தியாகராஜ லீலை

                                சிவபாதசேகரன் 
Thyagaraja Temple, Thiruvarur

திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு நிகழ்ந்த அற்புதம் மனத்தை விட்டு நீங்குவதில்லை.

சாயரக்ஷை தரிசனம் செய்த நிறைந்த மனத்தோடு மேற்கு கோபுரம் வழியே வெளியே வந்து கொண்டு இருந்தேன். அங்கிருந்து பேருந்து நிலையம் சென்று கும்பகோணத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் வெளிப் பிராகார வலத்தை முடித்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலை நெருங்கும் சமயத்தில் கால்களில் கடுமையான வலி ஏற்பட்டது.ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கூட யாரும் வராததால் அதே இடத்தில் நின்று கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கோயிலின் உட்பக்கத்தைத் திரும்பி நோக்கியபடி , தியாகேசா என்று முறையிட்டபடியே சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலைக் கடந்து கமலாலயக் கரையை அடி மேல் அடி வைத்தபடி மெதுவாக வந்தடைந்தேன். வலியோ நிற்பதாக இல்லை.

அந்த சமயம் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எனக்கு அருகில் வந்து இறங்கினார். கோயிலுக்கு உள்ளே அவர் செல்ல ஆரம்பித்தபோது நான் அவரிடம் என் நிலைமையைச் சொல்லிவிட்டு, நான் கும்பகோணம் செல்ல இருப்பதால் பேருந்து நிலையம் செல்லக் குறுக்குவழி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், பேருந்து நிலையம் தூரத்தில் இருப்பதால் இந்த நிலையில் நடந்து செல்வது கடினம் என்று சொன்னார். நான் இருக்கும் இடத்தில் ஆட்டோ கிடைப்பதும் துர்லபம். அதற்கும் வெளி வீதி வரை நடக்க வேண்டும். பிறகு அவருக்கு இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ” ஐயா, தங்களை வடக்கு வீதி வரை எனது ஸ்கூட்டரில் கொண்டு விடுகிறேன். அங்கேயே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளில் தாங்கள் ஏறிக் கொள்ளலாம். உங்களை அங்கு இறக்கி விட்டுப் பிறகு கோயிலுக்குள் செல்கிறேன்” என்கிறார். என் கண்களில் நீர் கசிந்தது. பிறகு என்னை அங்கு கொண்டுபோய் இறக்கிவிட்டு உடனே கோயிலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. மிகுந்த சிரமப்பட்டுப் படிகளில் ஏறினேன். அதிர்ஷ்ட வசமாக உட்கார இருக்கையும் கிடைத்தது.

எனது அடுத்த கவலை, கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும் முன்பாக உள்ள மேம்பாலத்தில் இறங்கினால் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கிடைக்க வேண்டுமே என்பது. என்னால் வீடு வரை நடந்து செல்ல நிச்சயமாக முடியாது என்று தோன்றியது. எப்படியோ கும்பகோணம் மேம்பாலத்தை அடைந்து ஒருவழியாகப் பேருந்தை விட்டு இறங்கினேன். சாலையைக் கடக்க வேண்டும். கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. நான் பயந்தபடியே ஆட்டோக்களும் அங்கு அந்த சமயம் வரவில்லை. மீண்டும் ஆரூரானைத் துணைக்கு அழைத்தேன். ” தியாகேசா, இதென்ன சோதனை” என்று கதறவே முடிந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

கைப்பேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. சாலை ஓரம் நின்றபடியே பேச முற்பட்டேன். பேசியவர் எனக்கு மிகவும் தெரிந்தவர். அப்போதுதான் சென்னையிலிருந்து வந்தாராம். தாராசுரத்தில் நண்பரைப் பார்த்துவிட்டு என்னையும் வீட்டுக்கு வந்து பார்ப்பதற்காக நண்பரின் பைக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். வீடு பூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காகக் கைப்பேசியில் பேசியிருக்கிறார். நான் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னேன். அதற்கு அவர், ” நீங்கள் அங்கேயே இருங்கள். நான் ஐந்து நிமிடங்களில் அங்கு வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அதேபோல ஐந்து நிமிடத்திற்குள் வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறுநாள் வைத்தியரிடம் போகலாம் என்கிறார். மறுநாள் காலை வலி இருந்தால் தானே வைத்திரிடம் போவதற்கு ! எனக்கோ வழக்கம் போல் நடக்க முடிந்தது. இவ்வளவும் கனவில் நடந்ததுபோல் இருந்தது.

Posted in Latest News | 1 Comment

ஆகமக் கல்வி

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.

                                  — சுந்தரர் தேவாரம்

“ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் எழுந்தருளித் தனது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களைப் பெருமான் தோற்றுவித்து அருளியதாகத் திருவாசகம் கூறுகிறது. “ எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.தமிழகம் செய்த தவப்பயனாக இன்றளவும் ஆகம வழியில் சிவாலயங்களில் நித்திய பூஜைகள், கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது ஈசன் திருவருட் துணையினால் மட்டுமே ஆகும்.

இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம்,காமிகம் போன்ற சில ஆகமங்களே தற்போது கிடைப்பதோடு மட்டும்  அல்லாமல் பின்பற்றப் படுவனவும் ஆகும். பிற ஆகமங்கள் எவ்வாறு, எக்காலத்தில் மறைந்து போயின என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை. அவற்றை மீட்டெடுக்கும் தீவிர முயற்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் புலப்படவில்லை. எஞ்சிய ஆகமங்களையே தற்போதுள்ள ஆகம பாடசாலைகள் கற்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் இக்கல்வி முறை பின்பற்றப் படுகிறது.

ஆகமத்தொடு, வாழ்வியல் கல்வியும் தக்கோரைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் பாட திட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் சிறிது வேறுபாடுகள் இருக்கலாம். ஆகமக் கல்வியோடு, தற்காலக் கல்வியும் பன்னிரண்டாம் வகுப்பு வரை இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டையும் இணைத்துக் கற்கும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவு பெற்றாலும் அனைவரும் அறிந்த காரணத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே, ஆகமப் பாடசாலைகளே கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கொடுக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு எவ்வாறு பயன் தருகின்றன என்பது அடுத்த கேள்வி.அதிக வருமானத்தை விரும்பி சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூருக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள் அவ்வாறு செல்லுமிடங்களில் இச் சான்றிதழ்களைக் காட்டித் தனது தகுதியை நிரூபிக்க முயலுகிறார்கள். அப்படியானால் சொந்த ஊர்களில் வாழையடி வாழையாகத் திருக்கோயில்களில் பணியாற்றி வந்தவர்கள் அக்கோயில்களைப் புறக்கணிக்கும் நிலையைப் பாடசாலைகள் ஆதரிக்கின்றனவா? பாடசாலைத் தரப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெளியேறுகையில் அவனுக்கு ,அவனது பூர்வீக ஊரிலேயே வாழும்படி வாழ்வாதாரம் செய்து தரப் படவில்லையே !

பாடசாலை நடத்துவதும் அத்தனை எளிது அல்ல. வெளியிலிருந்து பெரிய மனம் உள்ளவர்களின் துணையுடனும், நிரந்தர வைப்பு நிதியின் வட்டி வருவாயுடனும் மாணவர்களின் கல்வி, உணவு,உடை ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதை நாம் அறிவோம். இச் சிவபுண்ணியத்தில் வெளிநாடுகளில் வசித்து வரும் நம்மவர்கள் பங்கேற்க மேலும் முன்வந்தால் பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உண்டு.அவர்களை இத்தருமத்தில் ஈடுபடச் செய்ய வேண்டிவர்கள் மடாதிபதிகளும், வெளிநாடுகளுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களும் ஆவார்கள். தனவந்தர்கள் பலர் அங்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை ஆதி சைவர் நல சங்கங்களும் இணைந்து செய்யலாம்.

ஆகமம் கற்ற மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி நடந்து விட்டால் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மோகமும் ஒழிந்து விடும். ஆகமமும் தமிழும் ஒருங்கே பயில ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கல்வி ஸ்தாபனமே அரசு ஆதரவோடு நடை பெற வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பத்தை விட, இம்முறையில் கிடைக்கும் பலனைப் பல மாங்காய் என்றும் சொல்ல முடியும். இன்று ஆதிசைவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிவனுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் சமூகம் பாதை மாறி சம்பந்தமில்லாத,  மற்றும் மரியாதை முற்றிலும் கிடைக்காத இடங்களில் வேலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. சொந்தக்  காலில் நிற்கும்போது சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. வறுமை முற்றிலும் நீங்கிவிடும். திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருபாலார்க்கும் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். இத்தனையும் நடைபெற வேண்டுமானால் மேற்கூறியபடி போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்பு மூலம் ஒரே ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். சிவனருள் என்றென்றும் துணை செய்யும். சம்பந்தப் பட்டவர்கள் களப் பணி செய்ய முன்வர வேண்டும் என்று, வேதமாகவும்,ஆகமமாகவும், திருமுறைகளாகவும் நின்று அண்ணிக்கும்  பரம்பொருளை இறைஞ்சுவோமாக.

— சிவபாதசேகரன்

Posted in General, General | Leave a comment

பஞ்ச கவ்யம்

பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக் குறிக்கும்.

காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என்ற மந்திரத்தால் கோ மயத்தையும், ஆப்யாஸ்வ மந்திரம் சொல்லி பசும் பாலையும், ததிக் ரா வண்ண என்ற ரிக்கால் பசும் தயிரையும் சுக்ரம ஸி என்ற மந்த்ரத்தால் பசு நெய்யையும் தேவஸ் யத்வா மந்ரத்தால் தர்பை சேர்க்கப்பட்ட நீரையும் ஒரே கிண்ணத்தில் கீழ்க்கண்ட அளவுப்படி சேர்க்க வேண்டும் :

கோமயாத த்விகுணம் மூத்ரம் மூத்ராத் ஸர் பி சதுர் குணம் I ததி பஞ்சகுணம் ப்ரோக்தம் ஷீ ரம் அஷ்ட குணம் ததா II

என்றபடி, கோமயத்தை( பசும் சாணியை) விட இரண்டு பங்கு கோ மூத்ரமும், அதைவிட நான்கு பங்கு பசு நெய்யும் , நெய்யைவிட ஐந்து பங்கு பசும் தயிரும, தயிரை விட எட்டு பங்கு பசும்பாலு ம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கலந்த பஞ்ச கவ்யம் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும.

இதனை காலையில் வெறும் வயிற்றில் உட் கொண்டால் பாவ வினைகள் நீங்கி உடல் தூய்மை பெறலாம்.

நன்றி: வைதீக ஸ்ரீ ஜூன் 2020 இதழிலிருந்து.

Posted in Temple Rituals | 1 Comment

ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

சிவபாதசேகரன், சென்னை

 

ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை” என்கிறது அப்பர் தேவாரம். தாருகாவனத்தில் கஜாசுரனை யானை வடிவில் ஆபிசார ஹோமம் மூலம் ஏவிவிட்ட யானையை அடக்கிக் க்ருத்திவாசனாக அந்த யானையின் தலை மீது வீர தாண்டவம் ஆடிய பின்னர், அம்முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்து அருளியதாகப் புராணம் கூறும். ஞானமே முக்திக்கு எதுவாகிறபடியால் அதனை ஈசுவரனே அருளியதாக , “ முத்தியும் ஞானமும் முறை முறை பலபல நெறிகளும் காட்டி “ என்று பாடுவார் சுந்தரர்.

ஞானம் இருக்கும் இடத்தில் அமானுஷ்ய சக்தி தானே வந்துவிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் சமண மதமும் புத்த மதமும் மேலோங்கியிருந்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் திறன் படைத்த புத்திரன் தமக்கு வேண்டும் என்று சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் பரமசிவனை நோக்கித் தவம் செய்தார். அத்தவத்தின் பலனாக , வேத-சைவநெறிகள் மீண்டும் தழைத்து ஓங்குமாறு சீர்காழிப் பிள்ளையார் திரு அவதாரம் செய்தருளினார். தந்தையுடன் ஆலயக் குளக்கரையில் பசி மேலிட்டு  தோணியப்பரின் விமானத்தை நோக்கி “ அம்மே,அப்பா “ என்று குழந்தை அழுதபோது உமாதேவியுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளி, அப் பாலகனுக்குப் பாலளித்து வருமாறு தேவியிடம் கூறவே, அம்பிகையும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்துப் பொற்கிண்ணத்தில் சிவஞானம் கலந்த திருமுலைப்பாலைத் தந்தருளினாள். சிவஞானம் உண்டதால் அப்போதே அக்குழந்தை சிவஞானசம்பந்தர் ஆகி, தனக்குப் பால் தந்தருளிய அம்மையப்பர்களைத் தந்தைக்குக் காட்டி, “ தோடுடைய செவியன் “ எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் அருளிச் செய்தார். ஞானம் உண்டதால் எல்லாக் கலைகளும் கைவரப்பெற்றார் ஞான சம்பந்தர்.

உபநயன காலத்தில் வந்திருந்த அந்தணர்களுக்கு, நால் வேதங்களின் உட்பொருள் பஞ்சாக்ஷரமே என்று பதிகம் பாடினார். “ நான் மறை கற்றவன் “ என்று அவர் தம்மை சொல்லிக் கொண்டாலும், நான்மறைகள் தாமாகவே அவரிடம் சென்று அடைந்தன என்பதே உண்மை. பதினாறே ஆண்டுகள் இந்நிலவுலகத்தில் வாழ்ந்து சிவத்தல யாத்திரைகள் செய்து தேவாரப் பதிகங்கள் அருளியுள்ளதால் அப்பனுவல்கள் வேத சாரமாகவே ஆயின. எனவே இவரை, “ வேத வாயர் “ “ ஞான மா முனிவர் “ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். வேத வாக்கானது மெய்ம் மொழி என்பதால், இவரது ஞான மயமான பனுவல்களும் பொய்யா மொழி ஆயின. அவற்றைப் பாராயணம் செய்வோர் அடையும் பலனை ஆணையிட்டுக் கூறுகிறார் ஞான சம்பந்தர்.

சம்பந்தர் தேவாரம் முழுதுமே ஞானம் கலந்த தேனாகச் சுவைக்க வல்லவை. பண்ணும்,தாளமும் கொண்ட இசைப்பனுவல்கள் அவை. இன்றைய காலத்திலும் வேண்டுவார் வேண்டியதை அருள வல்ல மந்திர மறை அப்பனுவல்கள். இடம் கருதி அவரது ஒரு பதிகத்தையாவது இங்கு சிந்திப்போமாக.

அப்பதிகமாவது திருவாவடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் மீது பாடப் பெற்றது. திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்த காலத்தில் அவரது தகப்பனார் சீர்காழியிலிருந்து புறப்பட்டுவந்து தனது மகனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். சீர்காழியில் தாம் ஒரு சிவ யாகம் செய்வதால்  அதற்குப் பொருள் வேண்டும் என்பதே அவ்விண்ணப்பம்.

தந்தையின் விருப்பத்திற்கிணங்கிய சம்பந்தர் அப்போது திருவாவடுதுறைப் பெருமானை நோக்கிப் பாடியருளிய பதிகம் அற்புதமானது. இறைவன் அருளால் ஒரு பூத கணம் மூலமாக ஆயிரம் பொன் பெற்றார் என்பது வரலாறு. அப்பதிகம் நமக்கு உணர்த்தும் கருத்துக்கள் ஒப்புயர்வற்றவை.

நமக்குத் துன்பம் வந்தாலும், பிணியினால் உபாதை  தொடர்ந்தாலும், இறைவனை விடாப்பிடியாகப் பற்றாமல் மேலெழுந்தவாரியாக நினைக்கிறோம் அல்லவா? ஆனால் இத்தருணங்களில் பெருமானின் திருவடிகளை மறவேன் என்கிறார் சம்பந்தர்:

“ இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்” என்பது அவ்வுயர்ந்த கருத்து.

வாழ்க்கையில் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் இறைவனது நினைப்பு நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது ?  ஆனால் சம்பந்தரோ, “ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன் “ என்கிறார்.

வழிபாடு என்பது இரு சில மணித் துளிகள் மட்டுமல்லாமல் இமைப்பொழுதும் இறைவனை நெஞ்சை விட்டு நீங்காதபடி நினைத்திருத்தலாகும் என்பதை, “ நனவினும் கனவிலும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் “ என்பதால் அறியலாம்.

நோய்கள் பலவிதம். தும்மல்,இருமல் போன்றவை தொடர்ந்தால் ஏற்படும் தொல்லை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். “ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பதால், அந்நிலையிலும் தளராமல் சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர வைத்தருளுவார்.

கையிலுள்ள செல்வம் யாவும் இழந்த நிலையிலும் அதற்கு அஞ்சாமல் இறைவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை, “ கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் “ என்று வலியுறுத்துகிறார்.

உண்ணும்போதும்,பசித்திருந்தாலும் உறங்கினாலும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதை, “ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடியலால் சிந்தை செய்யேன்” என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தர்.

சித்த சுவாதீனம் உள்ளவர்களே இறைவனை நினையாமல் இருக்கையில், அதனை இழந்தவர்கள் எவ்வாறு நினைக்கக் கூடும் ? ஆனால் பித்துப் பிடித்துத் திரிந்தாலும் தீராத நோய் வந்தாலும் உன் பாதங்களை மறவேன் என்கிறார் சம்பந்தர். “ பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பன அவ்வுயர்ந்த வரிகள்.

இப்பதிகத்தை நாள் தோறும் பாராயணம் செய்து அருள் பெறுவோர் பலர் இன்றும் இருக்கிறார்கள். இதுபோன்ற திருப்பதிகங்கள் தேவாரம் முழுதும் விரவி உள்ளன. பாராயணம் செய்வதற்கு நாம் பேறு பெற்றிருக்க வேண்டும்.

****************************

Posted in Latest News | Leave a comment

அகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள்

திருக் கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கி (ஐயர் மலை), திரு ஈங்கோய் மலை ஸ்தல மகாத்மியங்கள் 

                                                                   முன்னுரை

சிவபாதசேகரன்

                                                             சிவபாதசேகரன் 

                       திருவாதிரையான் திருவருட் சபை,சென்னை

திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அற்புதமான சிவஸ்தலங்கள் மூன்றை நாம் இப்போது சிந்திக்குமாறு திருவருள் கூட்டியுள்ளது. அம்மூன்றின் பெயர்களை நாவினால் உச்சரித்தல் சிறந்த சிவபுண்ணியத்தைத் தரும். நேரில் சென்று தரிசிப்பவர்கள் பெறும் பயன் அளவிட முடியாதது. அம மூன்று தலங்களாவன, கடம்பந்துறை ( குளித்தலை), திருவாட்போக்கி ( ஐயர் மலை ), மற்றும் திரு ஈங்கோய் மலை என்பனவாம். ஒரே நாளில் காலையில் கடம்பந்துறையையும் , உச்சி வேளையில் ஐயர் மலை எனப்படும் வாட்போக்கியையும், மாலையில் திரு ஈங்கோய் மலையையும் தரிசிக்க வேண்டும்.மூன்றுமே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் கடம்பந்துறையும், வாட்போக்கியும் காவிரியின் தென்கரையிலும்,ஈங்கோய் மலை வடகரையிலும் அமைந்துள்ளன.

இம்மூன்று தலங்களின் மான்மியங்களைப் பற்றிய சிறு நூல் ஒன்று நம் கைவசம் இருந்த போதிலும் தலங்களை நேரில் சென்று தரிசித்த பிறகே அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் காலம் தாழ்த்த வேண்டியிருந்தது. இத்தலங்களை இரண்டாவது முறையாகத் தரிசித்த பிறகே எழுதும் ஆவல் மேலோங்கியது. அப்புத்தகம் 1891 ம் ஆண்டே வெளியிடப்பட்டதால், தற்போது பக்கங்களைத் திருப்பினால் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்று தலங்களுக்கும் வடமொழியில் புராணம் இருந்ததாகவும், அதனை சிதம்பரம் பிரமஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்த்ரி என்பவரைக் கொண்டு வடமொழியில் அச்சிட்டதாகவும், பின்னர் மேற்படி சாஸ்த்ரி அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து, பதிப்பித்ததாகவும் அந்நூலில் காணப்படுகிறது.

                                                           கடம்பந்துறை

                    ( குளித்தலை என்று வழங்கப்படுகிறது ):

                                               20180217_080704

இருப்பிடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35 கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு.

புராணச் செய்திகள்:
நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டு                              இருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான்.

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை அவனது முடி மேல் வைத்து, ” காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக ” என்று அருளி, அம்மகாலிங்கத்தில் மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான்.

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள் சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக் கடம்பவனத்தை அடைந்தவுடன் அத்தோஷம் அவர்களை நீங்கியது.

ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, ” இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு ” என்கிறார்களே, அதன் மகிமையைத் தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார்.
கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது. அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீ ரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள்.

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, ” முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் ” என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.

முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதருக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இமையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.

சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெரும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம்.

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும் பாவ நிவர்த்தி பெறுகிறான்.

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதாயுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: ” விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத் தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம்.

இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் ” என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.

தலப் பாடல்கள் சில:
பண்ணின் மொழி கேட்கும் பரமனை
வண்ண நன் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் ; கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
                                               — திருநாவுக்கரசர் தேவாரம்

அழுகு திரிகுரம்பை ஆங்கு அதுவிட்டு ஆவி
ஒழுகும் பொழுது அறிய வொண்ணா — கழுகு
கழித்து உண்டு அலையா முன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு. 

                                             — ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் பாடியுள்ளார்.

****************
                                          திருவாட்போக்கி (ஐயர் மலை)

20180217_090404

 இரத்தினகிரி என்னும் ஐயர் மலை குளித்தலைக்கு அருகிலுள்ள சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து 1178 அடிகள் உயரத்தில் உள்ள சிவாலயத்தை அடைய 1017 படிகள் ஏறவேண்டும். வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் ரத்னகிரீசுவரரின் ஆலயத்தை அடையலாம். திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் பெற்ற இத்தலம் மிகவும் பழைமை வாய்ந்தது. சோழ,பாண்டிய,சாளுக்கிய,விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் சுமார் 50 உள்ளன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை வழியாக ஐயர் மலையை அடையலாம். மலைக் கோயிலாக இருப்பதால் காலை பத்து மணிக்கு மேல் தான் திறக்கிறார்கள். உச்சிக்கால பூஜை விசேஷமாகக் கருதப்படுவதால் அந்த நேரத்தில்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள்.

20180217_090244
தல வரலாறு:
ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக்கொண்டிருக்கும்போது, தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், ” முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் ” என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், ” யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் ” என்றார்.

20180217_090647

” பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தலம் உள்ளது. அங்கு வில்வ மர நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது. காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு, நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் ” என்றார்.

” இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதினாறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான்.

20180217_093339

பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தலத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய் எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணங்கித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சக்ஷர  ஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். ”

அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கி தினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி அவனுக்குக் காட்சி அளித்தார்.

ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகம்  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார்.

“தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை,சோமவாரம்,ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில் ” ஆயாகி ” என்னும்மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும்.

இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள் கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குப வர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக் குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்.”

நைமிசாரண்ய முனிவர்கள் கேட்குமாறு சூத மாமுனிவர் கூறலுற்றார்: ” முன்னாளில் வாயு பகவான் தன் வலிமையால் மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கிய குற்றம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.  “தபோவாய ” என்று தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தபடி வாயு தீர்த்தத்தில் நீராடி, சிவபிரானையும்,தேவியையும் வழிபட்டு வந்தான். அவ்வாறு வழிபட்டது துலா மாத பௌர்ணமி தினமாகும். ஒருநாள் பூஜை முடிவில் கைகளைச் சிரத்தின் மீது கூப்பியவாறு, ஆனந்தக்கண்ணீர் மல்க, ” தேவேச சம்போ, கங்காதரா,சங்கரா, தேவரீரது திருவடிகளை ஒருபோதும் மறவேன். வேதப்பொருளே, க்ஷேத்ரங்களுக்கு அதிபதீ , எனது பிழை பொறுத்து நற்கதி தர வேண்டும் ” என்று பிரார்த்தித்தான். அவனது பக்திக்கு இரங்கிய பெருமானும் உமாதேவியுடன் காட்சி அளித்து, வாயு தேவன் உலகெங்கும் வியாபித்து, ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன் ,தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார். ஐப்பசிப் பூரணையில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார்.

வாயு பகவான் பழி நீங்கப்பெற்ற வரலாற்றை நாரத முனிவர் மூலம் அறிந்த ஆதிசேஷன், தானும் மேருவை அசைத்த குற்றத்தில் ஈடுபட்ட பாவம் நீங்குமாறு, பூலோகத்தை அடைந்து, மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம்,பிரபாசம்,அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம் ,கேரள நாட்டைச் சார்ந்த சகிய மலை,ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம்,தர்மேசுவரம், வியாசாசிரமம்,சுசீந்திரம் , அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம் , அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் இரத்தினகிரியை அடைந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த வியாசர்,அத்திரி, பாரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர்,மயூரமுகர், ஆகிய முனிவர்களை வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன பெயரால் ஒரு தடாகத்தையும் ஏற்படுத்தி, ” நமோஸ்து ஸர்பேப்யோ ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, தீர்த்தத்தின் நடுவில் சங்கநிதி முதலாகிய நதிகளை ஆவாகித்து, “ப்ரம்மஜக்ஞானம் : எனத் துவங்கும் மந்திரத்தையும், பஞ்சாக்ஷரத்தையும் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து, சூரியன் ஸ்தாபித்த கங்காசல தீர்த்தத்தில் நூற்றெட்டுக் குடங்கள் கொண்டுவந்து பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை,நிவேதனம் ஆகியன செய்து, பலமுறை நமஸ்கரித்து கரங்களைக் கூப்பியவாறு, ” உலக நாயகனே, யானை உரி போர்த்த பரம்பொருளே, பிறை சூடிய பெருமானே, அர்த்தநாரீசப் பெருமானே, சிறியேனது குற்றம் பொறுத்தருளுவீராக. ” என்று பிரார்த்தனைகள் செய்தான். இதனால் மகிழ்ந்த ஈசனும், ” ஆதிசேஷனே, உனது குற்றத்தை நாம் நீக்கி அருளினோம். நீ பரிசுத்தனாவாய் ” எனத் திருவாய் மலர்ந்து அருளினார்.

சூதர் மேலும் கூறினார் ” சிவத்துரோகமானது இத்தலத்தில் மாத்திரமே நீங்கும். மந்திரங்களில் காயத்திரி போன்று , மேருவின் ஐந்து முடிகளுள் இரத்தினகிரி சிறந்ததாகும். பிற இடங்களில் செய்த பாவங்கள் இங்கு வந்தால் நீங்கும். ஆனால் இங்கு செய்யும் பாவம் இங்கு மட்டுமே நீங்கும். இங்கு நந்தவனம் அமைப்போரும், விளக்கிடுவோரும், சிவசாரூப்பியம் பெறுவர். இத்தலத்தைச் சிந்தித்தாலே,முக்தி பெறலாம். புரட்டாசி சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் நாக தீர்த்தமாடினால் சிவாபராதம் நீங்கலாம். சூரிய கிரகண காலத்தில் சூரிய புஷ்கரணியில் ஸ்நானம் செய்தால் குஷ்டம்,அபஸ்மாரம் போன்ற நோய்கள் நீங்கும். இங்கு தில தர்ப்பணம் செய்தால் நீண்ட காலம் கயிலையில் வாழலாம் .” என்றார்.

உதயாசலம் அருகில் மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை. அசரீரி வாக்கின்படி, தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச் சென்று வழிபட வேண்டி, அசனி என்பவனை சூரியன் அங்கு அனுப்பித் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சுவாமிக்கு பூஜைகள் நடத்துவித்தான். அதற்கு மகிழ்ந்த இறைவனும், அவ்வரக்கர்களை வெல்லும் வலிமையை சூரியனுக்கு அளித்தருளினார். சூரியனால் உண்டாக்கப்பெற்ற சூரிய தீர்த்தத்தில் சித்திரை பௌர்ணமியன்று காலையில் ” சசித்திரம் ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம். அந்த தினத்தில் சூரியன் உச்சி வேளையில் சுவாமியை பூஜை செய்வது ஆண்டு தோறும் நடை பெறுகிறது. சூரியதீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தால் எல்லா நலன்களும் பெற்று இறுதியில் சிவபிரானது திருவடி நீழலை அடையலாம். அயனம்,விஷு, கிரகண புண்ணிய காலங்களில் இதில் நீராடினாலும் சிவ சன்னதியில் தூப தீபம் இட்டாலும் எல்லா ஐசுவர்யங்களையும் பெறலாம். அங்கு செய்யப்படும் பித்ரு காரியங்களால் பித்ருக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்பா பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தளங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைதரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர் பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிறேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிறேதத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுகே கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது. கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை இடைவிடாமல் சூரிய அஸ்தமனத்திளிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ” கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம்,நமஸ்காரம். ” என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, ” பிரபோ, வேத ரகசியமான ஸ்ரீ பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். ” என்று பிரார்த்தனை செய்தார்.

அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார். பின்னர் பெருமானை வணங்கி, ” தேவரீர் மத்தியான காலத்தில் அடியேனுக்குத் தரிசனனம் தந்ததால் தங்களுக்கு மத்தியான சுந்தரர் என்ற திருநாமம் வழங்கப்பெற வேண்டும். இன்று முதல் பகலில் தரிசனம் செய்வோர் முக்தி பெற வேண்டும். ” என்ற வரம் வேண்டவே சுவாமியும் அவ்வாறே ஆகுக என வரமளித்தருளினார். கார்த்திகை ஞாயிறுகளில் அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, ” உதித்தம் ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தால் கொடு நோய்கள் அனைத்தும் நீங்கும். அம்மாதத்து செவ்வைக் கிழமைகளில் உதயத்தில் கோமயத்தைச் சிரச்த்திளிட்டு, : “அக்கினி முர்தா ” என்ற மந்திரத்தை உச்சரித்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் வறுமை நீங்கிப் பெரும் செல்வம் பெறலாம்.
வீரசேனன் என்ற சூரிய குலத்து அரசன் செங்கோல் செலுத்தி வந்த காலத்தில் அவனைக் காண ஒரு கபாலிகன் வந்தான். அரசனை உலோகாயுத மார்க்கத்தில் செலுத்தினான். அதன் விளைவாக வைதீகர்களையும்,அறிவுரை சொல்லும் மந்திரிககையும் புறக்கணித்தும்,ஆலய பூஜைகள் நடத்தத் தவறியும் அக்கிரமங்கள் செய்ததால் நாட்டில் மழை பெய்யவில்லை.

வேதங்களும்,சத்தியமும், தவமும், அச்சமும்,கற்பும் இருந்தால் தானே நாடு வளமடையும் ! இறைவனது பூஜை இல்லா து போகவே நாடு சுடுகாடு போல் ஆயிற்று. அரசனும் சின்னாட்களில் நோயால் வருந்தி இறந்தொழிந்தான். அவனை யமதூதர்கள் யமனது சொற்படி நரகத்தில் தள்ளினார்கள். அதன்பிறகு கண்டோர் அஞ்சும்படிப் பிரேத வடிவில் விந்திய மலையில் பசியோடு கிடந்தான்.

தனது தீவினையால் இது விளைந்ததே என துக்கப்பட்டான். அப்போது அங்கு உரோமச முனிவர் வருகை தந்தார். அவரைக் கொன்று தின்னும் எண்ணத்துடன் அவரை நோக்கி விரைந்து ஓடினான். ஆனால் முனிவரது தவத் தீ அவனை அருகில் செல்ல முடியாதபடி தடுத்தது. பிழைக்கு வருந்திய அவன்பால் கருணை கொண்ட முனிவர், ” கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய் ” என்றார். அதன்படி அவனும் அங்கு சென்று உரோமச தீர்த்தத்தில் மூழ்கி, ” யோ ப்ரம்ம ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தான். பின்னர் இரத்தினாசலப் பெருமானையும், சுரும்பார்குழலி அம்பிகையையும் தரிசித்தான். நிவேதனங்கள் செய்து, உள்ளன்புடன் பஞ்சாக்ஷர ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு இரங்கிய இறைவன், அவன் முன்னே காட்சி அளித்தருளினார். உடனே மன்மதனுக்குஒப்பான சரீரம் பெற்றான். அதுமுதல் அந்த தீர்த்தம் பிரேத மோக்ஷ தீர்த்தம் எனப்பட்டது. இதில் ஸ்நானம் செய்தால் பிரேதத்தன்மை ஒருபோதும் ஏற்படாது. அவனது வம்சத்தவர்களும் மோக்ஷம் பெறுவர்.

பாரத்வாஜ முனிவரும் இங்குத் தவம் செய்து தீர்த்தம் உண்டாக்கினார். வராக வடிவெடுத்த விஷ்ணுவும் அக்னி திசையில் தீர்த்தம் ஏற்படுத்தினார். அந்த விஷு தீர்த்தத்தில் ” விஷ்ணோர் லலாட ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்பவரது பிருக்கள் திருப்தி அடைவார்கள்.

இம்மலையின் வடபுறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள் ,மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள் . மகா நவமியில் அதில் நீராடினால் சர்வ சித்தி உண்டாகும். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் வாட் போக்கி என்று பெயர் வந்தது என்று கூறுவதும் உண்டு.

ஆரிய தேசத்து மன்னன் ஒருவன் தனது மணிமுடி காணாமல் போகவே அதைத் தேடிப் பல ஊர்களுக்கும் போய்விட்டு முடிவாக இங்கு வந்தான். அப்போது வயதான வேதியன் ஒருவன் இரத்தினகிரிப் பெருமானிடம் அது இருக்கிறது எனக் கூற, மன்னனும் மலை மீதேறி சன்னதியை அடைந்தான். அப்போது ஒரு அந்தணன் வடிவில் தோன்றிய இறைவன், காவிரி நீரால் இங்குள்ள கொப்பரையை நிரப்பினால் மணி முடி கிடைக்கும் என்று கூறவே அவ்வாறு செய்யலானான். ஆனால் எவ்வளவு முயன்றும் கொப்பரை நிரம்பவில்லை. கோபமுற்ற மன்னன் அவ்வந்தணன் மீது வாளை வீசவே, அந்தணன் சிவலிங்கத்தில் மறைந்து விட்டான். இலிங்கமூர்த்தியில் இருந்து இரத்தம் பெருகியதைக் கண்ட மன்னன் வாளால் தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அப்போது இறைவன் அங்குத் தோன்றி அரசனது வாளை விலக்கி (போக்கி )மணிமுடியைத் தந்து அருளினான். இதனால் ஏற்பட்ட தழும்பு சுவாமியின் திருமுடியில் இன்றும் உள்ளது. ஆரிய மன்னனின் உருவச் சிலையையும் கோயிலில் காணலாம்.

காஞ்சியைச் சேர்ந்த ஆயர் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன் தன் தலையைக் காணிக்கையாக்கினார். அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இவரது சன்னதியும் அதனருகில் வேப்ப மரமும் உள்ளன. மலைக்காவல் தெய்வமான இவருக்கு இரத்தினகிரீசுவரருக்குத் தீபாராதனை ஆனவுடன், தீபாராதனை செய்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பசும் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒருநாள் அப்பால் குடத்தை ஒரு காக்கை கவிழ்த்து விடவே, இந்த இடையர் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அப்போது இறைவன் அங்குத் தோன்றி, ” அன்பனே, வருந்த வேண்டாம். இம்மலை எனது வடிவே யாகும். அதன் மீது சிந்திய பால் என்னை அபிஷேகித்தது போலாகும் ” என்றருளி அக்காக்கையை எரித்தார். அது முதல் இங்குக் காக்கைகள் பறப்பதில்லை. காகம் அணுகா மலை என்றும் பெயர் வந்தது.
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை முழுவதும் மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அப்பாறை, ” பொன்னிடும் பாறை ” எனப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது

துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர்.

பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர்.

20180217_104527

மன்னர் வழிபட்டதால் சுவாமிக்கு இராஜ லிங்க மூர்த்தி எனப் பெயர் வந்தது. இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறாது என்பர். வறண்ட காலங்களில் சகுனக் குன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்வதாகக் கூறுவர்.
ஒவ்வொரு நாளும் 8 கி,மீ. தொலைவிலுள்ள காவிரி ஆற்று நீரைக் குடங்களில் நிரப்பித் தலை மீது சுமந்து வருகின்றனர் பன்னிரண்டாம் செட்டியார் மற்றும் சோழிய வெள்ளாளர் மரபினர்.

சிவலிங்கப்பெருமான் மீது அபிஷேகித்த பால் சில மணிகளில் தயிராக மாறி விடுகிறது. பிற தெய்வங்களுக்கு அபிஷேகிக்கப்படும் பால் அவ்வாறு தயிராவதில்லை.
சித்திரையில் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள நவத் துவாரங்கள் வழியாக சூரியன் தனது கிரணங்களால் பெருமானை வழிபடுகின்றான்.

மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்தஇந்த கிரியை வலம் செய்கின்றனர். . அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது.

                   திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசல மகாத்மியம்

20180218_100223

தலத்தின் இருப்பிடம்: திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கில் சுமார் 40
கி.மீ. தொலைவில் நாமக்கல் சாலையில் முசிறிக்கு அருகில்
காவிரியின் வடகரையில் உள்ளது  திரு ஈங்கோய் மலை என்னும்
தலம். திருஞானசம்பந்தராலும், நக்கீரராலும் பாடப்பெற்ற 
இத்தலத்தில் மாலையில்  வழிபாடு செய்வது சிறப்புடையது
என்பர்.

தல வரலாறு:
தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார  முனிவர்,
ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , ” தாங்கள் முன்பு
ஒருமுறை  மரகதாசல மகிமை பற்றிச் சுருங்கக் கூறி 
அருளியுள்ளீர்கள். தற்போது அதனை  விரிவாகக் கூறி 
அருளவேண்டும் ” என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான்  அத்தலப் பெருமையை  விரிவாகக்கூறியருளினார்.

முன்பொருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள்
யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்பொழுது 
ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு
மலையைச் சுற்றிக்கொண்டு , வாயுவைச் செல்ல முடியாைமல்
தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற  இடங்களில் உயிர்கள் மடியத்
தொடங்கின. தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய
ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு
செல்லும்படி வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு
வேகத்தோடு , அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள்
ஐந்தைப் பிடுங்கியவாறு தென்தி நோக்கிச் சென்றான் .
அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின.
அவற்றுள் ஒன்ரே மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின்
அம்சமாகப் புளியமரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும்
கூறுவர். பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப்  பூஜித்து
 சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான்.விஷ்ணுவும் இப் பெருமானை  வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும்  அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை , ரோமச ரிஷி
ஆகியோரும் நற்கதி பெற்றுள்ளனர்.

20180218_101943

பிரமன் வழிபட்டது : தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க
வேண்டி, கிருத யுகத்தில் பிரம தேவன் இத் தலத்தை  அடைந்து
பிரம  தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம  ஞானம் எனத் தொடங்கும்
மந்திரத்தை  ஜபித்தவனாக அதில் ஸ்நானம் பசய்து, திருப் புளிய
மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப்பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தானங்களின் 
பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள் இம்மை
மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர். இங்கு
சிவராத்திரி தினத்தில் பிரம  தீர்த்த ஸ்நானம் செய்து நறு
மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை  அர்ச்சித்தால், பிற 
தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு
ஒப்பாகும். புளியடியையும் பெருமானையும் ஒருங்கே  வலம்
வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள்.

முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள் . இங்கு  செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச்
செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளியவிருக்ஷத்தை  நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும். ஒ சனற்குமார  முனிவரே  ! இத்தலத்தை  நினைத்த நீரும்,அதன் மகிமைமயப் பகர்ந்த யானும் பாக்கிய சாலிகள் ஆனோம்.மறைகளின் முடிவாகவும், முக்தி தரவல்ல புண்ணிய
மூர்த்தியாகவும், கற்பகக் கொழுந்தாகவும் அடியார்கள் பொருட்டு நின்மலனாகிய பரமேசுவரன் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.” என்று நந்தியெம்பெருமான்  அருளிச் செய்தார்.

உமை வாம  பாகம் பெற்றது : .ஒரு காலத்தில், பிருங்கி
ரிஷியானவர் அம்பிகையைத் துதியாைமல் சிவனை  மட்டுமே 
துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை ,
மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப்
பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள்.
கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி ,
அவள் வேண்டியபடியே  தனது நீங்காத பாகமாக  ஏற்றதால்
அர்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும்
அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம்
வரவே , தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும்
சக்தியை  இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் ,தண்டம் போன்ற 
கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.

இத்தலம் போக -மோக்ஷங்களைத்  தரவல்லது.. கார்த்திகை  சுக்கிர
வாரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயாசான்னம் தானம்
செய்தால் , துன்பங்கள் எல்லாம் நீங்கும். நவராத்திரியின் போது
வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின்
பாதங்களை  அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள்.
இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில்
உயர்ந்தவனாவான். பெருமானையும் பெருமாட்டியையும் 
நியமத்துடன் வழிபட்டால், தம் பித்ருக்களுடன் சிவலோகத்தை 
அடையலாம். எனவே ,இத்தலப் பெருமையை அளவிட்டுச்
சொல்வது அரிது.

20180218_103558

அகத்தியர் வழிபட்டது :முனிவர்களால் வணங்கப்பெறும்
அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்கலோடு ஒரு
சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல்
திருவிராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது
வழியில் கடம்பவனத்மத அடைந்து காவிரியிலிருந்து
பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு
அபிபஷகம் செய்து,மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.
பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று,சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை  மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து,    மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேத கீதங்களால் துதித்து,ஆலயத்தை  மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார்.

மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து,
மரகதாசலத்தை  அடைந்தார். அந்த  வேளையில் கோயில்
அர்ச்சகர்கள் பூஜையை  முடித்துக் கொண்டு ,  ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர்,இறைவனைத் தரிசிக்க முடியாைல் போனது பற்றி  மிக்க வருத்தம் அடைந்தார். அப்போது  ஒரு அசரீரி  வாக்கு ஒலித்தது: “மா பாதகங்களையும் தீர்த்து அருள் புரியும் இம் மலையை அடைந்த பிறகும்  ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள்,மிருகங்கள் ஆகியவை  எந்தக் காலத்தில்இங்கு வந்தாலும் குற்றமில்லை . அவற்றிலும், காற்று,ஈ, பசு, அக்கினி, நெய் , நெல், யோகி ,அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும் அசுத்தமாவதில்லை.ஆகவே  நீ இப்போது ஈ உருவில் உள்ளே  சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால் அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறத்தில்  சர்ப்ப நதி வடிவில் இருக்கிறான் .  அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவதோடு மீண்டும் பழைய உருவையும் பெறுவார்கள். ஆகவே  நீ அத்தீர்த்தத்தை  நாடிச் சென்றால்  உன் கருத்து நிறைவேறும் ” என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர்,  இறைவனைத் துதித்தார். பெருமானது கருமணயினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக ஆகிக் காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில் ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறவேண்டி 
அகத்தியர் ஸ்நானம் செய்தவுடன் ஈயுருவம் பெற்றார்.
இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத்
தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார்.
பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன்
முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம்
சென்றடைந்தார் . அது முதல் இம் மலை, ஈங்கோய் மலை  எனப்
பெயர் பெற்றது. வைகாசி மாதப் பௌர்ணமியில் அகத்தியர் சித்திகள் பெற்றதால், அவ்வாறு அந்தநாளில் சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்து இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள்
நீங்கப் பெற்று, விரும்பிய சித்திகள் அனைத்தும் கைகூடும்.

வீதி ஹோத்திரன் முக்தி பெற்றது  : கிருத யுகத்தில் நர்மதை  நதி
தீரத்தில் அக்னிசர்மா  என்ற அந்தணர் சிவபிரானை  விதிப்படி
வழிபாட்டு வந்தார். அவருக்கு வ ீவீதிஹோத்திரன்,தூமகந்தன்,
மேதாவி ஆகிய மூன்று சீடர்கள் இருந்தனர். ஒருநாள்
அக்னிசர்மா ,வீதிஹோத்திரனை அழைத்து ” இன்று நான்
செய்யவிருக்கும் பிதுர் சிரார்தத்திற்குத் தேவையான பாலைக்
கொண்டு வருவாயாக ” என்றார்.வீதிஹோத்திரனும்  தனது
வீட்டிற்குச் சென்று தர்மகேது  என்னும் தனது தந்தையிடம் இது
பற்றிக் கூறினான். பிதாவானவர் வீட்டிலிருந்த பாலைக் குடத்தில்
நிரப்பி, ஆசிரியரிடம் கொடுக்குமாறு கூறினார். அக்குடத்தை 
எடுத்துச் செல்லும் வழியில் பசி மிகுந்ததால் வீதிஹோத்திரன்
குடத்திலிருந்த பாலை  ஒரு படி அளவு எடுத்துக் குடித்துவிட்டு
மீண்டும் குடத்தை  நீரால் நிரப்பிக் கொண்டு ஆசிரியரிடம்
சென்றான். இவனது செயலை  ஞானத்தால் அறிந்த ஆசிரியர்,
பிதுர் சிரார்தத்திற்குப் பழுது ஏற்பட்டதைக் கண்டு சினந்தவராக,
வீதிஹோத்திரனைப் பிசாசாக அலையுமாறு சபித்து விட்டு வேறு
பால் கொண்டு வந்து பிதுர் காரியத்தைச் செய்தார். 

பிசாசாகப் பலவிடங்களிலும் அமலந்த வ ீவீதிஹோத்திரனைக்
கண்ட கோபில முனிவர் அவனுக்கு இரங்கி, ” மிகக்
கொடியதான குருத் துரோகத்தை நீக்க வல்லது மரகதாசலம்
மட்டுமே ஆகும். எனவே  என்னோடு  அங்கு சென்று அங்குள்ள
சுதா புஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப்பெறுவாய்” என்றார்.
பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து எழுந்த திவலை 
இங்கு வந்து விழுந்த வேகத்தால் இத்தீர்த்தம் உண்டாயிற்று
கோபில முனிவரும் அவநை மரகதாசலத்திற்கு அமழத்துச்
சென்று சர்ப்ப நதி சங்கமத்திலும் சுதா புஷ்கரணியிலும் நீராடச்
செய்தவுடன் வீதிஹோத்திரனது பாவம் நீங்கியது. இத்தீர்த்தத்தை 
நினைப்பது  தவமாகும் . மார்கழியில் பௌர்ணமியும் திருவாதிரை நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் இதில் நீராடினால்
நற்பலன்கள் வாய்க்கும். இச்சரிதத்தைப் படிப்பவரும் கேட்பவரும்
பாவம் நீங்கப்பெற்றுச் சிவனருள் பெறுவர் .

தீர்த்தச் சிறப்பு ; தேவர்களும் அசுரர்களும் பாற்கதலைக் கடைந்தபோது  ஐராவதம், கற்பக விருக்ஷம்,காமதேனு , உச்சி
சிரவம், சிந்தாமணி ,மகாலக்ஷ்மி  ,அமிர்தம் ஆகியவை 
தோன்றின . ஆலகாலவிஷம் வெளிப்பட்டபோது  அனைவரும்
அஞ்சி ஓடிக் கயிலை  நாதனைச் சரண்  அடைந்தனர்.
உமாபதியான பரமேசுவரன் அனைவரிடமும் கருமண கூர்ந்து,
அவ்விஷத்தை  அருந்தி, கண்டத்தில் இருத்தி, நீலகண்டரானார்.
எழுந்த அமுதம் சிறு திவலைகளாகப் பல இடங்களில்
சிதறியபோது , ஒரு திவலை,மரகதமலையின்  வடபாகம் வந்து
வீ ழ்ந்தது. இப்புஷ்கரணியின் ஒரு துளி பட்டவுடன்  இறந்த
மிருகங்களும் ,பறவைகளும்கூட உயிர் பெற்றன . இத்தீர்த்தத்தை 
உட்கொண்டால் எல்லாவித விஷங்களும் நீங்கும். பிறவித்
துயரும் நீங்கும். இயமனும் இவ்விடத்தில் பொன்னி நதியின்
வடபுறம்  தீர்த்தம் அமைத்தான். அதில் மார்கழி மாத மங்கள 
வாரத்தில் நீராடினால் பிறவித்துயர் நீங்கும். பித்ருக்கள் மகிழ்வர்.
தீர்த்தக்கரையில் செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலன்
கொடுக்கும். அங்கு கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் மாக
மாத பௌர்ணமி  ஸ்நான விசேஷம் உடையது. 

வைகாசி பிரமோற்சவத்தில் சித்திரை  நக்ஷத்திரத்தில் நடை பெறும் தேர்த் திருவிழாவைக் காண்போர் பெரும் பலனை 
எவ்விதம் சொல்ல முடியும் ? முத்து பவளம், ஸ்படிகம்,
ருத்ராக்ஷம் ஆகியவற்றால் ஆன மாலைகளைப் பெருமானுக்கு 
அணிவித்தால் சாயுஜ்ஜிய பதவி அடையலாம். தைப்  பூசத்தன்று
காவிரியில் நீராடி, ஈங்கோய் மலையை வலம் வந்தால்
உலகையே  வலம் வந்த பலன் கிட்டும். அவ்வாறு வலம் வந்தால்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு அசுவமேத யாகம் செய்த பலமனப்
பெறலாம். சுவாமி சன்னதியில் விளக்கேற்றினால் பேரறிவும் 
ஞானமும் வாய்க்கும். நந்தவனம் அமைத்தல், கீதங்கள் பாடுதல்,
சிறிது பொழுதேனும் அம்மலையில்  இருத்தல் ஆகியவற்மைச்
செய்தால் இம்மை மறுமைப் பலன்கள் யாவும் சித்திக்கும்.
இத்தகைய தொண்டர்கள் சிவபெருமானுடைய  திருவடி நீழலைப்
பெற்று உய்வார்கள் என்பது சத்திய வாக்கு என்று உமரத்தார் சூத
மா  முனிவர்.

நவசித்தர்கள் பூஜித்தது: சூத மா முனிவர் மேலும் கூறலானார்:
” முனிவர்களே, இத்தல மகாத்மியம் இரகசியமானது. தெய்வ
இலக்கணைமானது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. நாத்திகர்களுக்கு இதனைப்  பகர்ந்தால் மிகுந்த பாவத்திற்கு ஏதுவாகும். மரகத மலைக்கு ஒன்பது சிகரங்கள் ஏற்பட்ட வரலாற்மை இப்போது கூறுவோம்.

ஒருசமயம் திருக் கயிலாயத்தில் இறைவனது சன்னதியில் சித்தர்கள் ஒன்பது பேர் சென்று  , தவம் செய்வதற்கு 
ஏற்ற இடம் எது என்று கேட்டவுடன் , அம்மையப்பரும், ” சித்தர்களே ,
காவிரியின் வடகரையிலுள்ள மரகத கிரிக்குச் சென்று தவம்
செய்தால் யாம் அங்கு உங்களுக்குக் காட்சி அளித்து வேண்டிய
வரங்களை  நல்குவோம். இனிமேல் அச்சிகரம் ஒன்பது
முடிகளைக் கொண்டு விளங்கும் ” என்றருளினார். அது கேட்டு
மகிழ்ந்த சித்தர்கள் மரகதாசலத்தை அடைந்தவுடன் அம்மலைக்கு 
ஒன்பது முடிகள் உண்டாயின. இந்த அற்புதத்தைக் கண்டு
அதிசயித்த சித்தர்கள், காவிரியில் நீராடி, சிவபிரானை 
இடை விடாது கருத்தில் இருத்திப் பன்னிரண்டு ஆண்டுகள் தவம்
செய்தனர். அதன்பிறகு, வில்வ இலைகள், வெட்சி, புன்னை ,
அரளி, மாதுளை ,மந்தாரை  கோங்கு , இலவு ஆகியவற்றால்
அர்ச்சித்து, பஞ்ச கவ்யங்களாலும், இளநீர்,சந்தனம் ஆகிய
அபிஷேகப் பொருள்களாலும் விதிப்படி பூஜித்தனர். பழ வகைகள்,
சித்திரான்னம், ஆகிய நிவேதனங்கள் செய்து, சத்ரம்,
சாமரம்,நிருத்தம்,கீதம்,தாம்பூலம் ஆகிய உபசாரங்கள் செய்து
பரம சிவனைத் தோத்திரம் செய்து வணங்கினார்கள்.

சித்தர்களின் தவத்திற்கு இரங்கி சிவபிரான் காட்சி தந்ததும்,
ஒன்பது சித்தர்களும் விழிகள் ஆனந்த நீர் பெருகக் கைகளை  
உச்சியில் கூப்பியவாறு, பரமனது பாத கமலங்களில் வீ ழ்ந்து
வணங்கித் தோத்திரம் செய்தனர். ” தேவாதி தேவா , மரகதாசல
நாயகா, ஞானமூர்த்தியே , பசுபதியே,   பரமயோகியே ,
மும்மூர்த்திகளுக்கும் மேலானவனே , புவனாதிபதியே , அன்பர்க்கு
அன்பனே , வாக்கும் மனமும் கடந்த ஆனந்த மயனே , கருணை 
வடிவே , பிரணவப் பொருளே  , நினது திருவடிகளை  வணங்கி
உய்ந்தோம் . உம்மையன்றிப் பிறிதொன்றையும் வேண்டோம் .
நின்னடிக்கு அபயம்” என்று பலவாறு போற்றினர். உலகோர் 
உய்யும் வண்ணம் இவ்வீங்கோய் மலையில் உமாதேவியாருடன்
தாங்கள் எப்பொழுதும் வீற்றிருக்க வேண்டும். இங்கு வரும்  அடியார்கள் வேண்டிய யாவும் சித்திக்க அருள வேண்டும்.
அறுபத்துநான்கு கலைகளும் எங்களுக்கு எளிதில் விளங்குமாறு 
கருணை  புரிய வேண்டும் ” என்று வரம் வேண்டினர். அவ்வாறே 
ஆகுமா று வரமருளிய பெருமான்  அவர்களை  எப்போதும் 
அம்மலையிலேயே இருக்குமாறு  திருவருள் புரிந்தார். அதனால்
அவர்கள் இன்னமும் அங்கு வசித்து வருகிறார்கள்  என்று
முனிவர் கூறினார்.

தேன் அபிஷேகச் சிறப்பு : முன்பு அகத்திய முனிவர் ,தானே ஈவடிவம் கொண்டு கானகம் சென்று, தேன் கூடுகளிலிருந்து பெற்ற தேனைக் கொண்டு வந்து பல்லாண்டுகள் மரகதாசலேசுவரரை 
அபிஷேகித்து வந்ததால் இம்மலை ஈங்கோய் மலை  எனப்பட்டது.
இப்பொழுதும் ஈ வடிவில் அகத்தியர், பெருமானைத் தேனினால்
எந்நாளும் அபிஷேகித்து வருகிறார்.வைகாசி,கார்த்திகை 
மாதங்களில் தேனபிஷேகம் செய்வதால் அவ்வாறு செய்பவர்க்கும் அவரது சுற்றத்தார்க்கும் அளவற்றபுண்ணியம் கிடைக்கும்.

முன்பு ஒரு குரங்கானது இங்குள்ள (திருப்) புளிய மரத்தின்
மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும் போது அங்கிருந்த தேனீக்கள்
வெளிப்பட்டு அக்குரங்கைக் கடித்தன. அத்துன்பத்தால்
குரங்கானது, தன் கையிலிருந்த தேன்கூட்டைக் கை  நழுவ
விட்டு விட்டது. அக்கூடானது அம்மரத்தின் கீழிருந்த
சிவலிங்கத்தின் மீது விழவே , அதில் இருந்த தேன்,
பெருமானுக்கு அபிஷேகமாயிற்று. அப்புண்ணியத்தால்
அக்குரங்கானது மறு பிறப்பில்  சுப்பிரபன் என்ற அரசனானது.
அரசனான சுப்பிரபன், தன் சுற்றமும் படையும்  உடன் வர
ஈங்கோய் மலையை அடைந்து  தானங்கள் பல செய்து,
திருப்பணிகள் செய்து, நாள் தோறும் சுவாமிக்குத் தேன்
அபிஷேகம் செய்வித்தான்,மற்றொரு சமயம் . சுப்பிரப
மகாராஜாவுக்கு எங்கு தேடியும்  தேன்கிடைக்காமல் போகவே,,
மனம் வருந்தித் தனது காதுகளை  வாளினால் அறுக்கத்
தொடங்கும்போது  ரிஷப வாகனனாய் மரகதாம்பிகையுடன்
இறைவன் காட்சி கொடுத்து அவனைக் கயிலையில் சிவ
கணங்களுக்கு அதிபன் ஆக்கினார். விண்ணவரும் மண்ணோரும் 
இவ்வதிசயத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்திரன் மந்திரோபதேசம் பெற்றது  : முன்னர் கௌதம  ரிஷியின்
சாபம் பெற்ற தேவேந்திரன் , நாணம் கொண்டு ஒரு வாவியினுள்
மறைந்திருந்தான். பின்னர் நாரதரின் அறிவுரைப்படி
மரகதாசலத்தை அடைந்து அங்கிருக்கும் அகத்திய முனிவரை 
வணங்கி, அவரிடம் மந்திரோபதேசம் பெற்றான் . அம்மந்திரம்
மா பாவியர் தியானித்தாலும் கொடிய பாவங்களையும் நீக்க
வல்லது. அதற்கு ரிஷி அகஸ்தியர். சந்தஸ், அனுஷ்டுப்.
தெய்வம், கிருபாசமுத்திரைாகிய மரகதாசல நாதர்.
அம்மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை  ஜபிக்குமாறு இந்திரனிடம்
அகத்தியர் கூறியருளினார். இந்திரனும் அதன்படியே , அதனைப்  பல்லாண்டுக் காலம் ஜபித்து வந்தான். அவனது
தவத்தைக் கண்ட இறைவன், அவன் முன்பு காட்சி
அளித்தருளினார். பரவசப்பட்டவனாய் இந்திரன், சிவபெருமானைத் தோத்திரம் செய்தான்: ஓ நின்மலா, நான்மறை முடிவே ,உலகங்களுக்கு அதிபதியே , ஒப்பற்ற பரம்பொருளே , பார்வதி நாதா, நின் பாதங்களைச் சரண் அடைந்தேன். கொடியேனது  பாவங்களைத் தாங்கள்தான் போக்கி அருளி நற்கதி தர வேண்டும்” என்று மனமுருகி வேண்டினான். சிரத்தின் மீது
கைகளை அஞ்சலி செய்தவனாக, ” பெருமானே,கௌதமரின்
சாபம் நிவர்த்தி ஆகவேண்டும். அடியேன் தேவரீரது  திருவடிகளை 
எக்காலமும் மறவாத வரம் தர வேண்டும். என்று பிரார்த்தனை 
செய்ய, பரனும் அவ்வாறு  ஆகட்டும் என வரம் அளித்தருளினான். பாவம் நீங்கப் பெற்ற  இந்திரன்,திருக்கோயிலைத்  திருப்பணி பலவும் செய்து, வைகாசி மாதத்தில் உற்சவமும் செய்வித்தான்.
அமாவாசை ,பௌர்ணமி  கிரகண காலங்கள், சிவராத்திரி,
பிரதோஷம், ஆகிய நாட்களில் மரகதாசல மூர்த்திக்குப்
பாலினால் அபிஷேகம் செய்விப்பது பெரும் புண்ணியமாகும் .
அது சிறந்த சிவபுண்ணியமாக  வளர்ந்து நற் பலன்களைக் கொடுக்கும்  என்பது சத்திய வார்த்தை  .”
” புண்ணியசாலிகளான முனிவர்களே , நாம் முன் செய்த
தவப்பயனால் இம்மகாத்மியத்தை  ஓதவும் .கேட்கவும் பெற்றோம் 
இதனை ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் படிப்போரும்
கேட்போரும் மரகதாசல மூர்த்தி திருவருளால் இம்மை
மறுமைப் பலன்கள் அனைத்தும் பெறுவர் . நிறைவாக,
பரமேசுவரனது திருவடி நீழலில் நீங்காது வீற்றிருந்து முக்தி
இன்பத்தைப் பெறுவர் .” எனக் கூறி  அருளினார்.
                                                        *********************

வானத்து உயர் தண் மதி தோய் சடைமேல்  மத்த மலர்  சூடித்
தேன் ஒத்தன மென்மொழியாள் மான் விழியாள் தேவி  பாகமாக்
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே .
                                        —- திருஞானசம்பந்தர் தேவாரம்
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்தேறி — நொடியுங்கால்
இன்னதென அறியா  ஈங்கோயே  ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை . 

              —– நக்கீரர் அருளிய திருஈங்கோய் மலை  எழுபது

********************************

Posted in Resources | Leave a comment

ஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி

161.jpgஓம் உமாயை நம:

ஓம் ஸம்மோஹின்யை நம:

ஓம் தேவ்யை நம:

ஓம் ஸு ந்தர்யை நம:

ஓம் புவனேச்வர்யை நம:

ஓம் ஏகாக்ஷர்யை நம:

ஓம் மஹா மாயையை நம:

ஓம் ஏகாங்க்யை நம:

ஓம் ஏக நாயக்யை நம:

ஓம் ஏக ரூப்யை நம:

ஓம்  மஹா ரூப்யை நம:

ஓம் ஸ்தூல சூக்ஷ்ம பராயிண்யை  நம:

ஓம் பிந்து ஸ்வரூபாயை நம:

ஓம் சர்வாண்யை  நம:

ஓம் ஸங்க்ராம    ஜனநாயக்யை நம:

ஓம் மனோன்மன்யை நம:

ஓம் பராசக்த்யை நம:

ஓம் யோகின்யை நம:

ஓம் பாபநாசின்யை நம:

ஓம்  மஹா சக்த்யை நம:

ஓம் மஹா கோராயை  நம:

ஓம்  பாப ஸங்கபயங்கர்யை நம:

ஓம் ஆபத் ஸக்யை நம:

ஓம் பத்ர காள்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் ஸர்வ மங்களாயை நம:

ஓம் பக்திப் ப்ரியாயை நம:

ஓம் மஹா கௌர்யை நம:

ஓம் ஹரி ப்ரஹ்மாதி காரிண்யை நம:

ஓம் சிவவிஷ்ணு ஸ்வரூபிண்யை நம:

ஓம் ப்ரஹ்ம  ரூபாயை நம:

ஓம் ஸுவாஸின்யை நம:

ஓம் புராண்யை நம:

ஓம் புண்ய ரூபாயை நம:

ஓம் ஸுபத்ராயை நம:

ஓம் ஷோட சாக்ஷர்யை நம:

ஓம் ருத்ராண்யை நம:

ஓம் பார்வத்யை நம:

ஓம்  தேவ்யை நம:

ஓம் சங்கரார்த்த சரீரிண்யை நம:

ஓம் நாராயண்யை நம:

ஓம் மஹா தேவ்யை நம:

ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

ஓம் ஸுமங்கலாயை நம:

ஓம் அகாராதி க்ஷகாராந்தாயை நம:

ஓம் அஷ்ட த்ரிம்சத் கலாத்மிகாயை நம:

ஓம் ஸப்த மாத்ரு கலாதர்யை நம:

ஓம் சரீரோத்பத்தி காரிண்யை நம:

ஓம் ஸகல ப்ராண பூதாத்மிகாயை நம:

ஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிண்யை நம:

ஓம் அகோரிண்யை நம:

ஓம் மஹா ரௌத்ர்யை நம:

ஓம் மஹா மங்கள நாயக்யை நம:

ஓம் மகா ஞானாய நம:

ஓம் மஹாஜ்யாயை நம:

ஓம் மஹேச்வர்யை நம:

ஓம் லோக மாத்ரே நம:

ஓம் பௌருஷ்யை நம:

ஓம் பத்ம ஸுகாயை நம:

ஓம் ஸத்யோஜாதாதிபாயை நம:

ஓம் ஸோம ஸுர்யாக்னி லோசநாயை நம:

ஓம் குணத்ராயை நம:

ஓம் தயா ரூப்யை நம:

ஓம் ஸாவித்ர்யை நம:

ஓம் புர பைரவ்யை நம:

ஓம் ஸிம்ஹாஸன மகா யோக்யாயை நம:

ஓம் வ்ருஷ பத்ம ஸுஹாஸின்யை நம:

ஓம் பர ப்ராஹ்ம்யை நம:

ஓம் ஸுராராத்யாயை நம:

ஓம் ப்ரஹ்ம விஷ்ணு வாதி பீடிகாயை நம:

ஓம் லோக ரக்ஷார்த்த நாயக்யை நம:

ஓம் நாக தாரிண்யை நம:

ஓம் இஷ்ட ஸித்யை நம:

ஓம் மஹா லோகாயை நம:

ஓம் அரூப்யை நம:

ஓம் பஹு ரூப்யை நம:

ஓம் த்ரிசூல – டமருக தாரிண்யை நம:

ஓம் பாசாங்குச வராபயாயை நம:

ஓம் கட்க -கேடக  தாரிண்யை நம:

ஓம் கட்கின்யை நம:

ஓம் சக்ர தாரிண்யை நம:

ஓம் விச்வ ரூப ஸ்தாபின்யை   நம:

ஓம் காலபஞ்ச ஷடாக்ஷர்யைநம:

ஓம் அசேஷ ஹ்ருதயா தேவ்யை நம:

ஓம் ஹ்ருல் லேகாயை நம:

ஓம் பரமேச்வர்யை நம:

ஓம் குமார்யை நம:

ஓம்  பிங்கலாயை நம:

ஓம் வாராஹ்யை நம:

ஓம் ஜன மோஹின்யை நம:

ஓம் துர்கா தேவ்யை நம:

ஓம் ஜகத்தாத்ர்யை நம:

ஓம் ஸமஸ்தைச்வர்ய நாயக்யை நம:

ஓம் அபர்ணாயை நம:

ஓம் பவான்யை நம:

ஓம் சண்டிகாயை நம:

ஓம் அம்பிகாயை நம:

ஓம் கால ஞானாயை நம:

ஓம் சிவ ஞானாயை நம:

ஓம் சிவ தர்ம பராயண்யை நம:

ஓம் காலோத்தர ஷடா தாராயை நம:

ஓம் சூக்ஷ்மாங்க்யை  நம:

ஓம் ப்ராண தாரிண்யை நம:

ஓம் வஜ்ர சக்தி தரா தேவ்யை நம:

ஓம் சரணாகத ரக்ஷக்யை நம:

ஸ்ரீ மஹா  தேவ்யை நம:

 

 

 

 

Posted in Temple Rituals, Worship | Leave a comment

காரைக்கால் அம்மையார்

karaikal ammaiyar2

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்பவரது மகனான பரம தத்தனே ஏற்றவன் எனக் கருதினான் . முதியோர்கள் பலரும் காரைக்கால் நகருக்கு வந்து, நீ பெற்றெடுத்த மகளைப் பரமதத்தனுக்கு மணம் புரிவாயாக என்றார்கள். அதன்படி, இருவீட்டாரும் சம்மதித்து, மண நாள் நிச்சயமானதும் மண ஓலை மூலம் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தனர்.
மயில் போன்ற புனிதவதியாருக்கும் காளை போன்ற பரமதத்தனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. தனது அருந்தவப்புதல்வியை நாகைக்கு அனுப்ப மனம் வராத தனதத்தன், தன் மகள் இல்லறம் நடத்துவதற்காகக் காரைக்கால் நகரிலேயே ஒரு அழகிய மாடம் அமைத்து அவ்விருவரையும் அங்கு வசிக்கச் செய்தான். இவ்வாறு திருமணம் இனிதே நடந்தேறியபின்னர் ,நிதிபதி, நாகைக்குத் திரும்பினான். புனிதவதியாரும், சிவபெருமான் கழலுக்கு அன்பு செய்தவராக, மனையறத்தின் பண்பு வழுவாமல் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.
karaikal ammaiyarசிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து,உணவு அருந்தச் செய்து,அவர்களுக்கு ஆடைகளும் ஆபரணங்களும் வழங்குவதை நியமமாகக் கொண்டிருந்தார் புனிதவதியார். அவ்வாறு இருந்து வரும் நாட்களில், ஒரு சமயம், பரமதத்தனிடம் இரு மாங்கனிகளைச் சிலர் கொண்டு வந்து தந்தனர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் அவர்களைத் தனது மனைக்கு அனுப்பி,அக்கனிகளைப் புனிதவதியாரிடம் கொடுக்குமாறு கூறினான். அதன்படி வந்தவர்களும்,அவ்விரு மாங்கனிகளையும் புனிதவதியாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
பன்னகாபரணரான சிவபெருமானது அடியார் ஒருவர் மிகுந்த பசியோடு அவ்வேளையில் புனிதவதியாரின் மனையை வந்தடைந்தார். அவரது பாதங்களை வணங்கி வரவேற்ற புனிதவதியார், அவரது பசியைத் தீர்க்கக் கருதி, விரைந்து இன்னமுதாக்கி , இதனை விடப் பேறு உண்டோ என்று கருதியவராக அடியாருக்கு அமுது செய்வித்தார். பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாரது இலையில் படைத்தார். பசி நீங்கிய அடியார், மனமகிழ்ந்து அவரது செயலை உவந்தவராக அங்கிருந்து நீங்கினார்.
வீடு திரும்பிய பரமதத்தன், நீராடிவிட்டு உணவருந்த வந்தபோது,கற்பில் சிறந்த புனிதவதியார் அவனுக்கு அமுது செய்விக்கலானார். அப்போது இலையில் இட்ட மாங்கனியை உண்ட வணிகன், தான் அனுப்பிய மற்றொரு கனியையும் இலையில் இடுமாறு பணித்தான். அதனைக் கொண்டு வருவார் போல அகன்ற புனிதவதியார் மனம் தளர்ந்து, இறைவனை வேண்டி நிற்கவே, பெருமான் அருளால் அவரது கைகளில் அதி மதுரமான மாங்கனி ஒன்று வந்தடைந்தது. அதனைப் பெற்று மிகவும் மகிழ்ந்த புனிதவதியார் உடனே விரைந்து சென்று கணவனாருக்கு அதனைப் படைத்தார். அக்கனியின் சுவை மூவுலகிலும் இருத்தல் அரியது என உணர்ந்த வணிகன், புனிதவதியாரிடம் அக்கனி எவ்வாறு கிடைத்தது என்று உரைக்குமாறு கேட்டான்.
கணவனிடம் உண்மையைக் கூறுவதே முறை என்று எண்ணியவராகப் புனிதவதியார் நடந்தவற்றை எடுத்துக் கூறி, ஈசன் திருவருளே மற்றொரு கனியையும் தந்தது என்றார். அப்படியாயின் அதே போன்ற அதிமதுரக் கனியை ஈசனிடம் மீண்டும் பெற்றுத் தருவாய் என்று பரமதத்தன் கூறினான். அதனைக் கேட்ட புனிதவதியார், இறைவனைத் துதித்து ” பெருமானே, இப்போது தேவரீர் மற்றோர் கனியை வழங்கி அருளாவிட்டால் எனது உரை பொய் என்று ஆகி விடுமே” என்றார். அப்போது,யாவரும் அதிசயிக்கத்தக்க வகையில், சிவனருளால் ஒரு மாங்கனி அவரது கையை வந்தடைந்தது . அதனைத் தன் கணவனாரிடம் புனிதவதியார் கொடுத்தவுடன் பரமதத்தன் அதனைப் பெற கைகளை நீட்டுயபோது, அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்ட வணிகன் அஞ்சி நடுங்கினான்.

புனிதவதியாரை மனைவியாகக் கருதாமல் தெய்வத்தன்மை வாய்ந்த பெண்ணாகக் கருதி, இனி மேல் அவருடன் கணவனாக வாழ்வது தகாது என எண்ணி ,. கடல் கடந்து வணிகம் செய்வது கொண்டு வருவதாகக் கூறி விட்டு, அங்கிருந்து நீங்கி, சுற்றத்தார் துணையுடன் மரக்கலம் ஒன்றைக் கொண்டு கடல் கடந்து ஒரு நாட்டிற்குச் சென்று பொருளீட்டிய பின்னர்,மீண்டும் நாகைக்கு வந்து சேர்ந்தான். அந்நகரில் மற்றோர் பெண்ணை விவாகம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றான். புனிதவதியாரைத் தெய்வமாகவே எண்ணிய வணிகன் அப்பெண் குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயரிட்டான்.
கடல் கடந்து வாணிபம் செய்து மீண்ட பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதாகச் செய்தி வரவே, புனிதவதியாரை அவரது சுற்றத்தார்கள் ஒரு சிவிகையில் ஏற்றி, பரமதத்தன் இருந்த நகருக்குக் கூட்டி வந்தனர். அவரது வருகையை அறிந்து அச்சம் அடைந்த வணிகன், தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் புனிதவதியாரது இருப்பிடத்தை அடைந்தான். புனிதவதியாரது புனித அடிகளில் மனைவி-குழந்தையுடன் வீழ்ந்து வணங்கி,” நாங்கள் வாழ்வது உமது அருளால்” என்றான்.
இவ்வாறு கணவன் ,தன்னை வணங்குவதைக் கண்டு அச்சமடைந்த புனிதவதியார் , சுற்றத்தார்கள் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றார். பரமதத்தனை ” இவ்வாறு செய்தல் தகுமோ ” எனக் கேட்டார்கள் சுற்றத்தார்கள். அவர்களை நோக்கிய வணிகன், ” இவர் மானுடர் அல்லர். பெரும் தெய்வம். ஆகவே அவரது பெயரையே இக்குழந்தைக்கு இட்டேன். நீங்களும் அவரைப் போற்றிப் பணியுங்கள்” என்றான். அதனைக் கேட்ட சுற்றத்தாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனைக் கண்ட புனிதவதியார், ” கணவனுக்கென்றே இவ்வுடலைத் தாங்கி வந்தேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட படியால்,, இவ்வுடலின் தசைப் பகுதியைக் கழித்து விட்டுப் பேய் வடிவம் அடியேன் பெறுமாறு அருள் செய்வாய்” என்று பரமனை வேண்டி நின்றார்.இறைவனும் அவர் வேண்டியபடியே புனிதவதியாரைப் பெண் பேயாக்கினார் மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவத்தை ஈசனருளால் பெற்றார். எங்கும் மலர் மழை பொழிந்தது. தேவ துந்துபிகள் முழங்கின. முனிவர்களும் வணங்கினர். சுற்றத்தார்கள் தொழுது வணங்கியவராக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
பேய் வடிவம் பெற்றவுடன் இறைவனை, அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணி மாலை ஆகிய துதிகளால் பரவினார் பேயார். பேய் வடிவைக்கண்டவர்கள் அஞ்சி விலகினார். தனது உருவம் எதுவாக இருந்தால் என்ன, ஆண்ட நாயகனாகிய சிவபெருமான் என்னை அறிவார். அதுவே போதுமானது என்ற சிந்தையுடன், கயிலாயத்தை நோக்கிச் சென்றார் புனிதமான வடிவம் பெற்ற மன நிறைவுடன். கால் நடை தளர்ந்ததும்,தலையினால் நடந்து சென்றார்.

அவ்வெள்ளி மலையின் மீது அவ்வாறு ஏறி வருவதைக் கண்ட உமாதேவியார், இறைவனை நோக்கி , இவ்வாறு பேய் வடிவில் வருவது யார் என்று வினவ, பெருமான், ” இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று உலகெலாம் அறியும் வகையில் அருளிச் செய்தார். இவ்வாறு கயிலாய நாதன் அருளவும், பேயார் , அவ்வருளை வியந்து போற்றி, ” அப்பா” என்று பிரானது செம்பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய அம்மையாரது அன்பு கண்டு மகிழ்ந்த இறைவன், ” நீ வேண்டும் வரம் யாது ” என்று வினவ, அம்மையார், ” தருமமே வடிவாகிய இறைவா, என்றும் குறையாத பேரன்பு கொண்டு உன்னை வழிபட வேண்டும். பிறவாத நிலை பெற வேண்டும். ஒருக்கால் பிறந்து விட்டாலும் உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் . நான் மகிழ்ச்சியோடு உன்னைப் பாடி, நீ ஆடும்போது உனது திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டினார் அம்மை.
karaikal ammaiyar4” தென்திசையில் உள்ள திருவாலங்காட்டுக்குச் சென்று அங்கு நாம் ஆடும் மாநடம் கண்டு ஆனந்தமயமாகி நம்மைப் பாடுவாய் ” என்று இறைவன் கட்டளை இட, காரைக்கால் அம்மை திருவாலங்காட்டைத் தலையினால் நடந்து சென்றடைந்தார். அங்கு அண்டம் உற நிமிர்ந்தாடும் அப்பனை மூத்த திருப்பதிகம் பாடி வணங்கினார். பின்னர் ஒரு பங்குனி சுவாதி நன்னாளன்று ஆடும் சேவடிக்கீழ் என்றும் இருந்து பாடிக்கொண்டிருக்கும் உயர் நிலை இறையருளால் பெற்றார்.
காரைக்காலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் மாங்கனி விழா மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஊரின் மத்தியிலுள்ள சிவாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது. புராணப்படி, காரைக்கால் அம்மையாரது வரலாறு இவ்விழாவின் போது நடத்திக் காட்டப்படுகிறது.
IMG_20170708_223628புனிதவதியார் ஜனனம், பரமத்தனுடன் திருமணம் ,புனிதவதியாரின் இல்லம் தேடி சிவனடியார் மிக்க பசியுடன் வருதல் போன்ற ஐதீக காட்சிகள் நமக்கு முன்னே தோன்றுகின்றன. பிக்ஷைக்காக பிக்ஷாடனரையே ஊர்வலமாக எழுந்தருளச் செய்கிறார்கள். பவழக் கால் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளும்போது வழி நெடுகிலும் மக்கள் தீபாராதனை தட்டில் மாம்பழங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கின்றனர். விழாவுக்கு வரும் பக்தர்களும் மாம்பழங்களைப் பிரசாதமாகப் பெற்று மகிழ்கின்றனர். சுவாமியை நோக்கியவாறே அதிகார நந்திகேசுவரரும் எழுந்தருளுகின்றார்.
அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பரமதத்தனைத் தரிசிக்கிறோம். அந்த இடம் காசுக் கடைத் தெரு என்ற வணிகர் வீதியாக அக்காலத்திலிருந்தே வழங்கப்பட்டது. மாலையில் பரமதத்தன் கடல் தாண்டி போவதற்காகப் பெரிய படகு ஒன்றை ஊர்வலமாக நகரில் எடுத்து வருகிறார்கள். மின் விளக்குகளால் அது அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இரவில் பரமதத்தனின் இரண்டாவது திருமணத்தை நடத்திக் காட்டுகிறார்கள். செய்தி அறிந்த புனிதவதியார் பல்லக்கில் எழுந்தருளுகிறார். பரமதத்தன், தன் மனைவி மக்களுடன் அவரை மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். விடியற்காலை சுமார் 5 மணி அளவில் காரைக்கால் அம்மையார் யாவரும் போற்றும் பேய் உருவத்துடன், ஊரிலுள்ள சிவாலயத்தை நோக்கி எழுந்தருளும்போது, சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. மங்கலான தீவர்த்தி ஒளியில் மட்டுமே அம்மையாரைத் தரிசிக்க முடியும்.

சிவாலயத்தை அடைந்ததும், அம்மையாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பரவசமாகின்றனர். வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் காணவேண்டிய அற்புத தரிசனம் இது. ஆதி அந்தமில்லா இறைவனின் திருநடனத்தின் போது அருகே இருந்து கீதம் பாடும் பேறு பெற்ற அம்மையின் மலர்த்தாள் போற்றுவோமாக.

Posted in Nayanmars | Leave a comment

Sri Bhairava Ashtothra Satha Namavali

137ABhairavar

ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவுக்கு முன்பும் ஓம் என்றும் இறுதியில் நம: என்றும் சேர்த்துக் கொள்ளவும்)
ஓம் ஆனந்த பைரவாய நம:
அஸிதாங்க பைரவாய
ருரு பைரவாய
சண்ட பைரவாய
க்ரோத பைரவாய
உன்மத்த பைரவாய
கபால பைரவாய
பீஷண பைரவாய
ஸம்ஹார பைரவாய
ஆனந்தாய
தீர்க்க பிங்களாய
ஜடாதராய
பிக்ஷா ஹராய
நர ஹராய
பீத வர்ணாய
பீம ரூபாய
பினாகப் ப்ருதே
உத்தண்ட பைரவாய
உக்ராய
விச்வ ரக்ஷஸே
புருஷாய
வடுகாய
வனவாஸாய
வரதாய
ஸந்துஷ்டாய
க்ஷேத்ர பாலகாய
ஸ்வர்ண ரூபாய
ஸுராத்யஷாய
ஸுராய
ஸ்வர்ண பூஷணாய
மஹா பைரவாய
கலா நாதாய
காலாந்தகாய
கங்காள தராய
கால பைரவாய
கல்பாந்த பைரவாய
கபால மாலா தராய
கபாலினே
கலி தோஷ ஹராய
சூலினே
தன்யாய
தயா நிதயே
தண்டபாணயே
கல்யாய
தானவாரயே
திகம்பராய
திவ்ய மூர்த்தயே
திவ்யாய
துஷ்ட நிக்ரஹாய
ஸவித்ரே
விஜயாய
விமலாய
வீராய
சூராய
ச்வ வாஹனாய
மார்த்தாண்ட பைரவாய
மான்யாய
மானதாய
மன்மத நாசனாய
தீர்த்த ப்ரதாய
தீர்த்த கராய
தீர்த்த வாஸாய
அபயப் ப்ரதாய
பகவதே
கண்ட பரசவே
ஸர்ப்ப பூஷாய
அலங்க்ருதாய
அமாயாய
ஆதித்ய ரூபாய
ஆதாம்ராய
அநு பூஜ்யாய
பராக்ரமாய
ஸர்வார்த்தி ஹராய
த்ரிநேத்ராய
ஸர்வேசாய
மதமாலாய
மாஷாபூப ப்ரியாய
மஹா க்ஷேத்ராய
லோக ரக்ஷகாய
லோகேச்வராய
மஹா பூத பயங்கராய
மஹா மான்யாய
ரக்த ரூபாய
ஜ்வாலா கேசாய
சதி தராய
ரக்தாங்காய
தேஜோமயாய
சூல ஹஸ்தாய
கபால மாலா பரணாய
பாச ஹஸ்தாய
டமருக தராய
த்ரிலோசனாய
கோலாஹல ப்ரியாய
பிசாச நாதாய
பால ரூபாய
பூத ரூபாய
நாக யக்யோபவீதாய
அபீஷ்ட ஸித்தி ப்ரதாய
அங்குச தராய
த்ரிசூல தராய
அஷ்ட புஜாய
தம்ஷ்ட்ரா தந்தாய
ஆக்யா சக்ராய
ஆகாச பைரவாய
ஜ்யோதி ரூபாய
வ்யோம ரூபாய
தனாக மயாய
கால பைரவாய
*******************************************
சீர்காழி ஆபதுத்தாரணர் மாலை
கலையாரும் முத்தமிழ்க் கல்வியும் யோகமும் காசினியில்
நிலையாகிய பெரும் செல்வமும் நீதியும் நீ அருள்வாய்
மலையாசன வடுகேச கங்காள வயிரவனே
தலைமாலை சூழ் புயனே காழி ஆபதுத்தாரணனே .
(கருத்து: முத்தமிழ்க் கல்வி, யோகம்,நிலையான செல்வம் , நீதி ஆகியவற்றை, தலை மாலை சூடிய தோள்களை உடைய வடுகேச,கங்காள வயிரவரும்,ஆபத்துத்தாரணரும் ஆகிய பைரவ மூர்த்தியே, தாங்கள் அருளிச் செய்ய வேண்டும்.)
**************************

Posted in Worship | Leave a comment

Upcoming festivals in April 2017

10.4.2017: Sri Bramarambika Sametha Sri Seshapureesuvara Swami Temple Maha Kumbabhishekam 9-10.30 AM

12.4.2017 : Karaikkal Ammaiyar Gurupuja at Thiruvalangadu,near Arakkonam 10 pm

4.6.2017: Sri Gnanambika sametha Sri Vata Mooleswara swami temple, Thiruvalampozhil, near Kandiyur/Thiruvaiyaru

Posted in TEMPLE NEWS | Leave a comment

ஹரதத்தர் சரித்திரம்

20161012_151625

முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், மாசியில் வரும் சப்தஸ்தான உத்சவத்திலும் பங்கு பெற வேண்டும். அவருக்கு உபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சில நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும்.
கஞ்சனூர் தல வரலாற்றுச் சுருக்கம்: மயிலாடுதுறையிலிருந்து காவிரின் வடகரையை ஓட்டிச் செல்லும் பூம்புகார்- கல்லணை  சாலையில் அமைந்துள்ளது கஞ்சனூர் என்ற தலம் ஆகும். இதற்குச் செல்வதற்கு  மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.  இங்குள்ள கற்பகாம்பிகா சமேத அக்னீசுவர சுவாமி ஆலயம் திருநாவுக்கரசு நாயனாரது  தேவாரத் திருப்பதிகம் பெற்றதாகும். அப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் ” கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு  உய்ந்தேனே ” என்ற மகுடத்துடன் நிறைவு பெறும்.

பவிஷ்யோத்ரபுராணம் இந்த ஸ்தலத்தைக் கம்ஸபுர  க்ஷேத்ரம் என்று குறிப்பிடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தர வாஹினியாகக்  காவிரி பாயும் இந்த பலாசவன  க்ஷேத்திரத்திற்கு   வந்து பராசர முனிவர் மஸ்யகந்தி என்ற செம்படவப் பெண்ணின் தொடர்பால் ஏற்பட்ட தோஷத்தை, மாசி மகத்தன்று அக்நீசுவரரின் தரிசனம் பெற்றதால் நீங்கப் பெற்றார். மாண்டவ்ய புத்திரர்களும் மாசி உத்தரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் பெற்றுத்  தங்களது பாவம் நீங்கப்பெற்றனர்.

கம்ஸன் என்ற பாண்டிய மன்னன் இத்தலத்தை வழிபட்டுத் தன்  நோய் நீங்கப்பெற்றவனாய் , திருப்பணிகள் பல செய்வித்தான்.
பிரமனுக்குத்   ( கஞ்சன், விரிஞ்சி ஆகிய பெயர்கள் பிரமனைக் குறிப்பன  ) திருமணக்கோலம் காட்டியதால் இத்தலம் கஞ்சனூர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

ஒருசமயம் பிரமனின் யாகத்தில் அதிகமான நெய்யைப்புசித்ததால் அக்னிக்குப் பாண்டு ரோகம் வந்தது. அதனை இங்கு வந்து போக்கிக் கொண்டதால் சுவாமிக்கு அக்னீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
சந்திரனும் இங்கு வழிபட்டுக் குருசாபம் நீங்கப்பெற்றான்.

 ஹரதத்தர் வரலாறு

திருமாலின் இருபத்தைந்தாவது அவதாரம் எனக் கருதப்படுபவர் ஹரதத்தர் ஆவார். ஒரு சமயம் தேவாசுரப் போரில் தோல்வியடைந்த அசுரர்கள் பிருகு முனிவரது ஆசிரமத்தைத்  தஞ்சமாக  அடைந்தனர். முனிவர் வெளியே சென்றிருந்தபடியால் அவரது மனைவி , அவ்வசுரர்களுக்கு இரங்கித் தஞ்சம் தந்து உதவினார். அசுரர்களைத் தேடிவந்த திருமால், முனிவரது ஆசிரமத்தை அடைந்து ரிஷி பத்தினியின் மீது சக்கராயுதத்தை ஏவ, அது அவளது சிரத்தை அறுத்தெறிந்தது. இதை அறிந்த முனிவர் விஷ்ணுவைப் பல ஜன்மங்கள் எடுக்குமாறு சபித்தார். பின்னர் பஞ்சாக்ஷர மகாமந்திரம் ஓதித் தன்  மனைவியின் உயிரைத் திரும்பப்பெற்றார்.  சாப விமோசனம் பெற வேண்டித் திருமால் சிவபிரானைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். அதனால் சிவபிரான் அவற்றுக்குக் காட்சி தந்தருளினார். ” நீ கஞ்சனூர் சென்று தவம் செய்தாயானால் மனம் சமாதானம் அடைவாய்” எனக் கூறியருளினார். அதன்படி விஷ்ணுவும் கஞ்சனூரை அடைந்து பல்லாண்டுகள் தவம் செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த ஈசன், ” எனது பக்தனது சாபத்தை முற்றிலும் மாற்றாமல் சற்றுக் குறைத்து அருளுவேன். அதாவது இருபத்தைந்து அவதாரங்கள் நீ எடுக்க வேண்டும். அவற்றுள் ஐந்தில் மட்டும் நீ கர்வம் அடையும் போது யாமே அதை அடக்கிக் கர்வ பங்கம் செய்வோம். பிற இருபது அவதாரங்களிலும் நீ எம்மை வழிபடுவாயாக. அப்போது உனக்கு அருளுவோம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். முன்னம் நீ திரிபுராதிகளிடம் நாரதருடன் சென்று வேத மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கத் தூண்டிய பாவத்தைப் போக்கிக் கொள்ள கஞ்சனூரில் வைஷ்ணவக் குடும்பத்தில் தோன்றி, சிவபரத்துவத்தை நிலை நாட்டி சைவக் கிரந்தங்களை இயற்றி, நிறைவாக நம்மை வந்து அடைவாயாக” என்று அருள் செய்தார்.

கஞ்சனூர் தக்ஷிணாமூர்த்தி சன்னதி

கஞ்சனூரில் வசித்த காசிப கோத்திரத்தில் பிறந்த வாசுதேவர் என்ற  வைஷ்ணவப் பிராமணரின் தவத்தினால் மகாவிஷ்ணுவே அவரது குமாரனாக சுதர்சனாவதாரமாக அவதரித்தருளினார். இதனால் பெரிதும் மகிழ்ந்த வாசுதேவர், குழந்தைக்கு  சுதர்சனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அக்குழந்தை சிறு வயதிலிருந்தே, சிவபக்தி மிக்கவனாகத் திகழ்ந்தான். அக்னீசுவரர் கோயிலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு வந்தான். அவனது இச்செயலை வாசுதேவர் எத்தனையோ தடுக்க முயன்றும் பலனில்லை. உணவு கொடுக்காமல் அவனை வருத்தலானார். இதனால் மனம் வருந்திய அப்பாலகன், அக்னீசுவரர் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியை அடைந்து தியானத்தில் ஈடுபட்டான். இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டபின் நிறைவாகச்  சோர்வுற்று நிலத்தில் சாய்ந்து விட்டான். அப்போது கணங்களும் முனிவர்களும் சூழ ரிஷபாரூடராக பார்வதி தேவியுடன் பரமேசுவரன் காக்ஷி  அளித்து, அவனைத் தேற்றி, அவனுக்கு எல்லாக் கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனைக் கருணையினால் நோக்கி, ” நீ உனது உடல் பொருள்,ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீக்ஷா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் ” என்று அருளிய பிறகுத தம்மை மறைத்தருளினார்.

வீட்டிற்குத் திரும்பிய ஹரதத்தர் தமக்குப் பெருமான் அருளியதைத் தாய்- தந்தையரிடம் எடுத்துரைத்தார். இதைக் கண்டு வாசுதேவருக்குக் கோபம் மூண்டது. அவ்வூரில் வாழ்ந்து வந்த வைஷ்ணவப் பிராமணர்கள் ஒன்று கூடி, ” இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், ” சிவனே பரம்பொருள்” என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும்” என்றார்கள்.

ஹரதத்தரும் அக்னீசுவரர் ஆலய தரிசனமும் ஆன்மார்த்த பூஜையும் செய்து விட்டுப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தீக் குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, ” வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ள படியால் இம்முக்காலி  அடியேனுக்குக் குளிரட்டும் ” என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும்   கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

பாண்டிய மன்னனான சிவ லிங்க பூபாலன் என்பவன்  ஹரதத்தரின் பெருமையைக் கேள்விப்பட்டுக் கஞ்சனூரை அடைந்து அவரை வணங்கி, அவருக்குக் கனகாபிஷேகம் செய்வித்தான். அவனது வேண்டுகோள் படி ஹரதத்தர் அவனுக்கு சிவ தீக்ஷை செய்வித்து, வட மொழியில் சுருதி சூக்த மாலை என்ற நூலை இயற்றி, அதற்கு அவனையே உரை எழுதும் படிப் பணித்தார். பாண்டிய மன்னனும் அந்நூலுக்கு சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம் என்ற உரையை எழுதி அதனைக் கஞ்சனூர் சென்று ஆசிரியப்பெருமானிடம் சமர்ப்பித்தான். ஹரதத்தர், சிவ பரத்துவத்தை நிலைநாட்டும் நூல்களாகத்  தச ஸ்லோகி என்பதையும், ஹரி-ஹர தாரதம்யம் என்ற 108 சுலோகங்கள் அடங்கிய நூலையும் இயற்றியருளினார்.
ஹரதத்தருக்குப் பதினெட்டு வயது வந்ததும், கமலாக்ஷி என்ற பெண்ணை அவருக்கு மணம் செய்துவித்தார்கள். அவருக்குத் தேவையான பொருள்களை சிவலிங்க பூபதி மன்னன் அவ்வப்போது அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

அன்றாட நியமங்களாகக் காவிரியில் நீராடுதல், கஞ்சனூர் அக்னீசுவரர் கோயில் தரிசனம், மற்றும் அருகிலுள்ள திருக்கோடிகா(வல்), (வட) திரு வாலங்காடு, திருவாவடுதுறை, (தென்) குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஆறு சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தல் என்று ஏழு ஸ்தலங்களையும் கால் நடையாகவே சென்று வழிபட்டு வந்தபிறகு, அதிதியுடன் போஜனம் செய்து வந்தார்.

 ஹரதத்தர் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்கள்

சப்த ஸ்தான யாத்திரை மகிமையை உணர்த்தியது: 

பல தலங்களைத் தரிசித்தவனாக உறையூர் சோழன் ஒருவன் கஞ்சனூரை அடைந்து சிவாலய தரிசனத்திகுப் பின் ஹரதத்தரின் வீட்டிகுச் சென்று அவரை வணங்கி, ” அடியேன் கயிலையைக் காண விரும்புகிறேன். அதற்கு ஒரு வழியைத் தேவரீர் கூறி அருள வேண்டும் ” என்று வேண்டினான். அதற்கு ஹரதத்தர், ” மன்னனே, முதலில் கஞ்சனூர் ஆலயத்தை வழிபட்டு விட்டுக் கால் நடையாகவே அருகிலுள்ள திருக் கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு அரை ஜாமத்திற்குள்ளாக மீண்டும் கஞ்சனூர் வந்து அக்நீசுவரரையும் கற்பகாம்பிகையையும் தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்தால் உடனே கயிலையை அடையலாம்” என்றார். மறுநாள் சோழன் குதிரையில் ஏறி, பின்னால் குடை பிடிப்பவன் ஓடி வர, அரை ஜாமத்திற்குள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கஞ்சனூர் திரும்பினான். அவனது வருகைக்காக ஹரதத்தர் கோயில் வாயிலில் காத்திருந்தார்.

கோயில் வாயிலை அடைந்ததும், குதிரையும், அதன் பின்னால் ஓடி வந்த குடை பிடிப்பவனும் மூர்ச்சித்து விழுந்தனர். அப்போது கயிலையிலிருந்து வந்த சிவ கணங்கள் அக்குதிரையின் ஆத்மாவையும் , குடை பிடிப்பவனது ஆத்மாவையும்  தாங்கள் கொண்டு வந்த விமானத்தில் ஏற்றிக்  கொண்டு கயிலைக்குச் சென்றனர். அதுபோல் தானும் கயிலை செல்ல இயலவில்லையே என்று வருந்திய சோழ மன்னனிடம் ஹரதத்தர், ”  அவ்விருவரும் கால் நடையாகவே சென்றதால் கயிலைக்குச் செல்ல முடிந்தது. நீயும் கால் நடையாகச் சென்றால் கயிலையை அடைவாய்” என்று அருளினார். அதன்படியே, சோழனும் மறுநாள் கால் நடையாகவே எழூர்களுக்கும் சென்று வந்தவுடன் விமானம் எறிக் கயிலையை அடைந்தான்.

அக்னியில் சமர்ப்பித்ததை அக்னீசுவரர் ஏற்றது:

ஒரு சமயம் சிவலிங்க பூபதி அக்நீசுவரருக்காகப் பட்டு வஸ்திரம் ஒன்றை அனுப்பி வைத்து அதனைத் தனது ஆசாரியராகிய ஹரதத்தர் மூலம் சுவாமிக்குச் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அந்த வஸ்திரத்தை ஹரதத்தர் தான் செய்த வேள்வியில் நெய்யில் நனைத்து ஈசுவரார்ப்பணமாகச்  செய்து விட்டார். அதனைக் கேள்விப்பட்ட சிவலிங்க பூபதி, அந்த வஸ்திரம்  சுவாமிக்குச் சார்த்தப்படாமல் அக்னிக்கு அளிக்கப்பட்டதே என்று மனம் வருந்தினான். சில தினங்களுக்குப் பின்னர் சிவலிங்கபூபதி கஞ்சனூர் வந்தபோது ஹரதத்தர் அவனை சுவாமி சன்னதிக்கு அழைத்துச் சென்று காட்டினார். ” பூபதி, நீ அளித்த வஸ்திரத்தை சுவாமி ஏற்றுக் கொண்டுள்ளதைப் பார்” என்று காட்டினார். அந்த வஸ்திரம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்த பூபதி, தன்  அறியாமையை உணர்ந்து ஆசிரியப் பெருமானின் திருவடிகளை வணங்கி அருள் பெற்றான்.

பசுக் கொலை செய்தவனுக்கு இரங்கிப் பிராயச்சித்தம் அருளியது:

கஞ்சனூரில் வாழ்ந்து வந்த தேவசன்மா என்ற பிராமணன் இரவு நேர இருட்டில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பசுக்கன்று இருப்பது தெரியாமல் அதன் மீது வைக்கோல் கட்டைப் போட்டு விட்டு இல்லம் திரும்பினான். மறுநாள் காலை அப்பசுங் கன்று வைக்கோல் பாரம் தாங்காமல் மூச்சு முட்டி  இறந்திருந்தது தெரிய வந்தது. உள்ளூர் அந்தணர்கள்,    ” பசுக்கொலைக்குப் பிராயச்சித்தமே கிடையாது” என்றார்கள். இதைக் கேட்டு மனம் உடைந்த தேவசன்மா , ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்ற போது, வாயில் படியில் தலை மோதியதால் வலி பொறுக்கமுடியாமல், ” சிவ சிவ  என்றான். நடந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஹரதத்தர், அவனைத் தேற்றி, ” வரூந்தாதே, சிவ என்று ஒரு முறை சொன்னதும், பசுவைக் கொன்ற பாவம் தீர்ந்து விட்டது. அடுத்த முறை சிவ என்று சொன்னதால் நிச்சயமாக மோக்ஷம் கிடைக்கும்” என்று ஆறுதலளித்து அனுப்பினார். ஆனால் ஹரதத்தர் அதனை நிரூபிக்க வேண்டும் என்று ஊர்க் காரர்கள் கூறவே, ஹரதத்தரும் அதற்கு இசைந்து, ” காவிரியில் நீராடிவிட்டு, ஒரு கைப்பிடி அருகம் புல்லோடு கோவிலுக்கு அவ்வந்தணர்களுடன் வருவாயாக” என்று தேவசன்மாவிடம் கூறினார்.

மறுநாள் காலை அக்னீசுவரர் சன்னதியை அனைவரும் அடைந்தனர். அப்போது அக்னீசுவரப் பெருமானைப் பாரத்து ஹரதத்தர் ”  ஒரு முறை சிவ என்றால் பசுக்கொலைப் பாதகம் தீரும் என்பதை நிரூபிக்க இங்குள்ள கல்லால் ஆன நந்தி இந்த அருகம் புல்லை யாவரும் காணும் படி உண்ண வேண்டும்” என்று பிரார்த்தித்தார். உடனே, அருகிலிருந்த கல் நந்தி உயிர்பெற்று அப்புல்லைத் தின்றது. உள்ளூர் வாசிகள் ஹரதத்தரை வணங்கிப்  பிழை பொறுக்க வேண்டினர்.

தண்டனையைத் தான் ஏற்றது :

ஒரு சமயம் அக்னீசுவரர் ஆலய அர்த்தஜாம பூஜைக்கு வராத கணிகை ஒருவளை ஆலய அதிகாரிகள் வெய்யிலில்  நிற்க வைத்துத் தண்டித்ததைப் பார்த்த ஹரதத்தர், பல தவறுகள் செய்த ஆலய அதிகாரிகளும் இவ்விதம் தண்டனைக்குரியவர்கள் தானே என்று நினைத்துத் தாமும் வெய்யிலில் புரண்டார். அப்போது அங்கு வந்த ஒரு சிவனடியார் அதன் காரணம் வினவ, இக் கணிகையை அதிகாரிகள் தண்டிக்கின்றார்கள் . கோயில் சொத்தை அபகரித்துள்ள இவர்களை அக்நீசுவரரே தண்டிக்க வேண்டும். அவர்களுக்கான தண்டனையை நானே ஏற்றுக் கொண்டேன்.” என்றார். இதைக் கேட்டுப்  புன்னகைத்துக் கொண்டே,  வந்த சிவனடியார் மறைந்து போனார். இதனைக் கண்ட அதிகாரிகள் ஹரதத்தரிடம் மன்னிப்பு வேண்டினர்.

நாய்க் குட்டி வடிவில் சிவனைக் கண்டது:

ஒரு நாள் ஹரதத்தரது சிவபூஜையைக் காண இருவர் வந்தனர். சிவலிங்கத்திற்கு சங்கால் அபிஷேகம் செய்யத் துவங்கும் போது ஒரு நாய்க் குட்டி அருகில் வரவே, ஹரதத்தர் அச்சங்கிலிருந்த தீர்த்தத்தைச்  சிறிது அந்த நாய்க்கு  அளித்தார். இப்படிச் செய்யலாமா என்று வந்தவர்கள் வினவ, அதற்கு  ஹரதத்தர்,  ” இப்போது நாய் வடிவில் வந்தது சிவ பெருமான். ” என்றார். அந் நாய் மீண்டும் அங்கு வந்தது. அதன் மீது  ஹரதத்தர் தீர்த்தத்தைத்  தெளிக்க அது சிவ லிங்கமாக மாறியது.  அதனை வந்தவர்களிடம் கொடுத்து நித்திய பூஜை செய்து வருமாறு அருளினார்.

புலையன் வடிவில் கண்ட காட்சி:  

ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள்     பேசிக்  கொண்டிருந்ததைக் கேட்டார் ஹரதத்தர். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டிக் காவிரியில் நீராடப் போவதாகக் கூறியவளைப்    புலையன் தடுத்து நிறுத்திவிட்டு, ” இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ இலிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் ” என்றான். இதனைக் கண்ட ஹரதத்தர் , பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி! என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியைத் தலை மீது வைத்துக் கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்நீசுவரரும் கற்பகாம்பிகையும் ஆவர். ” ஹரதத்தா, உனக்குத் திருவடி தீக்ஷை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் ” எனத்  திருவாய் மலர்ந்து அருளினான்  பெருமான்.

நாய் உண்டது பிரசாதமானது:

ஹரதத்தரது மனைவி கமலாக்ஷி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்தபோது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது. புலையன் சொன்னதுபோல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனைப் பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக் கருதினார்  ஹரதத்தர். அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர். சுவாமி அப்போது அசரீரியாக,      ” முன்பு உனக்குத் திருவடி தீக்ஷை தந்தோம். இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் ” என்று அருளினார். ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு,வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

வீட்டிலிருந்தோர் செயல்கள்:

ஹரதத்தரின் தாயார்  ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்தபோது ஒரு காளை  மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது. மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை  மாடு உண்ணுமாறு உதவினார். இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள். அப்போது அங்கு வந்த ஹரதத்தர், ” காளை  மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக்கலாமா? ” என்றார். சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின. வண்டிக்காரர் ஹரதத்தரிடம், ” பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார். வரும்  வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின” என்றார். அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு  ஹரதத்தர், தாயாரிடம் ” அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை  தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது ” என்றார்.

அரிசியைத் தின்ற நாயை மனைவி வெட்டியது:

ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள் . அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது. அதைக் கண்டு கோபம்கொண்ட கமலாக்ஷி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள் . நாயும் வெட்டுப்பட்டு இறந்தது. அதக் கேட்ட ஹரதத்தர் அங்குவந்து அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதினார். அதனால் அந் நாய்  நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

அக்நீசுவரரே ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்தது:

தனது தாயார் காளை  மாட்டைக்  கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும்,மனைவியார்  நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார். பிராயச்சித்தம் என்னவென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித்  தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு  நீராடச் சென்றார். வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச் சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன. பஞ்சட்சர  ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள். இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்டபோது அதற்கு அவர், ” தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்குச் சென்றீர்கள்?” என்றார். தம் உருவில் வந்து எழுதியது அக்நீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போதுதான் புலப்பட்டது.

மாசிலாமணீசுவரர் இடையன் உருவில் துணை வந்தது:

ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது. கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாகத் தெரியாததால்  சுவாமியை தியானித்தார். அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு  பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, ” நான் இவ்வூரில் வசிக்கும் இடையன். என் பெயர்  மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்” என்ரூ கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான். கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த ஆயன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன்  வீட்டிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார். அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு  தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாகக் கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான். இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறை யிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித்  தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறிவிட்டு மறைந்தருளினார்.

மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார். அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர். அப்போது பெருமான் அசரீரியாக, ” நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்து விட்டுக்  கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாகச் சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம்” என்றருளினார். இந்தச்  செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர் , திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார்.

தைப்பூச மகிமை உரைத்தது:

திரியம்பகர் என்பவர் ஒரு யதியின் ஆசிரமமடைந்து அந்த யதியின் விருப்பப்படி காசி யாத்திரை சென்றார். அப்போது அவருக்குப் பணிவிடை செய்து வந்த ஒருத்தி, திரியம்பகர் திரும்பி வருவதை யோகி அறிந்து விட்டார்  என்பதை உணர்ந்தாள். மணலில் அவர் எழுதுவது யாருக்கும் புரியாதபோது அவள், த்ரியம்பகருக்குச் சொல்லவேண்டிய ரகசியத்தை எழுதியிருக்கிறார் என்றாள். தான் வந்த போது யதியின் ஆவி பிரிந்ததை  அறிந்த திரியம்பகர், குருவுக்குக்  கிரியைகள் செய்து முடித்தார். அந்திம காலத்தில் யதி எழுதியது என்ன என்று அவர் அப்பெண்ணைக் கேட்டபோது ஒரு மாதம் கழித்துச் சொல்வேன் என்று கூறி அதற்குள் ஆசிரம சொத்துக்களைக் கைப்பற்றலானாள். பின்னர் கேட்டபோது “யதி பஞ்சாக்ஷரம் எழுதினார்  அதுவே ரகசியம்” என்று கூறினாள். அவளை விரட்டிய திரியம்பகர் அவளது தொடர்பால் ஏற்பட்ட பாவம் நீங்கத்  தல யாத்திரை செய்து வரும்போது திருவிடைமருதூரை அடைந்தார். வழியில் கஞ்சனூரை அடைந்து ஹரதத்தரை வணங்கினார் . ஹரதத்தரும் அவருக்குத் தனது மனையில் உணவளித்தார். பெண் தொடர்பு கொண்டவரோடு ஹரதத்தர் எதற்காக உணவருந்த வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் என்று கேட்டபோது, அவர்களிடம் ஹரதத்தர்,” பாவம் செய்ததது என்னவோ உண்மை தான். ஆனால் எப்போது இந்தத் தலத்திற்கு வந்து காவிரியில் தைப்பூச தீர்த்தவாரியில் நீராடினாரோ அப்போதே அவரது பாவங்கள் நீங்கப்பெற்று விட்டார்” என்றார். அந்தப்  பதிலைக் கேட்டவர்கள் திருப்தி அடையாததால் அவர்களுடன் ஹரதத்தர் மகாலிங்க சுவாமியின் சன்னதியை அடைந்து பிரார்த்தித்தபோது, சுவாமி அசரீரியாக, ” தைப்பூச நீராடல் எல்லாப் பாவங்களையும் நீக்கும். இது சத்தியம். இந்தத் துறவியின் பாவமும் நீங்கி விட்டது” என்று மும்முறை ஒலித்தருளினார். மனம் மகிழ்ந்த திரியம்பகரும் ஹரதத்தரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

முடவனான தங்கை மகனைக் காசிக்கு அனுப்பியது:

ஹரதத்தரின் தங்கை மகன் கங்காதரர் என்பவர் ஒரு பிறவி முடவர் . அவருக்குக் காசிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் ஹரதத்தர் அவரைக் கஞ்சனூரிலுள்ள பிரம தீர்த்தத்தில் மூழ்கச் செய்து அதன் பலனாகக்  காசியில் கரை ஏறுமாறு செய்தார். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த கங்காதரர், காசியில் விஸ்வநாதரையும் விசாலாக்ஷியையும் வழிபட்டு வந்தபோது ஆலயத்தின் வெளியில் ஒரு தனவந்தரையும் அவரது மனைவியையும் கண்டார். தான் கஞ்சனூரிலிருந்து வருவதாகக் கூறியதும், அத்  தனவந்தர், ஹரதத்தர் தனது நண்பர் என்றும் அவரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் படியும் சொல்லிவிட்டுகே  கங்காதரரை மணிகர்ணிகையில் மூழ்கச் சொன்னார். அவரும் அப்படியே செய்ய, கஞ்சனூரில் தற்போது மனியாங் குளம் என்று வழங்கப்படும் மணி கர்ணிகா குளத்தில் எழச் செய்தருளினார். நடந்தவற்றை அறிந்த ஹரதத்தர், மெய் சிலிர்த்து, ” கங்காதரா, அவர்கள் இருவரும் விசுவநாதரும் விசாலாட்சியும் தான். அவர் என்னை நண்பன் என்று சொன்னதற்கு எத்தனை புண்ணியம் செய்தேனோ”  என்று ஆனந்தப் பட்டார். பின்னர் கங்காதரர் ஹரதத்தரிடம் எல்லா சாஸ்திரங்களையும் கற்றார். ஹரதத்தர் இயற்றிய சுருதி சூக்த மாலைக்கு சிறந்த உரையையும் எழுதினர். எல்லோரும் அவரை, ” இளைய ஹரதத்தர்” என்று பாராட்டினர்.

ஹரதத்தர் கயிலாயம் சென்றது:

ரிஷபாரூடராகக்  கயிலாசநாதனான பரமேசுவரன் பார்வதி தேவியோடு ஹரதத்தருக்குக் காட்சி அளித்துக் கயிலாச பதம் தருவதாகவும் வேறு வரம் வேண்டினால் கேட்பாயாக என்றும் அருளினார். அப்போது ஹரதத்தர், ” சுவாமி, அடியேனது அண்டை வீட்டார் பதினான்கு பேரும் கைலாச பதம் பெற வேண்டும். அதோடு, அடியேன் உண்ட சே ஷத்தைச் சாப்பிட்டு வந்த நாய்க்கும் அப்பதம் கிடைக்க அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். இறைவனும் அப்படியே வரம் தந்தருளினான். கயிலையில் இருந்து விமானம் வந்தது அதில் ஹரதத்தரும், அண்டை வீட்டாரும் விநாயக  பூஜை செய்து வந்த ஒரு கிழவியும், சேஷத்தை உண்ட நாயும் ஏறிக்  கயிலாயத்தை அடைந்தனர்.

ஹரதத்தர் அருளிய நூல்கள்:

சிவபரத்துவ சுலோகங்கள்; சுலோக பஞ்சகம்; தச சுலோகி; ஹரி ஹர தார தம்மியம் சுருதி சூக்த மாலை என்பன.

துணை நின்ற நூல்: ” ஹரதத்தர் வரலாறு ” கஞ்சனூர் சிவபூசைச் செல்வர் இரா. கலியபெருமாள் பத்தர் அவர்களின் மணி விழா மலர்.

Posted in Latest News, More Shiva Devotees | Leave a comment