என்ற     திருவிருத்தத்தையும்,  “ பத்தனாய்ப் பாட மாட்டேன் “ என்ற திருநேரிசையையும் பாடிப் பரவினர். நடராஜப்பெருமானின் தாண்டவத்தைத் தரிசிப்பதானால் பிறவியும்  வேண்டுவது என்னும் பாடல் நாவுக்கரசரது எல்லையற்ற அன்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

தில்லையில் தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்த நாட்களில்,    “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்ற பதிகம் பாடினார். அருகாமையிலுள்ள   திருவேட்களம்,திருக் கழிப்பாலை ஆகிய தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி, மீதும் தில்லையை வந்தடைந்து, “ பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்” எனத்   துவங்கும் பதிகத்தையும், “அரியானை அந்தணர் தம சிந்தையானை” என்ற பெரிய திருத்தாண்டகத்தையும்,    ” செஞ்சடைக் கற்றை” என்னும் திருநேரிசைப் பதிகத்தையும்    பாடிப் பரவினார்.

இவ்வாறு பணி  செய்து வரும்போது சீர்காழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமாதேவியார் தனது திருமுலைப்பாலோடு சிவஞானத்து   இன்னமுதத்தையும் கலந்து திருக்குளக்கரையில் தோணிச் சிகரத்தை நோக்கி அம்மே அப்பா என்று அழுத குழந்தையின் பசி தீருமாறு புகட்டியதும் அக்குழந்தை   தனக்குப் பாலூட்டியது தோடுடைய செவியன் என்று தந்தைக்கு அடையாளங்களுடன் சுட்டிக் காட்டியதும் அதனால் சிவஞான சம்பந்தர் ஆகியதும் ஆகிய சிறப்புக்களை   அடியார்கள் மூலம் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் ஞானம் பெற்ற அக்குழந்தையைத் தரிசித்து வணங்குவதற்காக சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். வழியில்     திருநாரையூர் என்ற பதியை வணங்கிப் பதிகங்கள் பாடிவிட்டுச் சீர்காழியை வந்தடைந்தார்.

இறைவனால் சூலை நோய் கொடுத்து ஆட்கொள்ளப்பெற்ற  நாவுக்கரசரின் வருகையை அறிந்த ஞானசம்பந்தர், அடியார்கள் உடன்வர நாவரசரை எதிர்கொண்டு   வரவேற்றுப் பணிய, வாகீசரும் அவர் வணங்காமுன் தாம் அவரது திருவடிகளில் பணிந்தார். அவ்வாறு வணங்குதலும்,சம்பந்தர் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு,     ” அப்பர்” என, அவரும் “ அடியேன் “ என்றார். இதனைக் கண்ட சிவனடியார்கள் மகிழ்ச்சிக் கடலிலாழ்ந்தனர். சைவத்தின் இரு புண்ணியக் கண்கள் என்று அவர்களை     உலகோர் புகழ்ந்தனர். இருவருமாகத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி இறைவரைத் தரிசித்தபோது, நாவுக்கரசரை நோக்கித் திருஞானசம்பந்தர் ,                ” அப்பரே, உங்கள்  பெருமானைப் பாடுவீராக” என்றவுடன்,  அப்பரும்,” பார் கொண்டு மூடி” என்ற திருவிருத்தம் பாடியருளினார். பல நாட்கள் இருவருமாகச்  சீர்காழியில் அளவளாவிக்     கொண்டும்,பெருமானைத் தரிசித்துக் கொண்டும் இருந்தபோது, நாவரசர் தாம் சோழ நாட்டுத் திருப்பதிகளைத் தரிசிக்க விரும்புவதாகக் கூற, சம்பந்தரும் அவரைத்  திருக்கோலக்கா என்ற பதி வரையில் உடன் வந்து விடை கொடுத்து அனுப்பினார்.

சீர்காழியிலிருந்து புறப்பட்ட அப்பர் பெருமான், சிவபெருமான் விரும்பி உறையும் பதிகளான திருக் கருப்பறியலூர்,  திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை வீரட்டம்,    திருநின்றியூர்,திருநனிபள்ளி திருச் செம்பொன்பள்ளி, மயிலாடுதுறை,திருத்துருத்தி, திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருக்கோடிகா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர் ,   திருநாகேச்சரம், திருப்பழையாறை ஆகிய ஊர்க் கோயில்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடித்  திருச்சத்தி முற்றத்தை அடைந்தார். இயமன் வந்து உயிரைக் கவரும்   முன்பு உனது மலர்ச் சேவடிகளை என் சிரத்தின் மீது பொறித்து வைப்பாயாக என்று சிவக்கொழுந்தீசரிடம் பதிகம் பாடியவுடன், பெருமான் அவரை நல்லூருக்கு வருமாறு   பணித்தான். அதைக் கேட்ட அப்பர் பெருமான் இறையருளைச் சிரத்தின் மேல் கொண்டு திருநல்லூரைச் சென்றடைந்தார். தென்பால் கயிலை போல விளங்கும் நல்லூர்த்    திருக்கோயிலை வலம் வந்து இறைவரை வணங்கியதும், “ உன்னுடைய விருப்பத்தை முடித்து வைக்கின்றோம்” என்று கூறி அவரது சென்னி மிசைப் பாத மலர்    சூட்டினான் சிவபெருமான். எல்லையற்ற கருணையைக் கண்டு உருகிய அப்பர் பெருமான் “ நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்” எனத் துவங்கும்    திருத்தாண்டகத்தால் பெருமானைத் துதித்தார். “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் ” என்று ஒவ்வொரு பாடலிலும் அக்கருணையைக்    குறிப்பிட்டுப்  பலமுறை பணிந்தெழுந்தார்

நல்லூரில் திருவடி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர், அருகிலுள்ள திருக்கருகாவூர்,திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்,திருப்பாலைத்துறை ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டுப்   பதிகங்கள் பாடிப் பணி செய்தபின் மீண்டும் நல்லூரை அடைம்து அங்குப் பல நாட்கள் தங்கி உழவாரப்பணி ஆற்றி வந்தார். பிறகுஅங்கிருந்து புறப்பட்டுத் திருப்பழனத்து    இறைவரை வணங்கியபின், திங்களூர் சென்றடைந்தார் வாகீசர்.அங்கு வசித்து வந்த அப்பூதியார் என்ற அந்தணர், திருநாவுக்கரசரது திருநாமத்தைத் தமது புதல்வர்களுக்கு    இட்டதோடு தாம் அமைத்த குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் ஆகிய தருமங்களுக்கும் நாவுக்கரசரது பெயரையே அமைத்திருப்பதைக கண்டும் கேட்டும் அறிந்த நாவரசர்   அப்பூதியாரைக் காண்பதற்காக அவரது மனையைச் சென்றடைந்தார்.

திருநாவுக்கரசரைக் காணாமலேயே அவரது பெருமையை அறிந்து அவரிடம் பக்தி பூண்ட அப்பூதியார், இப்போது நேரிலேயே அப்பெருந்தகை தமது ,மனைக்கு   எழுந்தருளியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவரைத் தம் சுற்றத்தோடு வரவேற்று உபசரித்தார். தமது மனையில் அமுது செய்யுமாறு அப்பூதியார் வேண்டவே,    அப்பரும் அதற்கு இசைந்தார். உணவு வகைகள் பலப்பல செய்தபின் அப்பூதியாரின் மனைவியார் தமது மூத்த புதல்வனாகிய மூத்த திருநாவுக்கரசை வீட்டுத்   தோட்டத்திலுள்ள வாழை மரத்திலிருந்து இலை பறித்து வருமாறு பணித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்ற மூத்த திருநாவுக்கரசு தோட்டத்து வாழைக் குருத்தை   அரியும்போது அங்கிருந்த பாம்பு அவனைத் தீண்டியது.  மூத்த திருநாவுக்கரசை விஷம் வேகமாகப் பாதித்து அவனது உச்சந்தலைக்கு ஏறத் தொடங்கியும் அதனைப்  பொருட்படுத்தாது வேகமாகச் சென்று அவ்விலையைத் தாயாரிடம் சேர்த்து விட்டு உயிர் நீத்தான். மகன் மாண்டது கண்ட அப்பூதியாரும் அவரது மனைவியாரும் ,    “ இதனை அப்பர் பெருமான் அறிந்தால் அமுது செய்ய மாட்டாரே “ எனக் கலங்கி, அச்செய்தியை வெளியிடாமல் மகனின் சவத்தை வீட்டின் ஒருபுறம் மறைத்து    வைத்தனர்.

பின்னர் இருவரும் அப்பரடிகளை அடைந்து அமுது உண்ணுமாறு அழைத்தனர். அமுது உண்ணும முன்பு வீட்டில உள்ளோருக்குத் திருநீறு வழங்கிய அப்பர் பெருமான்,   “ மூத்த திருநாவுக்கரசு எங்கே ?” எனக் கேட்க அதற்கு அப்பூதியார் “ அவன் இப்போது இங்கு உதவான் “ என்றார். இறையருளால் அப்பூதியாரின் தடுமாற்றத்தை அறிந்த    நாவுக்கரசர் நடந்ததைக் கூறுமாறு கேட்க அப்பூதியாரும் தமது மகனை அரவம் தீண்டியதால் மாண்டு விட்டதைக் கூறினார். அதனைக் கேட்ட அப்பர் பெருமான்    அச்சவத்தினைத் திருக்கோயிலுக்கு முன் கொண்டு வரச் செய்து இறைவன் மீது, “ ஒன்று கொலாம்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.

இறைவர் இன்னருளால்    சவமாய்க் கிடந்த மூத்த திருநாவுக்கரசு உயிர்பெற்று எழுந்தான். அப்படியும், அடியார் அமுதுண்ணக் காலம் தாழ்ந்ததே என வருந்திய அப்பூதியாரையும் அவரது    மனைவியாரையும் ஆறுதலளித்து ஆசி வழங்கினார் நாவுக்கரசர். சில நாட்கள் அங்கு தங்கியபின், அப்பூதியார் உடன் வரத் திருப்பழனம் சென்று அங்கு கோயில்   கொண்டுள்ள இறைவனைச்     “ சொல்மாலை “ எனத் துவங்கும் பதிகத்தால் போற்றி, அதில் அப்பூதியாரின் தொண்டையும் சிறப்பித்தருளினார். அங்கு தங்கியிருந்த   நாட்களில் அருகிலுள்ள திருச்சோற்றுத்துறைக்குச் சென்று பணி செய்து  பதிகங்கள் பாடிவிட்டு மீண்டும் திருப்பழனத்தை அடைந்து திருத்தொண்டுகள் ஆற்றி வந்தார்.    திருப்பழனத்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்துகொண்டிருந்த திருநாவுக்கரசர், மீண்டும் திருநல்லூர் சென்று வழிபட்டார். பிறகு, பழையாறை, திருவலஞ்சுழி,    திருக்குடமூக்கு, திருச்சேறை, திருநறையூர், திருவாஞ்சியம், திருப்பெருவேளூர்,திருவிளமர் ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் படி,உழவாரத் தொண்டு செய்தபின்னர்    திருவாரூரை வந்தடைந்தார்.

திருநாவுக்கரசரின் வருகையால் மகிழ்ந்த திருவாரூர் வாழ் அடியார்கள் வீதிகளை அலங்கரித்து அவரை எதிகொண்டு அழைத்து வணங்கி வரவேற்றனர். அவர்களை நோக்கி, “ புற்றிடம் கொண்டான் தன்  தொண்டர்க்குத்  தொண்டராம் புண்ணியமே” என்று பாடி, சமணர் வாய்ப்பட்ட அடியேனுக்கும் ஆரூரன் அருள் கிட்டுமோ எனப்புகன்று, அடியார்கள் சூழத் திருக்கோயிலை அடைந்தார் அப்பர் பெருமான். தேவாசிரியன் மண்டபத்தை வணங்கித திருமூலட்டான நாதரின் திருச்சன்னதியை அடைந்து, கண்கள் ஆனந்த நீர் பெருகக் காண்டாலே கருத்தாய்  நினைந்திருந்தேன்” எனும் பதிகத்தையும், பழமொழித் திருப்பதிகத்தையும் “பாடிளம் பூதத்தினானும்” எனும் பதிகத்தையும் பாடியருளி, உழவாரப்பணி செய்து கொண்டு காலம்   தோறும் பெருமானைத் தரிசித்து வந்தார்.

திருவாரூர் ஆலயத்துள் விளங்கும் மற்றொரு ஆலயமான ஆரூர் அரநெறியில் நமிநந்தி அடிகள்(நாயனார்) நீரால் விளக்கு எரித்ததைத் தமது பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் பாடினார். அதில் ஆரூரில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவைப் பற்றியும் சிறப்பித்தார் தாண்டக வேந்தர். மேலும் ,திருவாரூருக்கு அண்மையில் உள்ள ருவலிவலம்,திருக்கன்றாப்பூர், திருக் கீழ் வேளூர் ஆகிய தலங்களையும் தரிசித்து விட்டுத்  திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருக நாயனாரது மடத்தில் தங்கியிருந்த காலத்தில் சீர்காழியிலிருந்து யாத்திரையாக வந்த திருஞானசம்பந்தர் அடியார்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்து அளவளாவும்போது சம்பந்தர் அப்பர் பெருமானை வணகி,” அப்பரே, தாங்கள் திருவாரூரில் தங்கியிருந்த நாட்களில் கண்ட சிறப்புக்களைக் கூறி   அருளுவீராக” என்றார். உடனே, அப்பரும், “ முத்து விதானம் “ எனத் துவங்கும் பதிகத்தின் மூலம் திருவாரூரில் நடைபெறும் திருவாதிரை நாள் சிறப்பை  எடுத்துரைத்தார் . அதனைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், திருவாரூரைத் தரிசிக்கும் பெரு வேட்கையுடன் அங்கிருந்து ஆரூருக்குப் புறப்பட்டார். அப்பரும் திருப்புகலூர்ப் பெருமான் மீது பாமாலைகள் பாடிப் பணி  செய்து வந்த பொது, அருகிலுள்ள திருச் செங்காட்டங்குடி, திருமருகல், திருச் சாத்தமங்கை, திருநள்ளாறு ஆகிய தலங்களுக்குச் சென்று தமிழ் மாலைகளால்  பெருமானைத் துதித்து மீண்டும் திருப்புகலூரை அடைந்தார்.

திருவாரூரை வணங்கிய திருஞானசம்பந்தப்பெருமான், மீண்டும் திருப்புகலூருக்குத் திரும்பியதும் அவரைத் திருநாவுக்கரசர் எதிர் கொண்டு வரவேற்றார். புகலூரில்  தங்கியிருந்த நாட்களில், சிறுத்தொண்ட நாயனாரும், திருநீல நக்க நாயனாரும்,அங்கு வந்து சேர்ந்தனர், அனைவரும் முருக நாயனாரின் திருமடத்தில் தங்கி ஈசனது பெருமைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்தனர். இவ்வாறு பலநாட்கள் தங்கியிருந்தபின்னர், திருநீல நக்கரும், சிறுத்தொண்டரும் விடை பெற்றுக் கொண்டு தமது இடங்களுக்குத் திரும்பினர். சம்பந்தரும் அப்பரும் அம்பர் என்ற தலத்தை வணங்கி விட்டுத் திருக்கடவூர் சென்று கால காலனாகக்  காட்சி தரும் பெருமானை வணங்கிக் குங்கிலியக் கலய நாயனாரது மனையில் தங்கினர். குங்கிலியக்கலயரும் அவர்களை உபசரித்துத்  திருவமுது செய்தார். அதன் பின்னர் அப்பரும் ஞானசம்பந்தரும்  அருகாமையிலுள்ள திருக்கடவூர் மயானத்தைச் சென்று தரிசித்துப் பதிகம் பாடி, திரு ஆக்கூர் தான்தோன்றி மாடத்துப் பெருமானை வணங்கித் துதித்தபின், திருவீழி மிழலை என்ற திருத்தலத்தை அடைந்தனர்.

திருவீழிமிழலை எல்லையில் இருவரையும் அந்தணர்களும் அடியார்களும் எதிர்  கொண்டு வரவேற்றனர். நகர் முழுதையும் அலங்கரித்தனர். தொண்டர்கள் புடை சூழ இருவருமாகத திருக்கோயிலை அடைந்து விண்ணிழி விமானத்தின் கீழ் அருள் பாலிக்கும் வீழிநாதப் பெருமானை வணங்கித் துதித்தனர். கைகள் உச்சி மேல் குவித்துக் கண்கள் அருவி பொழியத் “ திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே செல்கின்றாரே”  என்னும் திருப்பதிகம் பாடிப் பரவினார் அப்பர் பெருமான். அதுபோலவே சம்பந்தரும் இறைவன் மீது செந்தமிழ்ப்  பதிகங்கள் பாடினார். இருவருமாக அங்குப பல காலம் தங்கிப் பணி  செய்து கொண்டிருக்கும் வேளையில் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது.

பஞ்சத்தால் பல்லுயிர்களும் துன்பப்படும் போது மிழலைப் பெருமான் இருவரது கனவிலும் எழுந்தருளி, “ இப்பஞ்சத்தால் நீங்கள் இருவரும் மன வாட்டம் அடைய மாட்டர்கள் என்றாலும் உங்களை வழிபடும் அடியார்களுக்கு அளிப்பதற்காக நாம் உங்களுக்குப் படிக்காசு அளிக்கின்றோம்” என்று அருளினான். அதன்படி நாள் தோறும் கிழக்கே உள்ள பீடத்தில் சம்பந்தருக்கும் மேற்கிலுள்ள பீடத்தில் அப்பருக்கும் பெருமான் ஒவ்வொரு நாளும் படிக்காசு வைத்தருளினான். அக்காசுகளைக் கொண்டு இருவரும் பண்டங்கள் வாங்குவித்து அமுது சமைப்பித்து, சிவனடியார்கள் அனைவருக்கும் நாள் தோறும் இரண்டு காலங்களிலும் பறை அறிவித்து அமுது உண்பித்தார்கள் . அதனால் துன்பம் தரும் வறுமையைப் போக்கி அருளினார்கள்.

உமையம்மையிடம் ஞானப்பாலுண்ட மகனார் ஆதலால் சம்பந்தப் பெருமானுக்கு   வாசியுடன் காசு கிடைத்தது. பின்னர் வாசி தீரக் காசு தந்தருளுமாறு அவர் பதிகம் பாடியவுடன் வாசியில்லாக் காசினைப்  பெருமான் அருளால் பெற்றார். கைத்தொண்டு செய்தபடியால் திருநாவுக்கரசர் வாசியில்லாக்  காசினைப் பெற்றார். இவ்வருட் செயலால் நாடு பஞ்சம் நீங்கி வளம் பெற்றது. வீழிப்பெருமானிடத்து விடைபெற்றுக் கொண்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கியபின் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தை அடைந்தனர்.

முன்பொரு காலத்தில் வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டுத் திருவாயிலைத் திருக்காப்பிட்டுச் சென்றபடியால் அவ்வாயிலை ஒருவரும் திறக்க முன்வராமல்  அருகாமையில் வேறொரு வாயில் அமைத்துப் பூசித்து வந்தனர். இதனை அறிந்த  சம்பந்தர் அப்பரை நோக்கி,” நாம் இருவரும் நேர் வாயில் வழியே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும். எனவே, அக்கதவம் திறக்குமாறுத்  தாங்கள் திருப்பதிகம் பாடி அருளிவீராக” என்றார்.

திருநாவுக்கரசரும்,” பண்ணினேர் மொழியாள் ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடலானார். ஆனால் திருக்கதவின் திருக்காப்பு நீங்கத் தாமதமாவதைக் கண்டு அப்பதிகத்தின் கடைசிப் பாடலில் “ இரக்கம் ஒன்றிலீர்”  எனப்பாடி வணங்கினார். இறையருளால்  திருக்காப்பு நீங்கித்  திருக்கதவம் திறந்தது.  வேத ஒலியும் ஆரவாரமும் எழுந்தன. அடியார் புடை சூழ அப்பரும் ஞானசம்பந்தப்பிள்ளையாரும்  உள்ளே சென்று இறைவனைத் தரிசித்து மகிழ்ந்தார்கள். அப்போது நாவரசர் சம்பந்தரை நோக்கி, “ இக்கதவம் அடைக்குமாறுத் தாங்கள் பாடியருள வேண்டும்” என விண்ணப்பித்தார். சம்பந்தர்  பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் திருக்காப்பிட்டது. திருவருளை வியந்த அனைவரும் பெருமானது பொன்னடிகளை வணங்கித் துதித்தனர். அன்று முதல் இறைவனுக்கு முன்புள்ள திருவாயில் திறப்பதும் மூடுவதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது.

தாம் கதவம் நீங்குமாறு பாடுகையில் திருக்காப்பு நீங்குவதற்குக் காலம் தாழ்ந்ததையும் அதே சமயம் கதவம் திருக்காப்பிட வேண்டி சம்பந்தர் பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் மூடியதையும் அன்றிரவு அப்பர் பெருமான் நினைந்து, சிவபெருமானது திருவிள்ளக்குரிப்பை அறியேன் என்று அஞ்சியவராகக் கவலையுற்று அதே நினைவுடன் துயில் கொண்டார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் எழுந்தருளி,” திருவாயமூரில் இருப்போம் அங்கே வா “ என்று அருளி விட்டு மறைந்தார். துயில் நீங்கிய அப்பர் பெருமான்,

எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு

அங்கே வந்து அடையாளம் அருளினார்

தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச்  செல்வனார்

அங்கே வா என்று போனார் அதென் கொலோ

எனத் துவங்கிப் பதிகம் பாடியபடியே திருவாய்மூரை நோக்கிச் சென்றார். அதனைக் கேள்வியுற்ற திரு ஞான சம்பந்தரும் அவரைத் தொடர்ந்து செல்லலாயினார். நாவரசருக்கு வழிகாட்டிக் கொண்டு முன்சென்ற இறைவன் பொற்கோயில் ஒன்றைக் காட்டி விட்டு மறைந்தருளினான். அப்போது ஞானசம்பந்தர் காணுமாறு இறைவன் காட்சி கொடுத்து அருளினான். அக்காட்சியை அப்பருக்குக் காட்டினார் சம்பந்தப்பெருமான். அதனைக் கண்டு பரவசமாகிய அப்பர், “ பாட அடியார் பரவக் கண்டேன்” எனத் துவங்கும் திருத் தாண்டகத்தால் இறைவனைத் துதித்தார். பின்னர் இருவரும் திருவாய் மூர்க் கோயிலை வணங்கி வலம் வந்து போற்றியபின் திருமறைக்காட் டிற்குத் திரும்பிவந்து  மறைக்காட்டு மணாளனைத் துதித்துக்  கொண்டு   அங்கே   தங்கி இருந்தனர்.

திருமறைக்காட்டில் இருவருமாகத் தங்கியிருந்த போது , பாண்டிய மன்னனின் பட்டத்து அரசியும் சோழ மன்னனின் மகளுமான மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் ஞானசம்பந்தரிடம் சிலரைத் தூது விடுத்தனர். அவர்களை அன்போடு வரவேற்ற காழிப்பிள்ளையார் அனைவரது நலத்தையும் வினாவினார். அதற்கு அவர்கள் பாண்டிய நாட்டில் சமணம் ஓங்கி ,மன்னனும் அவ்வழி சென்று விட்டதால் சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளி சமணரை வென்று சைவ நெறியைத்  தழைக்கச் செய்ய வேண்டும் என்று பாண்டிமாதேவியும் அமைச்சரும் விரும்புவதாகக் கூறினார்கள். அதனை ஏற்ற சம்பந்தர் உடனடியாகப் பாண்டிய நாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தார். அதனைக் கண்ட நாவுக்கரசர், அவரைத் தடுத்து,     “ சமணர்கள் வஞ்சனை மிக்கவர்கள். எல்லாத் தீங்கையும் துணிந்து செய்பவர்கள். அவர்களால் எனக்குக் கொடுமைகள் பல நிகழ்ந்தன. எனவே தாங்கள் அங்குச் செல்லலாகாது” என உரைத்தார். அதனைக் கேட்ட ஞான சம்பந்தப்பெருமான், “ அப்பரே, இறையருளால் சமணரை வென்று சைவ நெறியை மலரச்  செய்வேன். தேவரீர் அங்கு என்னுடன் வர வேண்டாம்.  சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு இருப்பீராக. “ என்று கூறி விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டார்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்குச் சென்ற பிறகு,திருநாவுக்கரசர் சில நாட்கள் திருமறைக்காட்டில் தங்கிப் பணி செய்துவிட்டுத் திருநாகைக்  காரோணம் முதலிய தலங்களைத் தரிசித்துத்  திருவீழிமிழலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு விண்ணிழி விமானத்தின்  கீழ் வீற்றிருக்கும் பெருமானை வணங்கினார்.அதன் பின்னர் திருவாவடுதுறையை அடைந்து அங்கு ஞானசம்பந்தர் ஆயிரம் பொன் பெற்ற அருட்  திறத்தைத் தனது  பதிகத்தில் சிறப்பித்துப் பாடினார். பின்னர் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்தவராகப் பழையாறை வடதளி என்ற திருக்கோயிலை வந்தடைந்தார். அக்கோயிலை எவரும் வழிபடாத வகையில் சமணர்கள் மூடி   வைத்திருந்ததைக் கண்டு மனம் வருந்திய அப்பர் பெருமான் திருக்கோயில் திறக்கப்பட்டு இறைவனைத் தரிசிக்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவரது செய்கையை சிவபெருமான் அரசனது கனவில் தோன்றி அறிவித்ததும் மன்னனும் அமைச்சர்களோடு ஆலயத்திற்கு விரைந்து சென்று சமணர்களை அங்கிருந்து அகற்றித் திருக்கோயிலைத் திறப்பித்தான். நாவரசரும் ஆலயத்துள் நுழைந்து பெருமானைப் பணிந்து, “ தலையெலாம் பறிக்கும்” எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடித் துதித்தார்.

காவிரியின் இரு கரைகளிலும் உள்ள சிவத்தலங்களைத் தரிசித்துத்  திருப்பதிகங்கள் பாடி வணங்கித்  திருவானைக்கா ,திருவெறும்பியூர் ,திருச்சிராப்பள்ளி ,திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் பதிகங்கள் பாடி, உழவாரப்பணி செய்தபடி,த்  திருப் பைஞ்ஞீலியைச்  சென்றடைந்தார்.

திருப் பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் மிகுந்த பசியும் நீர் வேட்கையும் ஏற்பட்டபோதும் மனம் தளராமல் சென்று கொண்டிருந்த அப்பர் பெருமான் வரும் வழியில் ஒற்று சோலையையும் குலத்தையும் உண்டாக்கி, ஓர் அந்தன வடிவம் கொண்டு அவர் முன் தோன்றினான் சிவபெருமான். அவரது பசியைப்போக்குவதர்காகப் பொதி சோறு அளித்து,” இதனை உண்டு, இக்குளத்து நீரைப் பருகி இளைப்பரிக்கொண்டு செல்வீராக” என்று அருளினான்.  தாமும் திருப் பைஞ்ஞீலிக்குச் செல்வதாகக் கூறி அவருடன் ஊரை வந்து அடைந்ததும் மறைந்தருளினான்.  இதனைக் கண்டு அதிசயித்த அப்பர் பெருமான் தம் பொருட்டு இவ்வாறு இறைவனது கருணை இருந்தவாறு எண்ணி எண்ணி விழி நீர் பெருக்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். அங்குச்  சில நாட்கள் தங்கியிருந்து உழவாரப்பணி மேற்கொண்டு வந்தார்.

வடதிசையிலுள்ள திருத்தலங்களைத் தரிசிக்க வேண்டி அங்கிருந்து புறப்பட்டுத் திருவண்ணாமலையை அடைந்து அங்கே தங்கிப் பதிகங்கள் பாடினார். பின்னர் தொண்டை நன்னாட்டுப் பதிகளை வணங்குவதற்காக அண்ணாமலையிலிருந்து புறப்பட்டுத் திருவோத்தூரை அடைந்தார். அத்தலத்து இறைவன் மீது பாமாலைகள் சூட்டி உழவாரப்பணி புரிந்த பின்னர் காஞ்சி மாநகரை அடைந்தார்.

காஞ்சி வாழ் அடியார்கள் அனைவரும் திருநாவுக்கரசரது வருகையால் மிகவும் மகிழ்ந்து நகரை அலங்கரித்து அவரை வரவேற்றார்கள்.  திருவேகம்பனது  செம் பொற் கோயிலின் கோபுரவாயிலை வணங்கியபடி அம்பிகை தழுவக் குழைந்த மேனியனாகிய ஏகம்பப்பெருமனைப்  பேரன்புடன் வணங்கிக்  “ கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை “ என்ற பதிகத்தால் பரவினார். திருக்கச்சி மயானம், கச்சி மேற்றளி,திருமாற்பேறு ஆகிய தலக் கோயில்களை வணங்கிப்  பதிகங்கள் பாடி விட்டு மீண்டும் காஞ்சி வந்தடைந்தார்.

“ கச்சி ஏகம்பன் காண் அவன் என் கண் உளானே “ என்று நிறைவு பெறும்  திருத்தாண்டகத்தால் ஈசனைத் துதித்தார். பின்னர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் திருக்கழுக்குன்றம், திருவான்மியூர் ஆகிய தலங்களை வழிபட்டுத்  திருவொற்றியூரைச் சென்றடைந்தார். அன்பர்கள் எதிர் கொண்டு வரவேற்க,அப்பர் பெருமான் திருக்கோபுரத்தை வணங்கி எழுத்தறியும் பெருமானாகிய புற்றிடம் கொண்ட பெருமானை, “ வண்டோங்கு செங்கமலம்” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தால் போற்றி வணங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு திருப்பாசூரை அடைந்து இறைவனைத் திருக்குறுந்தொகை,திரு நேரிசை,திருத்தாண்டகப் பதிகங்களால் போற்றிப் பழையனூர்த் திருவாலங்காட்டை அடைந்து “ திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே” என்ற ஈற்றடி கொண்ட திருத்தாண்டகத்தால் பாடி வணங்கினார். பின்னர், திருக்காரிக்கரை என்ற தலத்தை  வழிபட்டுவிட்டுத் திருக்காளத்தியை அடைந்து கண்ணப்பர் தொழுத கண்ணுதற் கடவுளை  விழுந்து இறைஞ்சிக் கண் களிகூரப் பரவசமாகி , “ என் கண்ணுளான் “ என்ற மகுடம் கொண்ட திருத்தாண்டகத்தால் போற்றினார்.

திருக்கயிலை மலையைத் தொழும் பெரு விருப்புடன்,  வட திசை நோக்கிச் சென்றார். வழியில் திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) என்ற தலத்தை அடைந்து தமிழ் மாலையால் வணங்கித்  தெலுங்கு நாட்டைக் கடந்து கன்னட நாட்டில் திருக்கோகரணத்தை வணங்கி,மாளவ ,இலாட மற்றும் மத்தியப் பிரதேசங்களைக் கடந்து வாரணாசியை(காசி) அடைந்தார். கங்கை பாயும் அப்புண்ணிய தலத்தில் விசுவேசனை வணங்கித் தன்னுடன் வந்த அடியார்களை அவ்விடமே விடுவித்து, மனிதர்கள் செல்ல அரிதான கானகங்களின் வழியே உணவு-உறக்கம் ஆகியவற்றை நீக்கி இரவு பகலாக எங்கும் தங்காமல் நடந்து சென்றார். அதனால் அவரது திருவடிகள் நொந்து தேய்ந்தன. தனது கைகளைக் கொண்டு தாவிச் சென்றதால்  மார்பின் சதைகளும் எலும்புகளும் தேய்ந்து முறிந்தன. வேறு செயலின்றிக்  கயிலை நாதனையே சிந்தித்தவராக அவ்வழியிலேயே தங்கி இருந்தார்.

அப்பர் பெருமான் செயலற்றுக் கிடந்த இடத்தருகில் ஒரு தடாகத்தை உண்டாக்கிய சிவபெருமான் தானே அவர் முன் ஓர் அந்தண  உருவில் எழுந்தருளி அவரை நோக்கி,” திருக்கயிலை மலையை மானிடர்கள் எளிதில் சென்று அடைய முடியாது. எனவே மீண்டுச் செல்வீராக” என்றான் . அதனை ஏற்க மறுத்த வாகீசர், “ ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை  கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று கூறினார். அவரது மன உறுதியை உலகுக்குக் காட்டிய ஈசன் அசரீரியாக,” ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திரு “ என்று ஒலித்தவுடன் உடல் ஊறுகள் முற்றிலும் நீங்கிய வாகீசர் பெருமானைத் தொழுது, “தேவரீர் திருக்கயிலையில் இருக்கும் கோலத்தை அடியேன் கண்டு தொழ  அருள் செய்வீராக”எனப் பணிந்து விண்ணப்பித்தார். ( “அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே   விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே  கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம்   நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்”. – பெரிய புராணம்)

அப்போது இறைவனது அசரீரி வாக்கு, “ இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் காண்பாயாக” என்று ஒலித்ததும்,  திருநாவுக்கரசர் இறைவனை வீழ்ந்து வணங்கி, “ வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி” எனத் துவங்கும் திருத்தாண்டகத்தால் பரவி, ஐந்தெழுத்தை ஓதியபடி அத்  தடாகத்தில் மூழ்கினார்.

சிவபெருமானது திருவருளால் உலகமே வியப்புறும் வண்ணம்  திருவையாற்றுத் தடாகத்தில் எழுந்து கரையில் ஏறியவுடன் அங்குள்ள சராசரங்கள் யாவும் சிவ சக்தி வடிவாகவே தோன்றக்கண்டார். திருவையாற்றுக் கோயில் திருக்கயிலாயம் போலக் காட்சி அளித்தது. திருமாலும்,பிரமனும்,இந்திரனும் உள்ளிட்ட தேவர்கள் சிவபெருமானைப் போற்றிசைக்கும் ஒலி எங்கும் எழுந்தது. வேத முழக்கமும், தேவ மாதர்களது இசையும் நிறைந்தது. தேவர்களும்,அசுரர்களும் முனிவர்களும் இயக்கர் கின்னரர் முதலியோரும் எங்கும் நிறைந்து விளங்கினர். வெள்ளிப் பனிமலையின் மீது மரகதக் கொடி போன்ற உமா தேவியுடன் பவள மேனியனாய் வீற்றிருந்த வள்ளலாரை வாகீசர் தரிசித்தார்.

( “ வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்

தெள்ளு பேரொளிப் பவள வெற்பு என இடப் பாகம்                                           கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த                                                       வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.” — பெரிய புராணம் )

கண்கள் அருவி நீர் பாயக் கைகள் சிரத்தின் மீது கூப்ப,மெய் சிலிர்க்க ஆனந்தக் கூத்தாடியும் பாடியும் கயிலை நாதனைத் தரிசித்த வாக்கின் மன்னவனாரது அனுபவ நிலையை யாரால் கூற முடியும்?

சிறிது நேரத்தில் கயிலைக் காட்சி மறைந்து திருவையாற்றுத் திருக்கோயில் மட்டுமே தெரியலாயிற்று. தாம் அங்கு கண்டவற்றைத் திருப்பதிகமாக,

“ மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி                போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்  “

எனத் துவங்கிப் பாடியருளினார். மேலும் பல பதிகங்கள் பாடி அத்தல த்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்து கொண்டிருந்தார்.

திருவையாற்றை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசர் அருகாமையில் உள்ள திரு நெய்த்தானம்,திருமழபாடி ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிப் பணி  செய்தபின் திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தார்.  கோயிலை வலம் வந்து பணிந்து, “ பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே” எனப்பாடினார். மேலும் திருக் குறுந்தொகை,திரு விருத்தம் ஆகியன பாடிப்  பல நாட்கள் அங்கு தங்கியிருந்தார். திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் அமைத்துக் கொண்டு பலவகைப்பட்ட திருத்தாண்டகங்களையும் திருவங்கமாலை முதலாய பல திருப்பதிகங்களையும் பாடியருளி  உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார்.

மதுரையம்பதியில் சமணர்களை வாதில் வென்று சைவத்தை நிலைநாட்டி விட்டுத் திருஞானசம்பந்தப்பெருமான் திருநாவுக்கரசரை சந்திக்க விரும்பித்  திருப்பூந்துருத்தியை வந்தடைந்தார். அதனை அறிந்த அப்பர் பெருமான்  சம்பந்தப்பிள்ளையாரின் சிவிகையைத் தாங்குபவர்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டி ஒருவரும் அறியாதபடி முத்துச் சிவிகையைத தாங்கி வந்தார்.  பூந்துருத்திக்கு அண்மையில் வந்ததும்,சம்பந்தர் சிவிகையில் இருந்தபடியே, “ “ அப்பர் எங்கு உற்றார்?” என, அச்சிவிகையைத் தூக்குபவர்களுள் ஒருவராக இருந்த நாவரசர்  மனமுருகி,” அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு  வந்து எய்தப்பெற்று இங்கு உற்றேன்” எனக் கூறித் துதித்தார்.  அதனைக் கேட்ட சம்பந்தர் விரைந்து அச்சிவிகையிலி ருந்து இறங்கி, திருநாவுக்கரசரை வணங்க, அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார்.இருவருமாகப் பெருமானது கோயிலை வணங்கித் துதித்து அத்தலத்திலேயே தங்கியிருந்தனர்.

மதுரையில் சமணர்களை வென்றதையும், பாண்டியன் கூன் நிமிர்ந்து சைவனானதையும், அனைவரும் திருநீறணிந்ததையும், மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையாரது அன்பின் மேன்மையையும்  திருஞானசம்பந்தர் வாயிலாகத்  திருநாவுக்கரசர் அறிந்தார். அவர்களைக் காண விரும்பிப் பாண்டியநாடு செல்லத் திருவுள்ளம் கொண்டார். சம்பந்தரும் தொண்டைநாட்டுப் பதிகளைத் தரிசிக்க விரும்பி அப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு திருப்பூந்துருத்தியிலிருந்து புறப்பட்டார்.

திருப்புத்தூரை வணங்கித் திருப்பதிகம் பாடிய நாவுக்கரசர் மதரைத்  திரு  ஆலவாயை  அடைந்து “ முளைத்தானை” எனத் துவங்கும் தாண்டகம் பாடி , நெடுமாற பாண்டியனும் அவனது தேவியான மங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் போற்ற அங்குத் தங்கியிருந்து திருநேரிசை, திருவிருத்தம்  ஆகிய தமிழ்ப் பாமாலைகளால்  ஆலவாய் அண்ணலடி போற்றிவந்தார்.  பின்னர் திருப்பூவணம் சென்று, “ வடிவேறு திரிசூலம்” எனும் திருத்தாண்டகம் பாடிவிட்டுத் திரு  இராமேச்சுரத்தை அடைந்தார். அங்குத் திருநேரிசை பாடிப் பல நாட்கள் தங்கிய பின், திருநெல்வேலி,திருக்கானப்பேர்  முதலிய  பாண்டிப்பதிகளை வணங்கிக் கொண்டு சோழ நாட்டை அடைந்து திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்குத் தங்கிய காலத்தில், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத் தாண்டகம்,க்ஷேத்திரக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித் திருநேரிசை,ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணம்,பாவநாசப்பதிகம்,சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடியருளி,உழவாரப்பணியில் தலை நின்றார்.

திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகுக்குக் காட்ட வேண்டி, சிவபெருமான் அவர் உழவாரம் செய்யும் இடத்தில், பொன்னும் மணிகளும் தோன்றச் செய்தான். ஆனால் அவற்றை மண் கற்களுக்குச் சமமாகக் கருதிய வாகீசர் அவற்றை அருகிலிருந்த தடாகத்தில் வீசி எறிந்தார். அப்பரின் தூய துறவு நிலையை யாவரும் அறியவேண்டி இறையருளால் தேவலோகப் பெண்டிர் அங்குத்  தோன்றி நடனம் ஆடினார். சிவபெருமான் திருவடிக்கே வைத்த நெஞ்சுடைய திருநாவுக்கரசர் அவர்களை நோக்கி, “ உங்களால் இங்கு ஆவது ஏதுமில்லை. யான் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆளாகி உள்ளேன்” என்ற கருத்தில் “ பொய்ம்  மாயப் பெருங்கடலில்”  என்று தொடங்கித் திருத்தாண்டகம் பாடினார். அரம்பையர்கள் இதைக் கண்டு அவரை வணங்கிச் என்றனர்.

சிலநாட்கள் சென்றபின், தன்னைப் புகலூர் அண்ணல் நரகத்தில் கிடக்க ஒட்டான் சிவலோகத்தில் இருத்திடுவான் என்ற கருத்தில் திருவிருத்தமும், இறைவனது திருவடிக்கே சென்று சேர வேண்டும் என்ற விருப்போடு, திருத் தாண்டகமும் பாடியருளினார்.

“ எண்ணுகேன் என் சொல்லி எ ண்ணுகேனோ                                                           எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்                                                   கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்                                                         கழலடியே கைதொழுது காணின் அல்லால்                                                         ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்                                                             புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்                                                                பூம்புகலூர் மேவிய புண்ணியனே

என்பது அத்திருத்தாண்டகத்தின் முதல் பாடல். இவ்வாறு பாடித் தொழுததும் இறைவன் அருளாலே சித்திரை மாத சதய நன்னாளில் சிவபெருமானது திருவடி நீழலில் ஆண்ட அரசு அமர்ந்தருளினார். வானோர் மலர்மாரி பொழிந்தனர். விண்ணதிர இசைக் கருவிகள் முழங்கின. அனைத்து உயிர்களும் பெருமகிழ்ச்சி பெற்றன.

**************************************

குலச்சிறை  நாயனார்

பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்ற நில வளம் மிக்க ஊரில் குலச்சிறையார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதில் அவர் தலைசிறந்து விளங்கினார். அவர்கள் எக்குலத்தவராயினும் நல்லவராயினும் தீயவராயினும் அவற்றைப் பொருட் படுத்தாது சிவனடிக்கு அன்பு கொண்டவராக இருந்தால் அவர்களை வணங்கிப் போற்றி வந்தார். அவர்கள் தனித்து வந்தாலும் பலராக வந்தாலும் எதிர்கொண்டு வணங்கி அன்புடன் திருவமுது செய்வித்து வந்தார்.விபூதி-ருத்திராக்ஷம் தரித்தவர்களையும் பஞ்சாட்சரம் ஒதுபவர்களையும் பேரன்புடன் துதித்து வந்தார்.

பாண்டிய மன்னனாகிய நின்ற சீர் நெடுமாறனிடம் குலச்சிறையார் முதலமைச்சராக விளங்கி அரச காரியங்களைத் திறம்படச் செய்து வந்தார். அத்துடன் பாண்டியனின் தேவியாகிய மங்கையர்க்கரசியின் சைவத் தொண்டிற்கு உறுதுணையாகவும் இருந்தார். அப்போது பாண்டிய நாடு சமணர் வயப்பட்டு இருந்தமையால் அரசியாரின் விருப்பப்படித் திருஞானசம்பந்தரிடம் தூது அனுப்பி அவரை மதுரைக்கு எழுந்தருள வேண்டினார். சம்பந்தப்பெருமாநிடத்துப் பெரிதும் பக்தி பூண்டு அவரது பொன்னார் திருவடிகளைத் தலைமேல் கொண்டு பணி  செய்தார். சம்பந்தரிடம் சமணர்கள் வாதத்தில் தோற்றுத்  தாம் ஏற்ற சபதப்படிக் கழு வேற முற்பட்டபோது தீமை நீங்குமாறு அவர்களைக் கழுவேற்றும் பணி ஏற்றார்.

*******************************************

பெருமிழலைக் குறும்ப நாயனார்

மிழலை நாட்டில் பெருமிழலை (புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது என்பர்) என்ற செழுமை மிக்க ஊரில் குறுநில மன்னராகப் பெருமிழலைக் குறும்பர் என்பவர் இருந்தார். குறும்பர் வமிசத்தில் தோன்றிய இவர்,சிவனடியார்கள்   பால் பேரன்பு பூண்டு திருவமுதூட்டித் தமது செல்வங்களை எல்லாம் அவர்களுக்கே உரியதாக்கி வந்தார்.

திருவாரூரில் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடியதை அறிந்த பெருமிழலைக் குறும்பர் சுந்தரரது திருவடிகளை நாள்தோறும் வணங்குவதே இறைவனது திருவடிகளை அடைய எளிய வழி எனத் துணிந்தார். ஆகவே, பரவை மணாளரான சுந்தர மூர்த்தி நாயனாரது திருநாமத்தை நாவினால் விடாது உச்சரித்ததால், அணிமா, மகிமா,  இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம்,வசித்துவம் ஆகிய அட்ட மா சித்திகளையும் கைவரப்பெற்றார். ஐந்தெழுத்தை ஓதி சித்தி அனைத்தும் பெற்றார்.

இவ்வாறு பெருமிழலைக் குறும்பர் இருந்துவரும் காலத்தில், சுந்தரர் கொடுங் கோளூரை அடைந்து அங்குள்ள திருவஞ்சைக் களத்து ஈசனை வணங்கிப் பதிகம் பாடினார். அதன் உட்குறிப்பு,நிலவுலக வாழ்வு நீங்கப்பெற்று ஈசனை அடைய வேண்டும் என்பது. சுந்தரரின் வேண்டுகோளுக்கு இரங்கிய பெருமான் அவரைக் கயிலைக்கு வெள்ளை யானையின் மீது ஏறி வர அருள் பாலித்தான். இதனை யோகத்தால் அறிந்த பெருமிழலைக் குறும்பர் “கண்  இழந்து வாழ்வதுபோல் சுந்தரரைப் பிரிந்து வாழேன் அவர் கயிலை சென்று சேர்வதன்  முன் யோகத்தால் சென்று சேர்வேன் “ எனத்  துணிந்தார். யோகத்தால் அவரது பிரம ரந்திர  வாயில் திறந்தது. சுந்தரர் கயிலையை  அடையும் தினத்திற்கு (ஆடி சுவாதி) முன் தினத்திலேயே(ஆடி சித்திரை) திருக் கயிலையை அடைந்து சிவனடியைச்  சேர்ந்தார்.

***************************

பேயார்  ( காரைக்காலம்மையார் )

karaikal ammaiyar2

சோழ நாட்டுக்  கடற்கரைப்பட்டினமான காரைக்கால் என்ற நகரில்  வணிகர் குலத் தலைவராகத் தனதத்தன்    என்பவர் .வாழ்ந்து வந்தார்.அவர் செய்த  தவத்தின் பயனாகத் திருமகள் போன்ற தோற்றம் கொண்ட பெண் மகவாகப் புனிதவதியார் அவதரித்தார்.  இளமையிலிருந்தே சிவபெருமானது திருவடிகளுக்குப் பேரன்பு பூண்ட திலகவதியார் சிவனடியார்களையும் வணங்கி வந்தார்.

தன்  மகளுக்கு மணப்பருவம் வந்ததும், தனதத்தன் தனது குடிக்கு ஒத்த ஆண்மகனுக்கு அவரைத்   திருமணம் செய்து தர எண்ணிய வேளையில், நாகப் பட்டினத்து வணிகன் ஒருவன் தனது மகனான பரமத்தனுக்குப் புனிதவதியாரை மணம் பேசப் பெரியோர்களைக் காரைக்காலுக்கு அனுப்பி வைத்தான்.  அவர்களை வரவேற்ற தனதத்தன் பெரிதும் மகிழ்ந்து மணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். நல்லதோர் மண நாளில் காரைக்காலில் மயில் போன்ற  சாயலை உடைய புனிதவதியாருக்கும் காளை போன்ற  பரமத்தனுக்கும் திருமணம் வேத விதிப்படி நடைபெற்றது.

தனது குடிக்கு ஒரே மகளானதால் நாகப்பட்டினத்திற்குப் போக விடாமல் காரைக்காலிலேயே அருகாமையில் ஓர் மாளிகையை  தனதத்தன் புது மணத் தம்பதியருக்கு அமைத்துத் தந்து அளவற்ற நிதியையும்  தேவையான மற்ற  பொருள்களையும் அளித்தான். பரமதத்தனும் தனது மனைவியாருடன் அதில் தங்கி இல்லறம் சிறக்க வாழ்ந்ததோடு வணிகத்திலும் மேம்பட்டான்.

ஒருநாள் தனதத்தனைச் சந்திக்க வந்த சிலர் இரண்டு   மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றனர்.  அவற்றைத் தமது இல்லத்தில் கொடுக்குமாறு  அவர்களிடம் தனதத்தன் கூறினான். கணவனார் அனுப்பி வைத்த மாங்கனிகளைப்  புனிதவதியார் இல்லத்தில் வாங்கி வைத்தார். சற்றைக்கெல்லாம் ஒரு சிவனடியார்   அம்மனைக்கு எழுந்தருளினார்  அவரது வருகையால் மகிழ்ந்த புனிதவதியார் அவரை  உபசரித்து அமுது படைக்கத் தொடங்கினார். தனது கணவனார் கொடுத்து அனுப்பிய இரு மாங்கனிகளுள் ஒன்றை மனமகிழ்ந்து பசியால்  வாடியிருந்த அம்முதிய சிவனடியாருக்கு அமுது செய்வித்தார். அந்த அடியவரும் இதனால் பெரிதும்  மகிழ்ந்து விடைபெற்றுச் சென்றார்.

நண்பகலில் மனைக்குத் திரும்பிய பரமதத்தன் நீராடிய பின்  உண்ண   அமர்ந்தான். அன்னம், கறிவகைகளை இலையில் இட்டபின், எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து கணவனுக்குப் படைத்தார் புனிதவதியார். அம்மாங்கனியின்  சுவையைப் பெரிதும் விரும்பிய பரமதத்தன், மற்றொரு மாங்கனியையும் இலையில் இடுமாறு கூறினான். அதனைக் கொண்டு வருபவர்போல் ஒரு புறம் தள்ளி நின்று செய்வதறியாமல் மனம் தளர்ந்து . சிவபிரானது திருவடிகளைச் சிந்திக்கலானார். அப்போது அவரது கரத்தில் அதிமதுர மாங்கனி ஒன்று இறை அருளால் வந்தடைந்தது. சிவனருளை எண்ணித் துதித்து மிக்க மகிழ்ச்சியுடன் அதனைக் கணவனார் உண்ணுமாறு இலையில் படைத்தார் . அதை உண்ட பரமதத்தன் அப்பழத்தின் சுவை அமுதினும் சிறந்து விளங்குவதைக் கண்டு, புனிதவதியாரை நோக்கி,                   ” இப்பழம் நான் முன் கொடுத்தனுப்பிய மாங்கனியினும் சுவையில் வேறு பட்டு இருக்கிறது. மூவுலகங்களிலும் இதைப் போன்ற கனியைப் பெறுவது அரிது. இக்கனியை எவ்வாறு பெற்றாய்?” எனக் கேட்டான். வேறு செயலின்றிக் கணவனாரிடம் நடந்தவற்றைக் கூறினார் கற்புக்கரசியான புனிதவதியார்.

“ஈசன் அருளால் அதிமதுரக் கனி பெற்றது உண்மையாயின் அவனருளால் இன்னும் ஒரு கனியைப் பெற்றுத் தருவாயாக” என்ரூ கூறினான் பரமதத்தன். அங்கிருந்து நீங்கி சிவபெருமானது கழல்களை வேண்டி, “ இன்னொரு கனியை இப்போது தேவரீர் தராவிடில் முன்னம் தந்தது பொய் என்று ஆகி விடுமே” என வேண்டியவுடன் திருவருளால் ஒரு மாங்கனி புனிதவதியாரது கரத்தை  வந்தடைந்தது. அதைக் கொண்டு வந்து  கணவனின் கையில் கொடுத்தவுடன் அக்கனி திடீரென்று மறைந்து விட்டது. அதனைக் கண்டு அச்சமடைந்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வப் பிறவியாக எண்ணி அவரை விட்டு நீங்க வேண்டும் என்று துணிவு கொண்டான்.

கடல்கடந்து சென்று பெரும் திரவியம் ஈட்டி வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஒரு கப்பலில் வாணிபம் செய்வதற்கான பொருள்களை ஏற்றிக்கொண்டு தான் விரும்பிய தேசத்தில் தங்கினான்   பெரும் பொருள் சம்பாதித்து அங்கு சில நாட்கள் தங்கி விட்டுப் பின்னர் பாண்டிய நாட்டிலுள்ள ஒரு கடற்கரைப் பட்டினத்தை அடைந்தான். அவ்வூரார் ஒப்புதலுடன் ஒரு வணிகர் குலப் பெண்ணை மணந்து அங்கு வாழ்ந்து வந்தான். ஆனால் புனிதவதியாருக்குத் தான் செய்த வஞ்சனையை எவரிடத்தும் கூறாமல் மண வாழ்க்கை வாழ்ந்துவரும் நாளில் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மகவுக்குச் சடங்குகள் செய்து, தான் அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தனது  குல தெய்வமாகக் கருதியபடியால் அவரது  நாமமாகிய  “ புனிதவதி” என்ற பெயரை அக்குழந்தைக்கு  இட்டான்.

கற்பினுக்கரசியாகப் புனிதவதியார் கணவனாரது வருகைக்காகக் காரைக்காலில் காத்திருந்தபோது பரமதத்தன் வேறோர் பெண்ணை மணந்து பாண்டிய நாட்டுப் பட்டினத்தில் வாழ்வதைப்  புனிதவதியாரின் சுற்றத்தார்கள் கேள்விப்பட்டனர். எனவே, சிவிகை ஒன்றில் புனிதவதியாரை ஏற்றித் தோழிகள் சூழப்  பாண்டிய நாட்டுப் பட்டினத்தை  அடைந்து தாம் வந்த செய்தியைப்  பரமதத்தனுக்கு முன்கூட்டி அறிவித்தனர்.  அவரது வருகையைக் கேள்விப்பட்ட பரமதத்தன் மனத்தில் பயத்துடன் தனது இரண்டாவது மனைவியோடும் பெண் குழந்தையோடும் புனிதவதியாரிடம் வந்து அவரது திருவடியில் வீழ்ந்து வணங்கினான். “ நான் உம்  அருளால் வாழ்வதால் இக்குழந்தைக்கும் உமது திருப்பெயரையே இட்டுள்ளேன்”  என்றான். தனது கணவன் இவ்வாறு தம்மை வணங்குவதைக் கண்ட புனிதவதியார், அச்சத்துடன் தந்து சுற்றத்தார்கள் பக்கம் சென்று நின்றார். சுற்றத்தார்கள் பரமத்தனிடம், “ நீ இவ்வாறு மனைவியை வணங்குவது என்னை?” என்றனர். அதற்கு அவன், “ இவர் நம்மைப் போல் சாதாரண மானுடர் அல்லர். நமக்கெல்லாம் பெரும் தெய்வமும் ஆவார். அதனால் தான் அவரை அஞ்சி நீங்கி வந்தேன். அவர் பெயரையே குழந்தைக்கும் இட்டுள்ளேன். அதுபோலத்  தாங்களும் அவரைப் போற்றுங்கள்” என்றான். இதைக் கேட்ட சுற்றத்தார்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

கணவனாரது சொற்களைக் கேட்ட புனிதவதியார், சிவபெருமானுடைய திருவடிகளைச்  சிந்தித்து, “ இதுவரையில்  கணவன் பொருட்டுத் தாங்கிய தசைப் பொதியை நீக்கி உமது பூத கணங்கள் போற்றும் பேய் வடிவைத்  தந்தருளுவீராக”  என்று வேண்டினார். திருவருளால் அவர் வேண்டியபடியே அழகின் இருப்பிடமான சதைப்பகுதிகளை உதறிவிட்டு எலும்பே உடலாக விண்ணும் மண்ணும் போற்றும் பேய் வடிவம் பெற்றார்.  தேவர்களும் முனிவர்களும் மகிழ,சிவகணங்கள் கூத்தாட, துந்துபிகளின்  முழக்கத்துடன் மலர் மாரி  பெய்தது. சுற்றத்தார்கள் அச்சத்துடன் அவரைத் தொழுதுவிட்டு அங்கிருந்து நீங்கினர்.

அதற்குப்பின் திருவருளால் ஏற்பட்ட  ஞானத்தால் இறைவனைத் துதித்து   “ அற்புதத் திருவந்தாதி” யும், “ திரு இரட்டை மணி மாலை”யும் பாடினார். பிறகு, திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்லலானார். அவரது பேய் வடிவைக்  கண்டவர்கள் அஞ்சி ஓடினர்.  கயிலை மலைக்கு அருகில் சென்றதும் அங்கே காலால் நடப்பது தகாது என்று மகிழ்ச்சி மேலிடத் தலையால் நடந்து சென்றார். இதனைக் கண்ட உமாதேவியார், இவ்வாறு  தலையால் நடந்து வரும் எலும்பு வடிவின் பேரன்புதான் என்னே?” என்று வியந்தார். அதற்கு விடையாகப் பெருமான் உமையன்னையை நோக்கி,    “ உமையே, இவ்வாறு நம்மைக் காண வருபவள் நம்மைப் பேணும் அம்மை ஆவாள். இப்பெருமை மிக்க பேய் வடிவை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டாள்.”  என்று கூறி, காரைக்கால் அம்மையை நோக்கி, “ அம்மையே” உலகெலாம் உய்ய அழைத்தார். அப் பேரருளைக் கேட்ட அம்மையார், ஈசன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி,   “ அப்பா” என்றார்.

சிவபெருமான் அம்மையை நோக்கி, “ நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது” என்று கேட்க, அதற்கு அம்மையார், “ என்றும் மாறாத அன்பு தங்களிடம் இருக்க வேண்டும். அடியேன்  உலகத்தே இனிப் பிறவாமல் இருக்க வரம் தரல் வேண்டும். இவ்வையகத்தே ஒருக்கால் பிறக்க நேர்ந்தால் உன்னை என்றும் மறவாதிருக்கும்படி வரமளிக்க வேண்டும். அற  வடிவான  பரம்பொருளே, அது மட்டுமல்ல. நான் மிக்க மகிழ்ச்சியோடு உன் புகழைப் பாடும்போது, உனது திருவடியின் கீழே இருக்குமாறு அருள் புரிதல் வேண்டும் “  என்று வேண்டினார்.

“ இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்                              பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்   மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்றார் “

— பெரிய புராணம்

சிவபெருமான் அவர் வேண்டிய  வரங்களை அருளியபிறகு, அம்மையிடம்,      “ தென்னாட்டிலுள்ள பழையனூர்த் திருவாலங்காட்டில் நாம் ஆடுகின்ற தாண்டவத்தைக்  கண்டு மகிழ்ந்து, நம்மைப் பாடிக் கொண்டு இருப்பாயாக” என்று அருளிச்  செய்தான். .

காரைக்கால் அம்மையாரும் தலையினால் நடந்து திருவாலங்காட்டை அடைந்து திருக்கோயிலில் அண்டமுற நிமர்ந்து ஆடும் பெருமானை உளம் குளிரத் தொழுதார். அப்பொழுது, “ கொங்கை திரங்கி” எனத் தொடங்கும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தையும், “ எட்டி இலவம்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும் பேரன்பு பொங்கப் பாடியருளினார்.

சிவபெருமானால் “ அம்மையே” என்று அழைக்கப்பெற்றவரும், பெருமானது அண்டமுற ஓங்கி ஆடும் அற்புதத் திரு நடனத்தை எப்போதும் தரிசித்துக் கொண்டு அந்த ஆடும் சேவடிக்கீழ் என்றும் அமர்ந்திருக்கும் பேற்றினைப்  பெற்றவருமான  காரைக்கால் அம்மையின் பெருமையை யாரால் கூற இயலும்!

***************************************

அப்பூதி அடிகள் நாயனார்

சோழநாட்டுத் திங்களூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியார் ஆவார். சிவபெருமானிடத்தில் அளவற்ற அன்பு பூண்டு பெருமானது அன்பர்களிடமும் மிக்க அன்பு செலுத்தி வந்தார். திருநாவுக்கரசு நாயனாரை  நேரில் காண்பதற்கு முன்பே அவரை ஈசன் ஆட்கொண்ட திறத்தைக் கேள்விப்பட்டார். அதனால்  அப்பர் பெருமானிடம் அவருக்கு எல்லையற்ற பக்தி ஏற்பட்டது. தனது மனையில் உள்ள மக்களுக்கும், பசுக்களுக்கும், அளவுகோல்களுக்கும் திருநாவுக்கரசரது திருப்பெயரையே இட்டார். தான் அமைத்த திருமடம்,சாலை,தண்ணீர்ப்பந்தல்,குளம் ஆகியவற்றுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரையே இட்டு வழங்கி வந்தார்.

இங்ஙனம் பல்வேறு அறப் பணிகளை வாகீசப்பெருமானது திரு நாமம் கொண்டு நடத்தி வரும்போது, ஒருநாள் திருப்பழனத்தைத் தரிசித்த அப்பர் பெருமான் அருகிலுள்ள திங்களூரைத் தரிசிக்க வேண்டிச்  சென்றார். வழியிலிருந்த தண்ணீர்ப் பந்தலை அடைந்தவுடன் அப்பந்தலுக்குத்   “ திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டார். இவ்வாறு இப்பெயரிட்டிருப்பவர் யார் என்று அங்கிருந்தவரை அவர் கேட்க அதற்கு அவர்கள், “ திங்களூரில் வாழும் அப்பூதி அடிகளார் இப்பந்தர் மட்டுமல்லாது, குளம்,சாலை ஆகியவற்றிற்கும் நாவுக்கரசரின் பெயரைச் சூட்டியிருகிறார்” என்று  தெரிவித்தார்கள்.  இதன் கருத்தை அறிய வேண்டி அப்பூதியாரின் மனையை அடைந்தார் அப்பர் பெருமான்.

சிவனடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அறிந்த அப்பூதியார் மனைக்கு வெளியில் வந்து திருநாவுக்கரசரது திருவடிகளை வணங்க அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார். “ அருள் ததும்பும் திரு வடிவினை உடையீர்! தாங்கள்  எழுந்தருள முன்னம்  தவம் செய்தேன் போலும்  “ என்றார் அப்பூதியார். அதற்கு அப்பர் பெருமான், “ திருப்பழனத்தைத் தரிசித்துவிட்டுத்  திங்களூர்  வரும் வழியில் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டும்,பிற அறச் செயல்களைப் பற்றிக் கேள்விப் பட்டும்  தங்களைக் காண வந்தோம். அவ்வறங்களுக்கு உமது பெயரை இடாது வேறொரு பெயரை இட வேண்டியதன் காரணம் என்ன என்று கூறுவீராக” என்றார்.

அதனைக் கேட்ட   அப்பூதியார் சிந்தை நொந்தவராய் ,” சமணர்கள் பல்லவ மன்னனுடன்  விளைவித்த தீங்குகளைத் திருவருள் துணை கொண்டு வென்று , கல்லினோடு பூட்டிச்  சமணர்கள் கடலில் வீசிய போது  அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு அஞ்செழுத்து ஓதிக்  கரை ஏறிய பெருமை கொண்ட திருநாவுக்கரசரையா “வேறொருவர்”   என்றீர்? மங்கல  வேடம் பூண்டும் இவ்வார்த்தைகளைக் கூறினீர்.நீர் எங்கு உறைபவர்? நீர்தாம் யார் என்று இயம்புவீராக” என்று சினத்துடன் மொழிந்தார். அப்பூதியாரின் பேரன்பைக்  கண்ட திருநாவுக்கரசர்,                                      ”   இறைவனால்   சூலை நோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் அடியவன்” என்றார்.

இதனைக் கேட்ட அப்பூதியார்  உரை தடுமாறியவராக்  கண்ணில் ஆனந்த அருவிநீர் பாயக் கைகள் சிரமேல் கூப்பியவராய் திருநாவுக்கரசரது திருவடிக் கமலங்களை வீழ்ந்து வணங்கினார். பெறற்கரிய நிதியினைப் பெற்றவரைப்    போல் மனமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினார். செய்வதறியாமல் திகைத்து ஆடினார்;பாடினார். வீட்டிற்குள் சென்று மனைவி,மக்கள், சுற்றத்தார் ஆகியோரை அழைத்து  வந்து அப்பர் பெருமானை வணங்கச் செய்தார். வாகீசப்பெருமானை இல்லத்தினுள் எழுந்தருளச் செய்து அவரது திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்வதன்மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடையப்பெற்றார். பின்னர் நாவரசரை ஓர் ஆசனத்தில் அமரச் செய்துப்   பூசித்து, திருவமுது செய்தருளுமாறு வேண்டவே, அப்பரும் அன்பரின் வேண்டுகோளை ஏற்றார்.

அப்பூதியடிகள் தனது  மனைவியாரிடம்,” வாகீசப்பெருமான் நமது இல்லத்தில் எழுந்தருளி அமுது ஏற்பது நாம் முன் செய்த  ஆகும். இதனால் நாம் உய்ந்து விடுவோம் “ எனக் கூறியதும், மனைவியாரும் பேருவகையுடன், அறுசுவையோடு கூடிய திருவமுதையும்,காய் கறிகளையும் சமைத்தார். பிறகு தனது மூத்த மகனான மூத்த திருநாவுக்கரசைத் தோட்டத்தில் சென்று நல்லதோர் வாழைக் குருத்தை அரிந்து வருமாறு அனுப்பினார்.

நல்ல தாய் தந்தையர் ஏவலால் இப்பணி கிடைக்கும் பேறு  பெற்றேன் என்று மகிழ்ந்த  மூத்த திருநாவுக்கரசு தோட்டத்திற்கு விரைந்து சென்று வாழைக் குருத்தை அரிய முற்படும்போது பாம்பு ஒன்று அவனைத்  தீண்டியது.அப்பாம்பினை உதறி விட்டு விஷத்தால் நான் கீழே விழும் முன்பு அரிந்த இக்குருத்தைச் சென்று கொடுப்பேன் என்று ஓடிவந்து தாயின் கையில் கொடுத்துவிட்டு மயங்கி வீழ்ந்தான்.  தலைக்கு ஏறியதால் விடம்  இறந்தது தெரிய வந்தது. ஆனால் அப்பூதியாரும் அவர் மனைவியாரும் வாகீசர் இதனை அறிந்தால் அமுது செய்ய மாட்டார் என்பதால்  மாண்ட மகனை ஓர் பாயினுள் வைத்து மூடி  பின்புறம் இருத்தி விட்டு இனியும்  தாழ்த்தலாகாது என விரைந்து வந்து அப்பர்  அமுது செய்ய அழைத்தனர் .

திருநாவுக்கரசரை வணங்கி, “தேவரீர் அமுது செய்து எமது குடி முழுதையும் உய்யும் வண்ணம் ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று அப்பூதியார் விண்ணப்பித்தார். ஓர் ஆசனத்தில் அமர்ந்து  வெண்ணீறு அணிந்து வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் திருநீற்றினை அளிக்கும்போது, “ மூத்த மகனையும் திருநீறு பெற அழைப்பீராக” என்றார் வாகீசர். நிகழ்ந்தவற்றைக் கூறாமல், “ இப்போது அவன் இங்கு  உதவான்” என்றார் அப்பூதி அடிகள். அதனைக் கேட்ட அப்பரது மனத்தில் ஓர் தடுமாற்றம் எழுந்தது. நடந்தவற்றை விவரமாகக் கூறுவீராக   என்று  கேட்டார் நாவுக்கரசர். இனியும் உண்மையை மறைக்கக் கூடாது  என்பதால் வேறு வகை இன்றி நடந்தவற்றைக் கூறினார் அப்பூதி அடிகள்.  அதைக் கேட்ட வாகீசர்,” இவ்வாறு  செய்பவர் வேறு யார் உளர்? எனக் கூறிவிட்டு இறந்த மகனைத் திருக்கோயிலின் முன் கொண்டு வரச் செய்தார். அப்போது சிவபெர்மானது திருவருளை வேண்டி, “ ஒன்று  கொலாம்”எனத் துவங்கும் திருப் பதிகத்தைத் திருநாவுக்கரசர்  பாடியதும், உறக்கத்திலிருந்து எழுபவன் போல் மூத்த திருநாவுக்கரசு விடம் நீங்கி  அவரது திருவடியைத் தொழுதான். இதனைக் கண்டோரெல்லாம் திருத் தொண்டின் பெருமையை வியந்து போற்றினர். ஆனால் அப்பூதியாரும் அவரது மனைவியாரும் ,” அன்பர் அமுது செய்ய இடையூறு ஏற்பட்டு விட்டதே” என்று  வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்கிய நாவுக்கரசர் அமுதுண்ண  இசைந்தார்.அதற்கு முன் அம்மனை கோமயம் கலந்த   நீரால் மெழுகிக்  கோலமிடப்பட்டது  அப்பூதியாரும் அவரது மக்களும் உடனிருந்து  அமுது செய்யுமாறு அப்பர் பெருமான் கூறியதும், அவ்வாறே அப்பூதியாரது மனைவியார் பரிமாற , வாகீசருடன் அப்பூதியாரும் அவரது மைந்தரும் திருவமுது செய்தனர். பின்னர் அங்குப் பல நாட்கள் தங்கிவிட்டு விடைபெற்றார் வாகீசப்பெருமான்.

திங்களூருக்கு அண்மையிலுள்ள திருப்பழனத்தை அடைந்த வாகீசர், அப்பூதியடிகளின் திருத்தொண்டின் பெருமையை அத் தலத்து  இறைவன் மீது  “ சொன்மாலை” என்ற திருப்பதிகம் பாடியபோது அதன் கடைசிப் பாடலில் சிறப்பித்தருளினார். இவ்வாறு அப்பர் பெருமானது திருவடிகளே உறுதிப் பொருளாகக் கொண்டு அதனை எந்நாளும் துதிக்கும் ஊதியத்தையும் பெற்றார் அப்பூதி அடிகள். இதனால் தில்லையம்பலத்துள் நடமாடும் ஈசனின் பொற்பாத நிழலை அடைந்து பேரின்ப நிலை பெற்றார்.

************************************

 திருநீலநக்க நாயனார்

சோழவளநாட்டில் அரிசொலாற்றின் வடகரையிலுள்ளதும் திருமருகலுக்கு அண்மையில் உள்ளதுமான திருச்சாத்தமங்கை என்பது சாமவேதம் ஓதும் அந்தணர்கள் முத்தீவளர்த்தும், அங்குள்ள அயவந்தி எனும் ஆலயத்திலுள்ள  சிவபெருமானையும் அவனது அடியார்களையும் அன்பொடு அர்ச்சித்தும்  வாழும் பதியாக விளங்கியது. அத்தகைய மூதூரில் திருநீலநக்கர் என்ற  அந்தணர் குலத்தைச் சேர்ந்த பெருந்தகையார் வாழ்ந்து வந்தார். நாள்தோறும் அயவந்தி மேவிய சிவபிரானது திருவடிகளை வணங்கி அர்ச்சிப்பதையும் அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தலையும் நியமமாகக் கொண்டு வந்தார்.பஞ்சாக்ஷர ஜபத்தை விதிப்படி செய்து வந்தார்.

ஒருநாள் சிலந்தி ஒன்று சிவலிங்கத்திருமேனியின் மீது விழுந்ததைக் கண்டு தனது குழந்தையின் மீது சிலந்தி விழுந்தால் அதனை உடனே வாயால் ஊதி விளக்கும் தாயைப் போல அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நீலனக்கரது மனைவியார் அச்சத்தோடு  விரைந்து சென்று தனது வாயால் சிவலிங்கத் திருமேனியை விட்டு அச்சிலந்தி போகும்படி ஊதினார்.அதனால் அவரது வாயிலிருந்த உமிழ்நீரும் பெருமான் மீது படுவதைக் கண்ட நாயனார் பதறிப்போய் “இனி உன்னைத் துறந்தேன்” என்று மனைவியாரைக் கோபித்தார்.

மாலைநேரம் வந்தபிறகு தமது பூஜைகளை முறைப்படி முடித்துக் கொண்டு மனை திரும்பினார் நீலநக்கர். ஆனால் அவரது மனைவியாரோ உள்ளத்தில் அச்சத்தோடு மனைக்கு வராமல் திருக்கோயிலிலேயே தங்கி விட்டனர். மனையில் அன்றிரவு பள்ளிகொண்ட நாயனாரது கனவில் சிவபெருமான் எழுந்தருளித் தனது திருமேனியைக் காட்டி, “ உனது மனைவி ஊதிய இடங்கள் தவிரப் பிற இடங்களில் சிலந்தியின் கொப்புளங்கள் தோன்றியுள்ளதைக் காண்பாயாக” என்று அருளிச் செய்தார். உடனே விழித்தெழுந்த நீலநக்கர், கைகளைக் கூப்பியவராக ஆனந்தம் மேலிடக் கூத்தாடினார். பெருமானது கருணையை எண்ணிஎண்ணிக் கண்ணீர் விட்டுக் கதறினார். இறைவனைப் பாடித் துதித்துவிட்டுப் பின்னர் கோயிலிலிருந்து  மனைவியாரை மனைக்கு அழைத்து வந்தார். பின்னர் முன்னைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியுடன் பெருமானுக்குப் பூஜைகள் சிறப்புடன் செய்தும் அடியார்களுக்கு வேண்டுவன அளித்தும் வந்தார்.

இங்ஙனம் வாழ்ந்து வரும்போது திருஞானசம்பந்தரது பெருமைகளைப் பலர் கூறக் கேட்டு அவரை நேரில் வணங்க வேண்டும் என்ற பெரு விருப்புக் கொண்டார். அப்போது தல யாத்திரையாக சம்பந்தப்பெருமான் ,திருநீலகண்ட யாழ்ப்பாணணாரும் ,அவரது மனைவியாரான மதங்க சூளாமணியாரும்  பிற அடியார்களும் உடன்வரச்  திருச்சாத்தமங்கைக்கு  எழுந்தருளினார். அதுகண்டு பெருமகிழ்வுற்ற நீலநக்கர் ஊரை அலங்கரித்துப் பந்தலிட்டு, உற்றார் உறவினரோடும் திரு ஞான சம்பந்தரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினார். பின்னர் சம்பந்தரையும் அவரோடு வந்த அடியார்களையும் தமது மனைக்கு அழைத்துச் சென்று திருவமுது செய்வித்தார். அன்றிரவு தமது மனையிலேயே அவர்கள் தங்குவதற்கு  ஏற்பாடுகளும் செய்தார்.

இரவு நேரம் வந்ததும், சம்பந்தர் நீலநக்கரை அழைத்து, “இன்றிரவு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாகிய மதங்க சூளாமணியாரும் துயிலுவதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்வீராக” என்றருளினார். அதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நீலநக்கர், அவ்விருவரும் தனது மனையின் மையப்பகுதியிலிருந்த வேதிகையின் அருகில் துயில் கொள்ளுமாறு வேண்டினார். நீலநக்கரும் அவ்வண்ணமே அமைத்துக் கொடுத்ததும்  வேதிகைத் தீ வலமாகச் சுழன்று முன்னைக் காட்டிலும் எழில்பெற விளங்கியது.

மறுநாள் காலை துயில் எழுந்த சம்பந்தப்பெருமான் அயவந்தினாதரின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அதில் நீலநக்கரின் பெருமையைச் சிறப்பித்துப் பாடியருளினார்.

திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கையிலிருந்து நீங்கும்போது  நீலநக்கர் தானும் உடன் வர விரும்பவே, சம்பந்தர் அவரைத்தடுத்து, சாத்தமங்கையிலேயே இருக்குமாறு பணித்தார். அதன்படி நீலநக்கரும் தனது பதியிலேயே தங்கி இருந்தார். இடையிடையே ஞானசம்பந்தர்  தங்கியிருந்த பதிகளுக்குச் சென்று சம்பந்தரோடு கலந்திருந்து மீண்டும் சாத்தமங்கைக்குத் திரும்புவார். இப்படிப் பலநாட்கள் சம்பந்தரின் கழலிணைகளை இடையறாது சிந்தித்து வந்தித்து விட்டு, நல்லூர்ப் பெருமணத்தில்  சம்பந்தரோடும் அடியார்களோடும் சிவ சோதியில் கலந்து கயிலை மலையில் வாழும் பேரின்ப நிலை பெற்றார்.

  ***********************************

 

                               நமிநந்தி அடிகள் நாயனார்

காவிரி பாயும் சோழநாட்டில் ஏமப்பேறூர் என்ற இயற்கை வளம் மிக்க ஊரில் நமிநந்தி அடிகள் என்பவர் அந்தணர் குடியில் அவதரித்தார்.      ( தற்காலத்தில் திருநெய்ப்பேர் என்று வழங்கும் இத்தலம் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.) அவர் சிவபெருமானது திருவடிகளைவணங்கி வழிபடும் தவத்தை மேற்கொண்டவர். தினமும் திருவாரூர் சென்று வழிபடுவதே சிறந்தது என்ற நியமம் பூண்டு அங்கு சென்று வருவதை மேற்கொண்டார்.

ஒருநாள் திருவாரூர்ப் புற்றிடம்கொண்ட பெருமானை வழிபட்ட பின் அங்கிருந்த அரநெறி என்ற தனி ஆலயத்தை அடைந்து தொண்டுகள் பலவற்றைச் செய்யலானார். இரவுப்பொழுது வரும்போது பெருமானது சன்னதியில் எண்ணற்ற நெய் தீபங்களை ஏற்ற எண்ணினார். மாலை வந்துவிட்டதால் தனது ஊருக்குச் சென்று நெய் கொண்டு வருவதற்குக்  கால தாமதம் ஆகும் எனக் கருதி, அருகிலிருந்த மனை ஒன்றுக்குச் சென்று விளக்கெரிக்க நெய் தருமாறு கேட்டார். அம்மனையில் இருந்த சமணர்கள் வெளியில் வந்து “ கையில் அனல் ஏந்தி ஆடும் உமது கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய் இல்லை. விளக்கெரிப்பதானால்  குளத்து நீரைக் கொண்டு எரிப்பீராக “ என்றார்கள்.

சமணர்களது ஏளனத்தால் மனம் நொந்த நமிநந்தி அடிகள் நேராக ஆரூர்ப் பெருமானது கோயிலை அடைந்து கண்ணீர் மல்க வீழ்ந்து வணங்கினார். அப்போது இறையருளால், “ நமிநந்தியே. அஞ்ச வேண்டாம். இக்குளத்து நீரைக் கொண்டு வந்து இடையறாது எரியுமாறு விளக்கேற்றுக “ என்ற அசரீரி மொழி ஆகாயத்திலிருந்து எழுந்தது. திருவருளை வியந்த நமிநந்தியடிகள், சிவநாமத்தை உச்சரித்த வண்ணம் திருக்குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு கரை ஏறி, திருக்கோயிலில் இருக்கும் ஆரூர் அரநெறிப் பெருமான் சன்னதியில் உலகமே வியக்கும் வண்ணம் திரு விளக்கு ஏற்றினார். அவர் ஏற்றிய தீபங்களும் சுடர்விட்டு மேலெழும்பிப் பிரகாசித்தன. விடிய விடிய அவ்விளக்குகள் எரிந்தன. பின்னர் அவ்விரவே புறப்பட்டுத் தன்  மனையை அடைந்து நித்திய பூஜையைக் குறைவறச் செய்துவிட்டு உறங்கலானார். விடிந்தவுடன் தமது பூஜையை முடித்துக் கொண்டு திருவாரூர் சென்று ஆரூர் அரநெறியில் தொண்டாற்றி, மாலையில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு இரவுப் பொழுதில் ஏமப்பேரூறுக்குத்  திரும்புவார். இவ்வாறு பலகாலம் அவரது பணி தொடர்ந்தது.

திருவாரூர்ப்பெருமானது பங்குனி உத்திர விழா வந்தபோது, நமிநந்தி அடிகள் பெருமானுடன் மணலி என்ற ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். அவ்வாறு எல்லாக்குலத்தோரும் உடன் சென்று வருவது வழக்கம். மணலிக்குச் சென்று  திரும்பிய அடிகள் வீட்டின்உ ள்ளே செல்லாது புறத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அவரது மனைவியார், சிவபூஜை செய்து அக்கினி காரியம் செய்து உணவருந்தி விட்டுப் பள்ளி கொள்வீராக என்று தமது கணவனாரிடம் கூறினார். அதற்கு நமிநந்தியார்,  “ விழாவிற்கு எல்லாக் குலத்தோரும் வந்திருந்தபடியால் தீட்டு உண்டாயிற்று. ஆகவே நீராடித் தூய்மை செய்து கொண்ட பின்னரே மனையுள் புகுந்து சிவபூஜை செய்ய வேண்டும். அதற்காகக் குளிர்ந்த நீர் தயாரித்து வைப்பாயாக என்றருளினார்.

சற்றைக்கெல்லாம் திருவருளாலோ அல்லது களைப்பினாலோ  இறைவனது திருவடிகளை நினைந்து கொண்டிருந்த அவருக்குத் துயில் வந்தது. அப்போது வந்த கனவில், ஆரூர்ப்பெருமான் அவரது பூஜைக்கு வருபவர் போலத் தோன்றி, “ திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும்  நமது கணங்களே. இதனைக் காண்பாயாக “ என்று அருளினார். உள்ளம் பதைத்து, அஞ்சி எழுந்த நமிநந்தியார், கனவுபற்றி மனைவியிடம் கூறி விட்டு, நீராடாமல் நேராக மனைக்குள் சென்று சிவபூஜை செய்தார்.

விடியற்காலையில் திருவாரூர் சென்றதும் அங்கிருந்தோர் அனைவரும் சிவ சாரூப வடிவத்துடன் காட்சியளிக்கக் கண்டு தலை மீது கைகளைக் கூப்பியவாறு நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கித் தமது  பிழையைப்  பொறுக்குமாறு வேண்டினார். பின்னர் தனது ஊரினின்றும் நீங்கித் திருவாரூரிலேயே தங்கிப் பணிகள் பல செய்து வந்த நமிநந்தியடிகள் ஆரூர்ப்பெருமானது செம்பொற் சோதியில் கலந்து திருவடி நீழலில் என்றும் தங்கும் பெருவாழ்வு வந்து எய்தப்பெற்றார்.

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-3

நாயன்மார் சரித்திரம்- 3 (தொடர்ச்சி)

மும்மையால் உலகாண்ட சருக்கம்

 

 மூர்த்தி  நாயனார்

பொதிகை மலையைக் கொண்டதும்,தாமிரபரணி ஆற்றினால் வளம் பெறுவதும், கொற்கைத்துறையில் முத்துக்கள் விளைவதும் ஆகிய சிறப்புக்களை உடையது பாண்டிய நாடு. திருமகள் வீற்றிருக்கும்  செந்தாமரை மலர் போல விளங்குவது அதன் தலைநகராகிய மதுரை ஆகும். முச்சங்கம் வளர்த்த இந்நகர், சங்கப்புலவர்களில் ஒருவராக இறைவனே வீற்றிருந்த பெருமையை உடையது. மீனாக்ஷி தேவியுடன் சோமசுந்தரேசுவரப் பெருமான் எழுந்தருளியுள்ள திரு ஆலவாய் என்னும் திருக்கோயில் இந்நகருக்குத் தனிச்சிறப்பை வழங்குவது ஆகும்.

சிவராஜதானியாகத் திகழும் மதுரையம்பதியில் வணிகர் குலம் செய்த தவப்பயனாக மூர்த்தியார் என்பவர் அவதரித்தார். அவர் சிவபெருமானிடம் அளவற்ற அன்புடன் வாழ்ந்து வந்தார். பெருமானது திருவடிகளே  தமது உறவும், நட்பும் செல்வமும் எனக் கொண்டு நாள்தோறும் திருவாலவாய்ப் பெருமானது திருக்கோயிலுக்குச் சென்று சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்தார். எவ்வாறானாலும் அப்பணியை விடாது செய்வது என்ற கொள்கை உடையவராக  இருந்தார்.

அக்காலத்தில் வடுக வகுப்பைச் சேர்ந்த கர்நாடக அரசன் ஒருவன் தனது கடல் போன்ற சேனையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சிவனடியார்கள் பல்வகைத் துன்பங்களுக்கு ஆளாயினர். அத்துன்பங்களுக்கிடையில் மூர்த்தியார் தனது சந்தனப் பணியை விடாமல் செய்து வந்தார். அதைக் கண்டு பொறாத மன்னன் அவருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதபடி செய்தான்.

மனவருத்தமுற்ற மூர்த்தியார் சோமசுந்தரக்கடவுளின் திருக்கோயிலை அடைந்து அங்கிருந்த ஒரு சந்தனம் தேய்க்கும் கல்லில் தனது முழங்கையை வைத்துத் தேய்த்தார். அதனால் இரத்தம் வெளிப்பட்டதோடு தோலும்,சதையும்,எலும்பும் தேயலாயின. அதைக் கண்டு பொறாத இறைவன், அசீரியாக,” நம்மீது உள்ள அன்பால் இவ்வாறு இனிச் செய்ய வேண்டாம். உனக்குத் தீங்கு செய்த கொடுங்கோலரசனின் ஆட்சி முடிவு பெற்று, நீயே இப்பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து, உலகைக் காத்து, சந்தனப்பணியையும் தொடர்ந்து செய்து, இறுதியில் நமது சிவலோகத்தை அடைவாயாக” என்று அருளிச் செய்தார். அதனைக் கேட்ட நாயனார், கல்லில் தன கையைத் தேய்ப்பதை நிறுத்தியவுடன், இறையருளால்  காயங்கள் மறைந்து, கையும் முன்போல் ஆயிற்று.

அன்றிரவு திடீரெனக் கருநாடக மன்னன் மடியவே, அவனது மனைவியாரும்,உறவினர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மன்னனுக்கு மகவு இன்மையால், அமைச்சர்கள் பட்டத்து யானையைக் கண்ணைக் கட்டி வீதியில் விட்டு யாரை அழைத்து வருகிறதோ அவரையே அரசனாக்குவது என்று முடிவெடுத்தார்கள்.

வீதிகளில் சென்ற யானை திருக்கோயில் வாயிலிலே நின்று கொண்டிருந்த மூர்த்தியாரை அடைந்து அவரை வணங்கித் தன் முதுகில் ஏற்றி வைத்துக் கொண்டது. அதைக் கண்ட அமைச்சர்களும் மதுரை மாநகர மக்களும் அவரது திருவடிகளை வணங்கி நின்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மூர்த்தியாரை ஏற்றிச் சென்ற யானை முடி சூட்டும் மண்டபத்தை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய மூத்தியாரை அமைச்சர்கள் அரச சிங்காதனத்தில் அமர்த்தி வணங்கினர். யாக குண்டங்களில் தீ வளர்த்து மங்கலச் செயல்கள் புரிந்தனர். அவர்களை நோக்கிய மூர்த்தியார்,” சைவம் தழைப்பதானால் இந்நாட்டை ஆளச் சம்மதிக்கிறேன்” என்றார். அனைவரும் அதற்கு உடன்படுவதாக உறுதி ஏற்றனர். மூர்த்தியாரும், திருநீற்றை  அபிஷேகப் பொருளாகவும் ருத்திராக்ஷத்தை ஆபரணமாகவும், சடைமுடியைக்  கிரீடமாகவும் கொண்டு அரசாட்சியை ஏற்றார். எனவே இம்மூன்றையும் கொண்டு உலகாண்டதால் “ மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரர் இவரைச் சிறப்பித்தார்.

பின்பு முடிசூட்டு மண்டபத்தை நீங்கி வீதிகளின் வழியே யானை ஏறிச் சென்ர மூர்த்தியார் மதுரை நகர வலம் வந்தார். அரண்மனையை அடைந்து வெண்கொற்றக் குடையின் கீழ் செங்கோலாட்சி செவ்வனே செய்து வந்தார். நாட்டில் சமணர்களது ஆதிக்கம் நீங்கி சைவ சமயம் மேலோங்கியது. ஐம்புலன்களையும் வென்றவாகத் திகழ்ந்த மூர்த்தியார் நெடுங்காலம் அரசாட்சி செய்து மக்களைக் காத்து, சைவ நெறிகளைப் புரந்து பகைவர்களிடமிருந்து பாண்டியநாட்டைக் காத்தார். நிறைவாகச் சிவபிரானது திருவடி நீழலை அடைந்து ஆறாத இன்பம் பெற்றார்.

************************************************

  முருக நாயனார்

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருப்புகலூர் என்ற சிவத்தலம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. அங்கிருந்த பெரியோர்கள் இருளிலும் ஒளி தருமாறு மெய் முழுதும் திருநீற்று ஒளி விளங்கத் துலங்குபவர்கள். அவ்வொளியால் கரு வண்டுகளும் வெண்ணிறமாகத் தோன்றும். பறவைகளும்,வண்டுகளும் செய்யும் ஒலி  பதிகங்கள் பாடுவதைப் போலத் தோன்றும். பொய்கைகளில் அலர்ந்த தாமரைகளிலிருந்து தேன் துளிகள் பொழிவதைக் கண்டால் அது பதிகங்களைக் கேட்டு உருகிய அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதைப் போலத் தோன்றும்.

திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் முருகனார் என்பவர் அவதரித்தார். நான்மறைகளைக் கற்று நாள் தோறும் ஓதி வந்ததோடு,வர்த்தமாநீசுவரம் என்ற அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்குத் தினந்தோறும் சென்று, பூக்களால் ஆன மாலைகளைப் பெருமானுக்குச் சார்த்தி வந்தார்.

விடியற்காலையில் துயில் எழுந்து, நீராடிவிட்டு நந்தவனத்திற்குச் செல்வார். அங்கு மலரவிருக்கும் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ ஆகிய மலர் வகைகளில் தக்க மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பூக்கூடைகளில் பறிப்பார். பிறகு அவற்றைத் தனி இடம் ஒன்றில் வைத்துக் கொண்டு கோவை மாலை,இண்டை மாலை, பத்தி மாலை, கொண்டை மாலை,தொங்கல் மாலை,சர மாலை ஆகிய பலவகை மாலைகளை அந்தந்தக் காலங்களுக்கு ஏற்றபடிக் கட்டுவார். பின்பு அவற்றைக் காலந்தோறும் வர்த்தமாநீசுவரருக்குத் தூய அன்போடு சார்த்தி அர்ச்சனைகள் செய்து வழிபடுவார். இடைவிடாது பஞ்சாட்சரத்தை ஜபம் செய்து கொண்டிருப்பார்.

அக்காலத்தில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்டு தேவார அமுதம் பொழிந்து வந்த  திருஞான சம்பந்தப் பெருமான் அத்தலத்திற்கு எழுந்தருளியபோது முருக நாயனார் அவரைத் தாம் எதிர் கொண்டு வணங்கி வரவேற்று, சைவசிகாமணியாகிய சம்பந்தப் பெருமானைத்     தமது இல்லத்திற்கு அழைத்து வந்து  இருத்தி, உபசரித்தார்.திருநாவுக்கரசு நாயனாரும்,சிறுத்தொண்ட நாயனாரும் திருநீல நக்க நாயனாரும் இவருக்கு நண்பராயினர்.

பின்னர், தாம் செய்து வந்த சிவபூசையின் பயனாகத் திரு நல்லூர்ப் பெருமணத்தில் திருஞானசம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று அங்கு அடியார் பெருமக்கள் அனைவருக்கும் சிவலோகத்தியாகேசரின் அருளால் சிவச்சோதி தோன்றவே அதில் இரண்டறக் கலந்து பெருமானின் திருவடி நீழலை அடைந்தார்.

**********************************************

      உருத்திர  பசுபதி  நாயனார்

காவிரியால் வளம் பெறும் சோழ நாட்டில் திருத்தலையூர் என்ற ஊர் உளது ிமுசிறிக்கு அருகிலுள்ளதிருத்தலையூரிலும் மயிலாடுதுறையிலிருந்து   கொல்லுமாங்குடி வழியாகக் காரைக்கால் செல்லும் வழியிலுள்ள திருத் தலையூரிலும் உள்ள சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரது மூல விக்கிரகங்கள் உள்ளன.) அவ்வூரிலுள்ள அந்தணர்கள் வளர்க்கும் தீயினால் மழை பொய்யாது பருவம் தோறும் பெய்யும். அவ்வூரார்கள் சிவதருமம் செய்பவர்களாகவும் நீதிமான்களா கவும் திகழ்ந்தனர். அத்தலத்தில் அந்தணர்கள் குலத்தில் பசுபதியார் அவதரித்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாக விளங்கும் பஞ்சாட்சர மகா மந்திரத்தை உள்ளடக்கிய உருத்திரத்தை இடையறாது அதற்குரிய சுருதியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

அங்குள்ள தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு கைகளைத் தலை மேல் கொண்டு இரவும் பகலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரத்தை இடைவிடாது பல நாட்கள் பசுபதியார் ஓதி வந்தார். அதனால் தாமரையில் வீற்றிருக்கும் பிரம தேவனைப் போல் தோன்றினார்.

இங்ஙனம் ருத்திரத்தை இடையறாது ஒதி வந்தமையால் ருத்திர பசுபதியார் எனப்பட்டார். நாயனாரது அளவற்ற அன்பினால் மகிழ்ந்த ஈசனும் அவருக்கு இன்னருள் புரிந்தான். அதனால் ருத்திர பசுபதியார் சிவபுரத்தை அடைந்து பெருமானது இணையடி நீழலில் இனிதே அமர்ந்தார்.

********************************************************

திருநாளைப்போவார் நாயனார்

சோழ நாட்டில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ஆதனூர் என்ற ஊரில் புலையர் சேரியில் நந்தனார் என்பவர் அவதரித்தார். அவ்வூர் இயற்கை வளம் மிக்கது. விண்ணளாவும் சோலைகளும், வாளை மீன்கள் பாயும் தாமரைத் தடாகங்களும் நண்டுகள் நிறைந்த வயல்களும் அங்கு விளங்கும். மாளிகைகளும் அடியார் கூட்டமும் நிறைந்த ஆதனூரில் உள்ள புலைப்பாடியில் உழவுத் தொழிலை மேற்கொண்டவர்கள் வாழ்ந்து வந்தனர். புல் கூரை கொண்ட அவர்களது இல்லங்கள் மீது சுரைக்கொடிகள் பரந்து விளங்கும். அங்கு கோழிக் குஞ்சுகளும் நாய்க் குட்டிகளும் சுற்றித் திரியும். வஞ்சி மரத்தடியில் பானைகளில் கோழிகள் அடை காக்கும். தென்னம் பொந்துகளில் நாய்க்குட்டிகள் உறங்கிக்கொண்டிருக்கும். விடியலில் சேவல்கள் கூவி உழவர்களை எழுப்பும். புலை மகளிர் நெல் குற்றும் போது பாடுவர். பறை கொட்டி அதற்குத் தக்கபடி ஆடுவர்.

புலைச்சேரியில் வாழ்ந்துவந்த நந்தனார் சிவபெருமானிடம் இணையற்ற அன்பு கொண்டு தமது மரபிற்கு ஏற்ற வகையில் சிவ தருமங்களைச் செய்து வந்தார். பெருமானது கோயில்களில் நாள்தோறும் முழக்கப்படும் இசைக் கருவிகளுக்குத் தேவையான தோலையும்,வாரையும் அளித்து வந்தார். பூசைக்குத் தேவையான கோரோசனையைக் கொடுத்து வந்தார். திருக்கோயிலின் வாயிலில் நின்றபடியே அன்பு மிகுதியால் ஆடியும் பாடியும் மகிழ்ச்சி அடைவார்.

ஆதனூரிலிருந்து புறப்பட்ட நந்தனார்,திருப்புன்கூர் சிவலோகநாதரிடம் பேரன்பு பூண்டு அத்திருக்கோயிலுக்குப் பல பணிகள் செய்தார். அங்கு ஓர் குளம் எடுத்தார்.திருக்கோயில் வாயிலில் இருந்தபடியே தலையாரக் கும்பிட்டுக் கூத்தாடினார். அங்கிருந்தபடியே பெருமானைத் தரிசிக்க விரும்பவே, அவருக்கு அருள் புரிய எண்ணி, சிவபெருமான் தமக்கு முன் இருந்த இடப தேவரைச் சற்றே விலகி இருக்க ஆணையிட்டருளினார். தரிசனம் கண்ட நந்தனார், ஆனந்தக் களிப்பால் ஆடியும் பாடியும் கோயிலை வலம் வந்து வணங்கினார். அருகிலுள்ள சிவத் தலங்களுக்கும் சென்று தனது பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் அவருக்குத் தில்லையைக் காணும் விருப்பம் மேலிட்டது. அதே எண்ணத்தில் அன்று இரவு முழுதும் உறங்காதிருந்தார். அதே சமயம் தமது குலத் தன்மை அதற்கு ஏற்ப இல்லாததால் சோர்வடைவார். ஆனால், தில்லை செல்லும் வேட்கை அதிகரிக்கவே,” நாளைக்குப் போவேன்” என்று ஒவ்வொரு நாளும் சொல்லி வந்தார். அதனால் அவருக்குத் திருநாளைப் போவார் என்னும் நாமம் ஏற்பட்டது.

பல நாட்கள் இவ்வாறு கழிவதைக் கண்டு, எனது பிறவிப் பிணி நீங்குமாறு இன்றே தில்லைக்குச் செல்வேன் என்று ஒரு நாள் முடிவெடுத்தவராகத் தில்லை எல்லையை வந்தடைந்தார். உடனே நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கிப் பின்னர் அவ்வெல்லையை இரவு பகலாக வலம் வந்தார். தமது குலத் தன்மை கருதி, அந்நகருக்குள் செல்ல அஞ்சினார். அடங்காத அன்பு மேலிட, ஐயனின் திருநடனம் எவ்வாறு காண்பேன் என்ற நினைவில் ஒரு நாள் இரவு துயில் கொண்டபோது தில்லை அம்பலவன் கனவில் காட்சி தந்தருளினான். “ இப்பிறவித் துயர் நீங்கும் வண்ணம் நீ தீயினில் மூழ்கி அந்தணர்கள் புடைசூழ நம்மை வந்து அடைவாயாக” என்று அருளினான்.  தில்லை வாழ் அந்தணர்களின் கனவிலும் எழுந்தருளிய இறைவன், நந்தனாருக்காக அவர்களைத் தீ அமைத்துத் தருமாறு அருளினான்.

தில்லை அம்பலவனின் கட்டளைப்படி திருக்கோயிலின் வாயிலின் முன்பு வந்து கூடிய மறையோர் நந்தனரிடம் சென்று,” ஐயரே, அம்பலவர் அருளால் தங்களுக்குத் தழல் அமைத்துத் தர வந்துள்ளோம்” என்றார்கள். அதைக் கேட்ட நந்தனார் ” அடியேன் உய்ந்தேன்” எனக் கூறி அவர்களைத் தொழுதார்.

தெற்குத் திருவாயிலருகே தீக் குழி அமைக்கப்பட்டது. அம்பலவனின் பெருங்கருணையை எண்ணி உருகியபடியே, நந்தனார் அதனை வலம் வந்தார். ஆடல்வல்லா திருவடிகளைச் சிந்தித்துக் கை கூப்பியவராக அத்தீயினுள் நுழைந்தார். அப்போது அவரது பழைய உருவம் மறைந்தது. மார்பில் பூணூலும் சடைமுடியும் தாங்கிய புண்ணிய முனிவராக அத்தீயிலிருந்து செந்தாமரை மலருரையும் நான்முகனைப்போல் எழுந்தார். வானத்தில் தேவ துந்துபிகள் முழங்கின. தில்லை மூவாயிரவரும் அவரைக் கைகூப்பித் தொழுதனர். மலர் மாரி பொழிந்தது.

பொன்னம்பலத்தே அனவரதமும் ஆனந்த நடம் புரியும் எம்பிரானைத் தரிசிக்க வேண்டி திருநாளைப் போவாராம் மறை முனிவர் தில்லை வாழ் அந்தணர்கள் உடன் வரத் தெற்கு வாயில் வழியாக நுழைந்து பொற்  சபையை அடைந்தார். அதன் பின்னர் அவரை எவரும் காணவில்லை. அவ்வாறு குஞ்சித பாத நீழலை அடைந்த நாயனார் பெற்ற பேரருளை எண்ணித்  தில்லை மறையோர் அதிசயத்துடன் தொழுதனர்.

************************************************

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

உலக உயிர்களுக்குத் தாயாகவும் தலைவியாகவும் திகழும் உமாதேவியார் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, சிவாகம முறைப்படி பூசை செய்து,முப்பத்திரண்டு அறங்களையும் செய்து,பெருமானை மணந்த சிறப்புடையது தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரம் ஆகும். இத்தொண்டை மண்டலத்தில் புகழ் மிக்க சிவாலயங்கள் அநேகம் உள்ளன. ஒரு வணிகனுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எழுபது வேளாளர்கள் தீப்பாய்ந்த வரலாறுடைய பழையனூர் ஆலங்காடும், திருக்காளத்தி,திருஇடைச்சுரம்,திருக்கழுக்குன்றம்,திருமுல்லைவாயில், திருவூறல், திருமாற்பேறு,திருவல்லம்,திருப்பாசூர் திருவொற்றியூர், திருமயிலாப்பூர்,திருவான்மியூர் ஆகிய தலங்களைக் கொண்டு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,மருதம் ஆகிய நால்வகை நிலவளங்களோடு கூடியது தொண்டை நன்னாடு.

விருந்தினர்களை விரும்பி உபசரிப்பவர்களும், வேள்வி செய்யும் மறையோர்களும்,பாலாற்று நீரால் வயல்களைச் செழிக்கச் செய்யும் உழவர்களும், கடல் மீன்கள்,முத்து,பவழம் ஆகியவற்றைச் சேகரிக்கும் பரதவர்களும் அங்கு வாழ்ந்து தீமையைக் கனவிலும் நினையாத சிந்தை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.

மேன்மைமிகு தொண்டை நாட்டில் எக்காலத்தும் நிலைத்து விளங்கும்    நகரம் காஞ்சியம்பதியாகும்.காஞ்சியில் எவ்வுயிரும் உய்யும் வண்ணம் மாமர நீழலில் கம்பையாற்றி மணலால் சிவலிங்கம் அமைத்து, அறம் வளர்த்த செல்வியாய்,தவச் சுடராய் காமாக்ஷி தேவி என்றும் வழிபட்ட பெருமையை உடையது இத் தலம். எண்ணில்லாத ஆகமங்களை அருளிச் செய்த சிவபெருமான்,தாம் விரும்புவது அவ்வாகம வழியில் செய்யப்படும் பூசையே என உணர்த்தியருள, உலகன்னையும் பெண்ணில் நல்லாளும்  பெருந் தவக்கொழுந்துமாகிய எம்பிராட்டி, ஏகம்பப்பெருமானைப் பூசித்தாள் கமலினி,அனிந்திதை என்னும் இரு சேடியர்கள் அம்பிகா வனத்திலிருந்து தூய மலர்களைக் கொணர்ந்து தர, கம்பை ஆற்று நீராலும் சந்தனம் முதலிய திரவியங்களாலும் பெருமானை வழிபட்டாள் பெருமாட்டி.

ஈசனின் திருவிளையாடலால் கம்பையாறு பெருகி வந்து அம்மைக்கு அச்சம் விளைவித்தது. தாம் வழிபடும் மூர்த்திக்கு ஊறு விளையுமோ என்று அஞ்சித் தனது வளைக் கரங்களால் பெருமானைத் தழுவிக் கொண்டாள் தேவி. அவளது அன்புக்கு மகிழ்ந்த ஏகம்பநாதன் வெளிப்பட்டு அருளி, “ உனது பூசை என்றும் முடிவதில்லை வேண்டும் வரம் கேள் ” என்று அருளிச் செய்தான், அறம் வளர்த்த நாயகியும் பெருமானை வணங்கி,” ஐயனே, அடியாளது பூசை எக்காலத்தும் நிலைபெறச் செய்ய வேண்டும். சிவாபராதம் ஒன்றைத் தவிர இத்தலத்திலுல்ளோர் செய்யும் பிழைகளை மன்னித்து அருள வேண்டும்” என வேண்டினாள். பெருமானும் அங்ஙனமே வரமளித்தருளினான். காமாக்ஷி தேவியும் காமகோட்டத்தில் இருந்து கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்து வந்தாள்.

காமகோட்டத்தின் அருகில் உலகாணித் தீர்த்தம் என்ற தீர்த்தம் ஒன்று உண்டு. அதில் நீராடுபவர் பாவங்கள் நீங்கப்பெற்று மோட்சத்தை அடைவர். காஞ்சி நகரில் தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. புண்ணிய தீர்த்தம்,இஷ்ட சித்தி தீர்த்தம்,சர்வ தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் அங்கு உள்ளன. அதிசயங்கள் பலவற்றைக் கொண்ட காஞ்சி நகர எல்லையை விகடசக்ர விநாயகரும், வயிரவரும், முருகப்பெருமானும் காவல் புரிகிறார்கள். கரிகால் பெருவளவன் இந்நகரை அமைத்து மக்களை அங்கு குடியேற்றினான். அந்நகரில் அந்தணர், வணிகர்,அரச மரபினர், வேளாளர் ஆகியோர் வசிக்கும் வீதிகள் இருந்தன. திருவிழாக் கோலம் பூண்ட இந்நகரில் மக்கள் தத்தம் குலத்தொழில்களைத் திறம்படச் செய்து, நல்லறம் செய்து வாழ்ந்தனர்.

வளம் மிக்க காஞ்சி நகரில் ஏகாலியர் குலத்தில் சிவத் தொண்டர் ஒருவர்  அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார்.      சிவத்தொண்டர்களின் மனக் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டுவன செய்து தொண்டாற்றியதால் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். சிவனடியார்களது துணிகளை அழுக்குப் போகத் துவைத்துக் கொடுத்து வந்தார். அதனால் அவரது பிறவியாகிய அழுக்கும் நீங்க ஏதுவாயிற்று.

திருக்குறிப்புத் தொண்டருக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் ஒரு ஏழையின் வடிவம் தாங்கி அழுக்கேறிய கந்தை தரித்தவராக மாலும் காணாத திருவடிகள் நிலத்தில் தோய, அன்பர் முன் வந்து தோன்றினார். அடியார் வேடம் பூண்டு வந்த பெருமானைக் கண்டு மகிழ்ந்த நாயனார் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி மகிழ்ந்தார். பிறகு,” தேவரீர் அணிந்துள்ள கந்தையைத் தந்தருளினால் அடியேன் அதனை அழுக்கு நீக்கித் தருகிறேன்” என்று விண்ணப்பித்தார். வேடம் ஏற்று வந்த பெருமானும்,” இக்கந்தை அழுக்கேறியதுதான். குளிர் காலமாதலால் கதிரவன் மறைவதற்குள் இதனைத் தோய்த்து விட்டுப் பின்னர் உலர்த்திக் கொண்டு வருவீராக. இல்லையேல் இந்த உடல் குளிரால் அவதிப்படும்” என்றார். நாயனாரும் அக்கந்தையை மாலைக்குள் தந்துவிடுவதாகக் கூறி அதனை எடுத்துப் போனார்.

தடாகத்திற்குக் கந்தையை எடுத்துச் சென்ற நாயனார் அதன் அழுக்கு நீங்கத் துவைக்கையில் சிவபெருமானின் திருவிளையாடலால் மேகங்கள் திரண்டு வந்து பெருமழை கொட்டியது. அதைக் கண்டு பதறிய நாயனார்,தாம் தவசியார்க்குத் தந்த வாக்கு பொய்யாகி விட்டதே என வருந்தினார். மழையோ நிற்காமல் இரவு நேரம் வரை பெய்தது. தவசியாரின் திருமேனி குளிரில் வருந்துமாறு செய்து விட்டேனே என எண்ணினார். அப்பிழைக்குத் தண்டனையாகத் தன் தலையைத் துணி துவைக்கும் கல்லில் மோதிக் கொள்ளத் துவங்கினார். அப்போது காமாக்ஷி அம்பிகையின் வளைத் தழும்பு பட்ட ஏகாம்பர நாதரது மலர்க்கை நாயனாரைப் பிடித்து நிறுத்தியது. அடை மழை நின்று, வானம் பூமாரி பெய்தது. கொன்றை மலர் அணிந்த சிவபிரான் உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தொண்டருக்குக் காட்சி வழங்கினான். பேரன்பு பெருகத் தலை மீது கரங்கள் கூப்பியபடிப்  பெருமானைத் தொண்டர் வணங்கி நின்றார். “ உனது பெருமை மூவுலகும் அறியுமாறு செய்தோம். “ இனி நீ நம்முடன் வந்து நம்மைப் பிரியாது இருப்பாயாக “ எனத் திருவாய் மலர்ந்தருளிய இறைவன், திருஏகம்பத்தில் புகுந்தருள,அன்பரும் இறைவனது மலரடிகளை அடைந்தார்.

***********************************

சண்டேசுர  நாயனார்  

பொய்யாக் காவிரி பாயும் சோழ வள நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் சேய்ஞலூர் என்ற பழமையான ஊர் உள்ளது.இத்தலம்  முருகப்பெருமானால் வழிபடப்பட்டதால் இப்பெயர் பெற்றது.சேய் என்பது இங்கு முருகனைக் குறிக்கும். ( கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் இவ்வூருக்குச் செல்லும் சாலை பிரிகிறது. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது). இங்கு வெண்ணீறணிந்து,நான்மறை ஓதி,ஐம்புலனடக்கி, முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கு வீதிகளில் வேதஒலி முழங்கிக்கொண்டிருக்கும்.பால் சொரியும் பசுக்கூட்டங்கள் சென்று கொண்டிருக்கும். இயற்கை வளம் மிக்க நீர்நிலைகளும்,வயல்களும்,சோலைகளும் மிகுந்திருக்கும். சோழ மன்னர்கள் முடி சூட்டிக்கொள்ளும் ஐந்து நகரங்களில் இதுவும் ஒன்று. பண்ணுக்குப் பயனாக நல்ல இசையும், பாலின் பயனாக இனிய சுவையும், கண்ணுக்குப் பயனாக அது காட்டும் ஒளியும், கருத்துக்குப் பயனாக அஞ்செழுத்தும் விண்ணிற்குப் பயனாக மழையும், வேதத்தின் பயனாகச் சைவமும் இருப்பதைப்போல மண்ணுக்குப் பயனாக விளங்கியது       சேய்ஞலூர்.

பெருமைகள் பல பெற்ற திருச்சேய்ஞலூரில் அந்தணர் குடியில் காசிப கோத்திரத்தில் எச்சதத்தன் என்பவன் இருந்தான். அவனது மனைவியின் பெயர் பவித்திரை என்பதாகும்.அவள் சிவபக்தி மிக்கவள். அவளது திருவயிற்றில் வேத நெறி தழைக்கவும், மறைக்குலம் மேன்மைபெறவும், சைவத் திறம் ஓங்கவும் விசாரசருமர் என்பவர் அவதரித்தார்.

ஐந்து ஆண்டுகள் கடந்ததும்,கலைகள் பலவும் கற்கத் தொடங்கிய விசார சருமருக்கு ஏழாண்டுகள் ஆனதும் மரபுப்படி உபநயனம் செய்விக்கப்பட்டது. வேதங்களை அவர் எளிமையாகக் கற்றதைக் கண்ட ஆசிரியர்கள் வியந்தார்கள். அளவிலாக் கலைகளுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது தில்லைக் கூத்தனின் திருவடிகளே என்று விசார சர்மர் உணர்ந்ததால் அவரது மனம் சிவபெருமானிடம் மேலும் பேரன்பு கொண்டு விளங்கியது.

ஒருநாள் தெருவழியே பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்ற ஆயன் ஒருவன் அக்கூட்டத்திலிருந்த ஒரு பசு அவனை முட்டப்புகவே, அதனைக் கோலால் அடித்தான். இதனைக்  கண்ட விசார சர்மர் அவனைக் கண்டித்ததோடு, பசுக்களின் பெருமையை அவன் அறியும்படி உணர்த்தி அருளினார். உலகிலேயே பசுக்கள் பிற உயிர்களிலும் மேம்பட்டவை என்றும்,எல்லா நதிகளும் அவற்றின் பால் உள்ளன என்றும் தேவர்களும் முனிவர்களும் அவற்றின் அங்கங்களில் உள்ளனர் என்றும் சிவபெருமானுக்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் உரிமை உள்ளவை என்றும் பெருமானும் பிராட்டியும் எழுந்தருளும் இடப தேவரின் குலத்தைச் சார்ந்தவை என்றும் அவை பாதுகாக்கப்படவேண்டியவை என்றும், அதுவே சிவபெருமானை வழிபடும் நெறியும் ஆகும் என்றும் அறிவுறுத்தினார். இனிப் பசுக்களைத் தாமே மேய்ப்பதாகவும் கூறினார். மறையோர்களின் இசைவு பெற்றுப் பசுக்களை அன்றுமுதல் மேய்க்க முன்வந்தார்.

விசார சருமர் பசுக்களை மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரே புற்களைப் பறித்துக் கொண்டு வந்து அவற்றிற்குத் தருவார். அவற்றை நீர்நிலைகளில் நீர் அருந்தச் செய்வார். பிற மிருகங்களால் அவற்றிற்குத் துன்பம் நேராதவாறு காப்பார். வெய்யில் நேரங்களில் அவற்றை மர நிழல்களில் தங்கச் செய்வார். மாலையில் பால் தரும் நேரத்தில் அவரவர் வீட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டு விட்டு வருவார். அதனால் பசுக்கள் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பால் சொரிந்தன.

பசுக்கள் விசாரசருமரிடம் சென்று கன்றுக்குக் கருணை பாலிப்பது போலத் தாமாகவே பால் சொரிந்தன. அதனைக் கண்ட விசார சருமர் அப்பாலை சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாக்க எண்ணினார்.

மண்ணியாற்றங்கரையில் ஒரு ஆத்தி மரத்தடியில் இருந்த மணல் திட்டில் மணலால் சிவலிங்கம் அமைத்தார். மனத்தினாலே அப்பெருமானுக்குத் திருக்கோயிலும்,கோபுரமும்,மதியும் அமைத்தார். ஆத்தி மலர்களையும் பிற நன் மலர்களையும் கொண்டு வந்து சேர்த்தார். புதிய குடங்களை எடுத்துக் கொண்டு பசுக்களிடம் சென்றதும் அவை அக்குடங்கள் நிறையுமாறு பாலைப் பொழிந்தன. அவற்றைத் தாம் அமைத்த மனக் கோயிலருகே வைத்துப் பேரன்போடு இறைவரைப் பாலினால் அபிஷேகம் செய்தார். அதுவே எம்பிரான் மகிழ்ந்து ஏற்ற பூஜை ஆயிற்று. பின்னர் மலர்களால் அர்ச்சித்து விட்டு இல்லம் திரும்புவார். இவ்வாறு பூசையினைத் தினமும் செய்து வந்தார். பசுக்கள் வீடு திரும்பியதும் முன்னை விடச் சற்றும்  குறைவில்லாமல் பால் தந்தன.

விசாரசருமர் இவ்வாறு பசுக்களிடம் பால் கறந்து சிவபூஜை செய்வதைக் கண்ட அயலான் ஒருவன் பசுக்களின் உரிமையாளர்களிடம் சென்று பாலை விசாரசருமர் வீணாக்குவதாகப் புகார் செய்தான்.அதக் கேட்ட அந்தணர்கள் விசார சருமரின் தந்தையான எச்ச தத்தனிடம் நடந்ததைக் கூறினார்கள். இனி அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வதாக அவர்களிடம் கூறிவிட்டு வீடு திரும்பிய எச்சதத்தன் மறுநாள் தானே சென்று நடப்பதைக் கண்டறிவதாக எண்ணினான்.

மறுநாள் காலை வழக்கம்போல் விசாரசருமர் பசுக்களை அழைத்துக் கொண்டு மண்ணியாற்றங் கரையை அடைந்தார். அவரைத் தொடர்ந்த எச்ச தத்தன் அவர் அறியாதபடி ஒரு குராமரத்தின் மீது ஏறிக் கொண்டு ஒளிந்திருந்தான். மண்ணியாற்றில் நீராடிவிட்டு வந்த விசார சருமர், முன்போல் மணலால் திருக்கோயில் அமைத்து மலர்களைக் கொய்து கொண்டு வந்தார். மேய்ந்துவிட்டு வந்த பசுக்கள் தாமாகவே சொரிந்த  பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு ஆகம வழிப்படிப் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டினார்.

ஒளிந்திருந்து தன மகனாரது செய்கையைக் கண்ட எச்சதத்தன் மிக்க சினம் கொண்டான். மரத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து கையிலிருந்த கோலால் விசாரசருமரை முதுகில் அடித்தான். அவரைப் பலவாறு கடிந்தான். ஆனால் சிவபூஜையில் ஒன்றியிருந்த விசார சருமர் அவற்றைக் கவனியாமல் பெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதிலேயே சிந்தை செலுத்தி இருந்தார். இதனால் மேலும் கோபமடைந்த எச்சதத்தன் பால் குடங்களைக் காலால் உதைத்தான். தியானம் களைந்த விசாரசருமர் பாலை இடறியது தந்தை என்று அறிந்தார். தந்தையே ஆயினும் சிவாபராதம் செய்ததால் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணி அருகில் கிடந்த ஒரு கோலை எடுத்தார். அக்கோல் உடனே மழுவாக மாறியது. அதனைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டி வீழ்த்தினார். எச்சதத்தனும் கால்கள் இழந்து குருதி பெருக, மண் மேல் விழுந்து இறந்தான். சிவபூஜைக்கு வந்த இடையூறு நீங்கியவுடன் பழையபடி அப்பூஜையைத் தொடர முற்பட்டார் விசார சருமர்.

பாலகனின் ஒப்பற்ற பூசைக்கு மகிழ்ந்த ஈசனும் உமாதேவியோடு விடை ஏறி, பூதகணங்கள் சூழ வந்து காட்சி கொடுத்தருளினார். தேவர்களும் முனிவர்களும் வேத மொழிகளால் துதித்தனர். காட்சி தந்த இறைவனைக் கண்ட அப்பாலகனும் மகிழ்ச்சி பொங்கப் பெருமானது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

விசாரசருமரைத் தனது திருக் கரங்களால் எடுத்து அனைத்து,உச்சி மோந்த எம்பெருமான் , “ நம் பொருட்டு உனது தந்தையின் கால்கள் வெட்டினாய். இனி உனக்கு அடுத்த தந்தை யாமே ஆவோம்” என்று அருளி அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கி “ நாம் உண்ட கலமும் சூடும் மாலை,அணிகலம் ஆகியவையும், உடுக்கும் உடைகளும் உனக்கே ஆகுக. உனக்குச் சண்டீசன் என்ற பதவியையும் தந்தோம்” எனக் கூறியருளினான். பின்னர், தனது திருமுடியிலிருந்த கொன்றை மாலையையும் அப்பாலகனுக்குச் சூட்டியருளினான்.

தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹர நாமம் கூறி ஆர்ப்பரித்தனர்.இசைக்கருவிகள் முழங்கின சிவகணங்களும் மறைகளும் துதித்தன. இவ்வாறு சைவம் ஓங்குமாறு விசார சருமர் சண்டேச நாயனார் ஆகிச் சண்டீச பதம் பெற்றார். நாயனாரால் கால்கள் வெட்டுண்டு இறந்த எச்சதத்தன் இறையருளால் அப்பிழை நீங்கியவனாகிச் சுற்றத்தாருடன் திருக் கயிலை அடையும் பேறு பெற்றான்.  இதனால்  சிவனடியார்கள் பிழைக்கினும் அது தவமாவது பெறப்பட்டது.

****************************************************

 

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-2

எறிபத்த நாயனார்

இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச்   சேய்ஞலூர், கருவூர்  ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் ஆநிலை என்னும் கோயில் உள்ளது. அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும் நியமம் மிக்க அடியார்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதைக் கடமையாகக் கொண்டவர் எறிபத்த நாயனார் என்ற பெரியோர் ஆவார். அடியார்களின் இடர்களைக் களைவதற்காகத் தமது கரத்தில் மழு (கோடரி) ஆயுதத்தை எப்போதும் தாங்கியிருப்பார்.

கருவூர் ஆநிலையப்பரிடம் அன்பு பூண்ட சிவகாமியாண்டார் என்ற முதிய அந்தணர் அந்நகரில் வாழ்ந்து வந்தார். தினமும் ஆநிலையப்பருக்கு மாலைகள் அளித்து வருவதை நியமமாகக் கொண்டவர் அவர். வைகறையில் தூய நீராடி, நந்தவனத்தை அடைந்து, அங்குள்ள மணமிக்க மலர்களைக் கொய்து, பூக்கூடையை நிறைத்து,அவற்றைக் கொண்டு அழகிய மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார்.

ஒருநாள் தனது தண்டில் பூக்கூடையைத் தொங்கவிட்டவாறு நவமிக்கு முன் தினம் சிவகாமியாண்டார் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கரூரை ஆண்டு வந்த புகழ்ச் சோழரது பட்டத்து யானை திடீரென்று மதம் பிடித்து அவ்வீதி வழியே ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் பயந்தவாறு    ஓடலாயினர். வயோதிகரான சிவகாமியாண்டார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பட்டவர்த்தனம் என்ற அந்த யானை அவரது பூக்கூடையப் பற்றி இழுத்து நிலத்தில் சிந்தி விட்டு விரைந்தது. அதன் காவலர்களோ அல்லது பாகர்களோ அதனைத் தடுக்காது போகவே,  “ சிவதா சிவதா” என்று கதறிக்கொண்டு அந்த யானையின் பின்னர் ஓடினார் சிவகாமியாண்டார். மூப்புக் காரணமாக அவரால் ஓடமுடியாது நிலத்தில் விழுந்தார். அப்போது இறைவனை நோக்கி ஓலமிட்டுக் கதறினார். அந்த ஓலமிடும் ஓசை கேட்டு அங்கு வந்த எறிபத்தர் நடந்ததைக் கண்டு சினமுற்றவராக மதம்பிடித்த யானையைத் தொடர்ந்து சென்று, மலர்களைச் சிந்திய அதன் துதிக்கையைத்  தனது மழுவினால் வெட்டி வீழ்த்தினார். அதனால் நிலத்தில் விழுந்து புரண்ட யானை இறந்தது. அதன் பக்கத்தில் வந்த குத்துக்கோற் பாகர் மூவரும், யானை மீதிருந்து செலுத்திய இருவரும் நாயனாரை எதிர்த்த போது அந்த ஐவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். இதனைக் கண்ட பிற பாகர்கள் விரைந்து சென்று அரண்மனைச் சேவகர்களிடம் யானையும் சேவகர்களும் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அதனைக் கேள்வியுற்ற சோழ மன்னர் முழு விவரங்களையும் கேளாமல், சினம் கொண்டவராகத் தனது சேனைகளுடன் எறிபத்தர் இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு பகைவர்கள் எவரையும் காணாது மழு ஏந்திய கையுடன் நிற்கும் எறிபத்தரை மட்டுமே கண்டார்.

“ இவரே யானையையும் சேவகர்களையும் கொன்றவர்” என்று பாகர்கள் எறிபத்தரைச் சுட்டிக்காட்டியவுடன்,சோழ மன்னர், ” இவர் சிவனடியாரைப் போல் அல்லவா காணப்படுகிறார். நற்குணம் மிக்கவராகவும் காணப் படுகிறார். யானை ஏதோ பிழை செய்திருக்க வேண்டும்.அதன் காரணமாகத்தான் அதனைத் தண்டித்திருப்பார்” என்றார். தனது குதிரையிலிருந்து இறங்கி நேராக நாயனாரை அணுகி அவரைத் தொழுது,     “இந்த யானை செய்த குற்றத்தை அறியேன். அதற்குரிய தண்டனை போதுமோ எனவும் அறியேன்.அருளிச் செய்வீராக.” என்றார் அரசர்.

நாயனார் அரசரை நோக்கி நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னர்,அச்சத்துடன் அவரை மீண்டும் வணங்கி, “ அது எனது பட்டத்து யானை ஆதலால் என்னையும் இந்த உடை வாளால் தண்டித்து அருளுவீராக” என்று எறிபத்தரின் கரங்களில் தனது உடைவாளைக் கொடுத்தார்.

புகழ்ச்சோழரின் பேரன்பினைக் கண்டு திகைத்த நாயனார், அவ்வாளை வாங்கிக் கொள்ளாவிடில் அரசர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார் என்று அஞ்சி இப்படிப்பட்ட பேரன்புடைய மன்னருக்குத் தீங்கு நினைத்தேனே என்று கருதி, அதற்கு முன்பாகவே தாம் உயிர் நீப்பதே முறை என்று எண்ணியவராக அவ்வாளினால் தனது கழுத்தினை அறுக்க முயன்றார். அதனைக் கண்டு பதறிய மன்னர், “ ஆ!! கெட்டேன். பெரியோர் செய்கை அறியாது போயினேன்.” என்றவராக விரைந்து சென்று நாயனாரின் கைகளையும் வாளையும் பிடித்துக் கொண்டார். அதே நேரத்தில், புகழ்ச்சோழர் தமது எண்ணம் நிறைவேறாதது குறித்து வருந்தினார்.

அவ்விருவரது அன்பின் திறத்தை உலகோர் அறிய வேண்டி இறைவர் அருளால் ஓர் அசரீரி வாக்கு விண்ணில் பலரும் கேட்க எழுந்தது. “உங்களிருவரது அன்பின் உயர்வை உலகத்தவர் அறியவே இவ்வாறு நிகழ்ந்தது. இறந்து பட்ட யானையும் பிறரும் உயிர் பெற்று எழுவர்” என்ற சொல் விண்ணிலிருந்து எழுந்தது. அக்கணமே அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அதனைக் கண்ட நாயனார், வாளைக் கீழே போட்டுவிட்டு புகழ்ச் சோழரை வணங்க, அரசரும் எறிபத்தரை வணங்கினார்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவகாமியாண்டாரும் இத்திருவருட் செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். எறிபத்தரின் வேண்டுகோளை ஏற்றவராக புகழ்ச் சோழர் பட்டத்து யானையின் மேல் ஏறிக் கொண்டு,சிவபெருமானின் மலரடிகளைச் சிந்தித்தபடியே தமது அரண்மனையை அடைந்தார். சிவனடியார்களின் பெருமையை எவரே அறிய வல்லார் என நெகிழ்ந்தவராகச் சிவகாமியாண்டார் முன்போல் ஆநிலையப்பருக்குத் தொண்டு செய்து வரலாயினர். எறிபத்தரும் முன்போலவே கையில் மழுவேந்தி சிவனடிடயார்களின் துன்பம் களைந்து வந்தார்.அதன் பயனாகத் திருக் கயிலாயத்தில் சிவகண நாதராகும் பேறு பெற்றார். எறிபத்தரின் தொண்டினையும்,புகழ்ச் சோழரின் பெருமையையும் யாரால் அளவிட்டுக் கூற முடியும்? சிவபெருமான் ஒருவரால்தான் அளவிட முடியும்.

 ஏனாதிநாத நாயனார்

சோழநாட்டில் வளம் மிக்க எயினனூர் என்ற ஊரில் ஈழக்குலத்தைச்      சேர்ந்த ஏனாதி நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். ( எயினனூர் என்பது கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் உள்ளது. தற்போது ஏன நல்லூர் என்று  வழங்கப்படுகிறது). சிவபக்திச் செல்வராக விளங்கிய நாயனார் அரசர்களுக்கு வாட்பயிற்சி செய்துவித்து வந்தார். ஈட்டிய பொருள்களை எல்லாம் சிவனடியார்களுக்கே அளித்து வந்தார். இதே வாட்பயிற்சித் தொழிலைச் செய்துவந்த அதிசூரன் என்பவன் நாயனாரது ஊதியமும் புகழும் பெருகி வருதலைக் கண்டு பொறாமை கொண்டு பகைமை பாராட்டி வந்தான். ஒருநாள் துணையாகச் சிலரை அழைத்து வந்து அதிசூரன் நாயனாரது வீட்டை அடைந்து அவரைப் போருக்கு அழைத்தான். ஏனாதினாதரும் தனது மாணாக்கர்களுடனும் உறவினர்களுடனும்  வெளியில் வந்து,” யார் போரில் வெற்றி பெறுகிறாரோ அவரே வாட்பயிற்சி கற்பிக்கத் தகுதி உடையவர் ஆவார்” என்று அதிசூரன் கூறியதை ஏற்றுக் கொண்டு அவனுடன் போர் புரியலானார். இருபுறத்திலும் அனேக வீரர்கள் மாண்டனர். நாயனாரது ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் அதிசூரனின் படைகள் பின் வாங்கின. அதிசூரனும் புறம் காட்டி ஓடினான். தனது வீட்டை அடைந்த அதிசூரன் உறக்கம் வராமல் வஞ்சனை மூலமாவது ஏனாதிநாதரை வெல்வேன் என்று உறுதி பூண்டான்.

மறுநாள் அதிசூரன் ஒரு ஏவலாள் மூலம் ஏனாதிநாதரை மீண்டும்  துணை யாரும் இன்றித் தனியாக வேறோரிடத்தில் போருக்கு வரும்படி கூறி அனுப்பினான். நாயனாரும் அதன்படி, போர்க்களத்தை அடைந்து அதிசூரனது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.

திருநீறு அணிந்த அடியார்களுக்கு ஏனாதி நாதர் ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்த அதிசூரன், தனது நெற்றியிலும் உடலிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டு வாளையும்,கேடயத்தையும் ஏந்தியவனாக முகத்தைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்தை அடைந்தான்.

போர் துவங்கியதும் தன்னை நோக்கி வந்த நாயனார் காணும்படி அதுவரையில் கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்த தனது முகம் தெரியும்படி நின்றான். அப்போது அவனது முகத்தில் திருநீறு இருந்ததைக்கண்ட நாயனார், “ ஆ கெட்டேன்!! திருநீறு இட்டபடியால் இவர் சிவனடியார் அல்லவா! அவரை எதிர்க்கத்துணிந்தது பிழை அன்றோ! இனி அவர் உள்ளக்குறிப்பின்படியே நிற்பேன் எனக் கருதித்  தனது கேடயத்தையும் வாளையும் நிலத்தில் போட்டார்.

பிறகு,” நிராயுதபாணியாக நின்றவரைக் கொன்றார் என்ற பழி இவருக்கு வந்து விடுமே” எனக்கருதி, வாளையும் கேடயத்தையும் மீண்டும் கைகளால் எடுத்துக் கொண்டு போரிடுபவர் போலப் பகைவன் முன் நின்றார். பாதகனாகிய அதிசூரன் அத்தருணமே தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டான். நாயனாரது பேரன்பைக் கண்ட சிவபெருமான் அவருக்கு ஆகாய வெளியில் காட்சி தந்து, “ இனி நீ நம்மை விட்டுப் பிரியாதிருப்பாயாக” எனக் கூறி அருளினார். நாயனார் திருநீற்றின் மீது வைத்திருந்த பேரன்பினை என்னென்று இயம்ப முடியும்?

 கண்ணப்ப நாயனார்

பொத்தப்பி நாட்டில் மலைகளும் காடுகளும் சூழ்ந்த உடுப்பூர் என்ற பழம்பதி ஒன்று உண்டு.( கடப்பை மாவட்டத்தில் உள்ள புள்ளம்பேட்டை என்ற பகுதியைப் பொத்தப்பி நாடு என்பர். உடுப்பூர் என்பது தற்போது அரக்கோணம்- குண்டக்கல் பாதையில் உள்ள இராஜம் பேட்டைக்கு அருகில் உள்ள உடுக்கூர் என்பர்) அப்பகுதியில் வேட்டையாடும் வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்களுக்குத் தலைவனாக நாகன் என்பவன் விளங்கினான். அவனது மனைவி தத்தை என்பவள் ஆவாள். அவர்கள் நீண்ட காலமாக மகப்பேறு இன்றி வருந்தினர். அக்குறை தீர முருகப்பெருமானது சந்நிதியில் நாள்தோறும் வேண்டி வந்தனர். பெரிய திருவிழா எடுத்துக் குரவைக்கூத்து நடத்திப் பெருமானை வழிபட்டனர். அதன் பலனாகக் கந்தவேள் கருணை புரியவே, தத்தை கருவுற்று ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். வேடர் குலமே மகிழ்ச்சியில் திளைத்தது. பன் மணிகளை வாரி இறைத்தும், உடுக்கை முதலிய மங்கள வாத்தியங்களை முழக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கானகத் தெய்வங்களை வழிபட்டனர். அக்குழந்தையை நாகன் கையில் எடுத்தபோது திண் என்று இருந்ததால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான்.

ஓராண்டு ஆனதும் திண்ணனார் தளர்நடையிட்டார். அவரது நெற்றிக்குப் புலி நகச் சுட்டியையும் மார்புக்குப் பன்றி முள்ளும் புலிப்பல்லும் கோத்த மாலையையும் இடையில் சதங்கையையும் காலில் யானைத் தந்தங்களால் ஆன தண்டையையும் அணிவித்து அலங்கரித்து மகிழ்ந்தனர். மழலை பேசிப் பெற்றோரை மகிழச் செய்தார் திண்ணனார். ஐந்து வயது ஆனபிறகு வேடச் சிறுவர்களுடன் சோலைகளிலும் உடுப்பூரை அடுத்த காடுகளிலும்  விளையாடுவார். புலிக் குட்டிகளையும், பன்றிக் குட்டிகளையும், நாய்க் குட்டிகளையும்,முயற்குட்டிகளையும் பிடித்து வந்து மரங்களில் கட்டி அவற்றை வளர்ப்பார்.

சில ஆண்டுகள் கழிந்தபின், நாகன் தன் மகனார்க்கு வில் வித்தையைத் தக்கோர் மூலம் நல்லதோர் நாளில் விழா எடுத்திக் கற்பித்தான்.புலி நரம்பாலான காப்பினைக் கையில் கட்டி வேடர்கள் வாழ்த்துக் கூறினார். பல்வகை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு வில்விழா ஆறு நாட்கள் நடைபெற்றபின் வில்வித்தையினை ஆசிரியரிடம் நாள்தோறும்  திண்ணனார் பயின்றார். அதோடு படைக்கலப் பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது தோற்றம், புண்ணியங்கள் அனைத்தும் ஒரு   உருவம் பெற்று வந்தது போல விளங்கியது.

நாகனுக்கு வயது முதிர்ந்ததும் முன்போல வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே வேடர்களிடம் தனது மகனை வேடர் குலத் தலைவனாக ஆக்குவதாகத் தெரிவித்தான். அவர்களும் மகிழ்ச்சியுடன் அதற்கு உடன்படவே, தேவராட்டியை அழைத்துத் தன் மகன் முதன் முறையாகக் காட்டில் வேட்டையாடச் செல்ல இருப்பதால், அவனுக்குத் தீங்கு நேராதபடிக் காட்டிலுள்ள தெய்வங்களுக்குப் பூசை செய்யக் கோரினான். அவளும், தான் அங்கு வரும் முன்னர் நல்ல சகுனங்களைக் கண்டதாகக் கூறிப் ,பூசைக்கான பொருள்களை வாங்கிச் சென்றாள்.

வேடர்களுடன் திண்ணனார் நாகனிடம் வந்ததும், நாகன் அவரை ஆரத் தழுவிக்கொண்டு நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்து, தனக்கு மூப்பு வந்து விட்டதால், வேடர்குல ஆட்சியை ஏற்று, மிருகங்களை வேட்டையாடியும்,பகைவர்களை வென்றும்,வேடர் குலக் காவலனாக விளங்குவாய் என்று கூறித் தனது உடைவாளையும் தோலையும் கொடுத்தான். தந்தையின் வார்த்தையை ஏற்ற திண்ணனார்,மீண்டும் நாகனது பாதங்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வேட்டையாடத் தயாரானார்.

மறுநாள் உதயத்தில் நீராடி,வேட்டைக் கோலம் பூண்டு,தேவராட்டியை வணங்கி அவளது ஆசியைப் பெற்றுக்கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார். வேடர் படை தொடரக் காட்டில் வேட்டை தொடங்கியது. விலங்குகளைக் கொன்றபோது அவற்றின் குட்டிகளைக் கொல்லாது விட்டனர். அப்போது அங்கு கரிய காட்டுப்பன்றி ஒன்று தோன்றியது.  திண்ணனாரும் அவரது மெய்க் காவலர்களாகிய நாணன்,காடன் ஆகிய இருவரும் அப்பன்றியைப் பின் தொடர்ந்தனர். ஒரு மலைச் சாரலை அடைந்ததும் திண்ணனார் தனது உடை வாளால் அப்பன்றியை வீழ்த்தினார். வெகுதூரம் அதனைத் துரத்தி வந்தபடியால் மிகுந்த களைப்பும் பசியும் அவர்களுக்கு மேலிட்டது. ஆகவே அப்பன்றியை நெருப்பில் காய்ச்சித் தின்று நீர் அருந்திய பின் காட்டு வேட்டையைத் தொடரலாம் என்று தீர்மானித்தார்கள்.

மலைக்கு அருகில் ஓடும் பொன்முகலியாற்றுக்குச் சென்றால் நீர் அருந்தலாம் என்று அறிந்தபின், பன்றியை அங்கு எடுத்துச் சென்றனர். அப்போது அம்மலையின் தோற்றம் திண்ணனாரை வசீகரித்ததால், நாணன் அவரிடம், அம்மலை காளத்தி மலை என்றும் அதன் மீது குடுமித்தேவர் இருப்பதால் நாம் அவரை அங்கு சென்று வழிபடலாம் என்றும் கூறினான். மூவரும் பொன் முகலிக் கரையை அடைந்ததும், திண்ணனார் காடனிடம் அப் பன்றியைக் காய்ச்சுவதற்காகத் தீக்கோல் மூலம் தீயை உண்டாக்கி வைக்குமாறு கூறிவிட்டு, நாணனும் அன்பும் வழி காட்டக் காளத்தி மலை மீது ஏறத் தொடங்கினார்.

திண்ணனார் திருக்காளத்தி நாதரைத் தரிசிக்கும் முன்பே பெருமானது கருணை நயனம் அவர் மேல் பதிந்தது. அதனால் அவரது முந்தைய வினைகள் யாவும் அப்போதே நீங்கின.அதனால் ஒப்பற்ற அன்பு வடிவம் ஆயினார்.

பெருமானைக் கண்டதும் ஆறாத இன்பம் அன்பு வெள்ளமாக மேலிட ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவி உச்சி மோந்து,புளகாங்கிதம் அடைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இறைவனைப் பார்த்து, “ மிகக் கொடிய மிருகங்கள் வாழும் இப்பகுதியில் நீர் தனித்திருப்பது தகுமோ “ என வருந்தினார்.  பெருமான் மீது பச்சிலைகளும் பூவும் இருக்கக் கண்டு, அவ்விதம் செய்தவர் எவர் என்று கேட்டவுடன்,அருகிலிருந்த நாணன், தான் முன்பு ஒரு முறை நாகனுடன் வேட்டையாட வந்தபோது, ஒரு சிவப்பிராமணர் அப்பெருமானுக்கு நீர்,மலர்,இலைகள் ஆகியவற்றால் பூசித்துத் தாம் கொண்டு வந்த உணவை ஊட்டிப் பின்னர் ஏதோ சில மொழிகளைக் கூறிச் சென்றதைக் கண்டதாகக் கூறினான். அதைக் கேட்ட திண்ணனார் அச்செயல்கள் குடுமித்தேவருக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் போலும் என நினைந்து, தாமும் அவ்வாறே செய்ய உறுதி பூண்டார்.

பெருமான் பசியோடும் தனித்தும் இருக்கிறாரே! நானே சென்று நல்ல இறைச்சியை கொண்டு வருவேன் என்று எண்ணியவராகச் சிறிது தூரம் போவார். பிரிய மனமில்லாமல் மீண்டும் திரும்பி வந்து கண்ணீர் விட்டுக் கதறுவார். ஆனால் பெருமான் பசியோடு இருப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டாதவராக ஒருவாறு போய்வரத் துணிந்து கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராக, நாணன் பின்தொடர மலையை விட்டு இறங்கிப் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தார்.

காடன் அவர்களை எதிர் கொண்டு வணங்கித் தான் நெருப்பைக் கடைந்து, பன்றி இறைச்சியைத் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினான். அப்போது நாணன் காடனிடம் மலையின் மீது நடந்தவற்றைக் கூறி,”திண்ணன் குடுமித்தேவரை உடும்பு போலப் பிடித்துக் கொண்டு விட்டான். இந்த இறைச்சியையும் அவருக்காகவே எடுத்துச்செல்ல இங்கு வந்திருக்கிறான். நமது வேடர்குலத் தலைமையை நீக்கி, அவருக்கே ஆளாகிவிட்டான்” என்று கூறினான். இதைக்கேட்ட காடன், திண்ணனாரைப் பார்த்து, “ திண்ணா , நமது குலத் தொழிலைக் கைவிட்டு இவ்விதம் ஏன் செய்யத் துணிந்தாய்” எனக்  கேட்டான். அதனைக் கேளாதவர் போலிருந்த திண்ணனார், வேக வைத்த இறைச்சியில் நல்ல சுவைப்பகுதிகளை அறிய வேண்டி, அதில் சிறிதை வாயில் போட்டுச்  சுவை பார்த்தார். சுவையான இறைச்சிப் பகுதிகளைத் தனியாக சேமித்து வைத்தார். நாணனும் காடனும் இதைக் கண்டு அதிசயித்து,” சுவைத்த இறைச்சியை இவன் உண்ணாமல் உமிழ்கிறான். நமக்கும் தரவில்லை. அவனிடத்திலிருந்து வாய்ச்சொற்களும்  வரவில்லை. ஏதோ மயக்கம் கொண்டு விட்டான் என்று தோன்றுகிறது. அதைப் போக்கும் வழி நமக்குத் தெரியாததால் உடனே நாகனிடம் இதுபற்றித் தெரிவித்துத் தேவராட்டி மூலம் இம்மயக்கத்தைத் தீர்க்க வேண்டும் “ என்று தமக்குள் முடிவு செய்து, தங்களுடன் வந்த வேடர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.

தம்முடன் வந்த இருவரும் திரும்பிச் சென்றதையும் கவனியாமல் குடுமித்தேவரிடம் விரைந்து செல்லும் ஒரே வேட்கையுடன் திண்ணனார் பெருமானுக்கு அமுதாக இறைச்சியை எடுத்துக் கொண்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதற்குப் பொன்முகலி ஆற்று நீரைத் தன் வாயில் முகந்து கொண்டார். பறித்த இலைகளைத் தந்து சிகையில் செருகிக்கொண்டார். வில்லையும் அம்பையும் கைகளில் ஏந்திக்கொண்டார்.

திருக்காளத்தி நாதரின் சன்னதியை அடைந்தவுடன் பெருமானது திருமுடியில் முன்னம் சார்த்தப்பட்டிருந்த மலர்களைத் தனது செருப்புக் காலால் அகற்றினார். உள்ளத்தில் பொங்கி எழும் அன்பினை உமிழ்பவர் போலத் தனது வாயில் அடக்கிக் கொண்டுவந்த நீரைப் பெருமானது திருமுடி மேல் உமிழ்ந்தார். தனது முடியில் கொண்டுவந்த இலைகளையும் மலர்களையும் இறைவரது திருமுடியின் மேல் சார்த்தினர். பின்னர், தாம் கொணர்ந்த இறைச்சியை இறைவர் முன் வைத்து,” பெருமானே! இதனைத் தேவரீர் ஏற்று அமுதுசெய்தஅருள வேண்டும். பற்களால் அதுக்கிச் சுவை மிகுந்ததைக் கொண்டு வந்துள்ளேன். ஏற்றருள வேண்டும்” என்று  வேண்டினார். அப்போது மாலைப் பொழுது கழிந்து இரவு வந்தது. இரவில் கொடிய விலங்குகள் வந்தால் பெருமானுக்குத் துன்பம் விளைவிக்குமே என்று எண்ணி பேரன்புடன் கையில் வில்லும் அம்பும் தாங்கிப் பக்கத்தில் இரவு முழுதும் நின்று காவல் மேற்கொண்டார்.

மறுநாள் பொழுது விடிந்ததும் பெருமானுக்குத் திருவமுது செய்வதற்கு வேட்டையாடி வரப் புறப்பட்டார். தினந்தோறும் காளத்தி நாதருக்கு ஆகம வழியில் நின்று திருமஞ்சம் செய்து அமுதூட்டி மலரணிவித்து வழிபாடு செய்யும் சிவகோசரியார் என்ற ஆதி சைவர் அன்றும் வழக்கம்போலப் பூசைக்கான பொருள்களுடன் மலை ஏறி வந்து திருச்சன்னதியை அடைந்தார். இறைவர் முன் இறைச்சியைக் கண்டு பதறி, “ ஆ! கெட்டேன். இதுபோல் அனுசிதம் செய்தவர் எவர் என்று தெரியவில்லையே! வேடர்களாகவே இருக்க வேண்டும். இப்படி நிகழுமாறு தேவரீர் திருவுள்ளம் கொள்ளல் முறையோ! : என்று பதறிக் கண்ணீர் விட்டார். பிறகு அங்கு கிடந்த இறைச்சி,எலும்புத் துண்டுகள் ஆகியவற்றை திருவலகால் அகற்றினார். பொன்முகலிக்குச் சென்று நீராடிவிட்டு மீண்டும் வந்து சிவாகம முறைப்படிப் பிராயச்சித்தம் செய்தார். அதன் பின்னர் பெருமானை வேத மந்திரங்களால் துதித்துத் திருமஞ்சனம் செய்து முறையான வழிபாடுகளை நிறைவேற்றியவுடன் தனது இருப்பிடம் திரும்பினார்.

இறைச்சிக்காக வேட்டையாடச் சென்ற திண்ணனார் ஒரு பன்றியையும் கலை மான்களையும் அம்பெய்திக் கொன்று ஓரிடத்தில் கொணர்ந்து, விறகால் தீ மூட்டித் தான் வேட்டையாடி வந்த மிருகங்களின் இறைச்சி மிகுந்த பகுதிகளைத் தீயிலிட்டுப் பக்குவப்படுத்தி, வாயில் சுவைபார்த்து நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துத் தேனோடு கலந்து , முன் போல் வாயில் நீரும் , முடியில் மலர்களும் ஏந்தி மலைமேல் எழுந்தருளியுள்ள காளத்திநாதரைச் சென்று அடைந்தார்.

சிவகோசரியார் பகல் நேரத்தில் பூசித்துச் சென்ற மலர்களைத் தனது   செருப்புக் கால்களால் நீக்கிவிட்டு, முன்போல் வாயே கலசமாகக் கொண்டு வந்த பொன்முகலி நீரால் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து, மலரணிவித்துத் தான் கொணர்ந்த இறைச்சியையும் இறைவனது திருமுன்னர் வைத்து வணங்கினார்.” பெருமானே! அடியேன் சுவைத்துப் பார்த்த இறைச்சி இது. தேனும் கலந்துள்ளேன். ஆகவே தித்திப்பாக இருக்கும். தேவரீர் ஏற்றருள வேண்டும்” என்று விண்ணப்பித்து இரவு முழுதும் பெருமானை விட்டு அகலாது,,கண் துஞ்சாது, காவலாக நின்றார்.     சிவகோசரியாரும் தினமும் இவ்வாறு நடைபெறுவது தொடர்வதைக்  கண்டு கலங்கி, அவ்விடத்தைத் தூய்மை செய்து விட்டு வழிபாடு செய்து வந்தார்.

இதற்கிடையில் நாணனும் காடனும் நாகனிடம் நடந்ததை விவரிக்கவே, பதைத்துப்போன நாகன் தேவராட்டியுடன் திண்ணனாரை அடைந்து தங்களுடன் திரும்பி வருமாறு கூறியும், இராச குளிகையால் இரும்பு பொன்னானது போலக் காளத்திநாதரது திரு நோக்கால் திண்ணனாரது வினைகளும் மும்மலமும் நீங்கி அன்புருவமாகி விட்டதால் அவர்களுடன் செல்ல அவர் உடன்படவில்லை. எனவே நாகனும் பிற வேடர்களும் வருத்தத்துடன் தங்களது இருப்பிடம் திரும்பினர்.

சிவகோசரியாரது பகற்பொழுது வழிபாடும் திண்ணனாரது இராப்பொழுது வழிபாடும் நான்கு நாட்கள் இவ்வாறு நடைபெற்றன.ஐந்தாம் நாள் காலை பூசை செய்ய வந்த சிவகோசரியார் இறைவனது சன்னதியில் இறைச்சி இருக்கக்கண்டு மிக்க துக்கமடைந்து, இத்தகைய அனுசிதம் நடைபெறாமல் திருவருள் புரிய வேண்டும் என்று பெருமானிடம் வேண்டிக்கொண்டு தனது இருப்பிடம் அடைந்தார். அன்றிரவு கனவின்கண் சிவபெருமான் தோன்றி,            ‘ அன்பனே, இவ்வாறு செய்யும் அவனை வேடன் என்று கருதாதே. அவனது வடிவம் நம்பால் கொண்ட அன்பு வடிவமே ஆகும். அவனது அறிவு,நம்மை அறியும் அறிவேயாகும்.அவன் செய்வதெல்லாம் நமக்கு இனியனவே ஆகும். அவன் தனது கால்களால் நீ அன்புடன் சார்த்திய மலர்களை நீக்குவது, முருகனின் மலரடி என்மேல் படுவதைக் காட்டிலும் சிறப்பு  உடையது. அவன் தனது வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரைக் காட்டிலும் சிறந்தது. பிரம- விஷ்ணுக்கள் சார்த்தும் மலர்கள், அவன் அன்புடன் சார்த்தும் மலர்களுக்கு இணை ஆக மாட்டா. அவன் வாயில் சுவைத்துப் பார்த்து அளிக்கும் ஊனமுதம், வேத வழியில் வேள்வி செய்து வேதியர்கள் அளிக்கும் அவிர்ப்பாகத்தைக் காட்டிலும் இனிமையானது. முனிவர்கள் கூறும் மந்திரங்கள்,அவன் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இணை ஆக மாட்டா. அவனது உயர்ந்த பக்தியின் மேன்மையை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். தற்போது மனக்கவலை ஒழிந்து நாளை நமது சன்னதிக்கு வந்து மறைந்திருந்து அதனைக் காண்பாயாக” என்று கூறி  மறைந்தருளினார்.

விடியற்காலையில் கண்ட கனவாதலால் மீண்டும் உறங்காது விடியும் வரை விழித்திருந்த சிவகோசரியார் பொன்முகலியில் நீராடி விட்டுப் பிறகு திருக்காளத்தி நாதரை வழக்கம் போல் பூசை செய்து விட்டு, இறைவனது கட்டளைப்படி மறைவில் ஒளிந்திருந்தார். ஆறாவது நாளான அன்றும் திண்ணனார் முன்போல் வேட்டையாடி இறைச்சியைப் பக்குவமாகச் செய்து, வாயில் திருமஞ்சன நீரையும் தலையில் மலர்களையும் கொண்டவராகக் காளத்தி நாதரின் திருச் சன்னதியை அடைந்தார்.அப்போது தீய சகுனங்களைக் கண்டு பதறிய திண்ணனார் , “ ஆ! கெட்டேன், எம்பெருமானுக்கு நான் இல்லாத நேரத்தில் ஏதோ தீங்குநேர்ந்திருக்குமோ?” என்று கலங்கியபடி விரைந்து வந்தார்.

திண்ணனாரின் அன்பை சிவகோசரியார் அறிவதற்காகக் காளத்திநாதர் தமது வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிவதுபோலக் காட்சி தந்து கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே இதைப் பார்த்துவிட்ட திண்ணனார் பதறிப்போய் விரைந்து ஓடி வந்து இவ்வாறு செய்தவர் யார் என்று அறியாமல் மதி மயங்கலானார். அவர் கொண்டுவந்த ஆற்று நீரும் மலர்களும் தரையில் சிந்தின. கையிலிருந்த இறைச்சியும், வில்லும் அம்பும் நழுவிக் கீழே விழுந்தன. கையால் துடைத்துப் பார்த்தும் இரத்தப்போக்கு நிற்காது போகவே, பெருமானுக்குத் துன்பம் விளைவித்தவர் வேடரோ அல்லது விலங்குகளோ என்று என எண்ணி நெடுந்தூரம் தேடிப்பார்த்தும் எவரையும் காணாது மீண்டும் பெருமானிடமே திரும்பி வந்தார்.பாதமலர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கினார். இத் துயரைத் தீர்க்கும் மருந்தினையும் இப்பாவியேன் அறியேன். என் செய்வேன் என்று கதறினார்.

மலை அடிவாரத்திற்குச் சென்று வேடர்கள் அம்புகளால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தக் கட்டும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பறித்துக் கொண்டு மனோவேகத்தினும் விரைவாகப் பெருமானிடம் வந்தடைந்தார். இரத்தம் ஒழுகும் கண்ணில் அம்மருந்துகளைப் பிழிந்தும் இரத்தம் வருவது நிற்கவில்லை. “ ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்ப்பது “ என்ற பழமொழி அப்போது அவருக்கு நினைவில் வந்தது. தனது கண்ணை அம்பினால் தோண்டிப் பெருமானது கண்ணில் அப்பினால் இரத்தம் நின்றுவிடும் என்று கருதினார். அதன்படித் தனது கண்ணை அம்பாள் அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பரின் கண்ணில் அப்பினார். அப்போது இரத்தம் வருவது கண்டு மகிழ்ச்சி மேலிடக் குதித்துக் கூத்தாடினார். உன்மத்தர் போல் ஆயினார்.

திண்ணனாரின் அன்பை மேலும் சிவகோசரியாருக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தனது இடது கண்ணில் இரத்தம் பெருகுமாறு செய்தருளினார். அதனைக் கண்ட திண்ணனார், “ஆ! கெட்டேன். மறு கண்ணிலும் இரத்தம் பெருகுகிறதே! ஆயினும் இதனைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அஞ்சேன். எனது மறு கண்ணைத் தோண்டி எடுத்துப்      பெருமானாரது கண்ணில் இப்போதே அப்புவேன் “ என்றார்.பெருமானின் உதிரம் ஒழுகும் இடது கண் இருக்குமிடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள அக்கண்ணின் மேல் தன இடது காலை ஊன்றிக் கொண்டு,  அம்பினால் தனது இடக் கண்ணைத் தோண்ட முயன்றார். தேவாதி தேவராகிய திருக்காளத்தி நாதர் இதனைப் பொறுப்பரோ? அக்கணமே தமது கரத்தை வெளியில் நீட்டிக் கண்ணைத் தோண்ட முயலும் திண்ணனாரின் கையைப் பிடித்து, “ நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப” எனக் கூறி அருள் செய்தார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சிவகோசரியார் மகிழ்ச்சி வெள்ளத்தில்; ஆழ்ந்து பெருமானை வணங்கினார். வேதங்கள் முழங்கத் தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்று முதல் திண்ணனார்க்குக் கண்ணப்பர் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. கண்ணப்பரின் கையைப்பிடித்த பெருமான் அவரை என்றும் தமது வலது பாகத்தில் நிற்குமாறு அருளிச் செய்தார். இதனைக் காட்டிலும் அடையத்தக்க பேறு உலகில் வேறு யாது உளது?

,    ,               குங்கிலியக் கலய நாயனார் 

சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் எட்டினுள் தன்னைச் சரணாக அடைந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகப் பெருமான்  இயமனைக் காலால் கடந்த தலம் திருக்கடவூர் என்பதாகும். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார் என்பவர் காலகாலனாகிய சிவபிரானது பொன்னார் திருவடிகளை நாள்தோறும் அன்புடன் வணங்கிப் பூசித்து வந்தார். மணம் மிக்க குங்கிலியம் கொண்டு தூபம் இடும் தொண்டினைத் தவறாது செய்து வந்தார். அதன் காரணமாக அவர் குங்கிலியக்கலயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

குங்கிலியம் இடும் தொண்டினைச் செய்து வரும்போது நாயனாருக்கு வறுமை வந்தது.ஆயினும் தமது திருப்பணியைக் கைவிடாமல் நடத்தி வந்தார். வறுமை மேன்மேலும் அதிகரிக்கவே,தமது நிலங்களையும் பிற உடைமைகளையும் விற்று அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாளடைவில் குடும்பத்தோர் அனைவரும் உணவின்றி வருந்தினார்கள். அப்போது கலயனாரது மனைவியார் தமது தாலியைக் கழற்றிக் கணவரிடம் தந்து நெல் வாங்கி வரும்படி கூறினார். கலயரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கவேண்டிக் கடை வீதிக்குச் சென்றார். அப்போது எதிரில் ஒரு வணிகன் ஒரு மூட்டையை  எடுத்து வரக்கண்டு அது என்ன பொதி என்று அவனிடம் வினவினார். அதற்கு அவன்,   அப்பொதி, குங்கிலிய மூட்டை என்றான். அவ்வார்த்தையைக் கேட்ட நாயனார் மிக்க மகிழ்ந்து, தம்மிடம் இருந்த பொன்னால் ஆன தாலியைக் கொடுத்துக் குங்கிலியம் வாங்கினார். அடுத்த கணமே, குங்கிலி யத்தைப் பெற்றுக்கொண்ட நாயனார் வீரட்டேசுவரர்  ஆலயத்தை அடைந்து குங்கிலியம் ஏற்றி வழிபட்டார். சிவ சிந்தனையுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

அன்றிரவு கலயனாரது மனைவியாரும் மக்களும் பட்டினியுடன் மிகுந்த அயர்வடைந்தவர்களாக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சிவனருளால் குபேரன் நாயனாரது மனையில் நெற்குவியல்,நவமணிகள், பொற் குவியல் ஆகிய எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து நிறைத்து வைத்தான். கலையனாரது  மனைவியாரின் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, தாம் இவ்வாறு அருளியதை உணர்த்தினார். உடனே கண் விழித்த அவ்வம்மையார் திருவருளை வியந்து,துதித்த வண்ணம் கணவனாரது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.

கால காலனும் கருணைக்கடலுமான கடவூர்ப் பெருமான் கலய         நாயனாரின் கனவில் எழுந்தருளி, “ அன்பனே. மிகுந்த பசியோடு இருந்தும் உனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தாய். உடனே உனது மனைக்குச் சென்று உணவு உட்கொண்டு பசித்துன்பம் தீரப்பெறுவாயாக” என்று அருளிச் செய்தார்.வீட்டுக்குச் சென்ற நாயனார் தமது மனையானது  மாளிகையாகத் தோற்றம் அளிப்பதையும், நிதிக் குவியல்கள் நிறைந்திருப்பதையும்,கண்டு வியந்து, இவ்வாறு எங்ஙனம் ஆயிற்று என்று மனைவியாரை வினவ, அவரும், “ நீலகண்டப்பெருமானின் திருவருள்” எனக் கூறினார். இதைக் கேட்டுப் பரவசமான கலயனார், “ அடியேனையும் ஆட்கொண்டு திருவருள் செய்த திறம் தான் என்னே” என்று பெருமானைப் போற்றினார்.பின்னர் அவ்வம்மையார்,தமது கணவனாருக்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ஊட்டினார். பெருமானது திருவருள் வாய்க்கப்பெற்றதால் இருவரும் பலகாலம் சிவனடியார்களுக்கு அமுதூட்டியும்,ஆலயத்தில் குங்கிலியப்பணி செய்தும் வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் தாடகை என்ற பக்தை திருப்பனந்தாள் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள செஞ்சடையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தபோது அவளது அபிஷேகத்தை சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்து  ஏற்றுக் கொண்டபின்னர் அதற்கு அடையாளமாகச் சாய்ந்த நிலையிலேயே நின்று விட்டபடியால் மீண்டும் நிமிர்த்தும் எண்ணம் கொண்ட சோழ மன்னன் தனது யானைகளையும் சேனைகளையும் கொண்டு கயிற்றால் இழுப்பித்து முயன்றும் அது முடியாமல் போயிற்று. அதனால் கவலையில் மன்னன்  ஆழ்ந்ததைக் கேள்விப்பட்ட கலயனார் திருப்பனந்தாளுக்கு எழுந்தருளி,  இலிங்கத் திருமேனியைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த பூங் கச்சினைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். அன்பரது அன்புக்குக் கட்டுப்பட்ட  பெருமான் நிமிர்ந்து நின்றார். சோழ மன்னனும் மிக்க மகிழ்ச்சியடைந்து கலயனாரை வணங்கித் துதித்தான். சில நாட்கள் அங்கு தங்கிவிட்டுப் பின்னர் திருக்கடவூர் வந்தடைந்த நாயனார் முன்போல் குங்கிலியத் தூபப் பணி செய்து வந்தார்.

தல யாத்திரையாகத் திருக்கடவூர் வந்த திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் கலய நாயனார் எதிர்கொண்டு வணங்கித் தமது மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை உணவு படைத்து வழிபட்டு அவர்களது திருவருளையும்,கடவூர் ஈசனின் திருவருளையும் ஒருங்கே பெற்றார். இவ்வாறு பெருமானுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டுகள் பல செய்து வந்த நாயனார் அதன் பலனாக இறைவரது திருவடி நிழலை அடைந்தார்.

**********************

மானக்கஞ்சாற நாயனார் 

சோழ நாட்டில் வளம்மிக்க பதிகளுள் ஒன்றான கஞ்சாறு என்ற ஊரில்   வேளாளர் குலத்தில் மானக் கஞ்சாரர் bbjjஎன்பவர்,பரம்பரையாக அரசனின் படைத்தலைமை புரியும் சேனாபதிக் குடியில் அவதரித்தார். { கஞ்சாறு என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் என்று தற்போது வழங்கப்படும் தேவார வைப்புத் தலம் என்பர், மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சா நகரம் என்ற ஊரும் உள்ளது.. இவ்விரு ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் மானக்கஞ்சாற நாயனாரது திருவுருவங்கள் உள்ளன.}

சிவபெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு தமது செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கே உரிமை ஆக்கி,அவர்கள்   விரும்புவனவற்றை அவ்வடியார்கள் கேட்கும் முன்பே குறிப்பால் அறிந்து கொடுத்து வந்தார். (திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் இவரை வள்ளல் என்று குறிப்பிடுவதும் காண்க)

மகப்பேறின்றிச் சில காலம் வருத்தமுற்று வாழ்ந்த நிலையில் அக்குறை தீர வேண்டி அம்பலக்கூத்தனின் அருளால் அவரது மனைவியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அச்செய்தி அறிந்த கஞ்சாறூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாயனாரும் சிவனடியார்களுக்கு அளவற்ற செல்வத்தை  வாரி வழங்கினார். நாளடைவில் அக்குழந்தை பிறைச் சந்திரன்போல் வளர்ந்து பேதைப் பருவத்தை அடைந்தது. பேரழகுடன் திகழ்ந்த தமது பெண்ணிற்கு மணம் புரிய எண்ணினார் மானக்கஞ்சாரர்  அதே மரபில் வந்தவரும் சிவபெருமானுக்கு அன்பருமான ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் அப்பெண்ணைத் தாம் மணம் புரிய வேண்டிச் சில முதியோர்களை மானக்கஞ்சாரறது மனைக்கு மணம் பேசி வருமாறு அனுப்பி வைத்தார். அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,தமது மகளை ஏயர்கோனுக்கு மணம் செய்து தரச் சம்மதம் தெரிவித்தார்.

சோதிடர் மூலம் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாயனாரது உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.     பொற்கலசங்களில் பாலிகைகளை நிறைத்து, வெண் முளைகளைச் சாத்தினர். திருமண நாளுக்கு முதல் நாள் மானக்கஞ்சாரர் தமது சுற்றத்தாருடன், மங்கல வாத்தியங்கள் முழங்கக் கஞ்சாறூருக்கு அருகில் வந்து தங்கினார்.

நாயனார் கஞ்சாற்றுக்கு வந்து சேரும் முன்னரே, சிவபெருமான் ஓர் மாவிரத முனிவர் வேடம் கொண்டு அங்கு எழுந்தருளினார். அவரது வெண்ணீறணிந்த நெற்றியும், வெண் நூலணிந்த மார்பும் கோவணம் அணிந்த இடையும்,அழகிய மேலாடையும், எலும்பாபரணமும் கண்டோரைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. கையில் விபூதிப் பை ஏந்தி, உடல் முழுதும் விபூதி தரித்து,மாவிரத முனிவர் வேடத்தில் பெருமான் மானக்கஞ்சாரறது வீட்டை அடைந்தார். உலகம் உய்ய வேண்டி அவ்வாறு எழுந்தருளிய பிரானை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,” தேவரீர் இங்கு எழுந்தருளியதால் அடியேன் உய்ந்தேன் “ என்றார்.

அங்கு நடக்க இருக்கும் மண விழாவைப்பற்றி நாயனார் வாயிலாக முனிவர் வேடத்தில் வந்த இறைவன் கேட்டவுடன், அவருக்கு மங்கலம் உண்டாகுமாறு ஆசி வழங்கினார்.நாயனார் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கியபின் தனது மகளையும் அழைத்து வந்து அவரை வணங்கச் செய்தார். தம்மை வணங்கி எழுந்த அப்பெண்ணை நோக்கியருளிய பின் முனிவராக வந்த பெருமான்,நாயனாரை நோக்கி, “ இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். இதனைக் கேட்ட நாயனார், தமது உடைவாளை உருவி, “ இப்படி இவர் பஞ்சவடிக்காகக் கூந்தலைக் கேட்க அடியேன் பேறு பெற்றேன்” என்று கூறியபடி பூங்கொடி போல் அங்கு நின்று கொண்டிருந்த தனது அன்பு மகளின் கூந்தலை அடியோடு அரிந்து, அதனை மாவிரத முனிவரின் மலர்க்கரத்தில் வழங்கினார். அதனை வாங்குவதுபோல நின்ற முனிவர் உடனே மறைந்து, உமாதேவியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வானத்தில் காட்சி தந்தருளினார். அக்காட்சியைக் கண்டு உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்த நாயனார் தனது இரு கைகளையும் தலைமீது கூப்பியவராக நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கினார். வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. நாயனாரை நோக்கிய இறைவன், “ நீ நம்பால் கொண்டிருந்த அன்பை உலகறியச் செய்ய வேண்டி இவ்வாறு செய்தோம் “ என்றருளினார். கண்டவர்கள் களிப்படையவும்,வியப்படையவும் இங்ஙனம் அருள் செய்த பின் பெருமான் மறைந்தருளினார்.

தலை முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணம் செய்து கொள்வது என்று ஏயர்கோன் தயங்கியபோது, அசரீரியாகப் பெருமான், “ மனம் தளர வேண்டாம். அவளது கூந்தலை மீளக் கொடுத்தருளுவோம்” என்ருளியவுடன் அவளது கூந்தல் முன்போல் வளர்ந்தது. திருவருளின் திறம் கண்டு அனைவரும் நெகிழ்ந்து அதிசயித்தனர். ஏயர்கோனும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நாயனாரின் சீரிய தொண்டைக் கண்டு உலகமே வியந்தது. தொண்டர்க்குத் தொண்டரான நாயனார் நிறைவாக இணையில்லாப் பெரும்பதமாகிய சிவானந்தப் பேற்றினை அடைந்தார்.

******************************

அரிவாட்டாய நாயனார்

சோழ வளநாட்டில் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள தண்டலை நீள்நெறி என்ற தேவாரப்பாடல் பெற்ற    தலத்துக்கு அண்மையில் கணமங்கலம் என்ற ஊர் உளது. அவ்வூரில் வேளாளர் குலம் விளங்குமாறு தோன்றியவர் தாயானார் என்பவர் ஆவார். செல்வம் மிக்கவராகத் திகழ்ந்த தாயானார் இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நல்லறம் செய்து வந்தார். சிவபக்தியில் மேம்பட்ட இவர், தினமும் பெருமானுக்கு செங்கீரையும் மாவடுவும் சிவ வேதியர்கள் மூலம் கொடுத்து வந்தார்.

சிவபெருமானின் திருவுள்ளப்பாங்கின் படி நாயனாரது செல்வம் குறைந்து வறுமை மேலிட்டது. ஆயினும் நாயனார் தமது தொண்டினை விடாது செய்து வந்தார். கூலிக்காக நெல்லறுத்துக் கூலியாகப்பெற்ற செந்நெல்லை சிவபெருமானுக்குத் திருவமுதாக ஆக்கினார். கார்நெல்லைத் தமது உணவிற்காக ஆக்கிக் கொண்டார். அவ்வூரிலிருந்த வயல்கள் யாவும் செந்நெல்லே விளையுமாறு பெருமான் திருவுள்ளம் கொண்டார்  தான் செய்த புண்ணியமே இவ்வாறு செந்நெல் மட்டுமே விளைகிறது என்று கருதிய நாயனார், பெற்ற நெல் முழுவதையும் சிவ பெருமானுக்கே ஆக்கிவிட்டுத் தமக்கு உணவின்றிப் பட்டினியாக இருந்தார்.

நாயனாரது மனைவியார் வீட்டின் பின்புறம் விளைந்த கீரையைப் பறித்து வந்து சமைத்துக் கணவனாருக்குப் பரிமாறினார். இருவரும் அதனை மட்டுமே உண்டபோதிலும் இறை தொண்டை விடாது செய்து வந்தனர். வீட்டுத் தோட்டத்தில் கீரைகளும் விளைவது குறைந்து போகவே, இருவரும் தண்ணீரை மட்டும் அருந்தி சிவத் தொண்டை இடைவிடாமல் தொடர்ந்தனர்.

ஒருநாள் நாயனார், பெருமானுக்கு அமுது செய்விப்பதற்காகத் தாம்   வயலிலிருந்து கொண்டு வந்த செந்நெல்லையும், மாவடுவையும், கீரையையும் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்.அவருக்குப் பயனின் அவரது கற்புடை மனைவியார் பஞ்சகவ்வியத்தை மண் கலயத்தில் வைத்து ஏந்திச் சென்றார். பலநாட்களாக உணவு உட்கொள்ளாத களைப்பினால் நாயனார் பசி மயக்கத்தால் தல்லாடியபடிக் கீழே விழுந்தார். ஒரு கையில் பஞ்ச கவ்வியத்தை ஏந்தியபடியே,மற்றொரு கையால் கணவனாரைத் தாங்கிப் பிடித்தார் மனைவியார். இதற்கிடையில் நாயனார் தாங்கி வந்த கூடை நழுவி, அதற்குள் இருந்த பொருள்கள் கமரில் (நிலவெடிப்பில்) விழுந்துவிட்டதன. இதைக்கண்டு பதறிப் போன நாயனார்,       “ இனிமேல் கோயிலுக்குச் சென்று பயன் ஏதுமில்லை.. இன்று பெருமானுக்குத் திருவமுது ஆக்கும் பேறு பெறாததால் யான இனி இருந்து என்ன பயன்” எனக் கூறி அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அது மட்டுமா? தனது பிறவித்துன்பத்தையும் வேரோடு அறுக்கத் துவங்கினார்.

அன்பரின் மனுருதியைக் கண்ட சிவபெருமான் அக்கணமே கமரிளிருந்து கையை உயர்த்தி நாயனாரின் அரிவாள் ஏந்திய கையைப் பிடித்து,அந்தச் செயலைத் தடுத்தருளினார். அப்போது கமரிளிருந்து நாயனாரின் கையைப்பிடிக்கும் ஓசையும், மாவடு விடேல் விடேல் என்னும் ஓசையும் ஒன்றாக எழுந்தன. இறைவனது பெருங்கருணையைப் போற்றிய தாயானார், விடையின் மீது உமாதேவியுடன் காட்சி கொடுத்தருளிய  பரம்பொருளை வணங்கித் துதித்தார். பெருமானும் நாயனாரது தொண்டைக் கண்டு மகிழ்ந்து ,“ நீயும் உனது மனைவியும் நம் உலகை அடைந்து என்றும் வாழ்வீர்களாக” எனக் கூறி மறைந்தருளினார். இவ்வாறு அரிவாளால் கழுத்தை அரிந்ததால் இவர்  அரிவாட்டாயர் என்ற புகழ் நாமம் பெற்றார். பெருமான் அருள் பெற்ற அரிவாட்டாய நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்தனர்.

 

ஆனாய நாயனார்.

சோழ வள நாட்டின் ஒரு பகுதியாகிய மேல் மழநாடு என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் லால்குடி என்று தற்போது அழைக்கப்படும்  திருத்தவத்துறையைத் தலைநகராகக் கொண்டது. இம் மேன்மழ நாட்டிற்கு ஆபரணம் போல் விளங்குவது திருமங்கலம் என்ற ஊராகும். இவ்வூரில் ஆயர்(இடையர்) குலத்திற்கு விளக்குப் போல அவதரித்தவர் ஆனாயர் ஆவார். தூய வெண்ணீற்றின் மீது பேரன்பு பூண்டு ஒழுகிய ஆனாயர் தமது குலத் தொழிலாகிய ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டு, பசுக்களுக்குத் துன்பம் வாராமல் பாதுகாத்து வந்தார். அப்போது புல்லாங்குழலில் சிவ பஞ்சாக்ஷரத்தை சுருதி  லயத்தோடு வாசிப்பார். அவ்விசையைக் கேட்டவுடன் சராசரங்கள் எல்லாம் மெய்ம்மறந்து உருகி நிற்கும்.

ஒரு சமயம் ஆனாய நாயனார் தனது நெற்றியில் திருநீற்றை நிறையப்பூசிக்கொண்டு இடுப்பில் மரவுரி தரித்து அதன் மீது பூம்பட்டினைக் கட்டிக் கொண்டு கோலும் குழலும் ஏந்தியவராகப்  பசுக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு அவற்றை மேய்ப்பதற்காகச் சென்றார். வழியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொன்றைப் பூவினை அணிந்த சிவபிரானைப் போல அழகாகக் காட்சி அளித்ததால் அதனைச் சிவ வடிவாகவே எண்ணி மட்டற்ற அன்போடு மனம் உருகி நின்றார்.உடனே தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்தை அதில் அமைத்துக் கேட்போரைப் பரவசப்படுத்தும்படி குறிஞ்சி ,முல்லை ஆகிய பண்களோடு இசைத்தார்.

இசை நூல் இலக்கணம் வழுவாமல் இன்னிசை பாடியதால் பசுக்கூட்டங்களும் மேய்வதை மறந்து அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றன. கன்றுகளும் தாய்ப்பசுக்களிடம் பால் ஊட்டுவதை விட்டு ஆனாயாரைச் சூழ்ந்து கொண்டன. மான் முதலிய விலங்கினங்களும் அவரிடம் வந்து கூடின. மயில்கள் தோகை விரித்து ஆடுவதை நிறுத்தி விட்டு நாயனார் அருகில் வந்தன. இதனைக் கண்ட பிற ஆயர்களும், நாகர்களும், கின்னரர்களும்,தேவர்களும் இசையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். மிருகங்களும் தங்கள் பகையை மறந்து அவ்விடம் சேர்ந்து நின்றன. அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் ஆனாயரின் இசையில் மயங்கி நின்றன. அந்த இசை நிலவுலகத்தை நிறைத்ததொடு வானத்தையும் தன் வயம் ஆக்கியது. அதோடு பொய்யன்புக்கு எட்டாத பொதுவில் ஆனந்த நடனம் புரியும் சிவபெருமானின் திருச் செவியிலும் சென்று அடைந்தது.

இசை வடிவாய்,இசைக்கு மூல காரணராக விளங்கும் சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, “ நமது அடியார்கள் எப்போதும் இக்குழலோசையைக் கேட்கும்படி இந்நிலையிலேயே நம்பால் வந்தடைவாயாக “ என்று அருளிச் செய்தார். அதன்படி ஆனாயரும் தேவர்கள் மலர் மழை பொழியவும், முனிவர்கள் வேதங்களால் துதிக்கவும், குழலிசையை வாசித்துக் கொண்டே பெருமானைத் தொடர்ந்த நிலையில் நாயனாருக்கு இன்னருள் செய்த இறைவன் தனது பொன்னம்பலத்தைச் சென்றடைந்தருளினார்.

Posted in Nayanmars | Leave a comment

அறுபத்துமூன்று நாயன்மார்கள்

 

47C

                                               பெரிய புராணம் – முன்னுரை

சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச்  செய்த பெரியவர்களது சரிதத்தைச் சொல்வதால் பன்னிரண்டாவது சைவத்திருமுறை நூலான இதனைப் பெரிய புராணம் என்றே அழைத்தனர். இதன் நூலாசிரியரான சேக்கிழார் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் மாக்கதை என்பதாம். மாக்கதை என்பது பின்னர் பெரிய புராணம் என்று ஆயிற்று எனக் கொள்ளலாம்.

பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தீந்தமிழ்ப் பாடல்களால் அமையப்பெற்றது இந்நூல். தில்லை அம்பலவனே அடியெடுத்துக் கொடுத்த பெருமை உடைய பெரிய புராண வாயிலாகவே அறுபத்து மூன்று நாயன்மார்களின் அருட்செயல்களை விரிவாக அறிய முடிகிறது. மேலும் மூவர் அருளிய தேவாரப்பதிகங்களில் பலவற்றின் பதிக வரலாறுகளைச் சேக்கிழார் வாயிலாகவே அறிகிறோம். அவரைத் தவிர வேறு  எவரால் தொண்டர் சீர் பரவ முடியும்?

பெரிய புராணத்தை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இடம்பெறும் நன்னெறிகள் சிலவற்றையாவது கடைப்பிடிக்க முயற்சிப்பதே மிகவும் அத்தியாவசியம் என்ற எண்ணத்துடன் இந்நூலை அணுக வேண்டும்.அந்த எண்ணம் மேளிட்டவுடன் நமது மனக் கறைகள் அகன்று பக்குவம் ஏற்படுவதை அனுபவத்தால் அறியலாம். அப்போதுதான் ஸ்ரீ ரமண மகரிஷி போன்ற மகான்களால் போற்றப்பெற்ற இக்காப்பியத்தின் பெருமையும் அருமையும் புலப்படும்.

உலகம் உய்யவும், சைவம் தழைத்து ஓங்கவும் சிவனருளால் பன்னிரு திருமுறைகள் தோன்றின. தென் திசை செய்த புண்ணியத்தின் பயனாகத் திருவவதாரம் செய்த சிவனடியார்கள் பலர். அவர்களுள் அறுபத்து மூன்று அடியார்களது திருப்பெயர்கள் திருவாரூர் இறைவனருள் சுந்தர மூர்த்தி நாயனாரது வாக்காகத் திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகம் மலர்ந்தது. அதில் அடியார்கள் பெயரைக் கூறி அவர்க்கு அடியேன் என்று சுந்தரர் அருளினார். அதை அடிப்படையாகக் கொண்டு, திருமுறைகளை வகுத்துத் தந்தவரும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரின் அருள் பெற்றவருமான நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர் திருவந்தாதி என்ற பிரபந்தத்தை அருளிச் செய்தார். இவ்விரண்டின் துணை கொண்டு குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் தில்லைக் கூத்தன் “உலகெலாம்” என்று அடியெடுத்துத் தர , திருத்தொண்டர் புராணத்தை இயற்றி அரங்கேற்றினார். பெருமையால் பெரிய அடியவர்களது புராணமாதலால் அதுவே பெரிய புராணம் என்று வழங்கப்படலாயிற்று. அதன் பெருமை கருதிய முன்னோரும் அதனைப் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்த்தனர்.அநபாய சோழனின் அமைச்சராக விளங்கிய சேக்கிழாரது காலம் கி.பி. 12 ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

சுந்தரரின் வரலாற்றை பல நாயன்மார்களது சரிதங்களின் இடையில் அமைத்துள்ளபடியால், சுந்தரரே காப்பியத் தலைவர் ஆகிறார். திருக்கயிலையில் துவங்கி அங்கேயே நிறைவு பெறுவதாக நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை வருணனை, நாட்டுச் சிறப்பு,நகரச் சிறப்பு,ஆகிய அங்கங்களோடு  வீரம், கொடை,நீதி தவறாத அரசியல், கற்பு,தொண்டு, செயற்கரிய செயல்கள், நட்பு, பக்திச் சுவை ஆகிய உயர்ந்த அம்சங்களோடு விளங்குவது இப்புராணம்.

நாயன்மார்கள் பல்வேறு குலங்களில் உதித்தவர்கள். சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சை உடையவர்கள். சிவனடியார்களை சிவனாகவே பாவித்தவர்கள். தாம் செய்யும் தொண்டில் தலை சிறந்து விளங்கியவர்கள். வறுமையிலும் சோர்வடையாத தெளிந்த சித்தம் உடையவர்கள்/ அடியார்களுக்குள் வேற்றுமை பாராட்டாதவர்கள். ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கருதுபவர்கள். பொன்னையும் நவ மணிகளையும் காட்டிலும் சிவனடிகளை  வாழ்த்தும் செல்வமே உயர்ந்த செல்வம் என்ற கொள்கை உடையவர்கள்.

ஒருசமயம் திருக்கயிலாய மலையில் உபமன்யு முனிவர் முதலியோர் குழுமியிருந்த போது வானில் ஒரு பேரொளி தோன்றியது. வானில் ஒளியாகச் செல்பவர் ஆலால சுந்தரர் என்றும் அனைவராலும் தொழப்படுபவர் என்றும் உபமன்யு முனிவர் கூறியதும், மற்ற முனிவர்கள் சுந்தரரது சரிதத்தையும் பெருமையையும் விளக்கமாகக் கூறியருள வேண்டும் என்று விண்ணப்பிக்கவே, முனிவரும் கூறலுற்றார்.

சிவபிரானுக்கு அணுக்கத்தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரர், நந்தவனத்தில் மலர் பறிக்கச் சென்ற போது, உமாதேவியின் தோழிகளான கமலினி,அனிந்திதை ஆகிய இருவரையும் கண்டு அவர்களிடம் ஒரு கணம் மனம் போக்கினார். தென்னாடு வாழ வேண்டி இறைவன் செய்த திருவிளையாடலால் இந்நிகழ்ச்சியைக் காரணமாகக் கொண்டு சுந்தரரை  நிலவுலகில் பிறந்து அவ்விருவரையும் மணம் புரிந்து கொண்டு பின்னர் தன்னை வந்தடையுமாறு இறைவன் பணித்தான். இதனால் பதைத்த சுந்தரர் , நிலவுலகில் மையலுற்றால் தேவரீரே வந்து அடியேனைத் தடுத்து ஆள வேண்டும் என வேண்டவே, சிவபெருமானும் அவ்வண்ணமே அருள் செய்தான்.

புண்ணிய பூமியாகிய தென்திசை பல சிறந்த சிவதலங்களைத் தன்னிடத்தே கொண்டது. தனது தேர்க்காலில் மகனை ஏற்றிக் கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆண்ட பெருமை உடையது திருவாரூர் நன்னகர். அங்குள்ள பூங் கோயிலும் அதிலுள்ள தேவாசிரியன் மண்டபமும் அடியார்கள் ஒன்று கூடும் பெருமை வாய்ந்தது. இத்தகைய அடியார்களது பெருமையை உலகறியவே சுந்தரர் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத் திருவவதாரம் செய்தருளினார். சிறு வயதில் நரசிங்க முனையரையர் என்ற சிற்றசரால் வளர்க்கப்பெற்றார். மணப்பருவம் வந்ததும் அவருக்குச் சடங்கவியார் என்பவரது மகளை மணம் பேசினர்.முன்னம் அருளியபடி,கமலினியாரையும் அநிந்திதையாரையும் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணம் செய்வதைத் தடுத்தாள வேண்டி இறைவன் அத்திருமணப்பந்தலில் வயோதிகராகத் தோன்றி, “ உன் குடி முழுதும் வெண்ணை நல்லூர் பித்தனுக்கு அடிமை”. என்று கூறி முன்னோர்கள் எழுதித் தந்த ஒலையையும் ஆதாரமாகக் காட்டவே, திருமணம் தடைப்பட்டது.

முதியவராக வந்த இறைவனைத் தொடர்ந்து திருவெண்ணை நல்லூர்க் கோயிலுக்குள் சென்றவுடன் இறைவன் மறைந்தருளியதோடு அசரீரியாக “முன்பு  என்னைப் பித்தன் என்று வன்மை பேசியதால் வன்தொண்டன் என்ற நாமம் பெறுவாய். பித்தா எனத் துவங்கிப் பாடுவாயாக என அருளிச் செய்தார்.ஆகவே சுந்தரரின் திருவாக்கிலிருந்து “ பித்தா பிறை சூடி” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகம் உதித்தது. திருத்துறையூரில் தவநெறியும் திருவதிகையில் திருவடி தீக்ஷையும் பெற்றுத் தில்லையை வணங்கியபோது, திருவாரூருக்கு வா எனக் கூத்தப்பெருமானது அருள் வாக்கு ஒலித்தது. அதன்படித் திருவாரூரை அடைந்த நம்பியாரூரர், புற்றிடம்கொண்ட பெருமானைப் பாடித் தொழுது வந்தார். ஒருசமயம் அங்கு வந்த பரவையாரைக் கண்டார். கமலினியின் அவதாரமே பரவை. எனவே இருவரும் ஒருவரைஒருவர் விரும்பினர். அவ்விருவரையும் திருவாரூர் வாழ் அடியார்களைக் கொண்டு மணம் செய்வித்தான் பரமன். மேலும் தன்னையே இறைவன் தோழைமையாகத் தந்ததால் சுந்தரரை அனைவரும் “ தம்பிரான் தோழர்” என்று அழைக்கலுற்றார்கள்.

ஒருநாள் தேவாசிரியன் மண்டபத்திலிருந்த அடியார்களைத் தரிசித்தவாறே தியாகேசப்பெருமானது சன்னதியை அடைந்து, “ இவ்வடியார்களுக்கு அடியவன் ஆகும் நாள் எப்போது “ என நினைக்க, இறைவனும் , பெருமையால் தனக்குத் தானே நிகரான அவர்களைத் “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனத் துவங்கிப் பாடுவாயாக என்று அடி எடுத்துக் கொடுத்தருளினான். சிவனருளால் சுந்தரரின் திருவாக்கிலிருந்து திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் எழுந்தது. தனித்தனியாக ஒவ்வொரு அடியார்க்கும் அடியேன் எனச் சிறப்பித்ததோடு தொகை அடியார்களையும் சிறப்பித்துப் பாடினார் சுந்தரர். அவ்வரிசையைப் பின்பற்றி  நாயனார்களின் சரித்திரத்தை விரித்துரைக்கிறது பெரிய புராணம்.

                                                கட்டுரை ஆசிரியர் அறிமுகம்

                                                            சிவபாதசேகரன்

                                                                       சிவபாதசேகரன்

மயிலாடுதுறையில் பிறந்து பள்ளிப்படிப்புக்குப் பின்னர் சென்னையில் பட்டப்படிப்பை முடித்து, எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றியபின் தனது ஓய்வு காலத்தில் சிவப்பணிகளைத் தொடர்கிறார்.சுமார் நாற்பது ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட் சபையின் செயலாளராகவும், மூன்றாண்டுகளாக ஆர்த்ரா பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிர்வாக டிரஸ்டியாகவும் செயலாற்றிப் பிற்பட்ட நிலையிலுள்ள சிவாலயங்களின் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் இவ்வமைப்புகள் மூலம் தொண்டாற்றி வருகிறார். வருவாயில்லாதபோதும் கிராமக்கோயில்களில் பணியாற்றிவரும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கு உதவுதலும், மக்களிடையே நமது ஆலயங்களின் மேன்மை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதும், திருமுறைகளை ஓதுவதும் ஓதுவிப்பதும், ஆறு வலைப்பதிவுகள் மூலம் தொலைவிலுள்ளோரும் ஈடுபட முயல்வதும், சிறு புத்தக வெளியீடுகள் செய்வதும், ardhra.org என்ற இணைய தளத்தின் மூலம் நாம் செய்ய வேண்டுவதை அறியச் செய்வதும் ,தலயாத்திரைகள் மேற்கொள்வதும்  64 வயதான இவர் ஆற்றிவரும் பணிகள். சைவ ஆதீனங்களின் மாத இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சேகர் என்று அழைக்கப்படும் இவருக்குத் திருமுறைச் செம்மணி, சிவநெறித் திருத்தொண்டர் என்ற பட்டங்கள் அன்பர்களால் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், மறைமலை அடிகளின் மாணாக்கரும்               “  திருக்கோயில்“ பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான திரு ந.ரா. முருகவேள் அவர்கள் பேரன்புடன் அழைத்த சிவபாதசேகரன் என்ற பெயரையே வாழ்நாளில் தாம் பெற்ற பெரிய பேறாகக் கருதுகிறார்.

சென்னையில் வசித்துவரும் இவரது தொலைபேசிகள்: 044-23742189;  09840744337

இ- மெயில் முகவரி: ardhra.sekar@gmail.com

 நாயன்மார்   சரித்திரம் 

                                                        தில்லை வாழ் அந்தணர்

கற்பனை கடந்த சோதி வடிவாகி , ஆதியாய்,நடுவும் ஆகி, அளவில்லா அளவும் ஆகி உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகித் தில்லைப் பெருவெளியில் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் புரியும் பெருமானைப் பூசிக்கும் பேரருள் பெற்றவர்கள் முதல் அடியார்களாகிய தில்லை வாழ் அந்தணர்கள்.முச்சந்தி முட்டாமல் காலம் தோறும் அம்பலவாணனைப் பூசித்தலைக் குறைவறச் செய்பவர்கள்.திருநீறு முதலிய சாதனங்களைத் தரித்து நல்லொழுக்கத்தில் மேம்பட்டவர்கள். நான்கு வேதங்களையும்,ஆறு அங்கங்களையும்,நான்கு உபாங்கங்களையும் ஐயம் திரிபறக் கற்றவர்கள். அந் நூல்கள் விதித்தபடியே, முத்தீ வளர்த்துக் கலியின் கொடுமைகளை உலகிற்கு வாராமே  செய்பவர்கள்.பொற்சபையில் நடமாடும் பெருமானுக்குத் தொண்டு செய்வதையே செல்வமாகக் கருதுபவர்கள். தமக்குக் கிடைத்த விலையற்ற செல்வம் திருநீறே என்று எண்ணுபவர்கள். தானம்,தவம் இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள். எவ்வகைக் குற்றமும் இல்லாமல் மானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். இல்லறத்தை ஏற்று நல்லறம் செய்பவர்கள். இம்மையிலேயே சிற்றம்பலவனின் அருள் கிடைக்கப்பெற்றதால் இதற்கு மேலும் எதையும் வேண்டாதவர்கள். செம்மனம் உடைய இவர்கள் தமக்குத் தாமே ஒப்பாவார்கள். தெய்வத்தன்மை வாய்ந்த தில்லை மூவாயிரம் அந்தணர்களது பெருமையை உலகறிய வேண்டி, திருவாரூர்ப் பெருமானே “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரருக்குத் திருத்தொண்டத் தொகை பாட அடி எடுத்துக் கொடுத்தான் என்றால் இவர்களது பெருமையை யாரால் கூற முடியும்?

திருநீலகண்டநாயனார்  

சிதம்பரம் எனப்படும் தில்லைப்பதியில் குயவர் குலம் உய்யுமாறு அவதரித்தவர் திருநீலகண்டர். சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதை இடையறாது மேற்கொண்டு வந்தார். மட்பாண்டங்களைச் செய்து அடியார்களுக்குத் திருவோடுகளை அளிக்கும் பணியில் தலை நின்றார். அவரது மனைவியார் கற்பில் மேம்பட்டவர். இளமை மீதுரவே, திருநீலகண்டர் சிற்றின்பத்துறையில் நாட்டம் கொண்டார். அப்போதும் தாம் செய்து வரும் தொண்டிலிருந்து சற்றும் மாறவில்லை.

ஒருநாள் ஒரு பரத்தையின் மனைக்குச் சென்று வந்த திருநீலகண்டர்பால் கோபம் கொண்ட அவரது மனைவியார், எம்மை இனி நீர் தீண்ட வேண்டா திருநீலகண்டத்தின் மீது ஆணை “ என்றார்.  இவ்வாறு பெருமானின் திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறியதைக் கேட்ட திருநீலகண்டர், “எம்மை” என்று பன்மையாகக் கூறியதால் இனி உன்னை மட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் மனத்தாலும் தீண்ட மாட்டேன்” என்றார். இந்நிகழ்ச்சியைப் பிறர் அறியாமல் இருவரும் வாழ்ந்துவந்தனர். இவ்விதம் பல்லாண்டுகள் ஆகி,முதுமை வந்தது. ஆயினும் சிவபிரானிடத்தும் அவனது அடியார்களிடத்தும் இருந்த அன்பு ஒரு சிறிதும் குறையவில்லை.

இவ்விருவரின் பெருமையை உலகிற்குக் காட்ட வேண்டி, இறைவன் ஒரு சிவ யோகியின் வடிவெடுத்துத் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான்.கையில் திருவோடேந்தி நீறு தாங்கிய நெற்றியுடனும் புன்னகை தவழும் திருமுகத்துடனும் தோன்றிய சிவ யோகியாரை மிக்க மகிழ்வுடன் வரவேற்று ஆசனத்தில் இருத்தி உபசரித்தார் திருநீலகண்டர். அப்போது சிவயோகியார் ,அடியவரை நோக்கி, “ யான் இந்தத்திருவோட்டை உம்மிடம் கொடுத்து வைக்கிறேன். இது விலை மதிப்பற்றது.நான் மீண்டும் வரும் வரையில் இதனைப் பாதுகாத்து வைப்பீராக.” என்றார். நீலகண்டரும் அதற்கு உடன்பட்டுத் திருவோட்டினைத் தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்தார். வந்த இறைவரும் விடை பெற்றவராய்த் தனது பொற்சபைக்குத் திரும்பினார்.

நீண்ட நாட்களுக்குப் பின் சிவயோகியார் வடிவில் மீண்டும் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான். தான் கொடுத்த திருவோட்டினைத் திருப்பித்தருமாறு அடியவரிடம் கேட்டான். வீட்டில் எங்கு தேடியும் அவ்வொடு கிடைக்கவில்லை. பதைத்து நின்றபடியே வேறு ஒரு ஓடு பழையதைக் காட்டிலும் செய்து தருவதாகக் கூறினார். அதைக்கேட்டு சினம் கொண்ட சிவபெருமான்,” எனது திருவோட்டினைக் கவர்ந்து கொண்டு விட்டு இவ்விதம் பொய் சொல்கிறாய். எனவே உனது மகனைப் பற்றியவாறு குளத்தில் மூழ்கி ,ஓட்டினைக் கவரவில்லை என்று சொல்லுவாய்.” என்றான். அவ்வாறு செய்வதற்குத் தனக்கு மகன் இல்லாததால் வேறு எண்ண செய்ய வேண்டும் என்று திருநீலகண்டர் கேட்கவே, இறைவனும் “ உனது மனைவியின் கரத்தைப் பிடித்தவாறு குளத்தில் இறங்கி சத்தியம் செய்ய வேண்டும் “ என்றான். அப்போது நாயனார், தமக்கும் தனது மனைவிக்கும் இடையில் ஒரு சபதம் உள்ளது என்பதால் அவளைத் தீண்டி சபதம் செய்ய இயலாது என்று உரைத்தார். அதனை ஏற்க மறுத்த சிவயோகியார், அவரைத் தில்லை வாழந்தணர்களிடம் அழைத்துச் சென்று முறையிட்டார். தில்லை வாழந்தணரும் சிவயோகியார் கூறியபடி மனைவியின் கரம் பற்றிக் குளத்தில் மூழ்கி சபதம் செய்வதே முறை என்றனர். வேறு செய்வதறியாது நாயனாரும் அதற்கு உடன் பட்டார். அப்போதுகூட சபதம் பற்றிய விபரங்களை அவர்களிடம் கூறவில்லை.

அங்கிருந்த திருப்புலீச்சரம் என்ற கோயிலின் திருக்குளத்திற்கு மனைவியாருடன் சென்றடைந்தார் திருநீலகண்டர்.(வியாக்கிரபாதர் பூசித்த இத்தலம் தற்போது இளமையாக்கினார் கோயில் என்று அழைக்கப்படுகிறது) சிவயோகியாரின் முன்னிலையில் மூங்கிலால் ஆன ஒரு கோலின் ஒருபுறத்தைத் தாமும் மறு புறத்தைத் தனது மனைவியாரும் பற்றிக்கொண்டு குளத்தில் இறங்கி சத்தியம் செய்யலானார். இதனைச் சிவயோகியார் ஏற்க மறுக்கவே, அனைவரும் கேட்குமாறு தங்களுக்குள் சபதம் செய்து கொண்ட விவரத்தைக் கூறி, அதன் காரணமாகத்  தனது மனைவியின் கரத்தைத் தீண்ட இயலாது என்றபடி,, மனைவியுடன் கோலைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கி எழுந்தார் புலன்களை வென்ற அன்பர். அப்படி மூழ்கி எழுந்தவுடன் முதுமை நீங்கி இருவரும் இளமையோடு திகழ்ந்தனர். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவயோகியார் மறைந்தருளினார். விடைமீது உமா தேவியாரோடு ஈசன் அருட்காட்சி அளித்தான். ஐம்புலன்களை வென்ற இருவரையும் நோக்கி இறைவன், “ என்றும் இளமை நீங்காது நம்மிடத்து இருப்பீர்களாக “ என்று அருளிச் செய்தான். அதன்படி நாயனாரும் அவரது மனைவியாரும் என்றும் இளமையோடு சிவலோகம் அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர்.

இயற்பகை நாயனார்       

தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், ” இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் ” என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் ,காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர். சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள். இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், ” உனது மனைவியை வேண்டி வந்தனம்” என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு ” எம்பிரான் செய்த பேறு ”  என்றவாறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் ” உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் “: என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், ”  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ ” என்று தனது ” தனிப் பெரும் கணவனாரை ” வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், ” யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்” என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், ” இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் ” என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தன மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, ” இயற்பகை முனிவா ஓலம்” என்று அழைத்தான். அதோடு, ” செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் ” என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், ” இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? ” என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், ” உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இளையான்குடி மாறநாயனார்

இளையான்குடி என்ற ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த மாறர் என்பவர் பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானது திருவடிகளை மறவாதவராக வாழ்ந்து வந்தார். உழவுத் தொழில் வாயிலாகப் பெரும் பொருள் ஈட்டிய அவர்,சிவனடியார்களை உபசரித்து அறுசுவை உணவளித்துப் பெருந் தொண்டாற்றி வந்தார். அதனால் அவரது செல்வம் பெருகியது.

செல்வம் இல்லாத காலத்தும் அவர் தமது தொண்டைக் கைவிடமாட்டார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டி நாயனாரிடத்திருந்த செல்வம் குறையுமாறு இறைவன் திருவுள்ளம் கொண்டான். நாளடைவில் இளையான்குடி மாற நாயனாரது செல்வம் குறையலாயிற்று. வறுமை தன்னை வந்தடைந்தவுடன் தன்னிடமிருந்த பொருள்களை விற்று அடியார்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார். அவரது மேன்மையை மேலும் உலகோர்க்கு உணர்த்தவேண்டி ஒரு மழைக்கால இரவு வேளையில் பெருமான் அவரது இல்லத்திற்கு சிவனடியார் வேடத்தில் எழுந்தருளினான். அன்று எவரும் உதவி செய்யாததால் நாயனார் பசியோடு இருந்தார். மழையில் நனைந்தபடி எழுந்தருளிய சிவனடியாரை இல்லத்திற்குள் வரவேற்று அவரது உடல் ஈரத்தைப் போக்கி அமருவதற்கு ஆசனம் அளித்தார். மனைவியாரிடம் சென்று, “ மிகுந்த பசியுடன் வந்துள்ள அடியாருக்கு உணவிட வேண்டும். நம்மிடம் ஏதும் இல்லையே என்ன செய்வது என வினவினார். அதற்கு அவரது மனைவியார், “இந்நேரத்தில் நமக்கு எவரும் உதவ மாட்டார்கள். நாம் பகலில் விதைத்த செந்நெல் வயலில் இந்நேரம் முளை விட்டிருக்கும் அதனை ஒரு கூடையில் கொண்டு வந்தால் அமுது படைக்கலாம் என்றார்.” இதனைக் கேட்ட நாயனார் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதுபோல் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

இருண்ட அவ்விரவில் மழையில்நனைந்தபடி வயலை நோக்கிக் கால்களால் வழியைத் துழாவிக்கொண்டு சென்று அங்கு மழை நீரால் மிதந்து கொண்டிருந்த நெல்முளைகளைக் கையால் தடவிக் கூடையில் சேகரித்துக் கொண்டு இல்லம் திரும்பினார். அதனைக் கண்ட மனைவியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று அதிலிருந்த சேற்றைக் கழுவிச் சுத்தப்படுத்தினார். பிறகு, உலை மூட்டுவதற்கு விறகு இல்லையே என்று கலங்கியபோது, வீட்டுக் கூரையில் கட்டப்பட்டிருந்த அலக்குகளை அறுத்து வந்து தந்தார் நாயனார். அவற்றை அடுப்பிலிட்டுத் தீ மூட்டி நெல்லின் ஈரம் போகுமாறு அதனை வறுத்தார் துணைவியார். அரிசியாகக் குற்றி உலையிலிட்டு அமுது தயாரித்ததும் கறிக்கு என்ன செய்வது என்று நாயனாரை நோக்கினார். உடனே நாயனார் வீட்டின் கொல்லைப்புறம் சென்று அங்கே முளைத்திருந்த சிறிய கீரைகளைப் பாசத்தினை அறவே பறிப்பவர் போலப் பறித்து வந்து மனைவியாரிடம் தந்தார். அதனைக் கழுவித் திறம்படச் சமைத்ததும் சிவனடியாரை அமுதுண்ண அழைக்குமாறு கணவனாரிடம் கூறினார்.

நித்திரை செய்பவர் போல் சயனித்திருந்த அடியாரை நோக்கி,” அடியேன் பிறவிக்கடலிலிருந்து உய்யும் வண்ணம் எழுந்தருளிய பெரியோரே, திருவமுது உண்ண எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அப்போது சிவனடியார் வேடத்தில் வந்த இறைவன் சோதி வடிவாகக் காட்சி அளித்து ,” வறுமையிலும் சிவனடியார்க்கு உணவளிக்கும் நீங்கள் இருவரும் என்பால் வருக. அங்கு குபேரன் சங்க நிதி போன்ற செல்வங்களைக் கையில் ஏந்தி உங்களுக்கு ஏவல் செய்வான். அங்கு பேரின்பத்துடன் என்றும் வாழ்வீராக” என்று அருள் செய்தான். நாயனாரும் அவரது மனைவியாரும் பேரின்ப வீடு பெற்றுப் பெருவாழ்வு பெற்றனர்.             

                                                   மெய்ப்பொருள் நாயனார்

சிவபெருமானது அடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு ஆட்சி செலுத்திய ஒரு அரசரை மக்கள் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைத்தனர்.  திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு சேதி நாட்டை ஆண்டு வந்த மலாடர் மரபினர் இவர். அரச நெறிப்படி மக்களைப் பாதுகாத்தும் பகைவர்களை வென்றும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். சிவாலயங்களில் திருவிழாக்கள் வழிபாடுகள் ஆகியவை நடைபெறுவதற்குப் பெரிதும் உதவி வந்தார்.  தமது பொருள்கள் அனைத்தும் சிவனடியார்க்கே உரியவை எனக் கருதி ,அடியார்களுக்குக் குறைவறக் கொடுத்துவந்தார்.

நாயனாரிடம் பகைமை பூண்ட முத்தநாதன் என்ற சிற்றரசன் படையுடன் பலமுறை போர் புரிந்து தோல்வியுற்றுப் போயினான். ஆனால் அவரை வஞ்சனை மூலம் வெல்வது என்ற எண்ணத்துடன், நீறிட்ட நெற்றியுடனும் முடித்துக் கட்டிய சடையுடனும் தவ வேடம் பூண்டான். உடைவாளைப் புத்தகக் கவளி ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டு நாயனாரது அரண்மனை வாயிலை அடைந்தான். சிவ வேடம் கண்ட வாயிற்காவலரும் தடை ஏதுமின்றி உள்ளே செல்ல அனுமதித்தனர். மன்னர் உறங்கிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது,தத்தன் என்ற அரசரது மெய்க்காவலன், அரசர் உறங்குவதாகக் கூறினான். அது கேட்ட முத்தநாதன் தான் முத்திதரவல்ல ஓர் பொருளைக் கொண்டு வந்துள்ளேன் என்னைத் தடை செய்யாதே என்று கூறிவிட்டு நேராக உள்ளே சென்றான். அரசரின் அருகிலிருந்த அரசியார் சிவவேடம் பூண்டவர் வருவதைக் கண்டு அரசரை எழுப்பினார். சிவவேடப் பொலிவைக்கண்டு தலை வணங்கிய நாயனாரிடம் முத்தநாதன், “ சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். அதனைப் பட்டத்தரசி இல்லாமல் தனிமையில் நாமிருவரும் இருக்கும்போது காட்டுவோம்” என்றான். அது கேட்ட நாயனாரும், தேவியாரை அந்தப்புரத்திற்குப் போகுமாறு செய்தார்.

பொய்த்தவத்தொடு வந்த முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் இருக்கச் செய்தார் அரசர். வஞ்சகனும் மடியிலிருந்த புத்தகத்தை அவிழ்ப்பவன் போல்  மறைத்து வைத்திருந்த உடைவாளை வெளியில் எடுத்துத் தான் முன்னம் நினைத்திருந்த அக்கொடிய செயலைச் செய்து முடித்தான். அந்நிலையிலும் மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனக் கருதிய நாயனார் அவ்வஞ்சகனை வணங்கினார். உடைவாளால் குத்தப்பட்டுக் குருதி பெருக நிலத்தில் விழும் அரசரைக் கண்ட தத்தன் பதைத்து ஓடி வந்து தனது வாளால் முத்தநாதனை வெட்டப்புகுந்தபோது அதனைத் தடுத்த நாயனார், “ தத்தா அவர் நம்மவர். அவரை ஒன்றும் செய்யாதே. அவருக்கு எந்தத் தீங்கும் நேராதபடி கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பி வருவாயாக “ என்றார்.

நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற அனைவரும் அங்கு வந்து முத்தநாதனைக் கொல்வதற்காகச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைத் தடுத்த தத்தன் அரசரது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்கள் அதனைக் கேட்டு விலகியதும் முத்த நாதனைப் பாதுகாப்பாக நாட்டு எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான் தத்தன். இச்செய்தியைக் கேட்பதற்காகவே உயிர் தாங்கிக் கொண்டிந்த அரசரை வணங்கி, முத்தநாதனுக்குத் தீங்கு வராமல் கொண்டு விட்டு வந்ததைக் கூறினான். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நாயனார், தத்தனை நோக்கி, “ ஐயனே, இன்றைக்கு நீ செய்த உதவியைப்போல் வேறு யாரால் செய்ய முடியும்” என்று கூறினார். பின்னர் தனது உற்றார் உறவினர்களை அருகில் அழைத்து, “ நீங்கள் அனைவரும் திருநீற்றின்மீது வைத்த அன்பைப் பாதுகாத்து வாழ்வீர் “ எனக் கூறி,சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தை செய்யலானார். அப்போது இறைவன் காட்சி அளித்துத் தேவர்களும் அறியாத தனது திருவடி நீழலை நாயனாருக்கு அருளி இடையறாப் பேரின்பம் அருளினான்.

விறன்மிண்ட நாயனார்

மலை நாட்டிலுள்ள செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளர் குலம் விளங்கத் தோன்றியவர் விறன்மிண்ட நாயனார். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு பூண்டவர். சிவத்தலங்களுக்குச் சென்று வணங்கி வருபவர். அப்படிச் செல்லுமிடங்களில் சிவனடியார்களை முதலில் வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கி வந்தார்.

ஒருமுறை பலதலங்களையும் தரிசித்தவராகத் திருவாரூர் சென்றடைந்தார். அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை வணங்கிச் செல்லாமல் சுந்தரர் நேராகத் தியாகேசப் பெருமானிடம் செல்வதைக் கண்டு மனம் வருந்தினார். இவ்வாறு செய்வதால் சுந்தரரும் அவரை ஆட்கொண்ட தியாகேசனும் புறகு என்றார். இதனைக் கேட்ட நம்பியாரூரர் அடியார் பெருமையைப் பாட விழைந்து தியாகேசனை நாடினார். அதன் பின்னரே இறைவன் அடி எடுத்துத்தர, திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் உதயமானது. இவ்வாறு சிவநெறியைப் பல காலம் பாதுகாத்துப் போற்றி வந்த விறன்மிண்டர் இறை அருளால் கண நாயகர் ஆகும் பேறு பெற்றார்.

உலகம் உய்யவும் ,நாமெல்லாம் கடைத்தேறவும் சைவம் தழைக்கவும் சுந்தரர் வாயிலாகத் திருத்தொண்டத் தொகை வெளிப்படக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனாரது அன்பின் திறத்தை என்னென்பது?

அமர்நீதி நாயனார் 

சோழ நாட்டில் ( குடந்தைக்கு அருகிலுள்ள ) பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலம் விளங்க வந்து தோன்றியவர் அமர்நீதியார். அவர் பொன்,முத்து, இரத்தினம், ஆடை ஆகியவற்றை வாணிபம் செய்து வந்தார். சிவ பெருமானது சேவடிகளை மறவாமலும் சிவனடியார்களுக்குக் கந்தையும்,கீழும் கோவணமும் அளித்தும் வாழ்ந்து வந்தார். திருநல்லூரிலுள்ள சிவாலய விழாவுக்கு அடியார்கள் வருகை தரும்போது அவர்களுக்கு அன்னம் பாலித்ததோடு மடமும் அமைத்துத் தந்து அருந் தொண்டாற்றி வந்தார்.

நாயனாரது தொண்டை உலகம் அறியவேண்டி ஒருநாள் சிவபெருமான் ஓர் அந்தணர் குல பிரமசாரி வேடத்துடன் அமர்நீதியாரின் திருமடத்திற்கு எழுந்தருளினார்.  எதிர்கொண்டு வரவேற்று வணங்கிய அவரிடம் பெருமான், “ உமது மடத்தில் அடியார்களுக்குத் திருவமுதும்,கந்தையும்,கீளும்,கோவணமும் தருவதாகக் கேள்வியுற்று இங்கு வந்தேன். என்றார். அதக் கேட்டுப் பேருவகை அடைந்த நாயனாரை நோக்கி இறைவன், “ நான் இப்போது காவிரியில் நீராடச் செல்கிறேன், ஒருவேளை மழை வரினும் தரித்துக் கொள்வதற்காக மாற்றுக் கோவணம் கொண்டு வந்துள்ளேன். அதனை நான் வரும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்வீர். ஏனெனில் அக்கோவணத்தின் பெருமையைக் கூற முடியாது” என்றார். அதற்கு இணங்கிய நாயனாரும் அகோவணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்துவிட்டு வந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவிரியில் நீராடிய பிரமசாரி வேட ஈசுவரன், வழியில் மழை வந்ததால் நனைந்தபடியே அமர்நீதியாரது மடத்திற்கு வந்து சேர்ந்தார்.  அதற்குள் அறுசுவையுடன் கூடிய திருவமுதை ஆக்குவித்து அவரை வரவேற்று வணங்கினார். “ ஈரக் கோவணத்தை மாற்ற வேண்டும். யான் உம்மிடம் கொடுத்த மற்றொரு கோவணத்தை எடுத்து வருக” என்று அப்பிரமசாரி கூறியவுடன் நாயனார் அதனை எடுத்து வர உள்ளே சென்றார். வைத்த இடத்தில் அதனைக் காணாது அதிசயித்துப் பதறி அதற்குப் பதிலாக வேறோர் கோவணத்தைக் கொண்டு வந்து கொடுத்து தமது குற்றத்தைப் பொறுக்குமாறு வேண்டினார்.

நாயனார் கூறியதைக் கேட்ட அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான்,” நன்று நீர் கூறுவது ! வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டீர். “ என்றார். அமர்நீதியார் தமது பிழையைக்கு மிக வருந்தி, “ இக்கோவணம் மட்டுமின்றி, பொன்,மணி,பட்டாடைகள் ஆகியவற்றையும் தருகிறேன். அவற்றை ஏற்றுக்கொண்டு அடியேனது தவறைப் பொறுத்தருள வேண்டும்” என்றார். அதற்கு அப்பிரமசாரி , “ பொன்னும் மணியும் எமக்கு வேண்டா. எனது கோவணத்திற்குச் சமமான கோவணத்தைத் தந்தால் போதும்” என்றார். இதைக்கேட்டு முகம் மலர்ந்த நாயனார் ஒரு பெரிய தராசினைக் கொண்டு வந்து நிறுத்தி அதில் ஒரு தட்டில் தண்டிலிருந்து பிரமசாரி ஒரு கோவணத்தை வைக்க, மற்றொன்றில் தான் நெய்ந்த மற்றொரு கோவணத்தை இட்டார். தராசுக்கோல் சமமாக நிமிராததால் தன்னிடமிருந்த பட்டாடைகள்,செல்வம், அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார். அப்போதும் அக்கோல் சமமாக நிமிராதது கண்டு அதிசயித்த அமர்நீதியார், “ இப்போது எஞ்சியுள்ளவை யானும் எனது மனைவியும் சிறு வயது மகனும் மட்டுமே.எங்களையும் தராசில் ஏற அனுமதிக்க வேண்டும் ” என்றார். அவரது அன்பின் உயர்வை உலகோர் காண வேண்டி பிரமச்சாரியாக வந்த சிவபெருமான் அவர்களும் தட்டில் ஏறுவதற்கு உடன்பட்டார். நாயனார் மிக்க மகிழ்ச்சியுடன் அவரது திருவடிகளை வணங்கித் தாமும் தனது மனைவி,  மகன் ஆகியோருடன் அக்கோலை வலம் வந்து, “ நாங்கள் திருவெண்ணீற்று அன்பில் சற்றும் பிழையாதவர்களாக இருந்தால் இத்தட்டு நேராக நிற்பதாக “ எனக் கூறி, திருநல்லூர் இறைவரை வணங்கிப் பஞ்சாக்ஷரத்தை ஓதியபடியே தட்டின் மீது ஏறி நின்றார்கள். அடியவரது அன்பின் திறத்தால் இரு தட்டுக்களும் சமமாக நின்றன. தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். பிரமசாரி வடிவத்தில் வந்த சிவபெருமான் உமாதேவியோடு காட்சி தந்தருளினார். இறையருளால் அத்தராசுக் கோல்  தெய்வ விமானமாக மாறியது. அமர்நீதி நாயனாரும்,அவரது மனைவியாரும், புத்திரனும் அதில் ஏறி சிவலோகத்தை அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர்.   ,

 

Posted in Latest News, Nayanmars | Leave a comment

மார்கழித் திருவாதிரைக் களி Thiruvadhirai Kali

Nataraja Abhishekam is conducted six times in a year. The one in the Tamil month of Margazhi ( Dec/ Jan)  has special significance. It coincides with the star Ardhra  –        Thiruvadhirai in Tamil) . It was on this day , Sendhanaar, a great devotee of Lord Nataraja had offered ” Kali” , a unique ” neivedhyam” made of jaggery. Many households still follow this offering on this day. We hereby give details of the process of making ” Kali” for the benefit of the readers.

 

47C

மார்கழித்    திருவாதிரைக்   களி  செய்யும்  முறை

Procedure for making”Ardhra Kali”

தேவையான பொருள்கள் :Materials Required:

பச்சரிசி – ஒரு டம்ளர்  Raw Rice: One cup

வெல்லம் – ஒரு டம்ளர் Jaggery*: One cup ( *Bella in Kannada; Bellam in Telugu; Gur(a) in Hindi and Gujarathi;

நெய் – தேவையான அளவு Ghee: Based on requirement and taste

தேங்காய்- ஒரு மூடி Coconut chips( well shaved) : One cup

முந்திரி,ஏலக்காய் ,திராக்ஷை ( Cashew nut, cardamom ( elaichi in Kannada and Telugu; choti elaichi in Hindi and dry grapes.)

செய்முறை: அரிசியை சிவக்க வறுக்க வேண்டும். பிறகு மென்மையாக மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும்.

Take the required amount of rice in a bowl and heat it gently until it becomes pale red in colour. Powder it in a mixie.

அடுப்பை மூட்டி, இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் பொடி செய்த வெல்ல த்தைப் போட வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் வடி கட்டவும். தேங்காய்த்  திருகலை  அதில் போடவும்.

Take two mugs of water in a vessel and add powdered jaggery and dissolve it. Filter it and add coconut chips prepared earlier. Heat the mixture

வறுத்துவைத்த அரிசி மாவை மேற்கூறிய கொதிக்கும் நீரில் போட வேண்டும்.  கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும். அப்பாத்திரத்தைக்  குக்கருக்குள் வைக்க வேண்டும். மூன்று விசில் சப்தம் வந்தவுடன் அடுப்பை  அணை த்து விடவும்.

Add the well roasted rice into the above hot mixture.Mix it well and keep it inside a closed cooker for further heating. Stop heating when the cooker blows the whistle for the third time.

பிறகு குக்கரைத் திறந்து  ஏலக்காய் பொடியைப் போட்டு அதோடு நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷையைப் போட்டு நன்கு கிளற வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட  களியை சுவாமிக்கு  நிவேதிக்கலாம்.

Open the cooker and add elachi powder and then the mixture of cashew nut, and dry grapes,roasted with ghee.

Now ” Kali” is made ready to be offered to the Lord on Ardhra day.

 

 

 

 

 

 

Posted in Worship | Leave a comment

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Thirugnanasambandar
வேதமும் சைவமும் தழைக்கவும், பிற சமயங்களின் பிடியிலிருந்து சைவ நெறியைக் காக்கவும் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கவுணிய(கௌண்டின்ய)கோத்திரத்தில் அவதாரம் செய்தருளியவ்ர் திருஞான சம்பந்தர்.

சைவ சிகாமணி என்று போற்றப்பெறும் காழிப்பிள்ளயாரைத் தவம் செய்து பெற்றோர் சிவபாத இருதயரும் பகவதி அம்மையும் ஆவார்கள். மூன்றாண்டு ஆகியபோது தனது தந்தையுடன் ஆலயத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பிரமதீர்த்தத்தில் தந்தை மூழ்கி ஜபம் செய்கையில், குழந்தைக்குப் பசி மேலிடத் தனது கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு தோணியப்பரின் சிகரத்தைப் பார்த்து அம்மே,அப்பா என்று அழுதருளினார். குழந்தையின் அழுகை தீர்த்தருள வேண்டி இறைவன்,உமா தேவியுடன் விடை (ரிஷபத்தின்) மேல் தோன்றியருளி, அக்குழந்தைக்குப் பால் அளித்து வருமாறு அம்பிகையைப் பணித்தான். தேவியும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்தருளி,பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலைக் கறந்தருளி சிவஞானத்து இன்னமுதத்தைக் குழைத்து அக்குழந்தைக்குத் தந்தருளினாள் .அக்கணமே, அம்மறைச் சிறுவனுக்கு எல்லையில்லாததும் ,உவமை இல்லாதததுமான கலை ஞானமும் சிவஞானமும் உண்டாயின. எனவே சிவஞானசம்பந்தர் ஆயினார். கரையேறிய தந்தையார் குழந்தையின் வாயில் பால் ஒழுகக் கண்டு, ” உனக்குப்பால் தந்தது யார்” என்று கோல் ஓச்சிக் கேட்டவுடன், தோணிச் சிகரத்தை நோக்கிக் கையால் சுட்டிக் காட்டித்  ” தோடுடைய செவியன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை அடையாளங்களுடன் தந்தைக்குக் காட்டியருளினார்.

தந்தையுடன் அருகிலுள்ள திருக்கோலக்கா என்ற தலத்தை அடைந்து,கையால் தாளமிட்டுப் பாடுகையில், இறைவரருளால் அவரது கைகளில் பஞ்சாட்சரம் பொறித்த பொற்றாளம் வந்து அடைந்தது. பின்னர் தந்தையின் தோளில் அமர்ந்தவாறு தனது தாயின் பிறந்த ஊராகிய திரு நனி பள்ளியைச் சென்று வணங்கிப் பாலையாய் இருந்த அந்நிலத்தை ” ஆணை நமது” எனப் பாடி நெய்தலாக்கினார். அதன் பின்னர் பல தலங்களைத் தரிசித்து விட்டு சீர்காழிப் பதிக்கு மீண்டும் வந்து அடைந்தார்.

அப்போது அவரை, யாழில் வல்லவரும் எருக்கத்தம்புலி யூரைச் சேர்ந்தவருமான திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் தன் மனைவியார் மதங்க சூளாமணியுடன் வந்து தரிசித்தார். அதுமுதல் சம்பந்தரோடு தலயாத்திரை மேற்கொண்டு அவரது பாடல்களை யாழில் வாசித்து வந்தார். பின்னர், பாணனாருடன் தில்லை முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு, நெல்வாயில் அரத்துறையை அடைந்தார். பாதம் நோவ நடந்துவந்து, அருகிலுள்ள மாறன்பாடியில் தங்கியபோது, அரத்துறைப் பெருமானது அருளால் அவருக்கு முத்துச் சிவிகை குடை, சின்னம் ஆகியவை வந்தடைந்தன.அதுமுதல் சிவிகையில் ஏறி சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளலானார்.

சீகாழியை வந்தடைந்த ஞானசம்பந்தப்பிள்ளையாருக்கு வேத விதிப்படி உபநயனம் நடைபெற்றபோது அங்கிருந்த அந்தணரிடம், ” வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” எனப் பதிகம் பாடி உணர்த்தினார்.
தன்னைக் காண வந்த திருநாவுக்கரசருடன் அளவளாவிய பின்னர் இருவருமாகப் பல சிவத்தலங்களைத் தரிசித்தனர். அப்பர் பெருமான் தனித்து யாத்திரை மேற்கொண்ட பிறகு, சம்பந்தர் திருப்பாசிலாச்சிராமத்தை அடைந்து கொல்லிமழவனின் மகள் முயலகன் என்ற நோயால் துன்புறுவதைக் கண்டு இரங்கி, அத்தலத்து இறைவர் மீது பதிகம் பாடியவுடன் அப்பெண் நோய் நீங்கப்பெற்றாள் பிறகு, திருச்செங்குன்றூரை அடைந்தவுடன் உடன் வந்த அடியவர்களும் ஊர் மக்களும் குளிர் சுரத்தால் வருந்துவதைக் கண்டு, திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்நோய் அகலச் செய்தார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து விட்டுப் பட்டீச்சரத்தை அடைந்தபோது இளவேனிற் கால வெய்யில் வாட்டியது. அத்தல இறைவர் சம்பந்தப்பெருமானுக்கு முத்துப் பந்தர் தந்தருளினார்.

திருவாவடுதுறைக்குச் சென்றபோது  சீகாழியிலிருந்து அவரது  தந்தையார் வருகை தந்து,தாம் செய்ய இருந்த சிவ வேள்விக்குப் பொருள் வேண்டவே, “இடரினும் தளரினும் ” எனப் பதிகம் பாடி சம்பந்தர் வேண்டியதும், மாசிலாமணீசர் திருவருளால் ஒரு சிவபூத கணம் ஆயிரம் பொன்னைப் பலிபீடத்தின் மீது கொண்டு சேர்த்தது. அதனை வேள்வி செய்வதற்காகத் தந்தையிடம் கொடுத்து விட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டார். உடன் வரும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் வாழ்ந்துவந்த திருத் தருமபுரத்தை அடைந்தவுடன் பாணரின் யாழால்தான் சம்பந்தரின் பதிகங்களுக்குப் பெருமை எனும்படி உறவினர்கள் பேசியதைக் கேட்டுப் பொறாத பாணனார், யாழில் அடங்காப் பதிகம் ஒன்று பாடுமாறு விண்ணப்பிக்க, பிள்ளையாரும், ” மாதர் மடப்பிடியும்” எனத் துவங்கும் பதிகத்தை யாழில் அடங்காதவாறு பாடியருளினார். திருச்சாத்த மங்கையில் திருநீல நக்கராலும்,புகலூரில் முருகனாராலும், திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டராலும் உபசரிக்கப்பெற்றுத் திருமருகலை வந்தடைந்தார். தன்னை மணம் முடிக்க இருந்த வணிகன் பாம்பு கடித்து மாண்டதால் கதறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு இரங்கி, மருகல் பெருமானைப் பாடி அவ்வணிகனை உயிர்ப்பித்து இருவருக்கும் மண முடித்தருளினார்.

திருப்புகலூரில் திருநாவுக்கரசர் வாயிலாகத் திருவாரூர் ஆதிரை நாள் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்து ஆரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார். திருக்கடவூரில் குங்கிலியக் கலயனாரை சந்தித்து அளவளாவிய பின்னர் திருவீழிமிழலையை அப்பர் பெருமானுடன் சென்றடைந்தார். அப்போது அங்கு பஞ்சம் நிலவிப் பலரும் துயரமுறுதல் கண்டு இறைவரிடம் வேண்ட, பெருமான் கைத்தொண்டு செய்ததால் அப்பருக்கு நல்ல காசினையும், தம் மகனார் ஆனதால் வாசியுள்ள காசினையும் அளித்தருளினான். சம்பந்தப்பெருமான் வாசி தீரக் காசு வேண்டி இறைவர் மீது பதிகம் பாடியாவுடன் பெருமான் அருளால் வாசியில்லாக் காசு பெற்றார் . அதனைக் கொண்டு இருவரும் பஞ்சம் தீரும் வரை அனைவருக்கும் உணவிட்டனர். வீழி விமானத்தில் காழிக் காட்சியும் காணப் பெற்றார் ஞானசம்பந்தர்.

இருவருமாகத் திருமறைக்காட்டைச் சென்றடைந்து வேதங்கள் திருக்காப்பிட்ட கதவினைப் பதிகங்கள் பாடி மீண்டும் திறக்கவும் மூடவும் செய்தனர்.

அப்போது பாண்டிய நாட்டிலிருந்து மங்கர்க்கரசியாரது அழைப்பு வரவே, மதுரைக்குச் செல்லப் புறப்பட்ட சம்பந்தரை, ” இன்று நாளும் கோளும் தீயனவாக உளதே ” என்று அப்பர் தடுக்க, சம்பந்தப்பெருமான், ” நாளும் கோளும் அடியார்க்கு நல்லனவே செய்வன எனுமாறு ” வேயுறு தோளி பங்கன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடியருளி,மதுரை மாநகருக்குப் புறப்பட்டார்.

மதுரையில் பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் அவரை வரவேற்றனர்.அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் தீ வைத்ததும், சம்பந்தர் பதிகம் பாடவே, அது வெப்புநோயாகப் பாண்டிய மன்னனைப் பற்றியது. சமணர்களால் பாண்டியனைக் குணப்படுத்த முடியாமல் போகவே, சம்பந்தர் அங்கு சென்று, மந்திரம் ஆவது நீறு எனப் பதிகம் பாடி வெப்புநோய் தீரச் செய்தருளினார். அதுகண்டு பொறாத சமணர்கள் அவரை அனல் வாதம்,புனல் வாதம் செய்ய அழைத்தனர். தாங்கள் ஒருக்கால் தோற்றால் கழுவேறுவதாகவும் மன்னனிடம் கூறினர். இவற்றிலும் சம்பந்தர் வென்றதால், தமது சபதப்படிசமணர்கள் கழுவேறினர். பாண்டியன் மீண்டும் சைவனானான். மன்னனும்,அரசியாரும் உடன் வர, சம்பந்தப்பெருமான் ஆலவாய் அண்ணலை வழிபட்டு அந்நாட்டிலிருந்த ஏனைய சிவப்பதிகளையும் தரிசித்துப் பதிகங்களால் பரமனைப் பரவினார்.

பின்னர் சோழ நாட்டை நோக்கிப் பயணிக்கையில், புத்த நந்தி ஒருவன் இகழவே,அதைக் கண்டு மனம் பதைத்தவராக, சம்பந்தரின் பஞ்சாக்ஷரப்பதிகப் பாடலொன்றை உடன் வரும் அடியார் பாடியவுடன் அப்புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது.

பல தலங்களையும் தரிசித்துவிட்டு அப்பர் எழுந்தருளியிருந்த திருப்பூந்துருத்திக்கு அண்மையில் செல்லும்போது, அப்பர் பெருமான் அவரது சிவிகையைத் தாமும் சுமந்து வருவதை அறிந்து, சிவிகையிலிருந்து இறங்கி அப்பரை வணங்க, வாகீசரும் இவரை வணங்கி மகிழ்ந்தார்.

பின்னர் தொண்டை நாட்டுத் தலங்களைத் தரிசித்து வரும்போது திருவோத்தூரில் பதிகம் பாடி ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் புரிந்தார்.காளத்தியை வணங்கி விட்டு அங்கிருந்தபடியே வடநாட்டுத் தலங்களைப்பாடினார்.

மயிலாப்பூருக்கு எழுந்தருளி, கபாலீசப்பெருமானைப் பதிகத்தால் பரவி,அரவம் கடித்து மாண்டிருந்த சிவநேசரின் மகளான பூம்பாவையை உயிர்ப்பித்தருளினார்.

பல தலங்களை வணங்கி விட்டுச் சீகாழியை அடைந்ததும், அவரை மணம் செய்து கொள்ளுமாறு பெற்றோரும் ஏனையோரும் வேண்டி, நல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பி என்பவரது மகளை மணம் பேசினர்.அவர்களது வற்புறுத்தலுக்கு இணங்கிய சம்பந்தப்பெருமானுக்குத் திருமணம் அத்திருப்பதியில் நடைபெற்றது. தான் மணந்த பெண்ணுடன் சம்பந்தர் அக்கினியை வலம் வந்து, காதலாகிக் கசிந்து எனத் துவங்கும் பஞ்சாட்சரப் பதிகத்தைப் பாடியருளியவுடன், ஒரு சோதி தோன்றியது, திருமணத்திற்கு வந்திருந்த அடியார்கள் அனைவரும் அதில் புகுந்ததும், தாமும் தனது மனைவியாருடன் வைகாசி மூல நன்னாளன்று அந்த சிவசோதியில் கலந்தருளினார்.

பதினாறு ஆண்டிகளே வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சைவ சமய பிரதம ஆசாரியராக விளங்கும் திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

” திருஞானசம்பந்தர் பாத மலர்கள் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.” — பெரிய புராணம்.

Posted in Nayanmars | Leave a comment

திருநாவுக்கரசு நாயனார்

Appar swamigal
சைவ சமயாசார்யர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகவாகத் தோன்றியருளியவர். இவரது தமக்கையான திலகவதியாருக்கு கலிப்பகையார் என்பவரை மணம் பேசிய நிலையில், போர்முனையில் அக்கலிப்பகையார் வீர சுவர்க்கம் அடைந்தார்., தமது பெற்றோர்களும் இறையடி சேர்ந்ததால் மனம் நொந்த திலகவதியார் தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அதைப் பொறாத மருள்நீக்கியார் தாமும் அவ்வாறே செய்து விடுவதாகக் கூறவே, தம்பியார் வாழ வேண்டும் என்ற தயையினால் அம்முடிவை மாற்றிக் கொண்ட தமக்கையார், திருவதிகை வீரட்டானத்து இறைவர்க்குத் தொண்டு செய்து வந்தார்.

சில ஆண்டுகளில் கல்வி கேள்விகளைக் கற்ற மருள்நீக்கியார் சமண சமயத்தைச் சேர்ந்து அச்சமய நூல்களைக் கற்று , தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார். இதனைக் கேள்வியுற்ற திலகவதியார், திருவதிகை இறைவனிடம் தனது தம்பி மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்ப அருளுமாறு வேண்டி வந்தார். இறைவனும் மருள்நீக்கியாரின் வயிற்றில் சூலை நோய் பற்றச் செய்யவே, அதனால் துன்புற்றவராக வேறேதும் செய்ய இயலாமல் மீண்டும் தமக்கையாரிடமே வந்து குறை இரந்தார்.

தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார்,அவருக்குத் திருநீறளித்து வீரட்டேசப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். அதன்படி ஆலயத்தினுள் சென்று, பெருமானிடம் முறையிட்டவுடன், இறையருளால் செந்தமிழ் மாலைகள் பாடும் திறன் பெற்றுக் ” கூற்றாயினவாறு ” எனத் தொடங்கித் தேவாரப் பாமாலை சூட்டலானார். அதனைத் திருச்செவியில் கேட்டு மகிழ்ந்த இறைவர் இன்னருளால் வானத்திடையே, ” நாவுக்கரசு என்னும் நற்பெயர் வழங்குவதாக” என்ற அசரீரி ஒலித்தது.

சமண சமயத்தை நீங்கி மீண்டும் தருமசேனர் சைவராக மாறி நாவரசர் என வழங்கப்படுவதைக் கேட்டு வெதும்பிய சமணர்கள் அவருக்குத் தீங்கு விளைவிக்கக் கருதினர்.பல்லவ மன்னனும் சமண சமயத்தவனாக மாற்றப்பட்டிருந்ததால் அதனைப் பயன்படுத்தி,நாவுக்கரசரை நீற்றறையில் இட்டும்,நஞ்சை அருந்தச் செய்தும், யானையின் காலால் இடறச் செய்தும் துன்பப்படுத்தினர். இவற்றால் அவருக்கு எந்தத்தீங்கும் விளையாததால் கல்லோடு அவரைக் கட்டிக் கடலில் விட்டனர். அப்போது நாவுக்கரசர் பஞ்சாட்சரத் திருப்பதிகம் பாடவே, கல் மிதந்து அதுவே தெப்பமாகி அவரைக் கரை சேர்த்தது. தனது தவறை உணர்ந்த மன்னன் மீண்டும் சைவனானான்.

சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று உழவாரப் பணி செய்து திருப்பதிகங்களால் இறைவனைப் போற்றி வழிபட்டு வந்தார் நாவுக்கரசர். பெண்ணாகடத்தில் சூலக் குறியும் ரிஷபக் குறியும் பெற்று, தில்லையைச் சென்று தரிசித்து மகிழ்ந்தார் வாகீசர். பின்பு சீகாழிக்குச் சென்று ஞானசம்பந்தப்பெருமானை நேரில் கண்டு மகிழ்ந்தார். சம்பந்தரும் அவரை ” அப்பர்” என்று அழைத்து வணங்கி மகிழ்ந்தார்.

திருச்சத்திமுற்றத்துப் பெருமானிடம் தமக்குத் திருவடி தீக்ஷை செய்யமாறு வேண்டிய அப்பர் பெருமானுக்கு இறைவரருளால் திருநல்லூர் என்ற தலத்தில் அப்பேறு கிட்டியது. பின்னர் திங்களூரில் அரவம் கடித்து மாண்ட அப்பூதி அடிகளின் மகனைப் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்தார்.

திருவாரூரில் தியாகேசப் பெருமானைப் பதிகங்களால் துதித்து விட்டுத் திருப்புகலூரை அடைந்து, முருக நாயனாரது மடத்தில் ஞான சம்பந்தரோடு தங்கியிருந்தார்.பிறகு இருவரும் திருவீழிமிழலையை அடைந்து அங்கு நிலவிவந்த பஞ்சம் தீருமாறு பெருமானைப் பாடினர். அதன்பிறகு இருவருமாய்த் திருமறைக்காட்டிற்குச் சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர். அங்கிருந்து இருவரும் திருவாய்மூரை அடையும் போது இறைவர் எதிர் காட்சி கொடுத்தருள, அக்காட்சியை சம்பந்தர் காட்டத் தாமும் தரிசித்துப் பரவசமடைந்தார் வாகீசர்.

பாண்டிமாதேவியின் அழைப்புக்கிணங்கி சம்பந்தப்பெருமான் மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், அப்பர் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துப் பணி செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொள்ளவே, இறைவரருளால் அதனை அறிந்த அரசன் அக்கோயிலை மீண்டும் திறப்பித்தான். இவ்வாறு பல தலங்களை வணங்கியவராகத் திருப்பைஞஞீலியை அடைந்த அப்பர் பெருமானுக்குப் பசி மேலிட்டபோது , இறைவன் அவருக்குக் கட்டமுது தந்தருளினான்.

தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட அப்பர் பெருமான், காளத்தி மலையைத் தரிசித்தவராய்க் கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரைப் பெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக் குளத்தில் எழச் செய்து அங்கேயே கயிலைக் காட்சியைக் காட்டினான்.

பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்த வாகீசப்பெருமான், திரு மடம் ஒன்று அமைத்துக் கொண்டு இறைவனைப் பாமாலைகளால் துதித்து வரலானார். அப்போது அங்கு ஞான சம்பந்தர் எழுந்தருளி வருவது கண்டு மிக மகிழ்ந்தவராக அவரது சிவிகையைத் தாங்கினார். இருவரும் தமது தல யாத்திரைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்த பின்னர், பாண்டிய நாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார் அப்பர்.

பின்னர் தமது 81 வது வயதில் திருப்புகலூரை அடைந்த வாகீசர் திருத்தொண்டு செய்து வரும் போது, உழவாரம் செய்யுமிடத்தில் பொன்னும் மணியும் தோன்றச் செய்தான் இறைவன்.ஆனால் அப்பரோ தமக்கு அவற்றால் என்ன பயன் என்று எண்ணி அவற்றை நீரில் எறிந்தார். தேவலோக மகளிர் தோன்றி அவரது உறுதியைச் சோதிக்கும் போது, தாம் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆட்பட்டதால் அவர்களால் மயக்குறேன் என்று திடமாக இருந்தார், ” புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்” என்று விண்ணப்பித்த அப்பர் பெருமானுக்கு இறைவன் ஓர் சித்திரை மாதத்து சதய நன்னாளில் சிவானந்த ஞான வடிவளித்துத் தம் சேவடிக்கீழ் ஆட்கொண்டருளினான்.

திருநாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூறாண்டின் இடைப் பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்.

Posted in Nayanmars | Leave a comment

அரிவாட்டாய நாயனார்

Thandalaicheri (2)சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள பாடல் பெற்ற தலமான தண்டலை நீள் நெறி ( தண்டலைச்சேரி)க்கு அருகாமையில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தாயர் என்பவர். இவரும் இவரது மனைவியாரும் மிகுந்த அன்போடு சிவபெருமானது திருக்கோயிலுக்குத் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நிவேதனத்திற்காக  வழங்கும் அரும்பணியைச் செய்து வந்தனர். மனைவியார் ஆன் ஐந்தும் எடுத்துக் கொண்டு கணவனாரைப் பின்தொடர்ந்து உடன்சென்று பணி ஆற்றி வந்தார்.

Thandalaicheri (1)நாளடைவில் அவரது செல்வம் வேழம் உண்ட விளாங்கனி போல் மறைய ஆரம்பிக்கவே, கூலிக்கு வயலில் வேலை செய்து நெல் கொண்டு அதைக் கொண்டு செந்நெல் பெற்று, இறைத்தொண்டு ஆற்றி வந்தனர். ஒரு சமயம் கூலி நெல் முழுவதும் செந்நெல்லாகவே இருந்தது. தனக்கு உணவுக்கு நெல் இல்லாமல் போனாலும் இறைவரது பணி முட்டாமல் செந்நெல் கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ந்து, அதனை முழுவதுமாக  அமுது படைத்தார். இது  அடியேன் செய்த புண்ணியம் எனக் கருதினார்.

பசியினால் மிகத்தளர்வுற்ற நாயனாரும் அவர்தம் மனைவியாரும் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்த இலைகளை உண்டும் நீர் அருந்தியும், சிவத் தொண்டை விடாமல் செய்து வந்தனர்.

ஒருநாள் நாயனார் தமது  கூடையில் செந்நெல் அரிசியும்,செங் கீரையும், மாவடுவும், ஏந்தி முன்செல்ல, ஆன் ஐந்தை ஏந்தியவராக மனைவியார் பின் தொடர்ந்தார். அவ்வாறு செல்லும்போது தளர்ச்சி மேலிட்டுத் , தாயனார் நிலத்தின் மீது விழும்போது, மனைவியார் அவரைத் தாங்கினார். அப்பொழுது கூடையில் இருந்த அரிசியும், கீரையும், மாவடுவும்  கமரில்          ( நில வெடிப்பிற்குள்) சிந்தி விட்டன. இதைக் கண்டு தாயனார் மனம் பதைத்தவராக, எல்லையில்லாத தீயனேன் இன்று பெருமானுக்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றிலேன் என்று கருதி ,அக்குற்றத்திற்காகத் தனது கழுத்தினை அரிவாளைக் கொண்டு அரியலுற்றார்.

மாசில்லாத அன்பரது அச்செயலைக் கண்டு தரியாத இறைவரது திருக்கை அக்கமரிலிருந்து வெளிப்பட்டு நாயனாரின் கையைப் பிடித்துத் தடுத்ததோடு  “ மாவடு விடேல் விடேல் “ என்ற ஓசையும் எழுந்தது. பெருமானின் கருணையைக் கண்டு நெகிழ்ந்து போற்றிய தாயனாருக்கும்  அவரது மனைவியாருக்கும் இறைவன் ரிஷப வாகனனாய்க் காட்சி அளித்து, இருவரும் சிவலோகத்தில் வாழும் பேற்றையும் அளித்து அருள் செய்தான்.

அன்பின் காரணமாகத் தனது கழுத்தையே அரிவாளைக் கொண்டு அரிய முற்பட்ட தாயனார் அன்று முதல் அரிவாள் தாயர் எனப்படுவாராயினார்.

நாயனாருக்கு முக்தி அளித்த தை மாதத் திருவாதிரை நாளன்று தண்டலைச்சேரி சிவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

Posted in Nayanmars | Leave a comment