அகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள்

திருக் கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கி (ஐயர் மலை), திரு ஈங்கோய் மலை ஸ்தல மகாத்மியங்கள் 

                                                                   முன்னுரை

சிவபாதசேகரன்

                                                             சிவபாதசேகரன் 

                       திருவாதிரையான் திருவருட் சபை,சென்னை

திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அற்புதமான சிவஸ்தலங்கள் மூன்றை நாம் இப்போது சிந்திக்குமாறு திருவருள் கூட்டியுள்ளது. அம்மூன்றின் பெயர்களை நாவினால் உச்சரித்தல் சிறந்த சிவபுண்ணியத்தைத் தரும். நேரில் சென்று தரிசிப்பவர்கள் பெறும் பயன் அளவிட முடியாதது. அம மூன்று தலங்களாவன, கடம்பந்துறை ( குளித்தலை), திருவாட்போக்கி ( ஐயர் மலை ), மற்றும் திரு ஈங்கோய் மலை என்பனவாம். ஒரே நாளில் காலையில் கடம்பந்துறையையும் , உச்சி வேளையில் ஐயர் மலை எனப்படும் வாட்போக்கியையும், மாலையில் திரு ஈங்கோய் மலையையும் தரிசிக்க வேண்டும்.மூன்றுமே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் கடம்பந்துறையும், வாட்போக்கியும் காவிரியின் தென்கரையிலும்,ஈங்கோய் மலை வடகரையிலும் அமைந்துள்ளன.

இம்மூன்று தலங்களின் மான்மியங்களைப் பற்றிய சிறு நூல் ஒன்று நம் கைவசம் இருந்த போதிலும் தலங்களை நேரில் சென்று தரிசித்த பிறகே அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் காலம் தாழ்த்த வேண்டியிருந்தது. இத்தலங்களை இரண்டாவது முறையாகத் தரிசித்த பிறகே எழுதும் ஆவல் மேலோங்கியது. அப்புத்தகம் 1891 ம் ஆண்டே வெளியிடப்பட்டதால், தற்போது பக்கங்களைத் திருப்பினால் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்று தலங்களுக்கும் வடமொழியில் புராணம் இருந்ததாகவும், அதனை சிதம்பரம் பிரமஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்த்ரி என்பவரைக் கொண்டு வடமொழியில் அச்சிட்டதாகவும், பின்னர் மேற்படி சாஸ்த்ரி அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து, பதிப்பித்ததாகவும் அந்நூலில் காணப்படுகிறது.

                                                           கடம்பந்துறை

                    ( குளித்தலை என்று வழங்கப்படுகிறது ):

                                               20180217_080704

இருப்பிடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35 கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு.

புராணச் செய்திகள்:
நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டு                              இருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான்.

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை அவனது முடி மேல் வைத்து, ” காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக ” என்று அருளி, அம்மகாலிங்கத்தில் மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான்.

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள் சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக் கடம்பவனத்தை அடைந்தவுடன் அத்தோஷம் அவர்களை நீங்கியது.

ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, ” இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு ” என்கிறார்களே, அதன் மகிமையைத் தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார்.
கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது. அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீ ரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள்.

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, ” முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் ” என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.

முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதருக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இமையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.

சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெரும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம்.

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும் பாவ நிவர்த்தி பெறுகிறான்.

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதாயுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: ” விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத் தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம்.

இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் ” என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.

தலப் பாடல்கள் சில:
பண்ணின் மொழி கேட்கும் பரமனை
வண்ண நன் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் ; கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
                                               — திருநாவுக்கரசர் தேவாரம்

அழுகு திரிகுரம்பை ஆங்கு அதுவிட்டு ஆவி
ஒழுகும் பொழுது அறிய வொண்ணா — கழுகு
கழித்து உண்டு அலையா முன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு. 

                                             — ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் பாடியுள்ளார்.

****************
                                          திருவாட்போக்கி (ஐயர் மலை)

20180217_090404

 இரத்தினகிரி என்னும் ஐயர் மலை குளித்தலைக்கு அருகிலுள்ள சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து 1178 அடிகள் உயரத்தில் உள்ள சிவாலயத்தை அடைய 1017 படிகள் ஏறவேண்டும். வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் ரத்னகிரீசுவரரின் ஆலயத்தை அடையலாம். திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் பெற்ற இத்தலம் மிகவும் பழைமை வாய்ந்தது. சோழ,பாண்டிய,சாளுக்கிய,விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் சுமார் 50 உள்ளன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை வழியாக ஐயர் மலையை அடையலாம். மலைக் கோயிலாக இருப்பதால் காலை பத்து மணிக்கு மேல் தான் திறக்கிறார்கள். உச்சிக்கால பூஜை விசேஷமாகக் கருதப்படுவதால் அந்த நேரத்தில்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள்.

20180217_090244
தல வரலாறு:
ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக்கொண்டிருக்கும்போது, தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், ” முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் ” என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், ” யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் ” என்றார்.

20180217_090647

” பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தலம் உள்ளது. அங்கு வில்வ மர நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது. காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு, நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் ” என்றார்.

” இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதினாறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான்.

20180217_093339

பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தலத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய் எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணங்கித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சக்ஷர  ஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். ”

அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கி தினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி அவனுக்குக் காட்சி அளித்தார்.

ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகம்  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார்.

“தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை,சோமவாரம்,ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில் ” ஆயாகி ” என்னும்மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும்.

இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள் கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குப வர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக் குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்.”

நைமிசாரண்ய முனிவர்கள் கேட்குமாறு சூத மாமுனிவர் கூறலுற்றார்: ” முன்னாளில் வாயு பகவான் தன் வலிமையால் மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கிய குற்றம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.  “தபோவாய ” என்று தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தபடி வாயு தீர்த்தத்தில் நீராடி, சிவபிரானையும்,தேவியையும் வழிபட்டு வந்தான். அவ்வாறு வழிபட்டது துலா மாத பௌர்ணமி தினமாகும். ஒருநாள் பூஜை முடிவில் கைகளைச் சிரத்தின் மீது கூப்பியவாறு, ஆனந்தக்கண்ணீர் மல்க, ” தேவேச சம்போ, கங்காதரா,சங்கரா, தேவரீரது திருவடிகளை ஒருபோதும் மறவேன். வேதப்பொருளே, க்ஷேத்ரங்களுக்கு அதிபதீ , எனது பிழை பொறுத்து நற்கதி தர வேண்டும் ” என்று பிரார்த்தித்தான். அவனது பக்திக்கு இரங்கிய பெருமானும் உமாதேவியுடன் காட்சி அளித்து, வாயு தேவன் உலகெங்கும் வியாபித்து, ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன் ,தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார். ஐப்பசிப் பூரணையில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார்.

வாயு பகவான் பழி நீங்கப்பெற்ற வரலாற்றை நாரத முனிவர் மூலம் அறிந்த ஆதிசேஷன், தானும் மேருவை அசைத்த குற்றத்தில் ஈடுபட்ட பாவம் நீங்குமாறு, பூலோகத்தை அடைந்து, மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம்,பிரபாசம்,அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம் ,கேரள நாட்டைச் சார்ந்த சகிய மலை,ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம்,தர்மேசுவரம், வியாசாசிரமம்,சுசீந்திரம் , அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம் , அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் இரத்தினகிரியை அடைந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த வியாசர்,அத்திரி, பாரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர்,மயூரமுகர், ஆகிய முனிவர்களை வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன பெயரால் ஒரு தடாகத்தையும் ஏற்படுத்தி, ” நமோஸ்து ஸர்பேப்யோ ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, தீர்த்தத்தின் நடுவில் சங்கநிதி முதலாகிய நதிகளை ஆவாகித்து, “ப்ரம்மஜக்ஞானம் : எனத் துவங்கும் மந்திரத்தையும், பஞ்சாக்ஷரத்தையும் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து, சூரியன் ஸ்தாபித்த கங்காசல தீர்த்தத்தில் நூற்றெட்டுக் குடங்கள் கொண்டுவந்து பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை,நிவேதனம் ஆகியன செய்து, பலமுறை நமஸ்கரித்து கரங்களைக் கூப்பியவாறு, ” உலக நாயகனே, யானை உரி போர்த்த பரம்பொருளே, பிறை சூடிய பெருமானே, அர்த்தநாரீசப் பெருமானே, சிறியேனது குற்றம் பொறுத்தருளுவீராக. ” என்று பிரார்த்தனைகள் செய்தான். இதனால் மகிழ்ந்த ஈசனும், ” ஆதிசேஷனே, உனது குற்றத்தை நாம் நீக்கி அருளினோம். நீ பரிசுத்தனாவாய் ” எனத் திருவாய் மலர்ந்து அருளினார்.

சூதர் மேலும் கூறினார் ” சிவத்துரோகமானது இத்தலத்தில் மாத்திரமே நீங்கும். மந்திரங்களில் காயத்திரி போன்று , மேருவின் ஐந்து முடிகளுள் இரத்தினகிரி சிறந்ததாகும். பிற இடங்களில் செய்த பாவங்கள் இங்கு வந்தால் நீங்கும். ஆனால் இங்கு செய்யும் பாவம் இங்கு மட்டுமே நீங்கும். இங்கு நந்தவனம் அமைப்போரும், விளக்கிடுவோரும், சிவசாரூப்பியம் பெறுவர். இத்தலத்தைச் சிந்தித்தாலே,முக்தி பெறலாம். புரட்டாசி சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் நாக தீர்த்தமாடினால் சிவாபராதம் நீங்கலாம். சூரிய கிரகண காலத்தில் சூரிய புஷ்கரணியில் ஸ்நானம் செய்தால் குஷ்டம்,அபஸ்மாரம் போன்ற நோய்கள் நீங்கும். இங்கு தில தர்ப்பணம் செய்தால் நீண்ட காலம் கயிலையில் வாழலாம் .” என்றார்.

உதயாசலம் அருகில் மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை. அசரீரி வாக்கின்படி, தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச் சென்று வழிபட வேண்டி, அசனி என்பவனை சூரியன் அங்கு அனுப்பித் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சுவாமிக்கு பூஜைகள் நடத்துவித்தான். அதற்கு மகிழ்ந்த இறைவனும், அவ்வரக்கர்களை வெல்லும் வலிமையை சூரியனுக்கு அளித்தருளினார். சூரியனால் உண்டாக்கப்பெற்ற சூரிய தீர்த்தத்தில் சித்திரை பௌர்ணமியன்று காலையில் ” சசித்திரம் ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம். அந்த தினத்தில் சூரியன் உச்சி வேளையில் சுவாமியை பூஜை செய்வது ஆண்டு தோறும் நடை பெறுகிறது. சூரியதீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தால் எல்லா நலன்களும் பெற்று இறுதியில் சிவபிரானது திருவடி நீழலை அடையலாம். அயனம்,விஷு, கிரகண புண்ணிய காலங்களில் இதில் நீராடினாலும் சிவ சன்னதியில் தூப தீபம் இட்டாலும் எல்லா ஐசுவர்யங்களையும் பெறலாம். அங்கு செய்யப்படும் பித்ரு காரியங்களால் பித்ருக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்பா பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தளங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைதரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர் பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிறேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிறேதத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுகே கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது. கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை இடைவிடாமல் சூரிய அஸ்தமனத்திளிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ” கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம்,நமஸ்காரம். ” என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, ” பிரபோ, வேத ரகசியமான ஸ்ரீ பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். ” என்று பிரார்த்தனை செய்தார்.

அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார். பின்னர் பெருமானை வணங்கி, ” தேவரீர் மத்தியான காலத்தில் அடியேனுக்குத் தரிசனனம் தந்ததால் தங்களுக்கு மத்தியான சுந்தரர் என்ற திருநாமம் வழங்கப்பெற வேண்டும். இன்று முதல் பகலில் தரிசனம் செய்வோர் முக்தி பெற வேண்டும். ” என்ற வரம் வேண்டவே சுவாமியும் அவ்வாறே ஆகுக என வரமளித்தருளினார். கார்த்திகை ஞாயிறுகளில் அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, ” உதித்தம் ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தால் கொடு நோய்கள் அனைத்தும் நீங்கும். அம்மாதத்து செவ்வைக் கிழமைகளில் உதயத்தில் கோமயத்தைச் சிரச்த்திளிட்டு, : “அக்கினி முர்தா ” என்ற மந்திரத்தை உச்சரித்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் வறுமை நீங்கிப் பெரும் செல்வம் பெறலாம்.
வீரசேனன் என்ற சூரிய குலத்து அரசன் செங்கோல் செலுத்தி வந்த காலத்தில் அவனைக் காண ஒரு கபாலிகன் வந்தான். அரசனை உலோகாயுத மார்க்கத்தில் செலுத்தினான். அதன் விளைவாக வைதீகர்களையும்,அறிவுரை சொல்லும் மந்திரிககையும் புறக்கணித்தும்,ஆலய பூஜைகள் நடத்தத் தவறியும் அக்கிரமங்கள் செய்ததால் நாட்டில் மழை பெய்யவில்லை.

வேதங்களும்,சத்தியமும், தவமும், அச்சமும்,கற்பும் இருந்தால் தானே நாடு வளமடையும் ! இறைவனது பூஜை இல்லா து போகவே நாடு சுடுகாடு போல் ஆயிற்று. அரசனும் சின்னாட்களில் நோயால் வருந்தி இறந்தொழிந்தான். அவனை யமதூதர்கள் யமனது சொற்படி நரகத்தில் தள்ளினார்கள். அதன்பிறகு கண்டோர் அஞ்சும்படிப் பிரேத வடிவில் விந்திய மலையில் பசியோடு கிடந்தான்.

தனது தீவினையால் இது விளைந்ததே என துக்கப்பட்டான். அப்போது அங்கு உரோமச முனிவர் வருகை தந்தார். அவரைக் கொன்று தின்னும் எண்ணத்துடன் அவரை நோக்கி விரைந்து ஓடினான். ஆனால் முனிவரது தவத் தீ அவனை அருகில் செல்ல முடியாதபடி தடுத்தது. பிழைக்கு வருந்திய அவன்பால் கருணை கொண்ட முனிவர், ” கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய் ” என்றார். அதன்படி அவனும் அங்கு சென்று உரோமச தீர்த்தத்தில் மூழ்கி, ” யோ ப்ரம்ம ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தான். பின்னர் இரத்தினாசலப் பெருமானையும், சுரும்பார்குழலி அம்பிகையையும் தரிசித்தான். நிவேதனங்கள் செய்து, உள்ளன்புடன் பஞ்சாக்ஷர ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு இரங்கிய இறைவன், அவன் முன்னே காட்சி அளித்தருளினார். உடனே மன்மதனுக்குஒப்பான சரீரம் பெற்றான். அதுமுதல் அந்த தீர்த்தம் பிரேத மோக்ஷ தீர்த்தம் எனப்பட்டது. இதில் ஸ்நானம் செய்தால் பிரேதத்தன்மை ஒருபோதும் ஏற்படாது. அவனது வம்சத்தவர்களும் மோக்ஷம் பெறுவர்.

பாரத்வாஜ முனிவரும் இங்குத் தவம் செய்து தீர்த்தம் உண்டாக்கினார். வராக வடிவெடுத்த விஷ்ணுவும் அக்னி திசையில் தீர்த்தம் ஏற்படுத்தினார். அந்த விஷு தீர்த்தத்தில் ” விஷ்ணோர் லலாட ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்பவரது பிருக்கள் திருப்தி அடைவார்கள்.

இம்மலையின் வடபுறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள் ,மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள் . மகா நவமியில் அதில் நீராடினால் சர்வ சித்தி உண்டாகும். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் வாட் போக்கி என்று பெயர் வந்தது என்று கூறுவதும் உண்டு.

ஆரிய தேசத்து மன்னன் ஒருவன் தனது மணிமுடி காணாமல் போகவே அதைத் தேடிப் பல ஊர்களுக்கும் போய்விட்டு முடிவாக இங்கு வந்தான். அப்போது வயதான வேதியன் ஒருவன் இரத்தினகிரிப் பெருமானிடம் அது இருக்கிறது எனக் கூற, மன்னனும் மலை மீதேறி சன்னதியை அடைந்தான். அப்போது ஒரு அந்தணன் வடிவில் தோன்றிய இறைவன், காவிரி நீரால் இங்குள்ள கொப்பரையை நிரப்பினால் மணி முடி கிடைக்கும் என்று கூறவே அவ்வாறு செய்யலானான். ஆனால் எவ்வளவு முயன்றும் கொப்பரை நிரம்பவில்லை. கோபமுற்ற மன்னன் அவ்வந்தணன் மீது வாளை வீசவே, அந்தணன் சிவலிங்கத்தில் மறைந்து விட்டான். இலிங்கமூர்த்தியில் இருந்து இரத்தம் பெருகியதைக் கண்ட மன்னன் வாளால் தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அப்போது இறைவன் அங்குத் தோன்றி அரசனது வாளை விலக்கி (போக்கி )மணிமுடியைத் தந்து அருளினான். இதனால் ஏற்பட்ட தழும்பு சுவாமியின் திருமுடியில் இன்றும் உள்ளது. ஆரிய மன்னனின் உருவச் சிலையையும் கோயிலில் காணலாம்.

காஞ்சியைச் சேர்ந்த ஆயர் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன் தன் தலையைக் காணிக்கையாக்கினார். அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இவரது சன்னதியும் அதனருகில் வேப்ப மரமும் உள்ளன. மலைக்காவல் தெய்வமான இவருக்கு இரத்தினகிரீசுவரருக்குத் தீபாராதனை ஆனவுடன், தீபாராதனை செய்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பசும் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒருநாள் அப்பால் குடத்தை ஒரு காக்கை கவிழ்த்து விடவே, இந்த இடையர் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அப்போது இறைவன் அங்குத் தோன்றி, ” அன்பனே, வருந்த வேண்டாம். இம்மலை எனது வடிவே யாகும். அதன் மீது சிந்திய பால் என்னை அபிஷேகித்தது போலாகும் ” என்றருளி அக்காக்கையை எரித்தார். அது முதல் இங்குக் காக்கைகள் பறப்பதில்லை. காகம் அணுகா மலை என்றும் பெயர் வந்தது.
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை முழுவதும் மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அப்பாறை, ” பொன்னிடும் பாறை ” எனப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது

துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர்.

பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர்.

20180217_104527

மன்னர் வழிபட்டதால் சுவாமிக்கு இராஜ லிங்க மூர்த்தி எனப் பெயர் வந்தது. இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறாது என்பர். வறண்ட காலங்களில் சகுனக் குன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்வதாகக் கூறுவர்.
ஒவ்வொரு நாளும் 8 கி,மீ. தொலைவிலுள்ள காவிரி ஆற்று நீரைக் குடங்களில் நிரப்பித் தலை மீது சுமந்து வருகின்றனர் பன்னிரண்டாம் செட்டியார் மற்றும் சோழிய வெள்ளாளர் மரபினர்.

சிவலிங்கப்பெருமான் மீது அபிஷேகித்த பால் சில மணிகளில் தயிராக மாறி விடுகிறது. பிற தெய்வங்களுக்கு அபிஷேகிக்கப்படும் பால் அவ்வாறு தயிராவதில்லை.
சித்திரையில் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள நவத் துவாரங்கள் வழியாக சூரியன் தனது கிரணங்களால் பெருமானை வழிபடுகின்றான்.

மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்தஇந்த கிரியை வலம் செய்கின்றனர். . அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது.

                   திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசல மகாத்மியம்

20180218_100223

தலத்தின் இருப்பிடம்: திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கில் சுமார் 40
கி.மீ. தொலைவில் நாமக்கல் சாலையில் முசிறிக்கு அருகில்
காவிரியின் வடகரையில் உள்ளது  திரு ஈங்கோய் மலை என்னும்
தலம். திருஞானசம்பந்தராலும், நக்கீரராலும் பாடப்பெற்ற 
இத்தலத்தில் மாலையில்  வழிபாடு செய்வது சிறப்புடையது
என்பர்.

தல வரலாறு:
தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார  முனிவர்,
ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , ” தாங்கள் முன்பு
ஒருமுறை  மரகதாசல மகிமை பற்றிச் சுருங்கக் கூறி 
அருளியுள்ளீர்கள். தற்போது அதனை  விரிவாகக் கூறி 
அருளவேண்டும் ” என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான்  அத்தலப் பெருமையை  விரிவாகக்கூறியருளினார்.

முன்பொருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள்
யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்பொழுது 
ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு
மலையைச் சுற்றிக்கொண்டு , வாயுவைச் செல்ல முடியாைமல்
தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற  இடங்களில் உயிர்கள் மடியத்
தொடங்கின. தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய
ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு
செல்லும்படி வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு
வேகத்தோடு , அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள்
ஐந்தைப் பிடுங்கியவாறு தென்தி நோக்கிச் சென்றான் .
அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின.
அவற்றுள் ஒன்ரே மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின்
அம்சமாகப் புளியமரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும்
கூறுவர். பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப்  பூஜித்து
 சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான்.விஷ்ணுவும் இப் பெருமானை  வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும்  அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை , ரோமச ரிஷி
ஆகியோரும் நற்கதி பெற்றுள்ளனர்.

20180218_101943

பிரமன் வழிபட்டது : தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க
வேண்டி, கிருத யுகத்தில் பிரம தேவன் இத் தலத்தை  அடைந்து
பிரம  தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம  ஞானம் எனத் தொடங்கும்
மந்திரத்தை  ஜபித்தவனாக அதில் ஸ்நானம் பசய்து, திருப் புளிய
மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப்பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தானங்களின் 
பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள் இம்மை
மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர். இங்கு
சிவராத்திரி தினத்தில் பிரம  தீர்த்த ஸ்நானம் செய்து நறு
மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை  அர்ச்சித்தால், பிற 
தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு
ஒப்பாகும். புளியடியையும் பெருமானையும் ஒருங்கே  வலம்
வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள்.

முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள் . இங்கு  செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச்
செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளியவிருக்ஷத்தை  நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும். ஒ சனற்குமார  முனிவரே  ! இத்தலத்தை  நினைத்த நீரும்,அதன் மகிமைமயப் பகர்ந்த யானும் பாக்கிய சாலிகள் ஆனோம்.மறைகளின் முடிவாகவும், முக்தி தரவல்ல புண்ணிய
மூர்த்தியாகவும், கற்பகக் கொழுந்தாகவும் அடியார்கள் பொருட்டு நின்மலனாகிய பரமேசுவரன் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.” என்று நந்தியெம்பெருமான்  அருளிச் செய்தார்.

உமை வாம  பாகம் பெற்றது : .ஒரு காலத்தில், பிருங்கி
ரிஷியானவர் அம்பிகையைத் துதியாைமல் சிவனை  மட்டுமே 
துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை ,
மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப்
பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள்.
கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி ,
அவள் வேண்டியபடியே  தனது நீங்காத பாகமாக  ஏற்றதால்
அர்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும்
அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம்
வரவே , தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும்
சக்தியை  இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் ,தண்டம் போன்ற 
கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.

இத்தலம் போக -மோக்ஷங்களைத்  தரவல்லது.. கார்த்திகை  சுக்கிர
வாரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயாசான்னம் தானம்
செய்தால் , துன்பங்கள் எல்லாம் நீங்கும். நவராத்திரியின் போது
வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின்
பாதங்களை  அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள்.
இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில்
உயர்ந்தவனாவான். பெருமானையும் பெருமாட்டியையும் 
நியமத்துடன் வழிபட்டால், தம் பித்ருக்களுடன் சிவலோகத்தை 
அடையலாம். எனவே ,இத்தலப் பெருமையை அளவிட்டுச்
சொல்வது அரிது.

20180218_103558

அகத்தியர் வழிபட்டது :முனிவர்களால் வணங்கப்பெறும்
அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்கலோடு ஒரு
சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல்
திருவிராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது
வழியில் கடம்பவனத்மத அடைந்து காவிரியிலிருந்து
பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு
அபிபஷகம் செய்து,மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.
பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று,சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை  மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து,    மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேத கீதங்களால் துதித்து,ஆலயத்தை  மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார்.

மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து,
மரகதாசலத்தை  அடைந்தார். அந்த  வேளையில் கோயில்
அர்ச்சகர்கள் பூஜையை  முடித்துக் கொண்டு ,  ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர்,இறைவனைத் தரிசிக்க முடியாைல் போனது பற்றி  மிக்க வருத்தம் அடைந்தார். அப்போது  ஒரு அசரீரி  வாக்கு ஒலித்தது: “மா பாதகங்களையும் தீர்த்து அருள் புரியும் இம் மலையை அடைந்த பிறகும்  ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள்,மிருகங்கள் ஆகியவை  எந்தக் காலத்தில்இங்கு வந்தாலும் குற்றமில்லை . அவற்றிலும், காற்று,ஈ, பசு, அக்கினி, நெய் , நெல், யோகி ,அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும் அசுத்தமாவதில்லை.ஆகவே  நீ இப்போது ஈ உருவில் உள்ளே  சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால் அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறத்தில்  சர்ப்ப நதி வடிவில் இருக்கிறான் .  அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவதோடு மீண்டும் பழைய உருவையும் பெறுவார்கள். ஆகவே  நீ அத்தீர்த்தத்தை  நாடிச் சென்றால்  உன் கருத்து நிறைவேறும் ” என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர்,  இறைவனைத் துதித்தார். பெருமானது கருமணயினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக ஆகிக் காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில் ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறவேண்டி 
அகத்தியர் ஸ்நானம் செய்தவுடன் ஈயுருவம் பெற்றார்.
இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத்
தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார்.
பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன்
முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம்
சென்றடைந்தார் . அது முதல் இம் மலை, ஈங்கோய் மலை  எனப்
பெயர் பெற்றது. வைகாசி மாதப் பௌர்ணமியில் அகத்தியர் சித்திகள் பெற்றதால், அவ்வாறு அந்தநாளில் சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்து இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள்
நீங்கப் பெற்று, விரும்பிய சித்திகள் அனைத்தும் கைகூடும்.

வீதி ஹோத்திரன் முக்தி பெற்றது  : கிருத யுகத்தில் நர்மதை  நதி
தீரத்தில் அக்னிசர்மா  என்ற அந்தணர் சிவபிரானை  விதிப்படி
வழிபாட்டு வந்தார். அவருக்கு வ ீவீதிஹோத்திரன்,தூமகந்தன்,
மேதாவி ஆகிய மூன்று சீடர்கள் இருந்தனர். ஒருநாள்
அக்னிசர்மா ,வீதிஹோத்திரனை அழைத்து ” இன்று நான்
செய்யவிருக்கும் பிதுர் சிரார்தத்திற்குத் தேவையான பாலைக்
கொண்டு வருவாயாக ” என்றார்.வீதிஹோத்திரனும்  தனது
வீட்டிற்குச் சென்று தர்மகேது  என்னும் தனது தந்தையிடம் இது
பற்றிக் கூறினான். பிதாவானவர் வீட்டிலிருந்த பாலைக் குடத்தில்
நிரப்பி, ஆசிரியரிடம் கொடுக்குமாறு கூறினார். அக்குடத்தை 
எடுத்துச் செல்லும் வழியில் பசி மிகுந்ததால் வீதிஹோத்திரன்
குடத்திலிருந்த பாலை  ஒரு படி அளவு எடுத்துக் குடித்துவிட்டு
மீண்டும் குடத்தை  நீரால் நிரப்பிக் கொண்டு ஆசிரியரிடம்
சென்றான். இவனது செயலை  ஞானத்தால் அறிந்த ஆசிரியர்,
பிதுர் சிரார்தத்திற்குப் பழுது ஏற்பட்டதைக் கண்டு சினந்தவராக,
வீதிஹோத்திரனைப் பிசாசாக அலையுமாறு சபித்து விட்டு வேறு
பால் கொண்டு வந்து பிதுர் காரியத்தைச் செய்தார். 

பிசாசாகப் பலவிடங்களிலும் அமலந்த வ ீவீதிஹோத்திரனைக்
கண்ட கோபில முனிவர் அவனுக்கு இரங்கி, ” மிகக்
கொடியதான குருத் துரோகத்தை நீக்க வல்லது மரகதாசலம்
மட்டுமே ஆகும். எனவே  என்னோடு  அங்கு சென்று அங்குள்ள
சுதா புஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப்பெறுவாய்” என்றார்.
பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து எழுந்த திவலை 
இங்கு வந்து விழுந்த வேகத்தால் இத்தீர்த்தம் உண்டாயிற்று
கோபில முனிவரும் அவநை மரகதாசலத்திற்கு அமழத்துச்
சென்று சர்ப்ப நதி சங்கமத்திலும் சுதா புஷ்கரணியிலும் நீராடச்
செய்தவுடன் வீதிஹோத்திரனது பாவம் நீங்கியது. இத்தீர்த்தத்தை 
நினைப்பது  தவமாகும் . மார்கழியில் பௌர்ணமியும் திருவாதிரை நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் இதில் நீராடினால்
நற்பலன்கள் வாய்க்கும். இச்சரிதத்தைப் படிப்பவரும் கேட்பவரும்
பாவம் நீங்கப்பெற்றுச் சிவனருள் பெறுவர் .

தீர்த்தச் சிறப்பு ; தேவர்களும் அசுரர்களும் பாற்கதலைக் கடைந்தபோது  ஐராவதம், கற்பக விருக்ஷம்,காமதேனு , உச்சி
சிரவம், சிந்தாமணி ,மகாலக்ஷ்மி  ,அமிர்தம் ஆகியவை 
தோன்றின . ஆலகாலவிஷம் வெளிப்பட்டபோது  அனைவரும்
அஞ்சி ஓடிக் கயிலை  நாதனைச் சரண்  அடைந்தனர்.
உமாபதியான பரமேசுவரன் அனைவரிடமும் கருமண கூர்ந்து,
அவ்விஷத்தை  அருந்தி, கண்டத்தில் இருத்தி, நீலகண்டரானார்.
எழுந்த அமுதம் சிறு திவலைகளாகப் பல இடங்களில்
சிதறியபோது , ஒரு திவலை,மரகதமலையின்  வடபாகம் வந்து
வீ ழ்ந்தது. இப்புஷ்கரணியின் ஒரு துளி பட்டவுடன்  இறந்த
மிருகங்களும் ,பறவைகளும்கூட உயிர் பெற்றன . இத்தீர்த்தத்தை 
உட்கொண்டால் எல்லாவித விஷங்களும் நீங்கும். பிறவித்
துயரும் நீங்கும். இயமனும் இவ்விடத்தில் பொன்னி நதியின்
வடபுறம்  தீர்த்தம் அமைத்தான். அதில் மார்கழி மாத மங்கள 
வாரத்தில் நீராடினால் பிறவித்துயர் நீங்கும். பித்ருக்கள் மகிழ்வர்.
தீர்த்தக்கரையில் செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலன்
கொடுக்கும். அங்கு கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் மாக
மாத பௌர்ணமி  ஸ்நான விசேஷம் உடையது. 

வைகாசி பிரமோற்சவத்தில் சித்திரை  நக்ஷத்திரத்தில் நடை பெறும் தேர்த் திருவிழாவைக் காண்போர் பெரும் பலனை 
எவ்விதம் சொல்ல முடியும் ? முத்து பவளம், ஸ்படிகம்,
ருத்ராக்ஷம் ஆகியவற்றால் ஆன மாலைகளைப் பெருமானுக்கு 
அணிவித்தால் சாயுஜ்ஜிய பதவி அடையலாம். தைப்  பூசத்தன்று
காவிரியில் நீராடி, ஈங்கோய் மலையை வலம் வந்தால்
உலகையே  வலம் வந்த பலன் கிட்டும். அவ்வாறு வலம் வந்தால்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு அசுவமேத யாகம் செய்த பலமனப்
பெறலாம். சுவாமி சன்னதியில் விளக்கேற்றினால் பேரறிவும் 
ஞானமும் வாய்க்கும். நந்தவனம் அமைத்தல், கீதங்கள் பாடுதல்,
சிறிது பொழுதேனும் அம்மலையில்  இருத்தல் ஆகியவற்மைச்
செய்தால் இம்மை மறுமைப் பலன்கள் யாவும் சித்திக்கும்.
இத்தகைய தொண்டர்கள் சிவபெருமானுடைய  திருவடி நீழலைப்
பெற்று உய்வார்கள் என்பது சத்திய வாக்கு என்று உமரத்தார் சூத
மா  முனிவர்.

நவசித்தர்கள் பூஜித்தது: சூத மா முனிவர் மேலும் கூறலானார்:
” முனிவர்களே, இத்தல மகாத்மியம் இரகசியமானது. தெய்வ
இலக்கணைமானது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. நாத்திகர்களுக்கு இதனைப்  பகர்ந்தால் மிகுந்த பாவத்திற்கு ஏதுவாகும். மரகத மலைக்கு ஒன்பது சிகரங்கள் ஏற்பட்ட வரலாற்மை இப்போது கூறுவோம்.

ஒருசமயம் திருக் கயிலாயத்தில் இறைவனது சன்னதியில் சித்தர்கள் ஒன்பது பேர் சென்று  , தவம் செய்வதற்கு 
ஏற்ற இடம் எது என்று கேட்டவுடன் , அம்மையப்பரும், ” சித்தர்களே ,
காவிரியின் வடகரையிலுள்ள மரகத கிரிக்குச் சென்று தவம்
செய்தால் யாம் அங்கு உங்களுக்குக் காட்சி அளித்து வேண்டிய
வரங்களை  நல்குவோம். இனிமேல் அச்சிகரம் ஒன்பது
முடிகளைக் கொண்டு விளங்கும் ” என்றருளினார். அது கேட்டு
மகிழ்ந்த சித்தர்கள் மரகதாசலத்தை அடைந்தவுடன் அம்மலைக்கு 
ஒன்பது முடிகள் உண்டாயின. இந்த அற்புதத்தைக் கண்டு
அதிசயித்த சித்தர்கள், காவிரியில் நீராடி, சிவபிரானை 
இடை விடாது கருத்தில் இருத்திப் பன்னிரண்டு ஆண்டுகள் தவம்
செய்தனர். அதன்பிறகு, வில்வ இலைகள், வெட்சி, புன்னை ,
அரளி, மாதுளை ,மந்தாரை  கோங்கு , இலவு ஆகியவற்றால்
அர்ச்சித்து, பஞ்ச கவ்யங்களாலும், இளநீர்,சந்தனம் ஆகிய
அபிஷேகப் பொருள்களாலும் விதிப்படி பூஜித்தனர். பழ வகைகள்,
சித்திரான்னம், ஆகிய நிவேதனங்கள் செய்து, சத்ரம்,
சாமரம்,நிருத்தம்,கீதம்,தாம்பூலம் ஆகிய உபசாரங்கள் செய்து
பரம சிவனைத் தோத்திரம் செய்து வணங்கினார்கள்.

சித்தர்களின் தவத்திற்கு இரங்கி சிவபிரான் காட்சி தந்ததும்,
ஒன்பது சித்தர்களும் விழிகள் ஆனந்த நீர் பெருகக் கைகளை  
உச்சியில் கூப்பியவாறு, பரமனது பாத கமலங்களில் வீ ழ்ந்து
வணங்கித் தோத்திரம் செய்தனர். ” தேவாதி தேவா , மரகதாசல
நாயகா, ஞானமூர்த்தியே , பசுபதியே,   பரமயோகியே ,
மும்மூர்த்திகளுக்கும் மேலானவனே , புவனாதிபதியே , அன்பர்க்கு
அன்பனே , வாக்கும் மனமும் கடந்த ஆனந்த மயனே , கருணை 
வடிவே , பிரணவப் பொருளே  , நினது திருவடிகளை  வணங்கி
உய்ந்தோம் . உம்மையன்றிப் பிறிதொன்றையும் வேண்டோம் .
நின்னடிக்கு அபயம்” என்று பலவாறு போற்றினர். உலகோர் 
உய்யும் வண்ணம் இவ்வீங்கோய் மலையில் உமாதேவியாருடன்
தாங்கள் எப்பொழுதும் வீற்றிருக்க வேண்டும். இங்கு வரும்  அடியார்கள் வேண்டிய யாவும் சித்திக்க அருள வேண்டும்.
அறுபத்துநான்கு கலைகளும் எங்களுக்கு எளிதில் விளங்குமாறு 
கருணை  புரிய வேண்டும் ” என்று வரம் வேண்டினர். அவ்வாறே 
ஆகுமா று வரமருளிய பெருமான்  அவர்களை  எப்போதும் 
அம்மலையிலேயே இருக்குமாறு  திருவருள் புரிந்தார். அதனால்
அவர்கள் இன்னமும் அங்கு வசித்து வருகிறார்கள்  என்று
முனிவர் கூறினார்.

தேன் அபிஷேகச் சிறப்பு : முன்பு அகத்திய முனிவர் ,தானே ஈவடிவம் கொண்டு கானகம் சென்று, தேன் கூடுகளிலிருந்து பெற்ற தேனைக் கொண்டு வந்து பல்லாண்டுகள் மரகதாசலேசுவரரை 
அபிஷேகித்து வந்ததால் இம்மலை ஈங்கோய் மலை  எனப்பட்டது.
இப்பொழுதும் ஈ வடிவில் அகத்தியர், பெருமானைத் தேனினால்
எந்நாளும் அபிஷேகித்து வருகிறார்.வைகாசி,கார்த்திகை 
மாதங்களில் தேனபிஷேகம் செய்வதால் அவ்வாறு செய்பவர்க்கும் அவரது சுற்றத்தார்க்கும் அளவற்றபுண்ணியம் கிடைக்கும்.

முன்பு ஒரு குரங்கானது இங்குள்ள (திருப்) புளிய மரத்தின்
மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும் போது அங்கிருந்த தேனீக்கள்
வெளிப்பட்டு அக்குரங்கைக் கடித்தன. அத்துன்பத்தால்
குரங்கானது, தன் கையிலிருந்த தேன்கூட்டைக் கை  நழுவ
விட்டு விட்டது. அக்கூடானது அம்மரத்தின் கீழிருந்த
சிவலிங்கத்தின் மீது விழவே , அதில் இருந்த தேன்,
பெருமானுக்கு அபிஷேகமாயிற்று. அப்புண்ணியத்தால்
அக்குரங்கானது மறு பிறப்பில்  சுப்பிரபன் என்ற அரசனானது.
அரசனான சுப்பிரபன், தன் சுற்றமும் படையும்  உடன் வர
ஈங்கோய் மலையை அடைந்து  தானங்கள் பல செய்து,
திருப்பணிகள் செய்து, நாள் தோறும் சுவாமிக்குத் தேன்
அபிஷேகம் செய்வித்தான்,மற்றொரு சமயம் . சுப்பிரப
மகாராஜாவுக்கு எங்கு தேடியும்  தேன்கிடைக்காமல் போகவே,,
மனம் வருந்தித் தனது காதுகளை  வாளினால் அறுக்கத்
தொடங்கும்போது  ரிஷப வாகனனாய் மரகதாம்பிகையுடன்
இறைவன் காட்சி கொடுத்து அவனைக் கயிலையில் சிவ
கணங்களுக்கு அதிபன் ஆக்கினார். விண்ணவரும் மண்ணோரும் 
இவ்வதிசயத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்திரன் மந்திரோபதேசம் பெற்றது  : முன்னர் கௌதம  ரிஷியின்
சாபம் பெற்ற தேவேந்திரன் , நாணம் கொண்டு ஒரு வாவியினுள்
மறைந்திருந்தான். பின்னர் நாரதரின் அறிவுரைப்படி
மரகதாசலத்தை அடைந்து அங்கிருக்கும் அகத்திய முனிவரை 
வணங்கி, அவரிடம் மந்திரோபதேசம் பெற்றான் . அம்மந்திரம்
மா பாவியர் தியானித்தாலும் கொடிய பாவங்களையும் நீக்க
வல்லது. அதற்கு ரிஷி அகஸ்தியர். சந்தஸ், அனுஷ்டுப்.
தெய்வம், கிருபாசமுத்திரைாகிய மரகதாசல நாதர்.
அம்மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை  ஜபிக்குமாறு இந்திரனிடம்
அகத்தியர் கூறியருளினார். இந்திரனும் அதன்படியே , அதனைப்  பல்லாண்டுக் காலம் ஜபித்து வந்தான். அவனது
தவத்தைக் கண்ட இறைவன், அவன் முன்பு காட்சி
அளித்தருளினார். பரவசப்பட்டவனாய் இந்திரன், சிவபெருமானைத் தோத்திரம் செய்தான்: ஓ நின்மலா, நான்மறை முடிவே ,உலகங்களுக்கு அதிபதியே , ஒப்பற்ற பரம்பொருளே , பார்வதி நாதா, நின் பாதங்களைச் சரண் அடைந்தேன். கொடியேனது  பாவங்களைத் தாங்கள்தான் போக்கி அருளி நற்கதி தர வேண்டும்” என்று மனமுருகி வேண்டினான். சிரத்தின் மீது
கைகளை அஞ்சலி செய்தவனாக, ” பெருமானே,கௌதமரின்
சாபம் நிவர்த்தி ஆகவேண்டும். அடியேன் தேவரீரது  திருவடிகளை 
எக்காலமும் மறவாத வரம் தர வேண்டும். என்று பிரார்த்தனை 
செய்ய, பரனும் அவ்வாறு  ஆகட்டும் என வரம் அளித்தருளினான். பாவம் நீங்கப் பெற்ற  இந்திரன்,திருக்கோயிலைத்  திருப்பணி பலவும் செய்து, வைகாசி மாதத்தில் உற்சவமும் செய்வித்தான்.
அமாவாசை ,பௌர்ணமி  கிரகண காலங்கள், சிவராத்திரி,
பிரதோஷம், ஆகிய நாட்களில் மரகதாசல மூர்த்திக்குப்
பாலினால் அபிஷேகம் செய்விப்பது பெரும் புண்ணியமாகும் .
அது சிறந்த சிவபுண்ணியமாக  வளர்ந்து நற் பலன்களைக் கொடுக்கும்  என்பது சத்திய வார்த்தை  .”
” புண்ணியசாலிகளான முனிவர்களே , நாம் முன் செய்த
தவப்பயனால் இம்மகாத்மியத்தை  ஓதவும் .கேட்கவும் பெற்றோம் 
இதனை ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் படிப்போரும்
கேட்போரும் மரகதாசல மூர்த்தி திருவருளால் இம்மை
மறுமைப் பலன்கள் அனைத்தும் பெறுவர் . நிறைவாக,
பரமேசுவரனது திருவடி நீழலில் நீங்காது வீற்றிருந்து முக்தி
இன்பத்தைப் பெறுவர் .” எனக் கூறி  அருளினார்.
                                                        *********************

வானத்து உயர் தண் மதி தோய் சடைமேல்  மத்த மலர்  சூடித்
தேன் ஒத்தன மென்மொழியாள் மான் விழியாள் தேவி  பாகமாக்
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே .
                                        —- திருஞானசம்பந்தர் தேவாரம்
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்தேறி — நொடியுங்கால்
இன்னதென அறியா  ஈங்கோயே  ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை . 

              —– நக்கீரர் அருளிய திருஈங்கோய் மலை  எழுபது

********************************

Posted in Resources | Leave a comment

ஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி

161.jpgஓம் உமாயை நம:

ஓம் ஸம்மோஹின்யை நம:

ஓம் தேவ்யை நம:

ஓம் ஸு ந்தர்யை நம:

ஓம் புவனேச்வர்யை நம:

ஓம் ஏகாக்ஷர்யை நம:

ஓம் மஹா மாயையை நம:

ஓம் ஏகாங்க்யை நம:

ஓம் ஏக நாயக்யை நம:

ஓம் ஏக ரூப்யை நம:

ஓம்  மஹா ரூப்யை நம:

ஓம் ஸ்தூல சூக்ஷ்ம பராயிண்யை  நம:

ஓம் பிந்து ஸ்வரூபாயை நம:

ஓம் சர்வாண்யை  நம:

ஓம் ஸங்க்ராம    ஜனநாயக்யை நம:

ஓம் மனோன்மன்யை நம:

ஓம் பராசக்த்யை நம:

ஓம் யோகின்யை நம:

ஓம் பாபநாசின்யை நம:

ஓம்  மஹா சக்த்யை நம:

ஓம் மஹா கோராயை  நம:

ஓம்  பாப ஸங்கபயங்கர்யை நம:

ஓம் ஆபத் ஸக்யை நம:

ஓம் பத்ர காள்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் ஸர்வ மங்களாயை நம:

ஓம் பக்திப் ப்ரியாயை நம:

ஓம் மஹா கௌர்யை நம:

ஓம் ஹரி ப்ரஹ்மாதி காரிண்யை நம:

ஓம் சிவவிஷ்ணு ஸ்வரூபிண்யை நம:

ஓம் ப்ரஹ்ம  ரூபாயை நம:

ஓம் ஸுவாஸின்யை நம:

ஓம் புராண்யை நம:

ஓம் புண்ய ரூபாயை நம:

ஓம் ஸுபத்ராயை நம:

ஓம் ஷோட சாக்ஷர்யை நம:

ஓம் ருத்ராண்யை நம:

ஓம் பார்வத்யை நம:

ஓம்  தேவ்யை நம:

ஓம் சங்கரார்த்த சரீரிண்யை நம:

ஓம் நாராயண்யை நம:

ஓம் மஹா தேவ்யை நம:

ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

ஓம் ஸுமங்கலாயை நம:

ஓம் அகாராதி க்ஷகாராந்தாயை நம:

ஓம் அஷ்ட த்ரிம்சத் கலாத்மிகாயை நம:

ஓம் ஸப்த மாத்ரு கலாதர்யை நம:

ஓம் சரீரோத்பத்தி காரிண்யை நம:

ஓம் ஸகல ப்ராண பூதாத்மிகாயை நம:

ஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிண்யை நம:

ஓம் அகோரிண்யை நம:

ஓம் மஹா ரௌத்ர்யை நம:

ஓம் மஹா மங்கள நாயக்யை நம:

ஓம் மகா ஞானாய நம:

ஓம் மஹாஜ்யாயை நம:

ஓம் மஹேச்வர்யை நம:

ஓம் லோக மாத்ரே நம:

ஓம் பௌருஷ்யை நம:

ஓம் பத்ம ஸுகாயை நம:

ஓம் ஸத்யோஜாதாதிபாயை நம:

ஓம் ஸோம ஸுர்யாக்னி லோசநாயை நம:

ஓம் குணத்ராயை நம:

ஓம் தயா ரூப்யை நம:

ஓம் ஸாவித்ர்யை நம:

ஓம் புர பைரவ்யை நம:

ஓம் ஸிம்ஹாஸன மகா யோக்யாயை நம:

ஓம் வ்ருஷ பத்ம ஸுஹாஸின்யை நம:

ஓம் பர ப்ராஹ்ம்யை நம:

ஓம் ஸுராராத்யாயை நம:

ஓம் ப்ரஹ்ம விஷ்ணு வாதி பீடிகாயை நம:

ஓம் லோக ரக்ஷார்த்த நாயக்யை நம:

ஓம் நாக தாரிண்யை நம:

ஓம் இஷ்ட ஸித்யை நம:

ஓம் மஹா லோகாயை நம:

ஓம் அரூப்யை நம:

ஓம் பஹு ரூப்யை நம:

ஓம் த்ரிசூல – டமருக தாரிண்யை நம:

ஓம் பாசாங்குச வராபயாயை நம:

ஓம் கட்க -கேடக  தாரிண்யை நம:

ஓம் கட்கின்யை நம:

ஓம் சக்ர தாரிண்யை நம:

ஓம் விச்வ ரூப ஸ்தாபின்யை   நம:

ஓம் காலபஞ்ச ஷடாக்ஷர்யைநம:

ஓம் அசேஷ ஹ்ருதயா தேவ்யை நம:

ஓம் ஹ்ருல் லேகாயை நம:

ஓம் பரமேச்வர்யை நம:

ஓம் குமார்யை நம:

ஓம்  பிங்கலாயை நம:

ஓம் வாராஹ்யை நம:

ஓம் ஜன மோஹின்யை நம:

ஓம் துர்கா தேவ்யை நம:

ஓம் ஜகத்தாத்ர்யை நம:

ஓம் ஸமஸ்தைச்வர்ய நாயக்யை நம:

ஓம் அபர்ணாயை நம:

ஓம் பவான்யை நம:

ஓம் சண்டிகாயை நம:

ஓம் அம்பிகாயை நம:

ஓம் கால ஞானாயை நம:

ஓம் சிவ ஞானாயை நம:

ஓம் சிவ தர்ம பராயண்யை நம:

ஓம் காலோத்தர ஷடா தாராயை நம:

ஓம் சூக்ஷ்மாங்க்யை  நம:

ஓம் ப்ராண தாரிண்யை நம:

ஓம் வஜ்ர சக்தி தரா தேவ்யை நம:

ஓம் சரணாகத ரக்ஷக்யை நம:

ஸ்ரீ மஹா  தேவ்யை நம:

 

 

 

 

Posted in Temple Rituals, Worship | Leave a comment

காரைக்கால் அம்மையார்

karaikal ammaiyar2

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்பவரது மகனான பரம தத்தனே ஏற்றவன் எனக் கருதினான் . முதியோர்கள் பலரும் காரைக்கால் நகருக்கு வந்து, நீ பெற்றெடுத்த மகளைப் பரமதத்தனுக்கு மணம் புரிவாயாக என்றார்கள். அதன்படி, இருவீட்டாரும் சம்மதித்து, மண நாள் நிச்சயமானதும் மண ஓலை மூலம் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தனர்.
மயில் போன்ற புனிதவதியாருக்கும் காளை போன்ற பரமதத்தனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. தனது அருந்தவப்புதல்வியை நாகைக்கு அனுப்ப மனம் வராத தனதத்தன், தன் மகள் இல்லறம் நடத்துவதற்காகக் காரைக்கால் நகரிலேயே ஒரு அழகிய மாடம் அமைத்து அவ்விருவரையும் அங்கு வசிக்கச் செய்தான். இவ்வாறு திருமணம் இனிதே நடந்தேறியபின்னர் ,நிதிபதி, நாகைக்குத் திரும்பினான். புனிதவதியாரும், சிவபெருமான் கழலுக்கு அன்பு செய்தவராக, மனையறத்தின் பண்பு வழுவாமல் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.
karaikal ammaiyarசிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து,உணவு அருந்தச் செய்து,அவர்களுக்கு ஆடைகளும் ஆபரணங்களும் வழங்குவதை நியமமாகக் கொண்டிருந்தார் புனிதவதியார். அவ்வாறு இருந்து வரும் நாட்களில், ஒரு சமயம், பரமதத்தனிடம் இரு மாங்கனிகளைச் சிலர் கொண்டு வந்து தந்தனர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் அவர்களைத் தனது மனைக்கு அனுப்பி,அக்கனிகளைப் புனிதவதியாரிடம் கொடுக்குமாறு கூறினான். அதன்படி வந்தவர்களும்,அவ்விரு மாங்கனிகளையும் புனிதவதியாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
பன்னகாபரணரான சிவபெருமானது அடியார் ஒருவர் மிகுந்த பசியோடு அவ்வேளையில் புனிதவதியாரின் மனையை வந்தடைந்தார். அவரது பாதங்களை வணங்கி வரவேற்ற புனிதவதியார், அவரது பசியைத் தீர்க்கக் கருதி, விரைந்து இன்னமுதாக்கி , இதனை விடப் பேறு உண்டோ என்று கருதியவராக அடியாருக்கு அமுது செய்வித்தார். பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாரது இலையில் படைத்தார். பசி நீங்கிய அடியார், மனமகிழ்ந்து அவரது செயலை உவந்தவராக அங்கிருந்து நீங்கினார்.
வீடு திரும்பிய பரமதத்தன், நீராடிவிட்டு உணவருந்த வந்தபோது,கற்பில் சிறந்த புனிதவதியார் அவனுக்கு அமுது செய்விக்கலானார். அப்போது இலையில் இட்ட மாங்கனியை உண்ட வணிகன், தான் அனுப்பிய மற்றொரு கனியையும் இலையில் இடுமாறு பணித்தான். அதனைக் கொண்டு வருவார் போல அகன்ற புனிதவதியார் மனம் தளர்ந்து, இறைவனை வேண்டி நிற்கவே, பெருமான் அருளால் அவரது கைகளில் அதி மதுரமான மாங்கனி ஒன்று வந்தடைந்தது. அதனைப் பெற்று மிகவும் மகிழ்ந்த புனிதவதியார் உடனே விரைந்து சென்று கணவனாருக்கு அதனைப் படைத்தார். அக்கனியின் சுவை மூவுலகிலும் இருத்தல் அரியது என உணர்ந்த வணிகன், புனிதவதியாரிடம் அக்கனி எவ்வாறு கிடைத்தது என்று உரைக்குமாறு கேட்டான்.
கணவனிடம் உண்மையைக் கூறுவதே முறை என்று எண்ணியவராகப் புனிதவதியார் நடந்தவற்றை எடுத்துக் கூறி, ஈசன் திருவருளே மற்றொரு கனியையும் தந்தது என்றார். அப்படியாயின் அதே போன்ற அதிமதுரக் கனியை ஈசனிடம் மீண்டும் பெற்றுத் தருவாய் என்று பரமதத்தன் கூறினான். அதனைக் கேட்ட புனிதவதியார், இறைவனைத் துதித்து ” பெருமானே, இப்போது தேவரீர் மற்றோர் கனியை வழங்கி அருளாவிட்டால் எனது உரை பொய் என்று ஆகி விடுமே” என்றார். அப்போது,யாவரும் அதிசயிக்கத்தக்க வகையில், சிவனருளால் ஒரு மாங்கனி அவரது கையை வந்தடைந்தது . அதனைத் தன் கணவனாரிடம் புனிதவதியார் கொடுத்தவுடன் பரமதத்தன் அதனைப் பெற கைகளை நீட்டுயபோது, அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்ட வணிகன் அஞ்சி நடுங்கினான்.

புனிதவதியாரை மனைவியாகக் கருதாமல் தெய்வத்தன்மை வாய்ந்த பெண்ணாகக் கருதி, இனி மேல் அவருடன் கணவனாக வாழ்வது தகாது என எண்ணி ,. கடல் கடந்து வணிகம் செய்வது கொண்டு வருவதாகக் கூறி விட்டு, அங்கிருந்து நீங்கி, சுற்றத்தார் துணையுடன் மரக்கலம் ஒன்றைக் கொண்டு கடல் கடந்து ஒரு நாட்டிற்குச் சென்று பொருளீட்டிய பின்னர்,மீண்டும் நாகைக்கு வந்து சேர்ந்தான். அந்நகரில் மற்றோர் பெண்ணை விவாகம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றான். புனிதவதியாரைத் தெய்வமாகவே எண்ணிய வணிகன் அப்பெண் குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயரிட்டான்.
கடல் கடந்து வாணிபம் செய்து மீண்ட பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதாகச் செய்தி வரவே, புனிதவதியாரை அவரது சுற்றத்தார்கள் ஒரு சிவிகையில் ஏற்றி, பரமதத்தன் இருந்த நகருக்குக் கூட்டி வந்தனர். அவரது வருகையை அறிந்து அச்சம் அடைந்த வணிகன், தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் புனிதவதியாரது இருப்பிடத்தை அடைந்தான். புனிதவதியாரது புனித அடிகளில் மனைவி-குழந்தையுடன் வீழ்ந்து வணங்கி,” நாங்கள் வாழ்வது உமது அருளால்” என்றான்.
இவ்வாறு கணவன் ,தன்னை வணங்குவதைக் கண்டு அச்சமடைந்த புனிதவதியார் , சுற்றத்தார்கள் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றார். பரமதத்தனை ” இவ்வாறு செய்தல் தகுமோ ” எனக் கேட்டார்கள் சுற்றத்தார்கள். அவர்களை நோக்கிய வணிகன், ” இவர் மானுடர் அல்லர். பெரும் தெய்வம். ஆகவே அவரது பெயரையே இக்குழந்தைக்கு இட்டேன். நீங்களும் அவரைப் போற்றிப் பணியுங்கள்” என்றான். அதனைக் கேட்ட சுற்றத்தாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனைக் கண்ட புனிதவதியார், ” கணவனுக்கென்றே இவ்வுடலைத் தாங்கி வந்தேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட படியால்,, இவ்வுடலின் தசைப் பகுதியைக் கழித்து விட்டுப் பேய் வடிவம் அடியேன் பெறுமாறு அருள் செய்வாய்” என்று பரமனை வேண்டி நின்றார்.இறைவனும் அவர் வேண்டியபடியே புனிதவதியாரைப் பெண் பேயாக்கினார் மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவத்தை ஈசனருளால் பெற்றார். எங்கும் மலர் மழை பொழிந்தது. தேவ துந்துபிகள் முழங்கின. முனிவர்களும் வணங்கினர். சுற்றத்தார்கள் தொழுது வணங்கியவராக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
பேய் வடிவம் பெற்றவுடன் இறைவனை, அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணி மாலை ஆகிய துதிகளால் பரவினார் பேயார். பேய் வடிவைக்கண்டவர்கள் அஞ்சி விலகினார். தனது உருவம் எதுவாக இருந்தால் என்ன, ஆண்ட நாயகனாகிய சிவபெருமான் என்னை அறிவார். அதுவே போதுமானது என்ற சிந்தையுடன், கயிலாயத்தை நோக்கிச் சென்றார் புனிதமான வடிவம் பெற்ற மன நிறைவுடன். கால் நடை தளர்ந்ததும்,தலையினால் நடந்து சென்றார்.

அவ்வெள்ளி மலையின் மீது அவ்வாறு ஏறி வருவதைக் கண்ட உமாதேவியார், இறைவனை நோக்கி , இவ்வாறு பேய் வடிவில் வருவது யார் என்று வினவ, பெருமான், ” இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று உலகெலாம் அறியும் வகையில் அருளிச் செய்தார். இவ்வாறு கயிலாய நாதன் அருளவும், பேயார் , அவ்வருளை வியந்து போற்றி, ” அப்பா” என்று பிரானது செம்பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய அம்மையாரது அன்பு கண்டு மகிழ்ந்த இறைவன், ” நீ வேண்டும் வரம் யாது ” என்று வினவ, அம்மையார், ” தருமமே வடிவாகிய இறைவா, என்றும் குறையாத பேரன்பு கொண்டு உன்னை வழிபட வேண்டும். பிறவாத நிலை பெற வேண்டும். ஒருக்கால் பிறந்து விட்டாலும் உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் . நான் மகிழ்ச்சியோடு உன்னைப் பாடி, நீ ஆடும்போது உனது திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டினார் அம்மை.
karaikal ammaiyar4” தென்திசையில் உள்ள திருவாலங்காட்டுக்குச் சென்று அங்கு நாம் ஆடும் மாநடம் கண்டு ஆனந்தமயமாகி நம்மைப் பாடுவாய் ” என்று இறைவன் கட்டளை இட, காரைக்கால் அம்மை திருவாலங்காட்டைத் தலையினால் நடந்து சென்றடைந்தார். அங்கு அண்டம் உற நிமிர்ந்தாடும் அப்பனை மூத்த திருப்பதிகம் பாடி வணங்கினார். பின்னர் ஒரு பங்குனி சுவாதி நன்னாளன்று ஆடும் சேவடிக்கீழ் என்றும் இருந்து பாடிக்கொண்டிருக்கும் உயர் நிலை இறையருளால் பெற்றார்.
காரைக்காலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் மாங்கனி விழா மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஊரின் மத்தியிலுள்ள சிவாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது. புராணப்படி, காரைக்கால் அம்மையாரது வரலாறு இவ்விழாவின் போது நடத்திக் காட்டப்படுகிறது.
IMG_20170708_223628புனிதவதியார் ஜனனம், பரமத்தனுடன் திருமணம் ,புனிதவதியாரின் இல்லம் தேடி சிவனடியார் மிக்க பசியுடன் வருதல் போன்ற ஐதீக காட்சிகள் நமக்கு முன்னே தோன்றுகின்றன. பிக்ஷைக்காக பிக்ஷாடனரையே ஊர்வலமாக எழுந்தருளச் செய்கிறார்கள். பவழக் கால் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளும்போது வழி நெடுகிலும் மக்கள் தீபாராதனை தட்டில் மாம்பழங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கின்றனர். விழாவுக்கு வரும் பக்தர்களும் மாம்பழங்களைப் பிரசாதமாகப் பெற்று மகிழ்கின்றனர். சுவாமியை நோக்கியவாறே அதிகார நந்திகேசுவரரும் எழுந்தருளுகின்றார்.
அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பரமதத்தனைத் தரிசிக்கிறோம். அந்த இடம் காசுக் கடைத் தெரு என்ற வணிகர் வீதியாக அக்காலத்திலிருந்தே வழங்கப்பட்டது. மாலையில் பரமதத்தன் கடல் தாண்டி போவதற்காகப் பெரிய படகு ஒன்றை ஊர்வலமாக நகரில் எடுத்து வருகிறார்கள். மின் விளக்குகளால் அது அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இரவில் பரமதத்தனின் இரண்டாவது திருமணத்தை நடத்திக் காட்டுகிறார்கள். செய்தி அறிந்த புனிதவதியார் பல்லக்கில் எழுந்தருளுகிறார். பரமதத்தன், தன் மனைவி மக்களுடன் அவரை மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். விடியற்காலை சுமார் 5 மணி அளவில் காரைக்கால் அம்மையார் யாவரும் போற்றும் பேய் உருவத்துடன், ஊரிலுள்ள சிவாலயத்தை நோக்கி எழுந்தருளும்போது, சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. மங்கலான தீவர்த்தி ஒளியில் மட்டுமே அம்மையாரைத் தரிசிக்க முடியும்.

சிவாலயத்தை அடைந்ததும், அம்மையாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பரவசமாகின்றனர். வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் காணவேண்டிய அற்புத தரிசனம் இது. ஆதி அந்தமில்லா இறைவனின் திருநடனத்தின் போது அருகே இருந்து கீதம் பாடும் பேறு பெற்ற அம்மையின் மலர்த்தாள் போற்றுவோமாக.

Posted in Nayanmars | Leave a comment

Sri Bhairava Ashtothra Satha Namavali

137ABhairavar

ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவுக்கு முன்பும் ஓம் என்றும் இறுதியில் நம: என்றும் சேர்த்துக் கொள்ளவும்)
ஓம் ஆனந்த பைரவாய நம:
அஸிதாங்க பைரவாய
ருரு பைரவாய
சண்ட பைரவாய
க்ரோத பைரவாய
உன்மத்த பைரவாய
கபால பைரவாய
பீஷண பைரவாய
ஸம்ஹார பைரவாய
ஆனந்தாய
தீர்க்க பிங்களாய
ஜடாதராய
பிக்ஷா ஹராய
நர ஹராய
பீத வர்ணாய
பீம ரூபாய
பினாகப் ப்ருதே
உத்தண்ட பைரவாய
உக்ராய
விச்வ ரக்ஷஸே
புருஷாய
வடுகாய
வனவாஸாய
வரதாய
ஸந்துஷ்டாய
க்ஷேத்ர பாலகாய
ஸ்வர்ண ரூபாய
ஸுராத்யஷாய
ஸுராய
ஸ்வர்ண பூஷணாய
மஹா பைரவாய
கலா நாதாய
காலாந்தகாய
கங்காள தராய
கால பைரவாய
கல்பாந்த பைரவாய
கபால மாலா தராய
கபாலினே
கலி தோஷ ஹராய
சூலினே
தன்யாய
தயா நிதயே
தண்டபாணயே
கல்யாய
தானவாரயே
திகம்பராய
திவ்ய மூர்த்தயே
திவ்யாய
துஷ்ட நிக்ரஹாய
ஸவித்ரே
விஜயாய
விமலாய
வீராய
சூராய
ச்வ வாஹனாய
மார்த்தாண்ட பைரவாய
மான்யாய
மானதாய
மன்மத நாசனாய
தீர்த்த ப்ரதாய
தீர்த்த கராய
தீர்த்த வாஸாய
அபயப் ப்ரதாய
பகவதே
கண்ட பரசவே
ஸர்ப்ப பூஷாய
அலங்க்ருதாய
அமாயாய
ஆதித்ய ரூபாய
ஆதாம்ராய
அநு பூஜ்யாய
பராக்ரமாய
ஸர்வார்த்தி ஹராய
த்ரிநேத்ராய
ஸர்வேசாய
மதமாலாய
மாஷாபூப ப்ரியாய
மஹா க்ஷேத்ராய
லோக ரக்ஷகாய
லோகேச்வராய
மஹா பூத பயங்கராய
மஹா மான்யாய
ரக்த ரூபாய
ஜ்வாலா கேசாய
சதி தராய
ரக்தாங்காய
தேஜோமயாய
சூல ஹஸ்தாய
கபால மாலா பரணாய
பாச ஹஸ்தாய
டமருக தராய
த்ரிலோசனாய
கோலாஹல ப்ரியாய
பிசாச நாதாய
பால ரூபாய
பூத ரூபாய
நாக யக்யோபவீதாய
அபீஷ்ட ஸித்தி ப்ரதாய
அங்குச தராய
த்ரிசூல தராய
அஷ்ட புஜாய
தம்ஷ்ட்ரா தந்தாய
ஆக்யா சக்ராய
ஆகாச பைரவாய
ஜ்யோதி ரூபாய
வ்யோம ரூபாய
தனாக மயாய
கால பைரவாய
*******************************************
சீர்காழி ஆபதுத்தாரணர் மாலை
கலையாரும் முத்தமிழ்க் கல்வியும் யோகமும் காசினியில்
நிலையாகிய பெரும் செல்வமும் நீதியும் நீ அருள்வாய்
மலையாசன வடுகேச கங்காள வயிரவனே
தலைமாலை சூழ் புயனே காழி ஆபதுத்தாரணனே .
(கருத்து: முத்தமிழ்க் கல்வி, யோகம்,நிலையான செல்வம் , நீதி ஆகியவற்றை, தலை மாலை சூடிய தோள்களை உடைய வடுகேச,கங்காள வயிரவரும்,ஆபத்துத்தாரணரும் ஆகிய பைரவ மூர்த்தியே, தாங்கள் அருளிச் செய்ய வேண்டும்.)
**************************

Posted in Worship | Leave a comment

Upcoming festivals in April 2017

10.4.2017: Sri Bramarambika Sametha Sri Seshapureesuvara Swami Temple Maha Kumbabhishekam 9-10.30 AM

12.4.2017 : Karaikkal Ammaiyar Gurupuja at Thiruvalangadu,near Arakkonam 10 pm

4.6.2017: Sri Gnanambika sametha Sri Vata Mooleswara swami temple, Thiruvalampozhil, near Kandiyur/Thiruvaiyaru

Posted in TEMPLE NEWS | Leave a comment

ஹரதத்தர் சரித்திரம்

20161012_151625

முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், மாசியில் வரும் சப்தஸ்தான உத்சவத்திலும் பங்கு பெற வேண்டும். அவருக்கு உபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சில நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும்.
கஞ்சனூர் தல வரலாற்றுச் சுருக்கம்: மயிலாடுதுறையிலிருந்து காவிரின் வடகரையை ஓட்டிச் செல்லும் பூம்புகார்- கல்லணை  சாலையில் அமைந்துள்ளது கஞ்சனூர் என்ற தலம் ஆகும். இதற்குச் செல்வதற்கு  மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.  இங்குள்ள கற்பகாம்பிகா சமேத அக்னீசுவர சுவாமி ஆலயம் திருநாவுக்கரசு நாயனாரது  தேவாரத் திருப்பதிகம் பெற்றதாகும். அப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் ” கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு  உய்ந்தேனே ” என்ற மகுடத்துடன் நிறைவு பெறும்.

பவிஷ்யோத்ரபுராணம் இந்த ஸ்தலத்தைக் கம்ஸபுர  க்ஷேத்ரம் என்று குறிப்பிடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தர வாஹினியாகக்  காவிரி பாயும் இந்த பலாசவன  க்ஷேத்திரத்திற்கு   வந்து பராசர முனிவர் மஸ்யகந்தி என்ற செம்படவப் பெண்ணின் தொடர்பால் ஏற்பட்ட தோஷத்தை, மாசி மகத்தன்று அக்நீசுவரரின் தரிசனம் பெற்றதால் நீங்கப் பெற்றார். மாண்டவ்ய புத்திரர்களும் மாசி உத்தரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் பெற்றுத்  தங்களது பாவம் நீங்கப்பெற்றனர்.

கம்ஸன் என்ற பாண்டிய மன்னன் இத்தலத்தை வழிபட்டுத் தன்  நோய் நீங்கப்பெற்றவனாய் , திருப்பணிகள் பல செய்வித்தான்.
பிரமனுக்குத்   ( கஞ்சன், விரிஞ்சி ஆகிய பெயர்கள் பிரமனைக் குறிப்பன  ) திருமணக்கோலம் காட்டியதால் இத்தலம் கஞ்சனூர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

ஒருசமயம் பிரமனின் யாகத்தில் அதிகமான நெய்யைப்புசித்ததால் அக்னிக்குப் பாண்டு ரோகம் வந்தது. அதனை இங்கு வந்து போக்கிக் கொண்டதால் சுவாமிக்கு அக்னீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
சந்திரனும் இங்கு வழிபட்டுக் குருசாபம் நீங்கப்பெற்றான்.

 ஹரதத்தர் வரலாறு

திருமாலின் இருபத்தைந்தாவது அவதாரம் எனக் கருதப்படுபவர் ஹரதத்தர் ஆவார். ஒரு சமயம் தேவாசுரப் போரில் தோல்வியடைந்த அசுரர்கள் பிருகு முனிவரது ஆசிரமத்தைத்  தஞ்சமாக  அடைந்தனர். முனிவர் வெளியே சென்றிருந்தபடியால் அவரது மனைவி , அவ்வசுரர்களுக்கு இரங்கித் தஞ்சம் தந்து உதவினார். அசுரர்களைத் தேடிவந்த திருமால், முனிவரது ஆசிரமத்தை அடைந்து ரிஷி பத்தினியின் மீது சக்கராயுதத்தை ஏவ, அது அவளது சிரத்தை அறுத்தெறிந்தது. இதை அறிந்த முனிவர் விஷ்ணுவைப் பல ஜன்மங்கள் எடுக்குமாறு சபித்தார். பின்னர் பஞ்சாக்ஷர மகாமந்திரம் ஓதித் தன்  மனைவியின் உயிரைத் திரும்பப்பெற்றார்.  சாப விமோசனம் பெற வேண்டித் திருமால் சிவபிரானைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். அதனால் சிவபிரான் அவற்றுக்குக் காட்சி தந்தருளினார். ” நீ கஞ்சனூர் சென்று தவம் செய்தாயானால் மனம் சமாதானம் அடைவாய்” எனக் கூறியருளினார். அதன்படி விஷ்ணுவும் கஞ்சனூரை அடைந்து பல்லாண்டுகள் தவம் செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த ஈசன், ” எனது பக்தனது சாபத்தை முற்றிலும் மாற்றாமல் சற்றுக் குறைத்து அருளுவேன். அதாவது இருபத்தைந்து அவதாரங்கள் நீ எடுக்க வேண்டும். அவற்றுள் ஐந்தில் மட்டும் நீ கர்வம் அடையும் போது யாமே அதை அடக்கிக் கர்வ பங்கம் செய்வோம். பிற இருபது அவதாரங்களிலும் நீ எம்மை வழிபடுவாயாக. அப்போது உனக்கு அருளுவோம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். முன்னம் நீ திரிபுராதிகளிடம் நாரதருடன் சென்று வேத மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கத் தூண்டிய பாவத்தைப் போக்கிக் கொள்ள கஞ்சனூரில் வைஷ்ணவக் குடும்பத்தில் தோன்றி, சிவபரத்துவத்தை நிலை நாட்டி சைவக் கிரந்தங்களை இயற்றி, நிறைவாக நம்மை வந்து அடைவாயாக” என்று அருள் செய்தார்.

கஞ்சனூர் தக்ஷிணாமூர்த்தி சன்னதி

கஞ்சனூரில் வசித்த காசிப கோத்திரத்தில் பிறந்த வாசுதேவர் என்ற  வைஷ்ணவப் பிராமணரின் தவத்தினால் மகாவிஷ்ணுவே அவரது குமாரனாக சுதர்சனாவதாரமாக அவதரித்தருளினார். இதனால் பெரிதும் மகிழ்ந்த வாசுதேவர், குழந்தைக்கு  சுதர்சனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அக்குழந்தை சிறு வயதிலிருந்தே, சிவபக்தி மிக்கவனாகத் திகழ்ந்தான். அக்னீசுவரர் கோயிலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு வந்தான். அவனது இச்செயலை வாசுதேவர் எத்தனையோ தடுக்க முயன்றும் பலனில்லை. உணவு கொடுக்காமல் அவனை வருத்தலானார். இதனால் மனம் வருந்திய அப்பாலகன், அக்னீசுவரர் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியை அடைந்து தியானத்தில் ஈடுபட்டான். இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டபின் நிறைவாகச்  சோர்வுற்று நிலத்தில் சாய்ந்து விட்டான். அப்போது கணங்களும் முனிவர்களும் சூழ ரிஷபாரூடராக பார்வதி தேவியுடன் பரமேசுவரன் காக்ஷி  அளித்து, அவனைத் தேற்றி, அவனுக்கு எல்லாக் கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனைக் கருணையினால் நோக்கி, ” நீ உனது உடல் பொருள்,ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீக்ஷா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் ” என்று அருளிய பிறகுத தம்மை மறைத்தருளினார்.

வீட்டிற்குத் திரும்பிய ஹரதத்தர் தமக்குப் பெருமான் அருளியதைத் தாய்- தந்தையரிடம் எடுத்துரைத்தார். இதைக் கண்டு வாசுதேவருக்குக் கோபம் மூண்டது. அவ்வூரில் வாழ்ந்து வந்த வைஷ்ணவப் பிராமணர்கள் ஒன்று கூடி, ” இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், ” சிவனே பரம்பொருள்” என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும்” என்றார்கள்.

ஹரதத்தரும் அக்னீசுவரர் ஆலய தரிசனமும் ஆன்மார்த்த பூஜையும் செய்து விட்டுப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தீக் குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, ” வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ள படியால் இம்முக்காலி  அடியேனுக்குக் குளிரட்டும் ” என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும்   கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

பாண்டிய மன்னனான சிவ லிங்க பூபாலன் என்பவன்  ஹரதத்தரின் பெருமையைக் கேள்விப்பட்டுக் கஞ்சனூரை அடைந்து அவரை வணங்கி, அவருக்குக் கனகாபிஷேகம் செய்வித்தான். அவனது வேண்டுகோள் படி ஹரதத்தர் அவனுக்கு சிவ தீக்ஷை செய்வித்து, வட மொழியில் சுருதி சூக்த மாலை என்ற நூலை இயற்றி, அதற்கு அவனையே உரை எழுதும் படிப் பணித்தார். பாண்டிய மன்னனும் அந்நூலுக்கு சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம் என்ற உரையை எழுதி அதனைக் கஞ்சனூர் சென்று ஆசிரியப்பெருமானிடம் சமர்ப்பித்தான். ஹரதத்தர், சிவ பரத்துவத்தை நிலைநாட்டும் நூல்களாகத்  தச ஸ்லோகி என்பதையும், ஹரி-ஹர தாரதம்யம் என்ற 108 சுலோகங்கள் அடங்கிய நூலையும் இயற்றியருளினார்.
ஹரதத்தருக்குப் பதினெட்டு வயது வந்ததும், கமலாக்ஷி என்ற பெண்ணை அவருக்கு மணம் செய்துவித்தார்கள். அவருக்குத் தேவையான பொருள்களை சிவலிங்க பூபதி மன்னன் அவ்வப்போது அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

அன்றாட நியமங்களாகக் காவிரியில் நீராடுதல், கஞ்சனூர் அக்னீசுவரர் கோயில் தரிசனம், மற்றும் அருகிலுள்ள திருக்கோடிகா(வல்), (வட) திரு வாலங்காடு, திருவாவடுதுறை, (தென்) குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஆறு சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தல் என்று ஏழு ஸ்தலங்களையும் கால் நடையாகவே சென்று வழிபட்டு வந்தபிறகு, அதிதியுடன் போஜனம் செய்து வந்தார்.

 ஹரதத்தர் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்கள்

சப்த ஸ்தான யாத்திரை மகிமையை உணர்த்தியது: 

பல தலங்களைத் தரிசித்தவனாக உறையூர் சோழன் ஒருவன் கஞ்சனூரை அடைந்து சிவாலய தரிசனத்திகுப் பின் ஹரதத்தரின் வீட்டிகுச் சென்று அவரை வணங்கி, ” அடியேன் கயிலையைக் காண விரும்புகிறேன். அதற்கு ஒரு வழியைத் தேவரீர் கூறி அருள வேண்டும் ” என்று வேண்டினான். அதற்கு ஹரதத்தர், ” மன்னனே, முதலில் கஞ்சனூர் ஆலயத்தை வழிபட்டு விட்டுக் கால் நடையாகவே அருகிலுள்ள திருக் கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு அரை ஜாமத்திற்குள்ளாக மீண்டும் கஞ்சனூர் வந்து அக்நீசுவரரையும் கற்பகாம்பிகையையும் தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்தால் உடனே கயிலையை அடையலாம்” என்றார். மறுநாள் சோழன் குதிரையில் ஏறி, பின்னால் குடை பிடிப்பவன் ஓடி வர, அரை ஜாமத்திற்குள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கஞ்சனூர் திரும்பினான். அவனது வருகைக்காக ஹரதத்தர் கோயில் வாயிலில் காத்திருந்தார்.

கோயில் வாயிலை அடைந்ததும், குதிரையும், அதன் பின்னால் ஓடி வந்த குடை பிடிப்பவனும் மூர்ச்சித்து விழுந்தனர். அப்போது கயிலையிலிருந்து வந்த சிவ கணங்கள் அக்குதிரையின் ஆத்மாவையும் , குடை பிடிப்பவனது ஆத்மாவையும்  தாங்கள் கொண்டு வந்த விமானத்தில் ஏற்றிக்  கொண்டு கயிலைக்குச் சென்றனர். அதுபோல் தானும் கயிலை செல்ல இயலவில்லையே என்று வருந்திய சோழ மன்னனிடம் ஹரதத்தர், ”  அவ்விருவரும் கால் நடையாகவே சென்றதால் கயிலைக்குச் செல்ல முடிந்தது. நீயும் கால் நடையாகச் சென்றால் கயிலையை அடைவாய்” என்று அருளினார். அதன்படியே, சோழனும் மறுநாள் கால் நடையாகவே எழூர்களுக்கும் சென்று வந்தவுடன் விமானம் எறிக் கயிலையை அடைந்தான்.

அக்னியில் சமர்ப்பித்ததை அக்னீசுவரர் ஏற்றது:

ஒரு சமயம் சிவலிங்க பூபதி அக்நீசுவரருக்காகப் பட்டு வஸ்திரம் ஒன்றை அனுப்பி வைத்து அதனைத் தனது ஆசாரியராகிய ஹரதத்தர் மூலம் சுவாமிக்குச் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அந்த வஸ்திரத்தை ஹரதத்தர் தான் செய்த வேள்வியில் நெய்யில் நனைத்து ஈசுவரார்ப்பணமாகச்  செய்து விட்டார். அதனைக் கேள்விப்பட்ட சிவலிங்க பூபதி, அந்த வஸ்திரம்  சுவாமிக்குச் சார்த்தப்படாமல் அக்னிக்கு அளிக்கப்பட்டதே என்று மனம் வருந்தினான். சில தினங்களுக்குப் பின்னர் சிவலிங்கபூபதி கஞ்சனூர் வந்தபோது ஹரதத்தர் அவனை சுவாமி சன்னதிக்கு அழைத்துச் சென்று காட்டினார். ” பூபதி, நீ அளித்த வஸ்திரத்தை சுவாமி ஏற்றுக் கொண்டுள்ளதைப் பார்” என்று காட்டினார். அந்த வஸ்திரம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்த பூபதி, தன்  அறியாமையை உணர்ந்து ஆசிரியப் பெருமானின் திருவடிகளை வணங்கி அருள் பெற்றான்.

பசுக் கொலை செய்தவனுக்கு இரங்கிப் பிராயச்சித்தம் அருளியது:

கஞ்சனூரில் வாழ்ந்து வந்த தேவசன்மா என்ற பிராமணன் இரவு நேர இருட்டில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பசுக்கன்று இருப்பது தெரியாமல் அதன் மீது வைக்கோல் கட்டைப் போட்டு விட்டு இல்லம் திரும்பினான். மறுநாள் காலை அப்பசுங் கன்று வைக்கோல் பாரம் தாங்காமல் மூச்சு முட்டி  இறந்திருந்தது தெரிய வந்தது. உள்ளூர் அந்தணர்கள்,    ” பசுக்கொலைக்குப் பிராயச்சித்தமே கிடையாது” என்றார்கள். இதைக் கேட்டு மனம் உடைந்த தேவசன்மா , ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்ற போது, வாயில் படியில் தலை மோதியதால் வலி பொறுக்கமுடியாமல், ” சிவ சிவ  என்றான். நடந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஹரதத்தர், அவனைத் தேற்றி, ” வரூந்தாதே, சிவ என்று ஒரு முறை சொன்னதும், பசுவைக் கொன்ற பாவம் தீர்ந்து விட்டது. அடுத்த முறை சிவ என்று சொன்னதால் நிச்சயமாக மோக்ஷம் கிடைக்கும்” என்று ஆறுதலளித்து அனுப்பினார். ஆனால் ஹரதத்தர் அதனை நிரூபிக்க வேண்டும் என்று ஊர்க் காரர்கள் கூறவே, ஹரதத்தரும் அதற்கு இசைந்து, ” காவிரியில் நீராடிவிட்டு, ஒரு கைப்பிடி அருகம் புல்லோடு கோவிலுக்கு அவ்வந்தணர்களுடன் வருவாயாக” என்று தேவசன்மாவிடம் கூறினார்.

மறுநாள் காலை அக்னீசுவரர் சன்னதியை அனைவரும் அடைந்தனர். அப்போது அக்னீசுவரப் பெருமானைப் பாரத்து ஹரதத்தர் ”  ஒரு முறை சிவ என்றால் பசுக்கொலைப் பாதகம் தீரும் என்பதை நிரூபிக்க இங்குள்ள கல்லால் ஆன நந்தி இந்த அருகம் புல்லை யாவரும் காணும் படி உண்ண வேண்டும்” என்று பிரார்த்தித்தார். உடனே, அருகிலிருந்த கல் நந்தி உயிர்பெற்று அப்புல்லைத் தின்றது. உள்ளூர் வாசிகள் ஹரதத்தரை வணங்கிப்  பிழை பொறுக்க வேண்டினர்.

தண்டனையைத் தான் ஏற்றது :

ஒரு சமயம் அக்னீசுவரர் ஆலய அர்த்தஜாம பூஜைக்கு வராத கணிகை ஒருவளை ஆலய அதிகாரிகள் வெய்யிலில்  நிற்க வைத்துத் தண்டித்ததைப் பார்த்த ஹரதத்தர், பல தவறுகள் செய்த ஆலய அதிகாரிகளும் இவ்விதம் தண்டனைக்குரியவர்கள் தானே என்று நினைத்துத் தாமும் வெய்யிலில் புரண்டார். அப்போது அங்கு வந்த ஒரு சிவனடியார் அதன் காரணம் வினவ, இக் கணிகையை அதிகாரிகள் தண்டிக்கின்றார்கள் . கோயில் சொத்தை அபகரித்துள்ள இவர்களை அக்நீசுவரரே தண்டிக்க வேண்டும். அவர்களுக்கான தண்டனையை நானே ஏற்றுக் கொண்டேன்.” என்றார். இதைக் கேட்டுப்  புன்னகைத்துக் கொண்டே,  வந்த சிவனடியார் மறைந்து போனார். இதனைக் கண்ட அதிகாரிகள் ஹரதத்தரிடம் மன்னிப்பு வேண்டினர்.

நாய்க் குட்டி வடிவில் சிவனைக் கண்டது:

ஒரு நாள் ஹரதத்தரது சிவபூஜையைக் காண இருவர் வந்தனர். சிவலிங்கத்திற்கு சங்கால் அபிஷேகம் செய்யத் துவங்கும் போது ஒரு நாய்க் குட்டி அருகில் வரவே, ஹரதத்தர் அச்சங்கிலிருந்த தீர்த்தத்தைச்  சிறிது அந்த நாய்க்கு  அளித்தார். இப்படிச் செய்யலாமா என்று வந்தவர்கள் வினவ, அதற்கு  ஹரதத்தர்,  ” இப்போது நாய் வடிவில் வந்தது சிவ பெருமான். ” என்றார். அந் நாய் மீண்டும் அங்கு வந்தது. அதன் மீது  ஹரதத்தர் தீர்த்தத்தைத்  தெளிக்க அது சிவ லிங்கமாக மாறியது.  அதனை வந்தவர்களிடம் கொடுத்து நித்திய பூஜை செய்து வருமாறு அருளினார்.

புலையன் வடிவில் கண்ட காட்சி:  

ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள்     பேசிக்  கொண்டிருந்ததைக் கேட்டார் ஹரதத்தர். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டிக் காவிரியில் நீராடப் போவதாகக் கூறியவளைப்    புலையன் தடுத்து நிறுத்திவிட்டு, ” இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ இலிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் ” என்றான். இதனைக் கண்ட ஹரதத்தர் , பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி! என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியைத் தலை மீது வைத்துக் கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்நீசுவரரும் கற்பகாம்பிகையும் ஆவர். ” ஹரதத்தா, உனக்குத் திருவடி தீக்ஷை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் ” எனத்  திருவாய் மலர்ந்து அருளினான்  பெருமான்.

நாய் உண்டது பிரசாதமானது:

ஹரதத்தரது மனைவி கமலாக்ஷி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்தபோது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது. புலையன் சொன்னதுபோல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனைப் பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக் கருதினார்  ஹரதத்தர். அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர். சுவாமி அப்போது அசரீரியாக,      ” முன்பு உனக்குத் திருவடி தீக்ஷை தந்தோம். இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் ” என்று அருளினார். ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு,வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

வீட்டிலிருந்தோர் செயல்கள்:

ஹரதத்தரின் தாயார்  ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்தபோது ஒரு காளை  மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது. மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை  மாடு உண்ணுமாறு உதவினார். இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள். அப்போது அங்கு வந்த ஹரதத்தர், ” காளை  மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக்கலாமா? ” என்றார். சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின. வண்டிக்காரர் ஹரதத்தரிடம், ” பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார். வரும்  வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின” என்றார். அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு  ஹரதத்தர், தாயாரிடம் ” அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை  தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது ” என்றார்.

அரிசியைத் தின்ற நாயை மனைவி வெட்டியது:

ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள் . அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது. அதைக் கண்டு கோபம்கொண்ட கமலாக்ஷி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள் . நாயும் வெட்டுப்பட்டு இறந்தது. அதக் கேட்ட ஹரதத்தர் அங்குவந்து அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதினார். அதனால் அந் நாய்  நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

அக்நீசுவரரே ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்தது:

தனது தாயார் காளை  மாட்டைக்  கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும்,மனைவியார்  நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார். பிராயச்சித்தம் என்னவென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித்  தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு  நீராடச் சென்றார். வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச் சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன. பஞ்சட்சர  ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள். இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்டபோது அதற்கு அவர், ” தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்குச் சென்றீர்கள்?” என்றார். தம் உருவில் வந்து எழுதியது அக்நீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போதுதான் புலப்பட்டது.

மாசிலாமணீசுவரர் இடையன் உருவில் துணை வந்தது:

ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது. கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாகத் தெரியாததால்  சுவாமியை தியானித்தார். அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு  பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, ” நான் இவ்வூரில் வசிக்கும் இடையன். என் பெயர்  மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்” என்ரூ கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான். கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த ஆயன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன்  வீட்டிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார். அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு  தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாகக் கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான். இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறை யிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித்  தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறிவிட்டு மறைந்தருளினார்.

மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார். அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர். அப்போது பெருமான் அசரீரியாக, ” நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்து விட்டுக்  கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாகச் சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம்” என்றருளினார். இந்தச்  செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர் , திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார்.

தைப்பூச மகிமை உரைத்தது:

திரியம்பகர் என்பவர் ஒரு யதியின் ஆசிரமமடைந்து அந்த யதியின் விருப்பப்படி காசி யாத்திரை சென்றார். அப்போது அவருக்குப் பணிவிடை செய்து வந்த ஒருத்தி, திரியம்பகர் திரும்பி வருவதை யோகி அறிந்து விட்டார்  என்பதை உணர்ந்தாள். மணலில் அவர் எழுதுவது யாருக்கும் புரியாதபோது அவள், த்ரியம்பகருக்குச் சொல்லவேண்டிய ரகசியத்தை எழுதியிருக்கிறார் என்றாள். தான் வந்த போது யதியின் ஆவி பிரிந்ததை  அறிந்த திரியம்பகர், குருவுக்குக்  கிரியைகள் செய்து முடித்தார். அந்திம காலத்தில் யதி எழுதியது என்ன என்று அவர் அப்பெண்ணைக் கேட்டபோது ஒரு மாதம் கழித்துச் சொல்வேன் என்று கூறி அதற்குள் ஆசிரம சொத்துக்களைக் கைப்பற்றலானாள். பின்னர் கேட்டபோது “யதி பஞ்சாக்ஷரம் எழுதினார்  அதுவே ரகசியம்” என்று கூறினாள். அவளை விரட்டிய திரியம்பகர் அவளது தொடர்பால் ஏற்பட்ட பாவம் நீங்கத்  தல யாத்திரை செய்து வரும்போது திருவிடைமருதூரை அடைந்தார். வழியில் கஞ்சனூரை அடைந்து ஹரதத்தரை வணங்கினார் . ஹரதத்தரும் அவருக்குத் தனது மனையில் உணவளித்தார். பெண் தொடர்பு கொண்டவரோடு ஹரதத்தர் எதற்காக உணவருந்த வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் என்று கேட்டபோது, அவர்களிடம் ஹரதத்தர்,” பாவம் செய்ததது என்னவோ உண்மை தான். ஆனால் எப்போது இந்தத் தலத்திற்கு வந்து காவிரியில் தைப்பூச தீர்த்தவாரியில் நீராடினாரோ அப்போதே அவரது பாவங்கள் நீங்கப்பெற்று விட்டார்” என்றார். அந்தப்  பதிலைக் கேட்டவர்கள் திருப்தி அடையாததால் அவர்களுடன் ஹரதத்தர் மகாலிங்க சுவாமியின் சன்னதியை அடைந்து பிரார்த்தித்தபோது, சுவாமி அசரீரியாக, ” தைப்பூச நீராடல் எல்லாப் பாவங்களையும் நீக்கும். இது சத்தியம். இந்தத் துறவியின் பாவமும் நீங்கி விட்டது” என்று மும்முறை ஒலித்தருளினார். மனம் மகிழ்ந்த திரியம்பகரும் ஹரதத்தரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

முடவனான தங்கை மகனைக் காசிக்கு அனுப்பியது:

ஹரதத்தரின் தங்கை மகன் கங்காதரர் என்பவர் ஒரு பிறவி முடவர் . அவருக்குக் காசிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் ஹரதத்தர் அவரைக் கஞ்சனூரிலுள்ள பிரம தீர்த்தத்தில் மூழ்கச் செய்து அதன் பலனாகக்  காசியில் கரை ஏறுமாறு செய்தார். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த கங்காதரர், காசியில் விஸ்வநாதரையும் விசாலாக்ஷியையும் வழிபட்டு வந்தபோது ஆலயத்தின் வெளியில் ஒரு தனவந்தரையும் அவரது மனைவியையும் கண்டார். தான் கஞ்சனூரிலிருந்து வருவதாகக் கூறியதும், அத்  தனவந்தர், ஹரதத்தர் தனது நண்பர் என்றும் அவரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் படியும் சொல்லிவிட்டுகே  கங்காதரரை மணிகர்ணிகையில் மூழ்கச் சொன்னார். அவரும் அப்படியே செய்ய, கஞ்சனூரில் தற்போது மனியாங் குளம் என்று வழங்கப்படும் மணி கர்ணிகா குளத்தில் எழச் செய்தருளினார். நடந்தவற்றை அறிந்த ஹரதத்தர், மெய் சிலிர்த்து, ” கங்காதரா, அவர்கள் இருவரும் விசுவநாதரும் விசாலாட்சியும் தான். அவர் என்னை நண்பன் என்று சொன்னதற்கு எத்தனை புண்ணியம் செய்தேனோ”  என்று ஆனந்தப் பட்டார். பின்னர் கங்காதரர் ஹரதத்தரிடம் எல்லா சாஸ்திரங்களையும் கற்றார். ஹரதத்தர் இயற்றிய சுருதி சூக்த மாலைக்கு சிறந்த உரையையும் எழுதினர். எல்லோரும் அவரை, ” இளைய ஹரதத்தர்” என்று பாராட்டினர்.

ஹரதத்தர் கயிலாயம் சென்றது:

ரிஷபாரூடராகக்  கயிலாசநாதனான பரமேசுவரன் பார்வதி தேவியோடு ஹரதத்தருக்குக் காட்சி அளித்துக் கயிலாச பதம் தருவதாகவும் வேறு வரம் வேண்டினால் கேட்பாயாக என்றும் அருளினார். அப்போது ஹரதத்தர், ” சுவாமி, அடியேனது அண்டை வீட்டார் பதினான்கு பேரும் கைலாச பதம் பெற வேண்டும். அதோடு, அடியேன் உண்ட சே ஷத்தைச் சாப்பிட்டு வந்த நாய்க்கும் அப்பதம் கிடைக்க அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். இறைவனும் அப்படியே வரம் தந்தருளினான். கயிலையில் இருந்து விமானம் வந்தது அதில் ஹரதத்தரும், அண்டை வீட்டாரும் விநாயக  பூஜை செய்து வந்த ஒரு கிழவியும், சேஷத்தை உண்ட நாயும் ஏறிக்  கயிலாயத்தை அடைந்தனர்.

ஹரதத்தர் அருளிய நூல்கள்:

சிவபரத்துவ சுலோகங்கள்; சுலோக பஞ்சகம்; தச சுலோகி; ஹரி ஹர தார தம்மியம் சுருதி சூக்த மாலை என்பன.

துணை நின்ற நூல்: ” ஹரதத்தர் வரலாறு ” கஞ்சனூர் சிவபூசைச் செல்வர் இரா. கலியபெருமாள் பத்தர் அவர்களின் மணி விழா மலர்.

Posted in Latest News, More Shiva Devotees | Leave a comment

Saving a Cow

Sivapathasekaran

20161014_101223

It so happens that the Almighty makes us to realise that we are blessed to serve Him. We come to know about this fact however we excel in executing our plans. Many times we miss the goals for unknown reasons. We are thrilled when we are blessed so suddenly even though we are not aiming to do a particular service. This is what exactly happened when the milk vendor knocked our doors last week and pleaded for our help to save a cow which was scheduled to reach the butcher’s hands the very next day.

The request for financial help came at a short notice. It was at that time I remembered the assistance made by a well wisher who donated an amount to be gifted for the protection of cows. This contribution came some six months back. Though he was anxious to know where the assistance was utilised, a decision could not be taken at that time for reasons, not known to me.But I was certain that the delay was made purposefully for a genuine reason to be known later.

As it was my habit to check the genuineness of the information provided, I paid a visit to his cattle shed , about 1 km from my place. It was on the banks of a river which had turned out to be the carrier of drainage wastes. The shed housed 13 cows and the new entrant was seen tied at a separate place near the shed. When I was convinced that he owned the cows and supplying milk regularly to his customers, I handed over the financial help to him with the request that the animal would be taken utmost care. I returned home with the satisfaction that the life of the Cow was extended this way. I looked at Her before leaving the shed. She looked at me for quite some time, perhaps gratefully.

I wrote to my friend who contributed for the protection of Cows by narrating the story with the picture of the animal thus saved. Pat came the reply that it was incidentally his birthday and there could not be a better gift than this. I once again thanked The Almighty to bless Ardhra Foundation to serve in this manner.

Posted in News | 1 Comment

அம்பரும் அம்பர் மாகாளமும்

Ambar4

பிரமபுரீசுவரர் ஆலயம், அம்பர்

சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட்சபை, சென்னை.

முன்னுரை:அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல் என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன் அருகிலுள்ள அம்பரையும்     நாம்  தரிசிக்கலாம்.
                                                                               அம்பர்
சங்க நூல்களான புறநானூறு , நற்றிணை மற்றும் திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம் அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.
தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே – பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .
என்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.

Ambar1

அம்பர் ஆலய பிராகாரம்

தலப்பெயர்கள்: மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.
Ambar (5)மூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால், அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் , பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
தீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல தீர்த்தம் ஆகியவை .
ஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.

Ambar3

அம்பர் ஆலய ராஜ கோபுரமும் நந்தியும்

கோயில் அமைப்பு: அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.

தென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.
கன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

Ambar (7)

திருஞானசம்பந்தர் அருளிய அம்பர் தேவாரத் திருப்பதிகக் கல்வெட்டு 

மாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர் பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

Ambar2

சமயாசாரியர்கள்

சுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.
கட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.
தல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள் வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார். நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:
” இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா? என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று… ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது.” இப்புராணம் 15 படலங்களையும் 1007 செய்யுட்களையும் கொண்டது.
சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச் சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.

இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்.
பிரமன் அருள் பெற்றது: ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக நிலத்தை அகழ்ந்து பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, ” நீயே பரம்” எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.
பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, ” அன்னமாம் பொய்கை” எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினான்.
காளி வழிபட்டது: துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.
கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான் அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.
சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், ” நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்” எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.
விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.
மன்மதன் வழிபட்டது: தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.
நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.
அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன் கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப் பேரின்பமுற்றான்.
சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
தரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார் மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த
தேவாரத் திருப்பதிகம்

பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே. 1
மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 2

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.3

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 4

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே 5.

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 6

இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே. 7

எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே. 8

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 9

வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே. 10

அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 11
திருச்சிற்றம்பலம்
                                     

                                                              அம்பர் மாகாளம்

Ambar_Magalam 025

ராஜகோபுரமும் திருக்குளமும்- அம்பர் மாகாளம் 

அம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்றைப் பெற்ற தலம்.
கோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம்.

Ambar_Magalam (4)

இரண்டாவது கோபுர வாயில்,அம்பர் மாகாளம்

மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.
முதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.

Ambar_Magalam 023

சுவாமி விமானம், அம்பர் மாகாளம்

மூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்
வழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.
கல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

Ambar_Magalam 038

வைகாசி ஆயில்யம்- சுவாமி புறப்பாடு,அம்பர் மாகாளம்

திருவிழாக்கள்: வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது . திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகங்கள்:
பண் – குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 2

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. 3

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. 4

அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 5

பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 6

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 8

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 9

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே. 10

வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே. 01

அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்தலைப் படுவாரே. 02

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே. 03

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே. 04

நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே. 05

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே. 06

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே. 07

பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே. 08

உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே. 09

பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
பரவுதல் செய்வோமே. 10

மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே. 11
திருச்சிற்றம்பலம்
பண் – சாதாரி
திருச்சிற்றம்பலம்
படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 1

கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .2

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 4

புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 5

பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 6

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .7

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே. 8

வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 9

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே. 10

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல்                                      அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ     டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்னநம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்

Posted in Resources | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-4

திருநின்ற சருக்கம் 

  திருநாவுக்கரசு  நாயனார்

Appar swamigal

திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ

வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்

பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேருலகில்

ஒரு நாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

–பெரிய புராணம்

பெண்ணை ஆற்றினால் வளம் கொழிக்கும் திருமுனைப்பாடி நாடு சைவ நெறியை நிலை நிறுத்திய திருநாவுக்கரசு நாயனாரும் சுந்தர மூர்த்தி நாயனாரும் திரு அவதாரம் செய்த சிறப்பினை உடையது. அந்நாட்டிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில்  விருந்தோம்பும் பண்பு மிக்க புகழனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் மாதினியார் என்ற  அம்மையார். இவ்விருவருக்கும் பெண்மகவாகத் திருமகள் போல் தோன்றியவர் திலகவதியார் என்பவர். இவர் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பிறகு,   சைவம் தழைக்கவும், கலைகள் தழைக்கவும், உலகிருள் நீக்கும் கதிரவன் போல மருள் நீக்கியார் என்ற மகனார் அவதாரம் செய்தார். சுற்றத்தார்கள்  அனைவரும் மகிழ்வுற்று அக்குழந்தைக்காக மங்கல வினைகள் பலவும் செய்தனர். மருள்நீக்கியார் குழந்தைப்பருவத்தைக் கடந்தவுடன் புகழனார் அவருக்கு உரிய சடங்குகளைச் செய்வித்துக் கல்வி கற்கத் தக்க ஏற்பாடுகள் செய்தார். முன்னைத் தொடர்பினால் மருள்நீக்கியார் பல கலைகளை எளிதில் கற்றார்.

திலகவதியாருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆன தறுவாயில் அவரை மணம் புரிய விரும்பிக் கலிப்பகையார் என்பவர் பெரியோர்களைப் புகழனாரிடம்  அனுப்பி வைத்தார். தமது குலத்துக்கு ஒத்து இருந்தபடியாலும், சிவபக்தி உள்ளவராக இருந்ததாலும், அரசனுக்காகப் போர்க் களத்தில் வீரத்துடன்    போர் புரிபவராக இருந்ததாலும் குணநலன்கள் மிக்கவராகவும் இருந்ததாலும், அவரே தமது மகளுக்கு ஏற்றவர் என்று எண்ணிய புகழனார்,  கலிப்பகையாருக்குத் திலகவதியாரை மணம் செய்து கொடுக்க இசைந்தார்.

அந்த சமயம் வடநாட்டு அரசன் ஒருவன் தென்னாட்டின்மீது படை எடுத்து வரவே,அரசனது ஆணைப்படிப் போர்க் களம் சென்ற கலிப்பகையார், நீண்ட   நாட்கள் கடும்போரிட்டார். அதே நேரத்தில்,புகழனார் கொடிய நோயால் உயிர் நீத்தார். கற்புக்கரசியாகிய அவரது மனைவியார் தமது கணவருடன் உடன்   கட்டை ஏறினார். பெற்றோரை இழந்த திலகவதியாரும்,மருள் நீக்கியாரும் துயரக்கடலில் மூழ்கியவராய் அவர்களுக்கு இறுதிக் கடன்களைச்  செய்தனர்.

போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் சேரவே, திலகவதியார் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார். கலிப்பகையாருக்கென்று   தம்மை மணம் பேசியிருந்தபடியால், “அவருக்கே உரியவள் ஆயினேன். ஆகவே எனது உடலை அவரது உயிருடன் சேர்ப்பேன்” எனத் துணிந்தார்.    ,

இதைக் கேட்டுக் கலங்கிய மருள் நீக்கியார் தமது தமக்கையாரின் திருவடிகளில் வீழ்ந்து கண்ணீர் மல்கக் கதறினார். “ தாய் தந்தையரை இழந்த பிறகு   உம்மையே அவர்கள் வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தாங்களும் என்னைத் தனியாக விட்டு விட்டுச் சென்றால் நான் உயிர் வாழ  மாட்டேன்” என்றார். தம்பி உயிர் வாழ வேண்டும் என்ற தயாவினால், பொன்னும் மணியும் கொண்ட நாணை நீக்கி, அனைத்து உயிர்களிடமும் அன்பு   செலுத்துபவராகத் தவ வாழ்க்கை வாழ்வதை மேற்கொண்டார் திலகவதியார்.

சில காலங்கள் சென்ற பின் சமண மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மருள் நீக்கியார் சமண சமயத்தைச் சார்ந்தார். அருகிலுள்ள பாடலிபுத்திர  நகரிலிருந்த சமண குருமார்களிடம் சமண சமய நூல்களைக் கற்று , அதில் தேர்ச்சி பெற்றுத் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்.

சிவபெருமானிடம் அன்பு கொண்ட திலகவதியார் கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகைக்குச் சென்று திருவீரட்டானேசுவரர் கழல் பணிந்து  வைகறையில் கோயில் முன்பு  அலகிட்டும், மெழுக்கியும், பூமாலைகள் தொடுத்துத் தந்தும், பலவாறு திருப்பணிகள் செய்து வந்தார். அந்நிலையில்,தமது   தம்பியார் பாதை மாறிச் சமண சமயம் சென்றது அவருக்கு மாளாத்துயரைத் தந்தது. அதிலிருந்து தம்பியை மீட்டு  நன்னெறி அருளவேண்டும் என்று   நாள்தோறும் வீரட்டேசப் பெருமானிடம் விண்ணப்பித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, “ நீ கவலை நீங்குவாயாக. முற் பிறவியில் உனது தம்பி ஒரு முனிவனாக நம்மை அடையத் தவம் செய்தபடியால் இப்போது அவனுக்குச் சூலை நோயைத் தந்து அவனை  ஆட்கொள்வோம்” என்று அருளிச் செய்தார். அதன்படி வடவைத் தீ போன்ற கொடிய சூலை நோய் மருள்நீக்கியாரின் வயிற்றைப் பற்றியது.

சமணர் பள்ளியில் இருந்த தருமசேனரைச் சூலை நோய் மிகவும் வாட்டி வருத்தியது.சமண சமயத்தில் கற்ற மந்திரங்களால் அதனைத் தீர்க்க முடியாது போகவே, மயங்கி மூர்ச்சித்தார். சமண குருமார்கள் மந்திரித்த நீரை அவர் குடிக்குமாறு செய்தும் பயனில்லாது போயிற்று. மயிற்பீலியால்   உடல் முழுதும் தடவியும்,நோய் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாட்டி வதைத்தது.இனி எதுவும் செய்ய இயலாது எனக் கூறிக் கைவிட்டனர்.

அப்போது தருமசேனருக்குத் தமக்கையின் நினைவு வந்தது. தமது நிலையை சமையல் செய்பவன் மூலம் தமக்கையாருக்குத் தெரிவித்தார். அவனைக்         கண்ட திலகவதியார், “ தீங்கு ஏதேனும் நேர்ந்ததோ?” எனக் கலந்கியவராகக் கேட்டார். அதற்கு விடையாக, தருமசேனரைச் சூலை நோய்  பற்றியதையும், சமணர்கள் எதுவும் செய்ய இயலாது கை விட்டதையும், தமக்கையார் உடனே வந்து பார்க்க வேண்டும் என்ற விருப்புடன் தருமசேனர்   தன்னைத் தூது அனுப்பியதையும் வந்தவன் கூறினான். அதனைக் கேட்ட திலகவதியார்,     “ நன்னெறியில் நில்லாத சமணர் பாழிக்கு யான் வர மாட்டேன். இதனை   எனது தம்பியிடம் தெரிவிப்பாயாக” என்று கூறினார். அவனும் திரும்பிச் சென்று த ருமசேனரிடம்  அப்படியே எடுத்துரைத்தான். தமக்கையின் பதிலை அறிந்த  தருமசேனருக்கு சிவபெருமானின் திருவருள் கிட்டும் காலம் வந்தபடியால், “ இப்போதே சென்று தமக்கையாரின்  திருவடிகளைச் சேர்வேன்.” என எண்ணி த் தான் உடுத்த பாய், குண்டிகை, மயில்பீலி ஆகியவற்றைத் துறந்து விட்டு அவ்விரவே புறப்பட்டுத்   திலகவதியார் வசிக்குமிடத்தை அடைந்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.    “ சூலை நோயிலிருந்து விடுபடும் வழியைத் தாங்களே காட்டி  அருள வேண்டும்” என்று வேண்டினார். தம்பியாரின் நிலைக்கு இரங்கிய திலகவதியார், அவருக்குப் பஞ்சாட்சரத்தை ஓதித் திருநீறளித்தார். பிறகு  அவரைத் திருவதிகை வீரட்டானத்து இறைவருக்குப் பணி செய்யுமாறு அருளிச் செய்தார்.

தமக்கையின் சொற்படியே மருள்நீக்கியாரும் திருக்கோயிலுக்குள் சென்று கோயிலை வலம் வந்து, பெருமானது திருச் சன்னதியை அடைந்து வீழ்ந்து  வணங்கினார். சிவபெருமானது திருவருளால் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு அவருக்கு எழுந்தது. சூலை நோய் நீக்கி அருளுமாறு பெருமானிடம் விண்ணப்பித்த பாமாலையே அது.

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.

என்று அத்திருப்பதிகத்தின் முதல் பாடல் அவரது திருவாயிலிருந்து திருவருளால் தோன்றியது. அதன் பயனாக சூலை நோய் அவரை விட்டு அகன்றது.

கருணைக்கடலான இறைவனது திருவருளைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கி நிலமுற வீழ்ந்து வணங்கினார். அப்போது இறைவனது வாக்கு    “ இனி உனக்குத் திருநாவுக்கரசு என்னும் நாமம் எழுலகிலும் விளங்குவதாக” என்று வானிலிருந்து அசரீரியாக எழுந்தது. இராவணனுக்கும் அருள் செய்த     பெருங்கருணை அடியேனுக்கும் அருளியதோ என்று எண்ணி எண்ணி வியந்தார் நாவுக்கரசர். இவ்வாறு உலகம் உய்யவும் சைவம் தழைத்தோங்கவும்   இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற நாவரசர், தனது திருமேனியில் திருநீறு, உருத்திராக்கம் ஆகியன பூண்டு, கையில் உழவாரம் என்னும் படையை ஏந்தி  பெருமானிடம் மாறாத அன்புடன் கைத்தொண்டு செய்து வந்தார். இக்கருணையைக் கண்ட திலகவதியாரும் மனமகிழ்ந்து, திருவருளைத் துதித்திருந்தார்.

திருநாவுக்கரசர் சமணத்தை நீங்கிச் சைவரானதைக் கேள்விப்பட்ட சமண குருமார்கள் மனம் புழுங்கினர். தமது சமயத்திற்கு ஆபத்து வந்துவிட்டதோ  என்று அஞ்சினர். இதனை அரசன் அறிந்தால் அவனும் சைவனாகி விடுவானே எனக் கவலையுற்றனர். பல்லவ அரசனை அடைந்து,” தருமசேனர் பிணி  வந்ததாகக் கூறிக் கொண்டு சைவராகி விட்டார்” என்று திரித்துக் கூறினர். இதைக் கேட்டுக் கோபம் கொண்ட மன்னனிடம் சமணகுருமார்கள், அவரைத்  தண்டிக்க வேண்டும் என்று சொல்லியதும், அரசனும் தருமசேனரைத் தனது சபைக்கு அழைத்து வர அமைச்சர்களை அனுப்பினான்.அரசனது  கட்டளையை அமைச்சர்கள் திருநாவுக்கரசரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர், “ சிவபெருமான் ஒருவனுக்கே மீளா அடிமைத்திறம் பூண்டமையால் நீர் அழைக்கும் வகையில் யாம் இல்லை” என்று பொருள் படுமாறு,” யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் “ எனத் துவங்கும் திருத்தாண்டகத்தைப்   பாடி,  அவர்களுடன்  வருவதற்கு மறுத்துக் கூறினார். இதனை அறிந்த சமணர்கள் பல்லவ மன்னனிடம் சென்று, சிறிதும் இரக்கமின்றி நாவரசரை    நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இடுமாறு கூறினர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளை இட்டான். அரசனது ஏவலாளர்கள்   வெந்தழலைக் கக்கும் நீற்றறையில் அவரை இட்டு மூடித் தாளிட்டு அதனைக் காவல் புரிந்தனர். ஆனால் நாவுக்கரசரோ சிவபெருமானது திருவடிகளைச் சிந்தித்த வண்ணம் நீற்றையினுள் வீற்றிருந்தார். பெருமானது கருணையால் அந்த நீற்றறை இளவேனில் காலத்தில் வீசும் தென்றல் காற்றுப் போலவும்,  குளிர்ந்த தடாகம் போலவும் மாலை நேரத்துச் சந்திரனைப் போலவும், குற்றமற்ற இனிய வீணையின் ஒலியைப் போலவும் இன்பம் தந்தது.இவ்வாறு   பெருமானது கருணையில் திளைத்த திருநாவுக்கரசர்,

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி தீங்கு எதுவும் இன்றி இனிது வீற்றிருந்தார். நீற்றறையைத் திறந்து பார்த்த சமணர்கள் அதிசயித்து நின்றனர்.பின்னர் சமண குருமார்கள் அரசனிடம் சென்று,” இவ்விதம் தரும சேனர் பிழைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அத்தகைய சக்தியை அவர் சமண சமயத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டுவிட்டார். ஆகவே அவரை நஞ்சூட்டிக் கொல்ல வேண்டும் “ என்றனர். அரசனும் அதற்கு உடன் பட்டான்.

கொடிய விஷம் கலந்த பால் சோற்றைத் திருநாவுக்கரசர் உண்ணும்படி செய்தார்கள். ஆலால விஷம் எம்பெருமானுக்கு அமுதமானதால்  அவனடியார்களுக்கும் அமுதமாகவே ஆகும் என்று சொல்லி அதனை உண்டார் வாகீசர். அதனால் அவருக்கு எந்த விதமான தீங்கும் நேரவில்லை.

( “ பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவதுதான் அற்புதமோ?” என்பார் சேக்கிழார் பெருமான்).

நஞ்சுண்டும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்ட சமணர்கள், அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி ,நாவுக்கரசர் மீது மதம் பிடித்த யானையை ஏவி இடறச்  செய்ய வேண்டும் என்றார்கள். அரசனின் கட்டளைப்படி மத யானை நாவரசர் மீது ஏவப்பட்டது. எதற்கும் அஞ்சாதவராகப் பெருமான் திருவடிகளைச்   சிந்தித்து, “ சுண்ண வெண் சந்தனச் சாந்தும் “ எனத் துவங்கும் பதிகம் பாடி “ அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை “    என்றருளினார். ஏவி விடப்பட்ட யானையானது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கிஎதைக் கண்ட பாகர்கள் அதை அங்குசத்தால் குத்தி மீண்டும்   நாவரசர் பால் ஏவினார்கள். ஆனால் யானையோ பாகர்களைத் துதிக்கையால் வீசி எரிந்து விட்டு, சமண குருமார்களைத் தாக்கி அவர்களைத் தாக்கியது.

யானையினின்று தப்பி ஓடிப் பிழைத்த சமணர்கள் மேலும் ஓர் உபாயம் செய்தனர். திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ள வேண்டும் என்று  அரசனிடம் கூறி அதற்கு அனுமதியும் பெற்றனர். அதன்படி நாவுக்கரசரை ஓர் கல்லோடு கட்டிப் படகில் ஏற்றி கடலுக்கு அழைத்துச் சென்று   தாங்கள் எண்ணிய செயலை நிறைவேற்றி விட்டுத் திரும்பினார்கள். அந்நிலையிலும் அஞ்சாத திருநாவுக்கரசர் அஞ்செழுத்தைப் போற்றித் துதி செய்து                          “ சொற்றுணை வேதியன் “ எனத் துவங்கும் பதிகம் பாடினார். அவ்வாறு அவர் பதிகம் பாடியதும், அவரைக்கட்டியிருந்த கல்லானது தெப்பம் போல்   மிதந்தது. பிறவிக்கடலில் இருந்து கரை ஏற்ற வல்ல அஞ்செழுத்தானது இக்கடலில் ஒரு கல்லைத் தெப்பமாக்கி அடியவரைக் கரை ஏற்றியதில் வியப்பு   ஏதும் இல்லை.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்

கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

கடல் அரசனான வருணன் தனது அலைகளாகிய கைகளால் தாங்கியபடியே திருப்பாதிரிப்புலியூர் என்ற தலத்தின் அருகாமையில் கொண்டு வந்து   சேர்த்தான். அவ்வாறு செய்வதற்கு வருணன் என்ன தவம் செய்தானோ?

கரையேறிய நாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்துளியிருக்கும்  சிவபெருமானது திருக்கோயிலை வணங்கி,      “ ஈன்றாளுமாய் “ எனத் துவங்கும் திருப்பதிகத்தைத் தோன்றாத்துணையாய் அடியவர்களுக்கு விளங்கும்  பெருமான் மீது பாடினார். அங்கிருந்து புறப்பட்டுத்  திருமாணிகுழி, திருத்தினை நகர் ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, கெடில நதியைக் கடந்து   திருவதிகையை அடைந்தார்.அவரது வருகையை அறிந்த திருவதிகை நகர மக்கள் அந்நகரை அலங்கரித்துத் திருநாவுக்கரசரை  மகிழ்ச்சியுடன்   எதிர்கொண்டுவரவேற்றனர்.

தூய வெண்ணீறு அணிந்த மேனியராக உருத்திராக்கம் அணிந்த கோலத்துடன் இடைவிடாது சிவபெருமானையே துதிக்கும் மனத்துடன் ஆனந்த நீர்   பொழியும் கண்களும், திருப்பதிகம் பாடும் செவ்வாயும் கொண்ட திருநாவுக்கரசர் திருவதிகையின் திருவீதிகளில் புகுந்தார். அடியார்கள் எல்லோரும்   வாகீசப் பெருந்தகையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அடியார்கள் தொடர, நாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்து உறையும் பெருமானது   திருக்கோயிலை  அடைந்தார். தான் முன்பு சமண் வலைப்பட்டு ஈசனை இகழ்ந்துவிட்டேனே என்று உள்ளம் வருந்தி, ஏழைத் திருத்தாண்டகம் பாடிப்  பெருமானைப் பணிந்தார். அங்கு தங்கிய நாட்களில் உழவாரத் தொண்டு செய்தும் தமிழ் மாலைகளால் இறைவனை வழிபட்டும் பணி செய்து வந்தார்.

சமணர்களது மொழிகள் பொய் என உணர்ந்த பல்லவ மன்னன் சமணர் பள்ளிகளை நீக்கி விட்டுத் திருவதிகையில் குணபரவீச்சரம் என்ற       திருக்கோயிலைக்  கட்டுவித்துச் சைவன் ஆனான்.

திருவதிகைக்கு அண்மையிலுள்ள திருவெண்ணை நல்லூர் , திருக் கோவலூர், திருவாமாத்தூர் ஆகிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகங்களால்      துதித்துப் பெண்ணாகடத்துத் தூங்கானை மாடத்தே எழுந்தருளியிருக்கும்  சுடர்க் கொழுந்தீசரைத் துதிக்கச் சென்றார்  தாண்டக வேந்தர். “சமண மதத்தில்  சார்ந்திருந்த அடியேனது பழி நீங்குமாறு உமது முத்திரையை இட்டருள வேண்டும்” என்று பெருமானிடம் வேண்டினார் வாகீசர்.

பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்

என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என்மேல் பொறி; மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே

எனத் துவங்கித் திருப்பதிகம் பாடியவுடன், இறைவர் அருளால் எவரும் அறியாதபடி ஒரு சிவ பூத கணம் வந்து அவரது தோள்களில் சூலக் குறியையும்     ரிஷபக் குறியையும் பொறித்தது. சிவபெருமானது திருவருளால் நெகிழ்ந்த வாகீசர் பலநாட்கள் அங்கு தங்கிப் பணி செய்து வந்தார். பின்னர் அங்கிருந்து     புறப்பட்டுத் திருநெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் ஆகிய சிவத்   தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடித்  தில்லை நகரைச் சென்றடைந்தார்.

மறைகளையும் பிற கலைகளையும் ஓதும் அந்தணர்கள் நிறைந்த தில்லைப்பதியை அடைந்த திருநாவுக்கரசர் சிவமே நிலவிய திருவீதிகளை வலம் வந்து  ஏழ் நிலைகளைக் கொண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்தார். திருக்கோயிலை வலம் வந்த பின், பேரன்பு பொங்கக் கனக சபையில் ஆனந்த தாண்டவம் புரியும்  பெருமானைத் தரிசித்துப் ஆனந்த வெள்ளம் மேலிட உவகைக் கண்ணீர் பெருக்கிப் பலமுறை வீழ்ந்து வணங்கினார். தன்னை நோக்கி, “ என்று வந்தாய்” என்று  பொன்னம்பலவன் கேட்பது போன்ற திருக்குறிப்புத் தோன்றவே, “ ஒன்றி இருந்து நினைமின்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும், “கருநட்ட கண்டனை” என்ற     திருவிருத்தத்தையும்,  “ பத்தனாய்ப் பாட மாட்டேன் “ என்ற திருநேரிசையையும் பாடிப் பரவினர். நடராஜப்பெருமானின் தாண்டவத்தைத் தரிசிப்பதானால் பிறவியும்  வேண்டுவது என்னும் பாடல் நாவுக்கரசரது எல்லையற்ற அன்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

தில்லையில் தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்த நாட்களில்,    “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்ற பதிகம் பாடினார். அருகாமையிலுள்ள   திருவேட்களம்,திருக் கழிப்பாலை ஆகிய தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி, மீதும் தில்லையை வந்தடைந்து, “ பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்” எனத்   துவங்கும் பதிகத்தையும், “அரியானை அந்தணர் தம சிந்தையானை” என்ற பெரிய திருத்தாண்டகத்தையும்,    ” செஞ்சடைக் கற்றை” என்னும் திருநேரிசைப் பதிகத்தையும்    பாடிப் பரவினார்.

இவ்வாறு பணி  செய்து வரும்போது சீர்காழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமாதேவியார் தனது திருமுலைப்பாலோடு சிவஞானத்து   இன்னமுதத்தையும் கலந்து திருக்குளக்கரையில் தோணிச் சிகரத்தை நோக்கி அம்மே அப்பா என்று அழுத குழந்தையின் பசி தீருமாறு புகட்டியதும் அக்குழந்தை   தனக்குப் பாலூட்டியது தோடுடைய செவியன் என்று தந்தைக்கு அடையாளங்களுடன் சுட்டிக் காட்டியதும் அதனால் சிவஞான சம்பந்தர் ஆகியதும் ஆகிய சிறப்புக்களை   அடியார்கள் மூலம் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் ஞானம் பெற்ற அக்குழந்தையைத் தரிசித்து வணங்குவதற்காக சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். வழியில்     திருநாரையூர் என்ற பதியை வணங்கிப் பதிகங்கள் பாடிவிட்டுச் சீர்காழியை வந்தடைந்தார்.

இறைவனால் சூலை நோய் கொடுத்து ஆட்கொள்ளப்பெற்ற  நாவுக்கரசரின் வருகையை அறிந்த ஞானசம்பந்தர், அடியார்கள் உடன்வர நாவரசரை எதிர்கொண்டு   வரவேற்றுப் பணிய, வாகீசரும் அவர் வணங்காமுன் தாம் அவரது திருவடிகளில் பணிந்தார். அவ்வாறு வணங்குதலும்,சம்பந்தர் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு,     ” அப்பர்” என, அவரும் “ அடியேன் “ என்றார். இதனைக் கண்ட சிவனடியார்கள் மகிழ்ச்சிக் கடலிலாழ்ந்தனர். சைவத்தின் இரு புண்ணியக் கண்கள் என்று அவர்களை     உலகோர் புகழ்ந்தனர். இருவருமாகத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி இறைவரைத் தரிசித்தபோது, நாவுக்கரசரை நோக்கித் திருஞானசம்பந்தர் ,                ” அப்பரே, உங்கள்  பெருமானைப் பாடுவீராக” என்றவுடன்,  அப்பரும்,” பார் கொண்டு மூடி” என்ற திருவிருத்தம் பாடியருளினார். பல நாட்கள் இருவருமாகச்  சீர்காழியில் அளவளாவிக்     கொண்டும்,பெருமானைத் தரிசித்துக் கொண்டும் இருந்தபோது, நாவரசர் தாம் சோழ நாட்டுத் திருப்பதிகளைத் தரிசிக்க விரும்புவதாகக் கூற, சம்பந்தரும் அவரைத்  திருக்கோலக்கா என்ற பதி வரையில் உடன் வந்து விடை கொடுத்து அனுப்பினார்.

சீர்காழியிலிருந்து புறப்பட்ட அப்பர் பெருமான், சிவபெருமான் விரும்பி உறையும் பதிகளான திருக் கருப்பறியலூர்,  திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை வீரட்டம்,    திருநின்றியூர்,திருநனிபள்ளி திருச் செம்பொன்பள்ளி, மயிலாடுதுறை,திருத்துருத்தி, திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருக்கோடிகா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர் ,   திருநாகேச்சரம், திருப்பழையாறை ஆகிய ஊர்க் கோயில்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடித்  திருச்சத்தி முற்றத்தை அடைந்தார். இயமன் வந்து உயிரைக் கவரும்   முன்பு உனது மலர்ச் சேவடிகளை என் சிரத்தின் மீது பொறித்து வைப்பாயாக என்று சிவக்கொழுந்தீசரிடம் பதிகம் பாடியவுடன், பெருமான் அவரை நல்லூருக்கு வருமாறு   பணித்தான். அதைக் கேட்ட அப்பர் பெருமான் இறையருளைச் சிரத்தின் மேல் கொண்டு திருநல்லூரைச் சென்றடைந்தார். தென்பால் கயிலை போல விளங்கும் நல்லூர்த்    திருக்கோயிலை வலம் வந்து இறைவரை வணங்கியதும், “ உன்னுடைய விருப்பத்தை முடித்து வைக்கின்றோம்” என்று கூறி அவரது சென்னி மிசைப் பாத மலர்    சூட்டினான் சிவபெருமான். எல்லையற்ற கருணையைக் கண்டு உருகிய அப்பர் பெருமான் “ நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்” எனத் துவங்கும்    திருத்தாண்டகத்தால் பெருமானைத் துதித்தார். “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் ” என்று ஒவ்வொரு பாடலிலும் அக்கருணையைக்    குறிப்பிட்டுப்  பலமுறை பணிந்தெழுந்தார்

நல்லூரில் திருவடி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர், அருகிலுள்ள திருக்கருகாவூர்,திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்,திருப்பாலைத்துறை ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டுப்   பதிகங்கள் பாடிப் பணி செய்தபின் மீண்டும் நல்லூரை அடைம்து அங்குப் பல நாட்கள் தங்கி உழவாரப்பணி ஆற்றி வந்தார். பிறகுஅங்கிருந்து புறப்பட்டுத் திருப்பழனத்து    இறைவரை வணங்கியபின், திங்களூர் சென்றடைந்தார் வாகீசர்.அங்கு வசித்து வந்த அப்பூதியார் என்ற அந்தணர், திருநாவுக்கரசரது திருநாமத்தைத் தமது புதல்வர்களுக்கு    இட்டதோடு தாம் அமைத்த குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் ஆகிய தருமங்களுக்கும் நாவுக்கரசரது பெயரையே அமைத்திருப்பதைக கண்டும் கேட்டும் அறிந்த நாவரசர்   அப்பூதியாரைக் காண்பதற்காக அவரது மனையைச் சென்றடைந்தார்.

திருநாவுக்கரசரைக் காணாமலேயே அவரது பெருமையை அறிந்து அவரிடம் பக்தி பூண்ட அப்பூதியார், இப்போது நேரிலேயே அப்பெருந்தகை தமது ,மனைக்கு   எழுந்தருளியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவரைத் தம் சுற்றத்தோடு வரவேற்று உபசரித்தார். தமது மனையில் அமுது செய்யுமாறு அப்பூதியார் வேண்டவே,    அப்பரும் அதற்கு இசைந்தார். உணவு வகைகள் பலப்பல செய்தபின் அப்பூதியாரின் மனைவியார் தமது மூத்த புதல்வனாகிய மூத்த திருநாவுக்கரசை வீட்டுத்   தோட்டத்திலுள்ள வாழை மரத்திலிருந்து இலை பறித்து வருமாறு பணித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்ற மூத்த திருநாவுக்கரசு தோட்டத்து வாழைக் குருத்தை   அரியும்போது அங்கிருந்த பாம்பு அவனைத் தீண்டியது.  மூத்த திருநாவுக்கரசை விஷம் வேகமாகப் பாதித்து அவனது உச்சந்தலைக்கு ஏறத் தொடங்கியும் அதனைப்  பொருட்படுத்தாது வேகமாகச் சென்று அவ்விலையைத் தாயாரிடம் சேர்த்து விட்டு உயிர் நீத்தான். மகன் மாண்டது கண்ட அப்பூதியாரும் அவரது மனைவியாரும் ,    “ இதனை அப்பர் பெருமான் அறிந்தால் அமுது செய்ய மாட்டாரே “ எனக் கலங்கி, அச்செய்தியை வெளியிடாமல் மகனின் சவத்தை வீட்டின் ஒருபுறம் மறைத்து    வைத்தனர்.

பின்னர் இருவரும் அப்பரடிகளை அடைந்து அமுது உண்ணுமாறு அழைத்தனர். அமுது உண்ணும முன்பு வீட்டில உள்ளோருக்குத் திருநீறு வழங்கிய அப்பர் பெருமான்,   “ மூத்த திருநாவுக்கரசு எங்கே ?” எனக் கேட்க அதற்கு அப்பூதியார் “ அவன் இப்போது இங்கு உதவான் “ என்றார். இறையருளால் அப்பூதியாரின் தடுமாற்றத்தை அறிந்த    நாவுக்கரசர் நடந்ததைக் கூறுமாறு கேட்க அப்பூதியாரும் தமது மகனை அரவம் தீண்டியதால் மாண்டு விட்டதைக் கூறினார். அதனைக் கேட்ட அப்பர் பெருமான்    அச்சவத்தினைத் திருக்கோயிலுக்கு முன் கொண்டு வரச் செய்து இறைவன் மீது, “ ஒன்று கொலாம்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.

இறைவர் இன்னருளால்    சவமாய்க் கிடந்த மூத்த திருநாவுக்கரசு உயிர்பெற்று எழுந்தான். அப்படியும், அடியார் அமுதுண்ணக் காலம் தாழ்ந்ததே என வருந்திய அப்பூதியாரையும் அவரது    மனைவியாரையும் ஆறுதலளித்து ஆசி வழங்கினார் நாவுக்கரசர். சில நாட்கள் அங்கு தங்கியபின், அப்பூதியார் உடன் வரத் திருப்பழனம் சென்று அங்கு கோயில்   கொண்டுள்ள இறைவனைச்     “ சொல்மாலை “ எனத் துவங்கும் பதிகத்தால் போற்றி, அதில் அப்பூதியாரின் தொண்டையும் சிறப்பித்தருளினார். அங்கு தங்கியிருந்த   நாட்களில் அருகிலுள்ள திருச்சோற்றுத்துறைக்குச் சென்று பணி செய்து  பதிகங்கள் பாடிவிட்டு மீண்டும் திருப்பழனத்தை அடைந்து திருத்தொண்டுகள் ஆற்றி வந்தார்.    திருப்பழனத்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்துகொண்டிருந்த திருநாவுக்கரசர், மீண்டும் திருநல்லூர் சென்று வழிபட்டார். பிறகு, பழையாறை, திருவலஞ்சுழி,    திருக்குடமூக்கு, திருச்சேறை, திருநறையூர், திருவாஞ்சியம், திருப்பெருவேளூர்,திருவிளமர் ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் படி,உழவாரத் தொண்டு செய்தபின்னர்    திருவாரூரை வந்தடைந்தார்.

திருநாவுக்கரசரின் வருகையால் மகிழ்ந்த திருவாரூர் வாழ் அடியார்கள் வீதிகளை அலங்கரித்து அவரை எதிகொண்டு அழைத்து வணங்கி வரவேற்றனர். அவர்களை நோக்கி, “ புற்றிடம் கொண்டான் தன்  தொண்டர்க்குத்  தொண்டராம் புண்ணியமே” என்று பாடி, சமணர் வாய்ப்பட்ட அடியேனுக்கும் ஆரூரன் அருள் கிட்டுமோ எனப்புகன்று, அடியார்கள் சூழத் திருக்கோயிலை அடைந்தார் அப்பர் பெருமான். தேவாசிரியன் மண்டபத்தை வணங்கித திருமூலட்டான நாதரின் திருச்சன்னதியை அடைந்து, கண்கள் ஆனந்த நீர் பெருகக் காண்டாலே கருத்தாய்  நினைந்திருந்தேன்” எனும் பதிகத்தையும், பழமொழித் திருப்பதிகத்தையும் “பாடிளம் பூதத்தினானும்” எனும் பதிகத்தையும் பாடியருளி, உழவாரப்பணி செய்து கொண்டு காலம்   தோறும் பெருமானைத் தரிசித்து வந்தார்.

திருவாரூர் ஆலயத்துள் விளங்கும் மற்றொரு ஆலயமான ஆரூர் அரநெறியில் நமிநந்தி அடிகள்(நாயனார்) நீரால் விளக்கு எரித்ததைத் தமது பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் பாடினார். அதில் ஆரூரில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவைப் பற்றியும் சிறப்பித்தார் தாண்டக வேந்தர். மேலும் ,திருவாரூருக்கு அண்மையில் உள்ள ருவலிவலம்,திருக்கன்றாப்பூர், திருக் கீழ் வேளூர் ஆகிய தலங்களையும் தரிசித்து விட்டுத்  திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருக நாயனாரது மடத்தில் தங்கியிருந்த காலத்தில் சீர்காழியிலிருந்து யாத்திரையாக வந்த திருஞானசம்பந்தர் அடியார்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்து அளவளாவும்போது சம்பந்தர் அப்பர் பெருமானை வணகி,” அப்பரே, தாங்கள் திருவாரூரில் தங்கியிருந்த நாட்களில் கண்ட சிறப்புக்களைக் கூறி   அருளுவீராக” என்றார். உடனே, அப்பரும், “ முத்து விதானம் “ எனத் துவங்கும் பதிகத்தின் மூலம் திருவாரூரில் நடைபெறும் திருவாதிரை நாள் சிறப்பை  எடுத்துரைத்தார் . அதனைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், திருவாரூரைத் தரிசிக்கும் பெரு வேட்கையுடன் அங்கிருந்து ஆரூருக்குப் புறப்பட்டார். அப்பரும் திருப்புகலூர்ப் பெருமான் மீது பாமாலைகள் பாடிப் பணி  செய்து வந்த பொது, அருகிலுள்ள திருச் செங்காட்டங்குடி, திருமருகல், திருச் சாத்தமங்கை, திருநள்ளாறு ஆகிய தலங்களுக்குச் சென்று தமிழ் மாலைகளால்  பெருமானைத் துதித்து மீண்டும் திருப்புகலூரை அடைந்தார்.

திருவாரூரை வணங்கிய திருஞானசம்பந்தப்பெருமான், மீண்டும் திருப்புகலூருக்குத் திரும்பியதும் அவரைத் திருநாவுக்கரசர் எதிர் கொண்டு வரவேற்றார். புகலூரில்  தங்கியிருந்த நாட்களில், சிறுத்தொண்ட நாயனாரும், திருநீல நக்க நாயனாரும்,அங்கு வந்து சேர்ந்தனர், அனைவரும் முருக நாயனாரின் திருமடத்தில் தங்கி ஈசனது பெருமைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்தனர். இவ்வாறு பலநாட்கள் தங்கியிருந்தபின்னர், திருநீல நக்கரும், சிறுத்தொண்டரும் விடை பெற்றுக் கொண்டு தமது இடங்களுக்குத் திரும்பினர். சம்பந்தரும் அப்பரும் அம்பர் என்ற தலத்தை வணங்கி விட்டுத் திருக்கடவூர் சென்று கால காலனாகக்  காட்சி தரும் பெருமானை வணங்கிக் குங்கிலியக் கலய நாயனாரது மனையில் தங்கினர். குங்கிலியக்கலயரும் அவர்களை உபசரித்துத்  திருவமுது செய்தார். அதன் பின்னர் அப்பரும் ஞானசம்பந்தரும்  அருகாமையிலுள்ள திருக்கடவூர் மயானத்தைச் சென்று தரிசித்துப் பதிகம் பாடி, திரு ஆக்கூர் தான்தோன்றி மாடத்துப் பெருமானை வணங்கித் துதித்தபின், திருவீழி மிழலை என்ற திருத்தலத்தை அடைந்தனர்.

திருவீழிமிழலை எல்லையில் இருவரையும் அந்தணர்களும் அடியார்களும் எதிர்  கொண்டு வரவேற்றனர். நகர் முழுதையும் அலங்கரித்தனர். தொண்டர்கள் புடை சூழ இருவருமாகத திருக்கோயிலை அடைந்து விண்ணிழி விமானத்தின் கீழ் அருள் பாலிக்கும் வீழிநாதப் பெருமானை வணங்கித் துதித்தனர். கைகள் உச்சி மேல் குவித்துக் கண்கள் அருவி பொழியத் “ திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே செல்கின்றாரே”  என்னும் திருப்பதிகம் பாடிப் பரவினார் அப்பர் பெருமான். அதுபோலவே சம்பந்தரும் இறைவன் மீது செந்தமிழ்ப்  பதிகங்கள் பாடினார். இருவருமாக அங்குப பல காலம் தங்கிப் பணி  செய்து கொண்டிருக்கும் வேளையில் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது.

பஞ்சத்தால் பல்லுயிர்களும் துன்பப்படும் போது மிழலைப் பெருமான் இருவரது கனவிலும் எழுந்தருளி, “ இப்பஞ்சத்தால் நீங்கள் இருவரும் மன வாட்டம் அடைய மாட்டர்கள் என்றாலும் உங்களை வழிபடும் அடியார்களுக்கு அளிப்பதற்காக நாம் உங்களுக்குப் படிக்காசு அளிக்கின்றோம்” என்று அருளினான். அதன்படி நாள் தோறும் கிழக்கே உள்ள பீடத்தில் சம்பந்தருக்கும் மேற்கிலுள்ள பீடத்தில் அப்பருக்கும் பெருமான் ஒவ்வொரு நாளும் படிக்காசு வைத்தருளினான். அக்காசுகளைக் கொண்டு இருவரும் பண்டங்கள் வாங்குவித்து அமுது சமைப்பித்து, சிவனடியார்கள் அனைவருக்கும் நாள் தோறும் இரண்டு காலங்களிலும் பறை அறிவித்து அமுது உண்பித்தார்கள் . அதனால் துன்பம் தரும் வறுமையைப் போக்கி அருளினார்கள்.

உமையம்மையிடம் ஞானப்பாலுண்ட மகனார் ஆதலால் சம்பந்தப் பெருமானுக்கு   வாசியுடன் காசு கிடைத்தது. பின்னர் வாசி தீரக் காசு தந்தருளுமாறு அவர் பதிகம் பாடியவுடன் வாசியில்லாக் காசினைப்  பெருமான் அருளால் பெற்றார். கைத்தொண்டு செய்தபடியால் திருநாவுக்கரசர் வாசியில்லாக்  காசினைப் பெற்றார். இவ்வருட் செயலால் நாடு பஞ்சம் நீங்கி வளம் பெற்றது. வீழிப்பெருமானிடத்து விடைபெற்றுக் கொண்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கியபின் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தை அடைந்தனர்.

முன்பொரு காலத்தில் வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டுத் திருவாயிலைத் திருக்காப்பிட்டுச் சென்றபடியால் அவ்வாயிலை ஒருவரும் திறக்க முன்வராமல்  அருகாமையில் வேறொரு வாயில் அமைத்துப் பூசித்து வந்தனர். இதனை அறிந்த  சம்பந்தர் அப்பரை நோக்கி,” நாம் இருவரும் நேர் வாயில் வழியே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும். எனவே, அக்கதவம் திறக்குமாறுத்  தாங்கள் திருப்பதிகம் பாடி அருளிவீராக” என்றார்.

திருநாவுக்கரசரும்,” பண்ணினேர் மொழியாள் ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடலானார். ஆனால் திருக்கதவின் திருக்காப்பு நீங்கத் தாமதமாவதைக் கண்டு அப்பதிகத்தின் கடைசிப் பாடலில் “ இரக்கம் ஒன்றிலீர்”  எனப்பாடி வணங்கினார். இறையருளால்  திருக்காப்பு நீங்கித்  திருக்கதவம் திறந்தது.  வேத ஒலியும் ஆரவாரமும் எழுந்தன. அடியார் புடை சூழ அப்பரும் ஞானசம்பந்தப்பிள்ளையாரும்  உள்ளே சென்று இறைவனைத் தரிசித்து மகிழ்ந்தார்கள். அப்போது நாவரசர் சம்பந்தரை நோக்கி, “ இக்கதவம் அடைக்குமாறுத் தாங்கள் பாடியருள வேண்டும்” என விண்ணப்பித்தார். சம்பந்தர்  பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் திருக்காப்பிட்டது. திருவருளை வியந்த அனைவரும் பெருமானது பொன்னடிகளை வணங்கித் துதித்தனர். அன்று முதல் இறைவனுக்கு முன்புள்ள திருவாயில் திறப்பதும் மூடுவதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது.

தாம் கதவம் நீங்குமாறு பாடுகையில் திருக்காப்பு நீங்குவதற்குக் காலம் தாழ்ந்ததையும் அதே சமயம் கதவம் திருக்காப்பிட வேண்டி சம்பந்தர் பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் மூடியதையும் அன்றிரவு அப்பர் பெருமான் நினைந்து, சிவபெருமானது திருவிள்ளக்குரிப்பை அறியேன் என்று அஞ்சியவராகக் கவலையுற்று அதே நினைவுடன் துயில் கொண்டார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் எழுந்தருளி,” திருவாயமூரில் இருப்போம் அங்கே வா “ என்று அருளி விட்டு மறைந்தார். துயில் நீங்கிய அப்பர் பெருமான்,

எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு

அங்கே வந்து அடையாளம் அருளினார்

தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச்  செல்வனார்

அங்கே வா என்று போனார் அதென் கொலோ

எனத் துவங்கிப் பதிகம் பாடியபடியே திருவாய்மூரை நோக்கிச் சென்றார். அதனைக் கேள்வியுற்ற திரு ஞான சம்பந்தரும் அவரைத் தொடர்ந்து செல்லலாயினார். நாவரசருக்கு வழிகாட்டிக் கொண்டு முன்சென்ற இறைவன் பொற்கோயில் ஒன்றைக் காட்டி விட்டு மறைந்தருளினான். அப்போது ஞானசம்பந்தர் காணுமாறு இறைவன் காட்சி கொடுத்து அருளினான். அக்காட்சியை அப்பருக்குக் காட்டினார் சம்பந்தப்பெருமான். அதனைக் கண்டு பரவசமாகிய அப்பர், “ பாட அடியார் பரவக் கண்டேன்” எனத் துவங்கும் திருத் தாண்டகத்தால் இறைவனைத் துதித்தார். பின்னர் இருவரும் திருவாய் மூர்க் கோயிலை வணங்கி வலம் வந்து போற்றியபின் திருமறைக்காட் டிற்குத் திரும்பிவந்து  மறைக்காட்டு மணாளனைத் துதித்துக்  கொண்டு   அங்கே   தங்கி இருந்தனர்.

திருமறைக்காட்டில் இருவருமாகத் தங்கியிருந்த போது , பாண்டிய மன்னனின் பட்டத்து அரசியும் சோழ மன்னனின் மகளுமான மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் ஞானசம்பந்தரிடம் சிலரைத் தூது விடுத்தனர். அவர்களை அன்போடு வரவேற்ற காழிப்பிள்ளையார் அனைவரது நலத்தையும் வினாவினார். அதற்கு அவர்கள் பாண்டிய நாட்டில் சமணம் ஓங்கி ,மன்னனும் அவ்வழி சென்று விட்டதால் சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளி சமணரை வென்று சைவ நெறியைத்  தழைக்கச் செய்ய வேண்டும் என்று பாண்டிமாதேவியும் அமைச்சரும் விரும்புவதாகக் கூறினார்கள். அதனை ஏற்ற சம்பந்தர் உடனடியாகப் பாண்டிய நாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தார். அதனைக் கண்ட நாவுக்கரசர், அவரைத் தடுத்து,     “ சமணர்கள் வஞ்சனை மிக்கவர்கள். எல்லாத் தீங்கையும் துணிந்து செய்பவர்கள். அவர்களால் எனக்குக் கொடுமைகள் பல நிகழ்ந்தன. எனவே தாங்கள் அங்குச் செல்லலாகாது” என உரைத்தார். அதனைக் கேட்ட ஞான சம்பந்தப்பெருமான், “ அப்பரே, இறையருளால் சமணரை வென்று சைவ நெறியை மலரச்  செய்வேன். தேவரீர் அங்கு என்னுடன் வர வேண்டாம்.  சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு இருப்பீராக. “ என்று கூறி விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டார்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்குச் சென்ற பிறகு,திருநாவுக்கரசர் சில நாட்கள் திருமறைக்காட்டில் தங்கிப் பணி செய்துவிட்டுத் திருநாகைக்  காரோணம் முதலிய தலங்களைத் தரிசித்துத்  திருவீழிமிழலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு விண்ணிழி விமானத்தின்  கீழ் வீற்றிருக்கும் பெருமானை வணங்கினார்.அதன் பின்னர் திருவாவடுதுறையை அடைந்து அங்கு ஞானசம்பந்தர் ஆயிரம் பொன் பெற்ற அருட்  திறத்தைத் தனது  பதிகத்தில் சிறப்பித்துப் பாடினார். பின்னர் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்தவராகப் பழையாறை வடதளி என்ற திருக்கோயிலை வந்தடைந்தார். அக்கோயிலை எவரும் வழிபடாத வகையில் சமணர்கள் மூடி   வைத்திருந்ததைக் கண்டு மனம் வருந்திய அப்பர் பெருமான் திருக்கோயில் திறக்கப்பட்டு இறைவனைத் தரிசிக்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவரது செய்கையை சிவபெருமான் அரசனது கனவில் தோன்றி அறிவித்ததும் மன்னனும் அமைச்சர்களோடு ஆலயத்திற்கு விரைந்து சென்று சமணர்களை அங்கிருந்து அகற்றித் திருக்கோயிலைத் திறப்பித்தான். நாவரசரும் ஆலயத்துள் நுழைந்து பெருமானைப் பணிந்து, “ தலையெலாம் பறிக்கும்” எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடித் துதித்தார்.

காவிரியின் இரு கரைகளிலும் உள்ள சிவத்தலங்களைத் தரிசித்துத்  திருப்பதிகங்கள் பாடி வணங்கித்  திருவானைக்கா ,திருவெறும்பியூர் ,திருச்சிராப்பள்ளி ,திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் பதிகங்கள் பாடி, உழவாரப்பணி செய்தபடி,த்  திருப் பைஞ்ஞீலியைச்  சென்றடைந்தார்.

திருப் பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் மிகுந்த பசியும் நீர் வேட்கையும் ஏற்பட்டபோதும் மனம் தளராமல் சென்று கொண்டிருந்த அப்பர் பெருமான் வரும் வழியில் ஒற்று சோலையையும் குலத்தையும் உண்டாக்கி, ஓர் அந்தன வடிவம் கொண்டு அவர் முன் தோன்றினான் சிவபெருமான். அவரது பசியைப்போக்குவதர்காகப் பொதி சோறு அளித்து,” இதனை உண்டு, இக்குளத்து நீரைப் பருகி இளைப்பரிக்கொண்டு செல்வீராக” என்று அருளினான்.  தாமும் திருப் பைஞ்ஞீலிக்குச் செல்வதாகக் கூறி அவருடன் ஊரை வந்து அடைந்ததும் மறைந்தருளினான்.  இதனைக் கண்டு அதிசயித்த அப்பர் பெருமான் தம் பொருட்டு இவ்வாறு இறைவனது கருணை இருந்தவாறு எண்ணி எண்ணி விழி நீர் பெருக்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். அங்குச்  சில நாட்கள் தங்கியிருந்து உழவாரப்பணி மேற்கொண்டு வந்தார்.

வடதிசையிலுள்ள திருத்தலங்களைத் தரிசிக்க வேண்டி அங்கிருந்து புறப்பட்டுத் திருவண்ணாமலையை அடைந்து அங்கே தங்கிப் பதிகங்கள் பாடினார். பின்னர் தொண்டை நன்னாட்டுப் பதிகளை வணங்குவதற்காக அண்ணாமலையிலிருந்து புறப்பட்டுத் திருவோத்தூரை அடைந்தார். அத்தலத்து இறைவன் மீது பாமாலைகள் சூட்டி உழவாரப்பணி புரிந்த பின்னர் காஞ்சி மாநகரை அடைந்தார்.

காஞ்சி வாழ் அடியார்கள் அனைவரும் திருநாவுக்கரசரது வருகையால் மிகவும் மகிழ்ந்து நகரை அலங்கரித்து அவரை வரவேற்றார்கள்.  திருவேகம்பனது  செம் பொற் கோயிலின் கோபுரவாயிலை வணங்கியபடி அம்பிகை தழுவக் குழைந்த மேனியனாகிய ஏகம்பப்பெருமனைப்  பேரன்புடன் வணங்கிக்  “ கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை “ என்ற பதிகத்தால் பரவினார். திருக்கச்சி மயானம், கச்சி மேற்றளி,திருமாற்பேறு ஆகிய தலக் கோயில்களை வணங்கிப்  பதிகங்கள் பாடி விட்டு மீண்டும் காஞ்சி வந்தடைந்தார்.

“ கச்சி ஏகம்பன் காண் அவன் என் கண் உளானே “ என்று நிறைவு பெறும்  திருத்தாண்டகத்தால் ஈசனைத் துதித்தார். பின்னர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் திருக்கழுக்குன்றம், திருவான்மியூர் ஆகிய தலங்களை வழிபட்டுத்  திருவொற்றியூரைச் சென்றடைந்தார். அன்பர்கள் எதிர் கொண்டு வரவேற்க,அப்பர் பெருமான் திருக்கோபுரத்தை வணங்கி எழுத்தறியும் பெருமானாகிய புற்றிடம் கொண்ட பெருமானை, “ வண்டோங்கு செங்கமலம்” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தால் போற்றி வணங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு திருப்பாசூரை அடைந்து இறைவனைத் திருக்குறுந்தொகை,திரு நேரிசை,திருத்தாண்டகப் பதிகங்களால் போற்றிப் பழையனூர்த் திருவாலங்காட்டை அடைந்து “ திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே” என்ற ஈற்றடி கொண்ட திருத்தாண்டகத்தால் பாடி வணங்கினார். பின்னர், திருக்காரிக்கரை என்ற தலத்தை  வழிபட்டுவிட்டுத் திருக்காளத்தியை அடைந்து கண்ணப்பர் தொழுத கண்ணுதற் கடவுளை  விழுந்து இறைஞ்சிக் கண் களிகூரப் பரவசமாகி , “ என் கண்ணுளான் “ என்ற மகுடம் கொண்ட திருத்தாண்டகத்தால் போற்றினார்.

திருக்கயிலை மலையைத் தொழும் பெரு விருப்புடன்,  வட திசை நோக்கிச் சென்றார். வழியில் திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) என்ற தலத்தை அடைந்து தமிழ் மாலையால் வணங்கித்  தெலுங்கு நாட்டைக் கடந்து கன்னட நாட்டில் திருக்கோகரணத்தை வணங்கி,மாளவ ,இலாட மற்றும் மத்தியப் பிரதேசங்களைக் கடந்து வாரணாசியை(காசி) அடைந்தார். கங்கை பாயும் அப்புண்ணிய தலத்தில் விசுவேசனை வணங்கித் தன்னுடன் வந்த அடியார்களை அவ்விடமே விடுவித்து, மனிதர்கள் செல்ல அரிதான கானகங்களின் வழியே உணவு-உறக்கம் ஆகியவற்றை நீக்கி இரவு பகலாக எங்கும் தங்காமல் நடந்து சென்றார். அதனால் அவரது திருவடிகள் நொந்து தேய்ந்தன. தனது கைகளைக் கொண்டு தாவிச் சென்றதால்  மார்பின் சதைகளும் எலும்புகளும் தேய்ந்து முறிந்தன. வேறு செயலின்றிக்  கயிலை நாதனையே சிந்தித்தவராக அவ்வழியிலேயே தங்கி இருந்தார்.

அப்பர் பெருமான் செயலற்றுக் கிடந்த இடத்தருகில் ஒரு தடாகத்தை உண்டாக்கிய சிவபெருமான் தானே அவர் முன் ஓர் அந்தண  உருவில் எழுந்தருளி அவரை நோக்கி,” திருக்கயிலை மலையை மானிடர்கள் எளிதில் சென்று அடைய முடியாது. எனவே மீண்டுச் செல்வீராக” என்றான் . அதனை ஏற்க மறுத்த வாகீசர், “ ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை  கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று கூறினார். அவரது மன உறுதியை உலகுக்குக் காட்டிய ஈசன் அசரீரியாக,” ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திரு “ என்று ஒலித்தவுடன் உடல் ஊறுகள் முற்றிலும் நீங்கிய வாகீசர் பெருமானைத் தொழுது, “தேவரீர் திருக்கயிலையில் இருக்கும் கோலத்தை அடியேன் கண்டு தொழ  அருள் செய்வீராக”எனப் பணிந்து விண்ணப்பித்தார். ( “அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே   விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே  கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம்   நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்”. – பெரிய புராணம்)

அப்போது இறைவனது அசரீரி வாக்கு, “ இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் காண்பாயாக” என்று ஒலித்ததும்,  திருநாவுக்கரசர் இறைவனை வீழ்ந்து வணங்கி, “ வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி” எனத் துவங்கும் திருத்தாண்டகத்தால் பரவி, ஐந்தெழுத்தை ஓதியபடி அத்  தடாகத்தில் மூழ்கினார்.

சிவபெருமானது திருவருளால் உலகமே வியப்புறும் வண்ணம்  திருவையாற்றுத் தடாகத்தில் எழுந்து கரையில் ஏறியவுடன் அங்குள்ள சராசரங்கள் யாவும் சிவ சக்தி வடிவாகவே தோன்றக்கண்டார். திருவையாற்றுக் கோயில் திருக்கயிலாயம் போலக் காட்சி அளித்தது. திருமாலும்,பிரமனும்,இந்திரனும் உள்ளிட்ட தேவர்கள் சிவபெருமானைப் போற்றிசைக்கும் ஒலி எங்கும் எழுந்தது. வேத முழக்கமும், தேவ மாதர்களது இசையும் நிறைந்தது. தேவர்களும்,அசுரர்களும் முனிவர்களும் இயக்கர் கின்னரர் முதலியோரும் எங்கும் நிறைந்து விளங்கினர். வெள்ளிப் பனிமலையின் மீது மரகதக் கொடி போன்ற உமா தேவியுடன் பவள மேனியனாய் வீற்றிருந்த வள்ளலாரை வாகீசர் தரிசித்தார்.

( “ வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்

தெள்ளு பேரொளிப் பவள வெற்பு என இடப் பாகம்                                           கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த                                                       வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.” — பெரிய புராணம் )

கண்கள் அருவி நீர் பாயக் கைகள் சிரத்தின் மீது கூப்ப,மெய் சிலிர்க்க ஆனந்தக் கூத்தாடியும் பாடியும் கயிலை நாதனைத் தரிசித்த வாக்கின் மன்னவனாரது அனுபவ நிலையை யாரால் கூற முடியும்?

சிறிது நேரத்தில் கயிலைக் காட்சி மறைந்து திருவையாற்றுத் திருக்கோயில் மட்டுமே தெரியலாயிற்று. தாம் அங்கு கண்டவற்றைத் திருப்பதிகமாக,

“ மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி                போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்  “

எனத் துவங்கிப் பாடியருளினார். மேலும் பல பதிகங்கள் பாடி அத்தல த்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்து கொண்டிருந்தார்.

திருவையாற்றை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசர் அருகாமையில் உள்ள திரு நெய்த்தானம்,திருமழபாடி ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிப் பணி  செய்தபின் திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தார்.  கோயிலை வலம் வந்து பணிந்து, “ பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே” எனப்பாடினார். மேலும் திருக் குறுந்தொகை,திரு விருத்தம் ஆகியன பாடிப்  பல நாட்கள் அங்கு தங்கியிருந்தார். திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் அமைத்துக் கொண்டு பலவகைப்பட்ட திருத்தாண்டகங்களையும் திருவங்கமாலை முதலாய பல திருப்பதிகங்களையும் பாடியருளி  உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார்.

மதுரையம்பதியில் சமணர்களை வாதில் வென்று சைவத்தை நிலைநாட்டி விட்டுத் திருஞானசம்பந்தப்பெருமான் திருநாவுக்கரசரை சந்திக்க விரும்பித்  திருப்பூந்துருத்தியை வந்தடைந்தார். அதனை அறிந்த அப்பர் பெருமான்  சம்பந்தப்பிள்ளையாரின் சிவிகையைத் தாங்குபவர்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டி ஒருவரும் அறியாதபடி முத்துச் சிவிகையைத தாங்கி வந்தார்.  பூந்துருத்திக்கு அண்மையில் வந்ததும்,சம்பந்தர் சிவிகையில் இருந்தபடியே, “ “ அப்பர் எங்கு உற்றார்?” என, அச்சிவிகையைத் தூக்குபவர்களுள் ஒருவராக இருந்த நாவரசர்  மனமுருகி,” அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு  வந்து எய்தப்பெற்று இங்கு உற்றேன்” எனக் கூறித் துதித்தார்.  அதனைக் கேட்ட சம்பந்தர் விரைந்து அச்சிவிகையிலி ருந்து இறங்கி, திருநாவுக்கரசரை வணங்க, அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார்.இருவருமாகப் பெருமானது கோயிலை வணங்கித் துதித்து அத்தலத்திலேயே தங்கியிருந்தனர்.

மதுரையில் சமணர்களை வென்றதையும், பாண்டியன் கூன் நிமிர்ந்து சைவனானதையும், அனைவரும் திருநீறணிந்ததையும், மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையாரது அன்பின் மேன்மையையும்  திருஞானசம்பந்தர் வாயிலாகத்  திருநாவுக்கரசர் அறிந்தார். அவர்களைக் காண விரும்பிப் பாண்டியநாடு செல்லத் திருவுள்ளம் கொண்டார். சம்பந்தரும் தொண்டைநாட்டுப் பதிகளைத் தரிசிக்க விரும்பி அப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு திருப்பூந்துருத்தியிலிருந்து புறப்பட்டார்.

திருப்புத்தூரை வணங்கித் திருப்பதிகம் பாடிய நாவுக்கரசர் மதரைத்  திரு  ஆலவாயை  அடைந்து “ முளைத்தானை” எனத் துவங்கும் தாண்டகம் பாடி , நெடுமாற பாண்டியனும் அவனது தேவியான மங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் போற்ற அங்குத் தங்கியிருந்து திருநேரிசை, திருவிருத்தம்  ஆகிய தமிழ்ப் பாமாலைகளால்  ஆலவாய் அண்ணலடி போற்றிவந்தார்.  பின்னர் திருப்பூவணம் சென்று, “ வடிவேறு திரிசூலம்” எனும் திருத்தாண்டகம் பாடிவிட்டுத் திரு  இராமேச்சுரத்தை அடைந்தார். அங்குத் திருநேரிசை பாடிப் பல நாட்கள் தங்கிய பின், திருநெல்வேலி,திருக்கானப்பேர்  முதலிய  பாண்டிப்பதிகளை வணங்கிக் கொண்டு சோழ நாட்டை அடைந்து திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்குத் தங்கிய காலத்தில், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத் தாண்டகம்,க்ஷேத்திரக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித் திருநேரிசை,ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணம்,பாவநாசப்பதிகம்,சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடியருளி,உழவாரப்பணியில் தலை நின்றார்.

திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகுக்குக் காட்ட வேண்டி, சிவபெருமான் அவர் உழவாரம் செய்யும் இடத்தில், பொன்னும் மணிகளும் தோன்றச் செய்தான். ஆனால் அவற்றை மண் கற்களுக்குச் சமமாகக் கருதிய வாகீசர் அவற்றை அருகிலிருந்த தடாகத்தில் வீசி எறிந்தார். அப்பரின் தூய துறவு நிலையை யாவரும் அறியவேண்டி இறையருளால் தேவலோகப் பெண்டிர் அங்குத்  தோன்றி நடனம் ஆடினார். சிவபெருமான் திருவடிக்கே வைத்த நெஞ்சுடைய திருநாவுக்கரசர் அவர்களை நோக்கி, “ உங்களால் இங்கு ஆவது ஏதுமில்லை. யான் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆளாகி உள்ளேன்” என்ற கருத்தில் “ பொய்ம்  மாயப் பெருங்கடலில்”  என்று தொடங்கித் திருத்தாண்டகம் பாடினார். அரம்பையர்கள் இதைக் கண்டு அவரை வணங்கிச் என்றனர்.

சிலநாட்கள் சென்றபின், தன்னைப் புகலூர் அண்ணல் நரகத்தில் கிடக்க ஒட்டான் சிவலோகத்தில் இருத்திடுவான் என்ற கருத்தில் திருவிருத்தமும், இறைவனது திருவடிக்கே சென்று சேர வேண்டும் என்ற விருப்போடு, திருத் தாண்டகமும் பாடியருளினார்.

“ எண்ணுகேன் என் சொல்லி எ ண்ணுகேனோ                                                           எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்                                                   கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்                                                         கழலடியே கைதொழுது காணின் அல்லால்                                                         ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்                                                             புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்                                                                பூம்புகலூர் மேவிய புண்ணியனே

என்பது அத்திருத்தாண்டகத்தின் முதல் பாடல். இவ்வாறு பாடித் தொழுததும் இறைவன் அருளாலே சித்திரை மாத சதய நன்னாளில் சிவபெருமானது திருவடி நீழலில் ஆண்ட அரசு அமர்ந்தருளினார். வானோர் மலர்மாரி பொழிந்தனர். விண்ணதிர இசைக் கருவிகள் முழங்கின. அனைத்து உயிர்களும் பெருமகிழ்ச்சி பெற்றன.

**************************************

குலச்சிறை  நாயனார்

பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்ற நில வளம் மிக்க ஊரில் குலச்சிறையார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதில் அவர் தலைசிறந்து விளங்கினார். அவர்கள் எக்குலத்தவராயினும் நல்லவராயினும் தீயவராயினும் அவற்றைப் பொருட் படுத்தாது சிவனடிக்கு அன்பு கொண்டவராக இருந்தால் அவர்களை வணங்கிப் போற்றி வந்தார். அவர்கள் தனித்து வந்தாலும் பலராக வந்தாலும் எதிர்கொண்டு வணங்கி அன்புடன் திருவமுது செய்வித்து வந்தார்.விபூதி-ருத்திராக்ஷம் தரித்தவர்களையும் பஞ்சாட்சரம் ஒதுபவர்களையும் பேரன்புடன் துதித்து வந்தார்.

பாண்டிய மன்னனாகிய நின்ற சீர் நெடுமாறனிடம் குலச்சிறையார் முதலமைச்சராக விளங்கி அரச காரியங்களைத் திறம்படச் செய்து வந்தார். அத்துடன் பாண்டியனின் தேவியாகிய மங்கையர்க்கரசியின் சைவத் தொண்டிற்கு உறுதுணையாகவும் இருந்தார். அப்போது பாண்டிய நாடு சமணர் வயப்பட்டு இருந்தமையால் அரசியாரின் விருப்பப்படித் திருஞானசம்பந்தரிடம் தூது அனுப்பி அவரை மதுரைக்கு எழுந்தருள வேண்டினார். சம்பந்தப்பெருமாநிடத்துப் பெரிதும் பக்தி பூண்டு அவரது பொன்னார் திருவடிகளைத் தலைமேல் கொண்டு பணி  செய்தார். சம்பந்தரிடம் சமணர்கள் வாதத்தில் தோற்றுத்  தாம் ஏற்ற சபதப்படிக் கழு வேற முற்பட்டபோது தீமை நீங்குமாறு அவர்களைக் கழுவேற்றும் பணி ஏற்றார்.

*******************************************

பெருமிழலைக் குறும்ப நாயனார்

மிழலை நாட்டில் பெருமிழலை (புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது என்பர்) என்ற செழுமை மிக்க ஊரில் குறுநில மன்னராகப் பெருமிழலைக் குறும்பர் என்பவர் இருந்தார். குறும்பர் வமிசத்தில் தோன்றிய இவர்,சிவனடியார்கள்   பால் பேரன்பு பூண்டு திருவமுதூட்டித் தமது செல்வங்களை எல்லாம் அவர்களுக்கே உரியதாக்கி வந்தார்.

திருவாரூரில் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடியதை அறிந்த பெருமிழலைக் குறும்பர் சுந்தரரது திருவடிகளை நாள்தோறும் வணங்குவதே இறைவனது திருவடிகளை அடைய எளிய வழி எனத் துணிந்தார். ஆகவே, பரவை மணாளரான சுந்தர மூர்த்தி நாயனாரது திருநாமத்தை நாவினால் விடாது உச்சரித்ததால், அணிமா, மகிமா,  இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம்,வசித்துவம் ஆகிய அட்ட மா சித்திகளையும் கைவரப்பெற்றார். ஐந்தெழுத்தை ஓதி சித்தி அனைத்தும் பெற்றார்.

இவ்வாறு பெருமிழலைக் குறும்பர் இருந்துவரும் காலத்தில், சுந்தரர் கொடுங் கோளூரை அடைந்து அங்குள்ள திருவஞ்சைக் களத்து ஈசனை வணங்கிப் பதிகம் பாடினார். அதன் உட்குறிப்பு,நிலவுலக வாழ்வு நீங்கப்பெற்று ஈசனை அடைய வேண்டும் என்பது. சுந்தரரின் வேண்டுகோளுக்கு இரங்கிய பெருமான் அவரைக் கயிலைக்கு வெள்ளை யானையின் மீது ஏறி வர அருள் பாலித்தான். இதனை யோகத்தால் அறிந்த பெருமிழலைக் குறும்பர் “கண்  இழந்து வாழ்வதுபோல் சுந்தரரைப் பிரிந்து வாழேன் அவர் கயிலை சென்று சேர்வதன்  முன் யோகத்தால் சென்று சேர்வேன் “ எனத்  துணிந்தார். யோகத்தால் அவரது பிரம ரந்திர  வாயில் திறந்தது. சுந்தரர் கயிலையை  அடையும் தினத்திற்கு (ஆடி சுவாதி) முன் தினத்திலேயே(ஆடி சித்திரை) திருக் கயிலையை அடைந்து சிவனடியைச்  சேர்ந்தார்.

***************************

பேயார்  ( காரைக்காலம்மையார் )

karaikal ammaiyar2

சோழ நாட்டுக்  கடற்கரைப்பட்டினமான காரைக்கால் என்ற நகரில்  வணிகர் குலத் தலைவராகத் தனதத்தன்    என்பவர் .வாழ்ந்து வந்தார்.அவர் செய்த  தவத்தின் பயனாகத் திருமகள் போன்ற தோற்றம் கொண்ட பெண் மகவாகப் புனிதவதியார் அவதரித்தார்.  இளமையிலிருந்தே சிவபெருமானது திருவடிகளுக்குப் பேரன்பு பூண்ட திலகவதியார் சிவனடியார்களையும் வணங்கி வந்தார்.

தன்  மகளுக்கு மணப்பருவம் வந்ததும், தனதத்தன் தனது குடிக்கு ஒத்த ஆண்மகனுக்கு அவரைத்   திருமணம் செய்து தர எண்ணிய வேளையில், நாகப் பட்டினத்து வணிகன் ஒருவன் தனது மகனான பரமத்தனுக்குப் புனிதவதியாரை மணம் பேசப் பெரியோர்களைக் காரைக்காலுக்கு அனுப்பி வைத்தான்.  அவர்களை வரவேற்ற தனதத்தன் பெரிதும் மகிழ்ந்து மணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். நல்லதோர் மண நாளில் காரைக்காலில் மயில் போன்ற  சாயலை உடைய புனிதவதியாருக்கும் காளை போன்ற  பரமத்தனுக்கும் திருமணம் வேத விதிப்படி நடைபெற்றது.

தனது குடிக்கு ஒரே மகளானதால் நாகப்பட்டினத்திற்குப் போக விடாமல் காரைக்காலிலேயே அருகாமையில் ஓர் மாளிகையை  தனதத்தன் புது மணத் தம்பதியருக்கு அமைத்துத் தந்து அளவற்ற நிதியையும்  தேவையான மற்ற  பொருள்களையும் அளித்தான். பரமதத்தனும் தனது மனைவியாருடன் அதில் தங்கி இல்லறம் சிறக்க வாழ்ந்ததோடு வணிகத்திலும் மேம்பட்டான்.

ஒருநாள் தனதத்தனைச் சந்திக்க வந்த சிலர் இரண்டு   மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றனர்.  அவற்றைத் தமது இல்லத்தில் கொடுக்குமாறு  அவர்களிடம் தனதத்தன் கூறினான். கணவனார் அனுப்பி வைத்த மாங்கனிகளைப்  புனிதவதியார் இல்லத்தில் வாங்கி வைத்தார். சற்றைக்கெல்லாம் ஒரு சிவனடியார்   அம்மனைக்கு எழுந்தருளினார்  அவரது வருகையால் மகிழ்ந்த புனிதவதியார் அவரை  உபசரித்து அமுது படைக்கத் தொடங்கினார். தனது கணவனார் கொடுத்து அனுப்பிய இரு மாங்கனிகளுள் ஒன்றை மனமகிழ்ந்து பசியால்  வாடியிருந்த அம்முதிய சிவனடியாருக்கு அமுது செய்வித்தார். அந்த அடியவரும் இதனால் பெரிதும்  மகிழ்ந்து விடைபெற்றுச் சென்றார்.

நண்பகலில் மனைக்குத் திரும்பிய பரமதத்தன் நீராடிய பின்  உண்ண   அமர்ந்தான். அன்னம், கறிவகைகளை இலையில் இட்டபின், எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து கணவனுக்குப் படைத்தார் புனிதவதியார். அம்மாங்கனியின்  சுவையைப் பெரிதும் விரும்பிய பரமதத்தன், மற்றொரு மாங்கனியையும் இலையில் இடுமாறு கூறினான். அதனைக் கொண்டு வருபவர்போல் ஒரு புறம் தள்ளி நின்று செய்வதறியாமல் மனம் தளர்ந்து . சிவபிரானது திருவடிகளைச் சிந்திக்கலானார். அப்போது அவரது கரத்தில் அதிமதுர மாங்கனி ஒன்று இறை அருளால் வந்தடைந்தது. சிவனருளை எண்ணித் துதித்து மிக்க மகிழ்ச்சியுடன் அதனைக் கணவனார் உண்ணுமாறு இலையில் படைத்தார் . அதை உண்ட பரமதத்தன் அப்பழத்தின் சுவை அமுதினும் சிறந்து விளங்குவதைக் கண்டு, புனிதவதியாரை நோக்கி,                   ” இப்பழம் நான் முன் கொடுத்தனுப்பிய மாங்கனியினும் சுவையில் வேறு பட்டு இருக்கிறது. மூவுலகங்களிலும் இதைப் போன்ற கனியைப் பெறுவது அரிது. இக்கனியை எவ்வாறு பெற்றாய்?” எனக் கேட்டான். வேறு செயலின்றிக் கணவனாரிடம் நடந்தவற்றைக் கூறினார் கற்புக்கரசியான புனிதவதியார்.

“ஈசன் அருளால் அதிமதுரக் கனி பெற்றது உண்மையாயின் அவனருளால் இன்னும் ஒரு கனியைப் பெற்றுத் தருவாயாக” என்ரூ கூறினான் பரமதத்தன். அங்கிருந்து நீங்கி சிவபெருமானது கழல்களை வேண்டி, “ இன்னொரு கனியை இப்போது தேவரீர் தராவிடில் முன்னம் தந்தது பொய் என்று ஆகி விடுமே” என வேண்டியவுடன் திருவருளால் ஒரு மாங்கனி புனிதவதியாரது கரத்தை  வந்தடைந்தது. அதைக் கொண்டு வந்து  கணவனின் கையில் கொடுத்தவுடன் அக்கனி திடீரென்று மறைந்து விட்டது. அதனைக் கண்டு அச்சமடைந்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வப் பிறவியாக எண்ணி அவரை விட்டு நீங்க வேண்டும் என்று துணிவு கொண்டான்.

கடல்கடந்து சென்று பெரும் திரவியம் ஈட்டி வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஒரு கப்பலில் வாணிபம் செய்வதற்கான பொருள்களை ஏற்றிக்கொண்டு தான் விரும்பிய தேசத்தில் தங்கினான்   பெரும் பொருள் சம்பாதித்து அங்கு சில நாட்கள் தங்கி விட்டுப் பின்னர் பாண்டிய நாட்டிலுள்ள ஒரு கடற்கரைப் பட்டினத்தை அடைந்தான். அவ்வூரார் ஒப்புதலுடன் ஒரு வணிகர் குலப் பெண்ணை மணந்து அங்கு வாழ்ந்து வந்தான். ஆனால் புனிதவதியாருக்குத் தான் செய்த வஞ்சனையை எவரிடத்தும் கூறாமல் மண வாழ்க்கை வாழ்ந்துவரும் நாளில் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மகவுக்குச் சடங்குகள் செய்து, தான் அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தனது  குல தெய்வமாகக் கருதியபடியால் அவரது  நாமமாகிய  “ புனிதவதி” என்ற பெயரை அக்குழந்தைக்கு  இட்டான்.

கற்பினுக்கரசியாகப் புனிதவதியார் கணவனாரது வருகைக்காகக் காரைக்காலில் காத்திருந்தபோது பரமதத்தன் வேறோர் பெண்ணை மணந்து பாண்டிய நாட்டுப் பட்டினத்தில் வாழ்வதைப்  புனிதவதியாரின் சுற்றத்தார்கள் கேள்விப்பட்டனர். எனவே, சிவிகை ஒன்றில் புனிதவதியாரை ஏற்றித் தோழிகள் சூழப்  பாண்டிய நாட்டுப் பட்டினத்தை  அடைந்து தாம் வந்த செய்தியைப்  பரமதத்தனுக்கு முன்கூட்டி அறிவித்தனர்.  அவரது வருகையைக் கேள்விப்பட்ட பரமதத்தன் மனத்தில் பயத்துடன் தனது இரண்டாவது மனைவியோடும் பெண் குழந்தையோடும் புனிதவதியாரிடம் வந்து அவரது திருவடியில் வீழ்ந்து வணங்கினான். “ நான் உம்  அருளால் வாழ்வதால் இக்குழந்தைக்கும் உமது திருப்பெயரையே இட்டுள்ளேன்”  என்றான். தனது கணவன் இவ்வாறு தம்மை வணங்குவதைக் கண்ட புனிதவதியார், அச்சத்துடன் தந்து சுற்றத்தார்கள் பக்கம் சென்று நின்றார். சுற்றத்தார்கள் பரமத்தனிடம், “ நீ இவ்வாறு மனைவியை வணங்குவது என்னை?” என்றனர். அதற்கு அவன், “ இவர் நம்மைப் போல் சாதாரண மானுடர் அல்லர். நமக்கெல்லாம் பெரும் தெய்வமும் ஆவார். அதனால் தான் அவரை அஞ்சி நீங்கி வந்தேன். அவர் பெயரையே குழந்தைக்கும் இட்டுள்ளேன். அதுபோலத்  தாங்களும் அவரைப் போற்றுங்கள்” என்றான். இதைக் கேட்ட சுற்றத்தார்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

கணவனாரது சொற்களைக் கேட்ட புனிதவதியார், சிவபெருமானுடைய திருவடிகளைச்  சிந்தித்து, “ இதுவரையில்  கணவன் பொருட்டுத் தாங்கிய தசைப் பொதியை நீக்கி உமது பூத கணங்கள் போற்றும் பேய் வடிவைத்  தந்தருளுவீராக”  என்று வேண்டினார். திருவருளால் அவர் வேண்டியபடியே அழகின் இருப்பிடமான சதைப்பகுதிகளை உதறிவிட்டு எலும்பே உடலாக விண்ணும் மண்ணும் போற்றும் பேய் வடிவம் பெற்றார்.  தேவர்களும் முனிவர்களும் மகிழ,சிவகணங்கள் கூத்தாட, துந்துபிகளின்  முழக்கத்துடன் மலர் மாரி  பெய்தது. சுற்றத்தார்கள் அச்சத்துடன் அவரைத் தொழுதுவிட்டு அங்கிருந்து நீங்கினர்.

அதற்குப்பின் திருவருளால் ஏற்பட்ட  ஞானத்தால் இறைவனைத் துதித்து   “ அற்புதத் திருவந்தாதி” யும், “ திரு இரட்டை மணி மாலை”யும் பாடினார். பிறகு, திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்லலானார். அவரது பேய் வடிவைக்  கண்டவர்கள் அஞ்சி ஓடினர்.  கயிலை மலைக்கு அருகில் சென்றதும் அங்கே காலால் நடப்பது தகாது என்று மகிழ்ச்சி மேலிடத் தலையால் நடந்து சென்றார். இதனைக் கண்ட உமாதேவியார், இவ்வாறு  தலையால் நடந்து வரும் எலும்பு வடிவின் பேரன்புதான் என்னே?” என்று வியந்தார். அதற்கு விடையாகப் பெருமான் உமையன்னையை நோக்கி,    “ உமையே, இவ்வாறு நம்மைக் காண வருபவள் நம்மைப் பேணும் அம்மை ஆவாள். இப்பெருமை மிக்க பேய் வடிவை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டாள்.”  என்று கூறி, காரைக்கால் அம்மையை நோக்கி, “ அம்மையே” உலகெலாம் உய்ய அழைத்தார். அப் பேரருளைக் கேட்ட அம்மையார், ஈசன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி,   “ அப்பா” என்றார்.

சிவபெருமான் அம்மையை நோக்கி, “ நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது” என்று கேட்க, அதற்கு அம்மையார், “ என்றும் மாறாத அன்பு தங்களிடம் இருக்க வேண்டும். அடியேன்  உலகத்தே இனிப் பிறவாமல் இருக்க வரம் தரல் வேண்டும். இவ்வையகத்தே ஒருக்கால் பிறக்க நேர்ந்தால் உன்னை என்றும் மறவாதிருக்கும்படி வரமளிக்க வேண்டும். அற  வடிவான  பரம்பொருளே, அது மட்டுமல்ல. நான் மிக்க மகிழ்ச்சியோடு உன் புகழைப் பாடும்போது, உனது திருவடியின் கீழே இருக்குமாறு அருள் புரிதல் வேண்டும் “  என்று வேண்டினார்.

“ இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்                              பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்   மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்றார் “

— பெரிய புராணம்

சிவபெருமான் அவர் வேண்டிய  வரங்களை அருளியபிறகு, அம்மையிடம்,      “ தென்னாட்டிலுள்ள பழையனூர்த் திருவாலங்காட்டில் நாம் ஆடுகின்ற தாண்டவத்தைக்  கண்டு மகிழ்ந்து, நம்மைப் பாடிக் கொண்டு இருப்பாயாக” என்று அருளிச்  செய்தான். .

காரைக்கால் அம்மையாரும் தலையினால் நடந்து திருவாலங்காட்டை அடைந்து திருக்கோயிலில் அண்டமுற நிமர்ந்து ஆடும் பெருமானை உளம் குளிரத் தொழுதார். அப்பொழுது, “ கொங்கை திரங்கி” எனத் தொடங்கும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தையும், “ எட்டி இலவம்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும் பேரன்பு பொங்கப் பாடியருளினார்.

சிவபெருமானால் “ அம்மையே” என்று அழைக்கப்பெற்றவரும், பெருமானது அண்டமுற ஓங்கி ஆடும் அற்புதத் திரு நடனத்தை எப்போதும் தரிசித்துக் கொண்டு அந்த ஆடும் சேவடிக்கீழ் என்றும் அமர்ந்திருக்கும் பேற்றினைப்  பெற்றவருமான  காரைக்கால் அம்மையின் பெருமையை யாரால் கூற இயலும்!

***************************************

அப்பூதி அடிகள் நாயனார்

சோழநாட்டுத் திங்களூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியார் ஆவார். சிவபெருமானிடத்தில் அளவற்ற அன்பு பூண்டு பெருமானது அன்பர்களிடமும் மிக்க அன்பு செலுத்தி வந்தார். திருநாவுக்கரசு நாயனாரை  நேரில் காண்பதற்கு முன்பே அவரை ஈசன் ஆட்கொண்ட திறத்தைக் கேள்விப்பட்டார். அதனால்  அப்பர் பெருமானிடம் அவருக்கு எல்லையற்ற பக்தி ஏற்பட்டது. தனது மனையில் உள்ள மக்களுக்கும், பசுக்களுக்கும், அளவுகோல்களுக்கும் திருநாவுக்கரசரது திருப்பெயரையே இட்டார். தான் அமைத்த திருமடம்,சாலை,தண்ணீர்ப்பந்தல்,குளம் ஆகியவற்றுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரையே இட்டு வழங்கி வந்தார்.

இங்ஙனம் பல்வேறு அறப் பணிகளை வாகீசப்பெருமானது திரு நாமம் கொண்டு நடத்தி வரும்போது, ஒருநாள் திருப்பழனத்தைத் தரிசித்த அப்பர் பெருமான் அருகிலுள்ள திங்களூரைத் தரிசிக்க வேண்டிச்  சென்றார். வழியிலிருந்த தண்ணீர்ப் பந்தலை அடைந்தவுடன் அப்பந்தலுக்குத்   “ திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டார். இவ்வாறு இப்பெயரிட்டிருப்பவர் யார் என்று அங்கிருந்தவரை அவர் கேட்க அதற்கு அவர்கள், “ திங்களூரில் வாழும் அப்பூதி அடிகளார் இப்பந்தர் மட்டுமல்லாது, குளம்,சாலை ஆகியவற்றிற்கும் நாவுக்கரசரின் பெயரைச் சூட்டியிருகிறார்” என்று  தெரிவித்தார்கள்.  இதன் கருத்தை அறிய வேண்டி அப்பூதியாரின் மனையை அடைந்தார் அப்பர் பெருமான்.

சிவனடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அறிந்த அப்பூதியார் மனைக்கு வெளியில் வந்து திருநாவுக்கரசரது திருவடிகளை வணங்க அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார். “ அருள் ததும்பும் திரு வடிவினை உடையீர்! தாங்கள்  எழுந்தருள முன்னம்  தவம் செய்தேன் போலும்  “ என்றார் அப்பூதியார். அதற்கு அப்பர் பெருமான், “ திருப்பழனத்தைத் தரிசித்துவிட்டுத்  திங்களூர்  வரும் வழியில் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டும்,பிற அறச் செயல்களைப் பற்றிக் கேள்விப் பட்டும்  தங்களைக் காண வந்தோம். அவ்வறங்களுக்கு உமது பெயரை இடாது வேறொரு பெயரை இட வேண்டியதன் காரணம் என்ன என்று கூறுவீராக” என்றார்.

அதனைக் கேட்ட   அப்பூதியார் சிந்தை நொந்தவராய் ,” சமணர்கள் பல்லவ மன்னனுடன்  விளைவித்த தீங்குகளைத் திருவருள் துணை கொண்டு வென்று , கல்லினோடு பூட்டிச்  சமணர்கள் கடலில் வீசிய போது  அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு அஞ்செழுத்து ஓதிக்  கரை ஏறிய பெருமை கொண்ட திருநாவுக்கரசரையா “வேறொருவர்”   என்றீர்? மங்கல  வேடம் பூண்டும் இவ்வார்த்தைகளைக் கூறினீர்.நீர் எங்கு உறைபவர்? நீர்தாம் யார் என்று இயம்புவீராக” என்று சினத்துடன் மொழிந்தார். அப்பூதியாரின் பேரன்பைக்  கண்ட திருநாவுக்கரசர்,                                      ”   இறைவனால்   சூலை நோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் அடியவன்” என்றார்.

இதனைக் கேட்ட அப்பூதியார்  உரை தடுமாறியவராக்  கண்ணில் ஆனந்த அருவிநீர் பாயக் கைகள் சிரமேல் கூப்பியவராய் திருநாவுக்கரசரது திருவடிக் கமலங்களை வீழ்ந்து வணங்கினார். பெறற்கரிய நிதியினைப் பெற்றவரைப்    போல் மனமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினார். செய்வதறியாமல் திகைத்து ஆடினார்;பாடினார். வீட்டிற்குள் சென்று மனைவி,மக்கள், சுற்றத்தார் ஆகியோரை அழைத்து  வந்து அப்பர் பெருமானை வணங்கச் செய்தார். வாகீசப்பெருமானை இல்லத்தினுள் எழுந்தருளச் செய்து அவரது திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்வதன்மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடையப்பெற்றார். பின்னர் நாவரசரை ஓர் ஆசனத்தில் அமரச் செய்துப்   பூசித்து, திருவமுது செய்தருளுமாறு வேண்டவே, அப்பரும் அன்பரின் வேண்டுகோளை ஏற்றார்.

அப்பூதியடிகள் தனது  மனைவியாரிடம்,” வாகீசப்பெருமான் நமது இல்லத்தில் எழுந்தருளி அமுது ஏற்பது நாம் முன் செய்த  ஆகும். இதனால் நாம் உய்ந்து விடுவோம் “ எனக் கூறியதும், மனைவியாரும் பேருவகையுடன், அறுசுவையோடு கூடிய திருவமுதையும்,காய் கறிகளையும் சமைத்தார். பிறகு தனது மூத்த மகனான மூத்த திருநாவுக்கரசைத் தோட்டத்தில் சென்று நல்லதோர் வாழைக் குருத்தை அரிந்து வருமாறு அனுப்பினார்.

நல்ல தாய் தந்தையர் ஏவலால் இப்பணி கிடைக்கும் பேறு  பெற்றேன் என்று மகிழ்ந்த  மூத்த திருநாவுக்கரசு தோட்டத்திற்கு விரைந்து சென்று வாழைக் குருத்தை அரிய முற்படும்போது பாம்பு ஒன்று அவனைத்  தீண்டியது.அப்பாம்பினை உதறி விட்டு விஷத்தால் நான் கீழே விழும் முன்பு அரிந்த இக்குருத்தைச் சென்று கொடுப்பேன் என்று ஓடிவந்து தாயின் கையில் கொடுத்துவிட்டு மயங்கி வீழ்ந்தான்.  தலைக்கு ஏறியதால் விடம்  இறந்தது தெரிய வந்தது. ஆனால் அப்பூதியாரும் அவர் மனைவியாரும் வாகீசர் இதனை அறிந்தால் அமுது செய்ய மாட்டார் என்பதால்  மாண்ட மகனை ஓர் பாயினுள் வைத்து மூடி  பின்புறம் இருத்தி விட்டு இனியும்  தாழ்த்தலாகாது என விரைந்து வந்து அப்பர்  அமுது செய்ய அழைத்தனர் .

திருநாவுக்கரசரை வணங்கி, “தேவரீர் அமுது செய்து எமது குடி முழுதையும் உய்யும் வண்ணம் ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று அப்பூதியார் விண்ணப்பித்தார். ஓர் ஆசனத்தில் அமர்ந்து  வெண்ணீறு அணிந்து வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் திருநீற்றினை அளிக்கும்போது, “ மூத்த மகனையும் திருநீறு பெற அழைப்பீராக” என்றார் வாகீசர். நிகழ்ந்தவற்றைக் கூறாமல், “ இப்போது அவன் இங்கு  உதவான்” என்றார் அப்பூதி அடிகள். அதனைக் கேட்ட அப்பரது மனத்தில் ஓர் தடுமாற்றம் எழுந்தது. நடந்தவற்றை விவரமாகக் கூறுவீராக   என்று  கேட்டார் நாவுக்கரசர். இனியும் உண்மையை மறைக்கக் கூடாது  என்பதால் வேறு வகை இன்றி நடந்தவற்றைக் கூறினார் அப்பூதி அடிகள்.  அதைக் கேட்ட வாகீசர்,” இவ்வாறு  செய்பவர் வேறு யார் உளர்? எனக் கூறிவிட்டு இறந்த மகனைத் திருக்கோயிலின் முன் கொண்டு வரச் செய்தார். அப்போது சிவபெர்மானது திருவருளை வேண்டி, “ ஒன்று  கொலாம்”எனத் துவங்கும் திருப் பதிகத்தைத் திருநாவுக்கரசர்  பாடியதும், உறக்கத்திலிருந்து எழுபவன் போல் மூத்த திருநாவுக்கரசு விடம் நீங்கி  அவரது திருவடியைத் தொழுதான். இதனைக் கண்டோரெல்லாம் திருத் தொண்டின் பெருமையை வியந்து போற்றினர். ஆனால் அப்பூதியாரும் அவரது மனைவியாரும் ,” அன்பர் அமுது செய்ய இடையூறு ஏற்பட்டு விட்டதே” என்று  வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்கிய நாவுக்கரசர் அமுதுண்ண  இசைந்தார்.அதற்கு முன் அம்மனை கோமயம் கலந்த   நீரால் மெழுகிக்  கோலமிடப்பட்டது  அப்பூதியாரும் அவரது மக்களும் உடனிருந்து  அமுது செய்யுமாறு அப்பர் பெருமான் கூறியதும், அவ்வாறே அப்பூதியாரது மனைவியார் பரிமாற , வாகீசருடன் அப்பூதியாரும் அவரது மைந்தரும் திருவமுது செய்தனர். பின்னர் அங்குப் பல நாட்கள் தங்கிவிட்டு விடைபெற்றார் வாகீசப்பெருமான்.

திங்களூருக்கு அண்மையிலுள்ள திருப்பழனத்தை அடைந்த வாகீசர், அப்பூதியடிகளின் திருத்தொண்டின் பெருமையை அத் தலத்து  இறைவன் மீது  “ சொன்மாலை” என்ற திருப்பதிகம் பாடியபோது அதன் கடைசிப் பாடலில் சிறப்பித்தருளினார். இவ்வாறு அப்பர் பெருமானது திருவடிகளே உறுதிப் பொருளாகக் கொண்டு அதனை எந்நாளும் துதிக்கும் ஊதியத்தையும் பெற்றார் அப்பூதி அடிகள். இதனால் தில்லையம்பலத்துள் நடமாடும் ஈசனின் பொற்பாத நிழலை அடைந்து பேரின்ப நிலை பெற்றார்.

************************************

 திருநீலநக்க நாயனார்

சோழவளநாட்டில் அரிசொலாற்றின் வடகரையிலுள்ளதும் திருமருகலுக்கு அண்மையில் உள்ளதுமான திருச்சாத்தமங்கை என்பது சாமவேதம் ஓதும் அந்தணர்கள் முத்தீவளர்த்தும், அங்குள்ள அயவந்தி எனும் ஆலயத்திலுள்ள  சிவபெருமானையும் அவனது அடியார்களையும் அன்பொடு அர்ச்சித்தும்  வாழும் பதியாக விளங்கியது. அத்தகைய மூதூரில் திருநீலநக்கர் என்ற  அந்தணர் குலத்தைச் சேர்ந்த பெருந்தகையார் வாழ்ந்து வந்தார். நாள்தோறும் அயவந்தி மேவிய சிவபிரானது திருவடிகளை வணங்கி அர்ச்சிப்பதையும் அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தலையும் நியமமாகக் கொண்டு வந்தார்.பஞ்சாக்ஷர ஜபத்தை விதிப்படி செய்து வந்தார்.

ஒருநாள் சிலந்தி ஒன்று சிவலிங்கத்திருமேனியின் மீது விழுந்ததைக் கண்டு தனது குழந்தையின் மீது சிலந்தி விழுந்தால் அதனை உடனே வாயால் ஊதி விளக்கும் தாயைப் போல அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நீலனக்கரது மனைவியார் அச்சத்தோடு  விரைந்து சென்று தனது வாயால் சிவலிங்கத் திருமேனியை விட்டு அச்சிலந்தி போகும்படி ஊதினார்.அதனால் அவரது வாயிலிருந்த உமிழ்நீரும் பெருமான் மீது படுவதைக் கண்ட நாயனார் பதறிப்போய் “இனி உன்னைத் துறந்தேன்” என்று மனைவியாரைக் கோபித்தார்.

மாலைநேரம் வந்தபிறகு தமது பூஜைகளை முறைப்படி முடித்துக் கொண்டு மனை திரும்பினார் நீலநக்கர். ஆனால் அவரது மனைவியாரோ உள்ளத்தில் அச்சத்தோடு மனைக்கு வராமல் திருக்கோயிலிலேயே தங்கி விட்டனர். மனையில் அன்றிரவு பள்ளிகொண்ட நாயனாரது கனவில் சிவபெருமான் எழுந்தருளித் தனது திருமேனியைக் காட்டி, “ உனது மனைவி ஊதிய இடங்கள் தவிரப் பிற இடங்களில் சிலந்தியின் கொப்புளங்கள் தோன்றியுள்ளதைக் காண்பாயாக” என்று அருளிச் செய்தார். உடனே விழித்தெழுந்த நீலநக்கர், கைகளைக் கூப்பியவராக ஆனந்தம் மேலிடக் கூத்தாடினார். பெருமானது கருணையை எண்ணிஎண்ணிக் கண்ணீர் விட்டுக் கதறினார். இறைவனைப் பாடித் துதித்துவிட்டுப் பின்னர் கோயிலிலிருந்து  மனைவியாரை மனைக்கு அழைத்து வந்தார். பின்னர் முன்னைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியுடன் பெருமானுக்குப் பூஜைகள் சிறப்புடன் செய்தும் அடியார்களுக்கு வேண்டுவன அளித்தும் வந்தார்.

இங்ஙனம் வாழ்ந்து வரும்போது திருஞானசம்பந்தரது பெருமைகளைப் பலர் கூறக் கேட்டு அவரை நேரில் வணங்க வேண்டும் என்ற பெரு விருப்புக் கொண்டார். அப்போது தல யாத்திரையாக சம்பந்தப்பெருமான் ,திருநீலகண்ட யாழ்ப்பாணணாரும் ,அவரது மனைவியாரான மதங்க சூளாமணியாரும்  பிற அடியார்களும் உடன்வரச்  திருச்சாத்தமங்கைக்கு  எழுந்தருளினார். அதுகண்டு பெருமகிழ்வுற்ற நீலநக்கர் ஊரை அலங்கரித்துப் பந்தலிட்டு, உற்றார் உறவினரோடும் திரு ஞான சம்பந்தரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினார். பின்னர் சம்பந்தரையும் அவரோடு வந்த அடியார்களையும் தமது மனைக்கு அழைத்துச் சென்று திருவமுது செய்வித்தார். அன்றிரவு தமது மனையிலேயே அவர்கள் தங்குவதற்கு  ஏற்பாடுகளும் செய்தார்.

இரவு நேரம் வந்ததும், சம்பந்தர் நீலநக்கரை அழைத்து, “இன்றிரவு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாகிய மதங்க சூளாமணியாரும் துயிலுவதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்வீராக” என்றருளினார். அதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நீலநக்கர், அவ்விருவரும் தனது மனையின் மையப்பகுதியிலிருந்த வேதிகையின் அருகில் துயில் கொள்ளுமாறு வேண்டினார். நீலநக்கரும் அவ்வண்ணமே அமைத்துக் கொடுத்ததும்  வேதிகைத் தீ வலமாகச் சுழன்று முன்னைக் காட்டிலும் எழில்பெற விளங்கியது.

மறுநாள் காலை துயில் எழுந்த சம்பந்தப்பெருமான் அயவந்தினாதரின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அதில் நீலநக்கரின் பெருமையைச் சிறப்பித்துப் பாடியருளினார்.

திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கையிலிருந்து நீங்கும்போது  நீலநக்கர் தானும் உடன் வர விரும்பவே, சம்பந்தர் அவரைத்தடுத்து, சாத்தமங்கையிலேயே இருக்குமாறு பணித்தார். அதன்படி நீலநக்கரும் தனது பதியிலேயே தங்கி இருந்தார். இடையிடையே ஞானசம்பந்தர்  தங்கியிருந்த பதிகளுக்குச் சென்று சம்பந்தரோடு கலந்திருந்து மீண்டும் சாத்தமங்கைக்குத் திரும்புவார். இப்படிப் பலநாட்கள் சம்பந்தரின் கழலிணைகளை இடையறாது சிந்தித்து வந்தித்து விட்டு, நல்லூர்ப் பெருமணத்தில்  சம்பந்தரோடும் அடியார்களோடும் சிவ சோதியில் கலந்து கயிலை மலையில் வாழும் பேரின்ப நிலை பெற்றார்.

  ***********************************

 

                               நமிநந்தி அடிகள் நாயனார்

காவிரி பாயும் சோழநாட்டில் ஏமப்பேறூர் என்ற இயற்கை வளம் மிக்க ஊரில் நமிநந்தி அடிகள் என்பவர் அந்தணர் குடியில் அவதரித்தார்.      ( தற்காலத்தில் திருநெய்ப்பேர் என்று வழங்கும் இத்தலம் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.) அவர் சிவபெருமானது திருவடிகளைவணங்கி வழிபடும் தவத்தை மேற்கொண்டவர். தினமும் திருவாரூர் சென்று வழிபடுவதே சிறந்தது என்ற நியமம் பூண்டு அங்கு சென்று வருவதை மேற்கொண்டார்.

ஒருநாள் திருவாரூர்ப் புற்றிடம்கொண்ட பெருமானை வழிபட்ட பின் அங்கிருந்த அரநெறி என்ற தனி ஆலயத்தை அடைந்து தொண்டுகள் பலவற்றைச் செய்யலானார். இரவுப்பொழுது வரும்போது பெருமானது சன்னதியில் எண்ணற்ற நெய் தீபங்களை ஏற்ற எண்ணினார். மாலை வந்துவிட்டதால் தனது ஊருக்குச் சென்று நெய் கொண்டு வருவதற்குக்  கால தாமதம் ஆகும் எனக் கருதி, அருகிலிருந்த மனை ஒன்றுக்குச் சென்று விளக்கெரிக்க நெய் தருமாறு கேட்டார். அம்மனையில் இருந்த சமணர்கள் வெளியில் வந்து “ கையில் அனல் ஏந்தி ஆடும் உமது கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய் இல்லை. விளக்கெரிப்பதானால்  குளத்து நீரைக் கொண்டு எரிப்பீராக “ என்றார்கள்.

சமணர்களது ஏளனத்தால் மனம் நொந்த நமிநந்தி அடிகள் நேராக ஆரூர்ப் பெருமானது கோயிலை அடைந்து கண்ணீர் மல்க வீழ்ந்து வணங்கினார். அப்போது இறையருளால், “ நமிநந்தியே. அஞ்ச வேண்டாம். இக்குளத்து நீரைக் கொண்டு வந்து இடையறாது எரியுமாறு விளக்கேற்றுக “ என்ற அசரீரி மொழி ஆகாயத்திலிருந்து எழுந்தது. திருவருளை வியந்த நமிநந்தியடிகள், சிவநாமத்தை உச்சரித்த வண்ணம் திருக்குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு கரை ஏறி, திருக்கோயிலில் இருக்கும் ஆரூர் அரநெறிப் பெருமான் சன்னதியில் உலகமே வியக்கும் வண்ணம் திரு விளக்கு ஏற்றினார். அவர் ஏற்றிய தீபங்களும் சுடர்விட்டு மேலெழும்பிப் பிரகாசித்தன. விடிய விடிய அவ்விளக்குகள் எரிந்தன. பின்னர் அவ்விரவே புறப்பட்டுத் தன்  மனையை அடைந்து நித்திய பூஜையைக் குறைவறச் செய்துவிட்டு உறங்கலானார். விடிந்தவுடன் தமது பூஜையை முடித்துக் கொண்டு திருவாரூர் சென்று ஆரூர் அரநெறியில் தொண்டாற்றி, மாலையில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு இரவுப் பொழுதில் ஏமப்பேரூறுக்குத்  திரும்புவார். இவ்வாறு பலகாலம் அவரது பணி தொடர்ந்தது.

திருவாரூர்ப்பெருமானது பங்குனி உத்திர விழா வந்தபோது, நமிநந்தி அடிகள் பெருமானுடன் மணலி என்ற ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். அவ்வாறு எல்லாக்குலத்தோரும் உடன் சென்று வருவது வழக்கம். மணலிக்குச் சென்று  திரும்பிய அடிகள் வீட்டின்உ ள்ளே செல்லாது புறத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அவரது மனைவியார், சிவபூஜை செய்து அக்கினி காரியம் செய்து உணவருந்தி விட்டுப் பள்ளி கொள்வீராக என்று தமது கணவனாரிடம் கூறினார். அதற்கு நமிநந்தியார்,  “ விழாவிற்கு எல்லாக் குலத்தோரும் வந்திருந்தபடியால் தீட்டு உண்டாயிற்று. ஆகவே நீராடித் தூய்மை செய்து கொண்ட பின்னரே மனையுள் புகுந்து சிவபூஜை செய்ய வேண்டும். அதற்காகக் குளிர்ந்த நீர் தயாரித்து வைப்பாயாக என்றருளினார்.

சற்றைக்கெல்லாம் திருவருளாலோ அல்லது களைப்பினாலோ  இறைவனது திருவடிகளை நினைந்து கொண்டிருந்த அவருக்குத் துயில் வந்தது. அப்போது வந்த கனவில், ஆரூர்ப்பெருமான் அவரது பூஜைக்கு வருபவர் போலத் தோன்றி, “ திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும்  நமது கணங்களே. இதனைக் காண்பாயாக “ என்று அருளினார். உள்ளம் பதைத்து, அஞ்சி எழுந்த நமிநந்தியார், கனவுபற்றி மனைவியிடம் கூறி விட்டு, நீராடாமல் நேராக மனைக்குள் சென்று சிவபூஜை செய்தார்.

விடியற்காலையில் திருவாரூர் சென்றதும் அங்கிருந்தோர் அனைவரும் சிவ சாரூப வடிவத்துடன் காட்சியளிக்கக் கண்டு தலை மீது கைகளைக் கூப்பியவாறு நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கித் தமது  பிழையைப்  பொறுக்குமாறு வேண்டினார். பின்னர் தனது ஊரினின்றும் நீங்கித் திருவாரூரிலேயே தங்கிப் பணிகள் பல செய்து வந்த நமிநந்தியடிகள் ஆரூர்ப்பெருமானது செம்பொற் சோதியில் கலந்து திருவடி நீழலில் என்றும் தங்கும் பெருவாழ்வு வந்து எய்தப்பெற்றார்.

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-3

நாயன்மார் சரித்திரம்- 3 (தொடர்ச்சி)

மும்மையால் உலகாண்ட சருக்கம்

 

 மூர்த்தி  நாயனார்

பொதிகை மலையைக் கொண்டதும்,தாமிரபரணி ஆற்றினால் வளம் பெறுவதும், கொற்கைத்துறையில் முத்துக்கள் விளைவதும் ஆகிய சிறப்புக்களை உடையது பாண்டிய நாடு. திருமகள் வீற்றிருக்கும்  செந்தாமரை மலர் போல விளங்குவது அதன் தலைநகராகிய மதுரை ஆகும். முச்சங்கம் வளர்த்த இந்நகர், சங்கப்புலவர்களில் ஒருவராக இறைவனே வீற்றிருந்த பெருமையை உடையது. மீனாக்ஷி தேவியுடன் சோமசுந்தரேசுவரப் பெருமான் எழுந்தருளியுள்ள திரு ஆலவாய் என்னும் திருக்கோயில் இந்நகருக்குத் தனிச்சிறப்பை வழங்குவது ஆகும்.

சிவராஜதானியாகத் திகழும் மதுரையம்பதியில் வணிகர் குலம் செய்த தவப்பயனாக மூர்த்தியார் என்பவர் அவதரித்தார். அவர் சிவபெருமானிடம் அளவற்ற அன்புடன் வாழ்ந்து வந்தார். பெருமானது திருவடிகளே  தமது உறவும், நட்பும் செல்வமும் எனக் கொண்டு நாள்தோறும் திருவாலவாய்ப் பெருமானது திருக்கோயிலுக்குச் சென்று சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்தார். எவ்வாறானாலும் அப்பணியை விடாது செய்வது என்ற கொள்கை உடையவராக  இருந்தார்.

அக்காலத்தில் வடுக வகுப்பைச் சேர்ந்த கர்நாடக அரசன் ஒருவன் தனது கடல் போன்ற சேனையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சிவனடியார்கள் பல்வகைத் துன்பங்களுக்கு ஆளாயினர். அத்துன்பங்களுக்கிடையில் மூர்த்தியார் தனது சந்தனப் பணியை விடாமல் செய்து வந்தார். அதைக் கண்டு பொறாத மன்னன் அவருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதபடி செய்தான்.

மனவருத்தமுற்ற மூர்த்தியார் சோமசுந்தரக்கடவுளின் திருக்கோயிலை அடைந்து அங்கிருந்த ஒரு சந்தனம் தேய்க்கும் கல்லில் தனது முழங்கையை வைத்துத் தேய்த்தார். அதனால் இரத்தம் வெளிப்பட்டதோடு தோலும்,சதையும்,எலும்பும் தேயலாயின. அதைக் கண்டு பொறாத இறைவன், அசீரியாக,” நம்மீது உள்ள அன்பால் இவ்வாறு இனிச் செய்ய வேண்டாம். உனக்குத் தீங்கு செய்த கொடுங்கோலரசனின் ஆட்சி முடிவு பெற்று, நீயே இப்பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து, உலகைக் காத்து, சந்தனப்பணியையும் தொடர்ந்து செய்து, இறுதியில் நமது சிவலோகத்தை அடைவாயாக” என்று அருளிச் செய்தார். அதனைக் கேட்ட நாயனார், கல்லில் தன கையைத் தேய்ப்பதை நிறுத்தியவுடன், இறையருளால்  காயங்கள் மறைந்து, கையும் முன்போல் ஆயிற்று.

அன்றிரவு திடீரெனக் கருநாடக மன்னன் மடியவே, அவனது மனைவியாரும்,உறவினர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மன்னனுக்கு மகவு இன்மையால், அமைச்சர்கள் பட்டத்து யானையைக் கண்ணைக் கட்டி வீதியில் விட்டு யாரை அழைத்து வருகிறதோ அவரையே அரசனாக்குவது என்று முடிவெடுத்தார்கள்.

வீதிகளில் சென்ற யானை திருக்கோயில் வாயிலிலே நின்று கொண்டிருந்த மூர்த்தியாரை அடைந்து அவரை வணங்கித் தன் முதுகில் ஏற்றி வைத்துக் கொண்டது. அதைக் கண்ட அமைச்சர்களும் மதுரை மாநகர மக்களும் அவரது திருவடிகளை வணங்கி நின்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மூர்த்தியாரை ஏற்றிச் சென்ற யானை முடி சூட்டும் மண்டபத்தை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய மூத்தியாரை அமைச்சர்கள் அரச சிங்காதனத்தில் அமர்த்தி வணங்கினர். யாக குண்டங்களில் தீ வளர்த்து மங்கலச் செயல்கள் புரிந்தனர். அவர்களை நோக்கிய மூர்த்தியார்,” சைவம் தழைப்பதானால் இந்நாட்டை ஆளச் சம்மதிக்கிறேன்” என்றார். அனைவரும் அதற்கு உடன்படுவதாக உறுதி ஏற்றனர். மூர்த்தியாரும், திருநீற்றை  அபிஷேகப் பொருளாகவும் ருத்திராக்ஷத்தை ஆபரணமாகவும், சடைமுடியைக்  கிரீடமாகவும் கொண்டு அரசாட்சியை ஏற்றார். எனவே இம்மூன்றையும் கொண்டு உலகாண்டதால் “ மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரர் இவரைச் சிறப்பித்தார்.

பின்பு முடிசூட்டு மண்டபத்தை நீங்கி வீதிகளின் வழியே யானை ஏறிச் சென்ர மூர்த்தியார் மதுரை நகர வலம் வந்தார். அரண்மனையை அடைந்து வெண்கொற்றக் குடையின் கீழ் செங்கோலாட்சி செவ்வனே செய்து வந்தார். நாட்டில் சமணர்களது ஆதிக்கம் நீங்கி சைவ சமயம் மேலோங்கியது. ஐம்புலன்களையும் வென்றவாகத் திகழ்ந்த மூர்த்தியார் நெடுங்காலம் அரசாட்சி செய்து மக்களைக் காத்து, சைவ நெறிகளைப் புரந்து பகைவர்களிடமிருந்து பாண்டியநாட்டைக் காத்தார். நிறைவாகச் சிவபிரானது திருவடி நீழலை அடைந்து ஆறாத இன்பம் பெற்றார்.

************************************************

  முருக நாயனார்

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருப்புகலூர் என்ற சிவத்தலம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. அங்கிருந்த பெரியோர்கள் இருளிலும் ஒளி தருமாறு மெய் முழுதும் திருநீற்று ஒளி விளங்கத் துலங்குபவர்கள். அவ்வொளியால் கரு வண்டுகளும் வெண்ணிறமாகத் தோன்றும். பறவைகளும்,வண்டுகளும் செய்யும் ஒலி  பதிகங்கள் பாடுவதைப் போலத் தோன்றும். பொய்கைகளில் அலர்ந்த தாமரைகளிலிருந்து தேன் துளிகள் பொழிவதைக் கண்டால் அது பதிகங்களைக் கேட்டு உருகிய அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதைப் போலத் தோன்றும்.

திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் முருகனார் என்பவர் அவதரித்தார். நான்மறைகளைக் கற்று நாள் தோறும் ஓதி வந்ததோடு,வர்த்தமாநீசுவரம் என்ற அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்குத் தினந்தோறும் சென்று, பூக்களால் ஆன மாலைகளைப் பெருமானுக்குச் சார்த்தி வந்தார்.

விடியற்காலையில் துயில் எழுந்து, நீராடிவிட்டு நந்தவனத்திற்குச் செல்வார். அங்கு மலரவிருக்கும் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ ஆகிய மலர் வகைகளில் தக்க மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பூக்கூடைகளில் பறிப்பார். பிறகு அவற்றைத் தனி இடம் ஒன்றில் வைத்துக் கொண்டு கோவை மாலை,இண்டை மாலை, பத்தி மாலை, கொண்டை மாலை,தொங்கல் மாலை,சர மாலை ஆகிய பலவகை மாலைகளை அந்தந்தக் காலங்களுக்கு ஏற்றபடிக் கட்டுவார். பின்பு அவற்றைக் காலந்தோறும் வர்த்தமாநீசுவரருக்குத் தூய அன்போடு சார்த்தி அர்ச்சனைகள் செய்து வழிபடுவார். இடைவிடாது பஞ்சாட்சரத்தை ஜபம் செய்து கொண்டிருப்பார்.

அக்காலத்தில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்டு தேவார அமுதம் பொழிந்து வந்த  திருஞான சம்பந்தப் பெருமான் அத்தலத்திற்கு எழுந்தருளியபோது முருக நாயனார் அவரைத் தாம் எதிர் கொண்டு வணங்கி வரவேற்று, சைவசிகாமணியாகிய சம்பந்தப் பெருமானைத்     தமது இல்லத்திற்கு அழைத்து வந்து  இருத்தி, உபசரித்தார்.திருநாவுக்கரசு நாயனாரும்,சிறுத்தொண்ட நாயனாரும் திருநீல நக்க நாயனாரும் இவருக்கு நண்பராயினர்.

பின்னர், தாம் செய்து வந்த சிவபூசையின் பயனாகத் திரு நல்லூர்ப் பெருமணத்தில் திருஞானசம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று அங்கு அடியார் பெருமக்கள் அனைவருக்கும் சிவலோகத்தியாகேசரின் அருளால் சிவச்சோதி தோன்றவே அதில் இரண்டறக் கலந்து பெருமானின் திருவடி நீழலை அடைந்தார்.

**********************************************

      உருத்திர  பசுபதி  நாயனார்

காவிரியால் வளம் பெறும் சோழ நாட்டில் திருத்தலையூர் என்ற ஊர் உளது ிமுசிறிக்கு அருகிலுள்ளதிருத்தலையூரிலும் மயிலாடுதுறையிலிருந்து   கொல்லுமாங்குடி வழியாகக் காரைக்கால் செல்லும் வழியிலுள்ள திருத் தலையூரிலும் உள்ள சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரது மூல விக்கிரகங்கள் உள்ளன.) அவ்வூரிலுள்ள அந்தணர்கள் வளர்க்கும் தீயினால் மழை பொய்யாது பருவம் தோறும் பெய்யும். அவ்வூரார்கள் சிவதருமம் செய்பவர்களாகவும் நீதிமான்களா கவும் திகழ்ந்தனர். அத்தலத்தில் அந்தணர்கள் குலத்தில் பசுபதியார் அவதரித்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாக விளங்கும் பஞ்சாட்சர மகா மந்திரத்தை உள்ளடக்கிய உருத்திரத்தை இடையறாது அதற்குரிய சுருதியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

அங்குள்ள தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு கைகளைத் தலை மேல் கொண்டு இரவும் பகலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரத்தை இடைவிடாது பல நாட்கள் பசுபதியார் ஓதி வந்தார். அதனால் தாமரையில் வீற்றிருக்கும் பிரம தேவனைப் போல் தோன்றினார்.

இங்ஙனம் ருத்திரத்தை இடையறாது ஒதி வந்தமையால் ருத்திர பசுபதியார் எனப்பட்டார். நாயனாரது அளவற்ற அன்பினால் மகிழ்ந்த ஈசனும் அவருக்கு இன்னருள் புரிந்தான். அதனால் ருத்திர பசுபதியார் சிவபுரத்தை அடைந்து பெருமானது இணையடி நீழலில் இனிதே அமர்ந்தார்.

********************************************************

திருநாளைப்போவார் நாயனார்

சோழ நாட்டில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ஆதனூர் என்ற ஊரில் புலையர் சேரியில் நந்தனார் என்பவர் அவதரித்தார். அவ்வூர் இயற்கை வளம் மிக்கது. விண்ணளாவும் சோலைகளும், வாளை மீன்கள் பாயும் தாமரைத் தடாகங்களும் நண்டுகள் நிறைந்த வயல்களும் அங்கு விளங்கும். மாளிகைகளும் அடியார் கூட்டமும் நிறைந்த ஆதனூரில் உள்ள புலைப்பாடியில் உழவுத் தொழிலை மேற்கொண்டவர்கள் வாழ்ந்து வந்தனர். புல் கூரை கொண்ட அவர்களது இல்லங்கள் மீது சுரைக்கொடிகள் பரந்து விளங்கும். அங்கு கோழிக் குஞ்சுகளும் நாய்க் குட்டிகளும் சுற்றித் திரியும். வஞ்சி மரத்தடியில் பானைகளில் கோழிகள் அடை காக்கும். தென்னம் பொந்துகளில் நாய்க்குட்டிகள் உறங்கிக்கொண்டிருக்கும். விடியலில் சேவல்கள் கூவி உழவர்களை எழுப்பும். புலை மகளிர் நெல் குற்றும் போது பாடுவர். பறை கொட்டி அதற்குத் தக்கபடி ஆடுவர்.

புலைச்சேரியில் வாழ்ந்துவந்த நந்தனார் சிவபெருமானிடம் இணையற்ற அன்பு கொண்டு தமது மரபிற்கு ஏற்ற வகையில் சிவ தருமங்களைச் செய்து வந்தார். பெருமானது கோயில்களில் நாள்தோறும் முழக்கப்படும் இசைக் கருவிகளுக்குத் தேவையான தோலையும்,வாரையும் அளித்து வந்தார். பூசைக்குத் தேவையான கோரோசனையைக் கொடுத்து வந்தார். திருக்கோயிலின் வாயிலில் நின்றபடியே அன்பு மிகுதியால் ஆடியும் பாடியும் மகிழ்ச்சி அடைவார்.

ஆதனூரிலிருந்து புறப்பட்ட நந்தனார்,திருப்புன்கூர் சிவலோகநாதரிடம் பேரன்பு பூண்டு அத்திருக்கோயிலுக்குப் பல பணிகள் செய்தார். அங்கு ஓர் குளம் எடுத்தார்.திருக்கோயில் வாயிலில் இருந்தபடியே தலையாரக் கும்பிட்டுக் கூத்தாடினார். அங்கிருந்தபடியே பெருமானைத் தரிசிக்க விரும்பவே, அவருக்கு அருள் புரிய எண்ணி, சிவபெருமான் தமக்கு முன் இருந்த இடப தேவரைச் சற்றே விலகி இருக்க ஆணையிட்டருளினார். தரிசனம் கண்ட நந்தனார், ஆனந்தக் களிப்பால் ஆடியும் பாடியும் கோயிலை வலம் வந்து வணங்கினார். அருகிலுள்ள சிவத் தலங்களுக்கும் சென்று தனது பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் அவருக்குத் தில்லையைக் காணும் விருப்பம் மேலிட்டது. அதே எண்ணத்தில் அன்று இரவு முழுதும் உறங்காதிருந்தார். அதே சமயம் தமது குலத் தன்மை அதற்கு ஏற்ப இல்லாததால் சோர்வடைவார். ஆனால், தில்லை செல்லும் வேட்கை அதிகரிக்கவே,” நாளைக்குப் போவேன்” என்று ஒவ்வொரு நாளும் சொல்லி வந்தார். அதனால் அவருக்குத் திருநாளைப் போவார் என்னும் நாமம் ஏற்பட்டது.

பல நாட்கள் இவ்வாறு கழிவதைக் கண்டு, எனது பிறவிப் பிணி நீங்குமாறு இன்றே தில்லைக்குச் செல்வேன் என்று ஒரு நாள் முடிவெடுத்தவராகத் தில்லை எல்லையை வந்தடைந்தார். உடனே நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கிப் பின்னர் அவ்வெல்லையை இரவு பகலாக வலம் வந்தார். தமது குலத் தன்மை கருதி, அந்நகருக்குள் செல்ல அஞ்சினார். அடங்காத அன்பு மேலிட, ஐயனின் திருநடனம் எவ்வாறு காண்பேன் என்ற நினைவில் ஒரு நாள் இரவு துயில் கொண்டபோது தில்லை அம்பலவன் கனவில் காட்சி தந்தருளினான். “ இப்பிறவித் துயர் நீங்கும் வண்ணம் நீ தீயினில் மூழ்கி அந்தணர்கள் புடைசூழ நம்மை வந்து அடைவாயாக” என்று அருளினான்.  தில்லை வாழ் அந்தணர்களின் கனவிலும் எழுந்தருளிய இறைவன், நந்தனாருக்காக அவர்களைத் தீ அமைத்துத் தருமாறு அருளினான்.

தில்லை அம்பலவனின் கட்டளைப்படி திருக்கோயிலின் வாயிலின் முன்பு வந்து கூடிய மறையோர் நந்தனரிடம் சென்று,” ஐயரே, அம்பலவர் அருளால் தங்களுக்குத் தழல் அமைத்துத் தர வந்துள்ளோம்” என்றார்கள். அதைக் கேட்ட நந்தனார் ” அடியேன் உய்ந்தேன்” எனக் கூறி அவர்களைத் தொழுதார்.

தெற்குத் திருவாயிலருகே தீக் குழி அமைக்கப்பட்டது. அம்பலவனின் பெருங்கருணையை எண்ணி உருகியபடியே, நந்தனார் அதனை வலம் வந்தார். ஆடல்வல்லா திருவடிகளைச் சிந்தித்துக் கை கூப்பியவராக அத்தீயினுள் நுழைந்தார். அப்போது அவரது பழைய உருவம் மறைந்தது. மார்பில் பூணூலும் சடைமுடியும் தாங்கிய புண்ணிய முனிவராக அத்தீயிலிருந்து செந்தாமரை மலருரையும் நான்முகனைப்போல் எழுந்தார். வானத்தில் தேவ துந்துபிகள் முழங்கின. தில்லை மூவாயிரவரும் அவரைக் கைகூப்பித் தொழுதனர். மலர் மாரி பொழிந்தது.

பொன்னம்பலத்தே அனவரதமும் ஆனந்த நடம் புரியும் எம்பிரானைத் தரிசிக்க வேண்டி திருநாளைப் போவாராம் மறை முனிவர் தில்லை வாழ் அந்தணர்கள் உடன் வரத் தெற்கு வாயில் வழியாக நுழைந்து பொற்  சபையை அடைந்தார். அதன் பின்னர் அவரை எவரும் காணவில்லை. அவ்வாறு குஞ்சித பாத நீழலை அடைந்த நாயனார் பெற்ற பேரருளை எண்ணித்  தில்லை மறையோர் அதிசயத்துடன் தொழுதனர்.

************************************************

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

உலக உயிர்களுக்குத் தாயாகவும் தலைவியாகவும் திகழும் உமாதேவியார் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, சிவாகம முறைப்படி பூசை செய்து,முப்பத்திரண்டு அறங்களையும் செய்து,பெருமானை மணந்த சிறப்புடையது தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரம் ஆகும். இத்தொண்டை மண்டலத்தில் புகழ் மிக்க சிவாலயங்கள் அநேகம் உள்ளன. ஒரு வணிகனுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எழுபது வேளாளர்கள் தீப்பாய்ந்த வரலாறுடைய பழையனூர் ஆலங்காடும், திருக்காளத்தி,திருஇடைச்சுரம்,திருக்கழுக்குன்றம்,திருமுல்லைவாயில், திருவூறல், திருமாற்பேறு,திருவல்லம்,திருப்பாசூர் திருவொற்றியூர், திருமயிலாப்பூர்,திருவான்மியூர் ஆகிய தலங்களைக் கொண்டு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,மருதம் ஆகிய நால்வகை நிலவளங்களோடு கூடியது தொண்டை நன்னாடு.

விருந்தினர்களை விரும்பி உபசரிப்பவர்களும், வேள்வி செய்யும் மறையோர்களும்,பாலாற்று நீரால் வயல்களைச் செழிக்கச் செய்யும் உழவர்களும், கடல் மீன்கள்,முத்து,பவழம் ஆகியவற்றைச் சேகரிக்கும் பரதவர்களும் அங்கு வாழ்ந்து தீமையைக் கனவிலும் நினையாத சிந்தை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.

மேன்மைமிகு தொண்டை நாட்டில் எக்காலத்தும் நிலைத்து விளங்கும்    நகரம் காஞ்சியம்பதியாகும்.காஞ்சியில் எவ்வுயிரும் உய்யும் வண்ணம் மாமர நீழலில் கம்பையாற்றி மணலால் சிவலிங்கம் அமைத்து, அறம் வளர்த்த செல்வியாய்,தவச் சுடராய் காமாக்ஷி தேவி என்றும் வழிபட்ட பெருமையை உடையது இத் தலம். எண்ணில்லாத ஆகமங்களை அருளிச் செய்த சிவபெருமான்,தாம் விரும்புவது அவ்வாகம வழியில் செய்யப்படும் பூசையே என உணர்த்தியருள, உலகன்னையும் பெண்ணில் நல்லாளும்  பெருந் தவக்கொழுந்துமாகிய எம்பிராட்டி, ஏகம்பப்பெருமானைப் பூசித்தாள் கமலினி,அனிந்திதை என்னும் இரு சேடியர்கள் அம்பிகா வனத்திலிருந்து தூய மலர்களைக் கொணர்ந்து தர, கம்பை ஆற்று நீராலும் சந்தனம் முதலிய திரவியங்களாலும் பெருமானை வழிபட்டாள் பெருமாட்டி.

ஈசனின் திருவிளையாடலால் கம்பையாறு பெருகி வந்து அம்மைக்கு அச்சம் விளைவித்தது. தாம் வழிபடும் மூர்த்திக்கு ஊறு விளையுமோ என்று அஞ்சித் தனது வளைக் கரங்களால் பெருமானைத் தழுவிக் கொண்டாள் தேவி. அவளது அன்புக்கு மகிழ்ந்த ஏகம்பநாதன் வெளிப்பட்டு அருளி, “ உனது பூசை என்றும் முடிவதில்லை வேண்டும் வரம் கேள் ” என்று அருளிச் செய்தான், அறம் வளர்த்த நாயகியும் பெருமானை வணங்கி,” ஐயனே, அடியாளது பூசை எக்காலத்தும் நிலைபெறச் செய்ய வேண்டும். சிவாபராதம் ஒன்றைத் தவிர இத்தலத்திலுல்ளோர் செய்யும் பிழைகளை மன்னித்து அருள வேண்டும்” என வேண்டினாள். பெருமானும் அங்ஙனமே வரமளித்தருளினான். காமாக்ஷி தேவியும் காமகோட்டத்தில் இருந்து கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்து வந்தாள்.

காமகோட்டத்தின் அருகில் உலகாணித் தீர்த்தம் என்ற தீர்த்தம் ஒன்று உண்டு. அதில் நீராடுபவர் பாவங்கள் நீங்கப்பெற்று மோட்சத்தை அடைவர். காஞ்சி நகரில் தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. புண்ணிய தீர்த்தம்,இஷ்ட சித்தி தீர்த்தம்,சர்வ தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் அங்கு உள்ளன. அதிசயங்கள் பலவற்றைக் கொண்ட காஞ்சி நகர எல்லையை விகடசக்ர விநாயகரும், வயிரவரும், முருகப்பெருமானும் காவல் புரிகிறார்கள். கரிகால் பெருவளவன் இந்நகரை அமைத்து மக்களை அங்கு குடியேற்றினான். அந்நகரில் அந்தணர், வணிகர்,அரச மரபினர், வேளாளர் ஆகியோர் வசிக்கும் வீதிகள் இருந்தன. திருவிழாக் கோலம் பூண்ட இந்நகரில் மக்கள் தத்தம் குலத்தொழில்களைத் திறம்படச் செய்து, நல்லறம் செய்து வாழ்ந்தனர்.

வளம் மிக்க காஞ்சி நகரில் ஏகாலியர் குலத்தில் சிவத் தொண்டர் ஒருவர்  அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார்.      சிவத்தொண்டர்களின் மனக் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டுவன செய்து தொண்டாற்றியதால் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். சிவனடியார்களது துணிகளை அழுக்குப் போகத் துவைத்துக் கொடுத்து வந்தார். அதனால் அவரது பிறவியாகிய அழுக்கும் நீங்க ஏதுவாயிற்று.

திருக்குறிப்புத் தொண்டருக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் ஒரு ஏழையின் வடிவம் தாங்கி அழுக்கேறிய கந்தை தரித்தவராக மாலும் காணாத திருவடிகள் நிலத்தில் தோய, அன்பர் முன் வந்து தோன்றினார். அடியார் வேடம் பூண்டு வந்த பெருமானைக் கண்டு மகிழ்ந்த நாயனார் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி மகிழ்ந்தார். பிறகு,” தேவரீர் அணிந்துள்ள கந்தையைத் தந்தருளினால் அடியேன் அதனை அழுக்கு நீக்கித் தருகிறேன்” என்று விண்ணப்பித்தார். வேடம் ஏற்று வந்த பெருமானும்,” இக்கந்தை அழுக்கேறியதுதான். குளிர் காலமாதலால் கதிரவன் மறைவதற்குள் இதனைத் தோய்த்து விட்டுப் பின்னர் உலர்த்திக் கொண்டு வருவீராக. இல்லையேல் இந்த உடல் குளிரால் அவதிப்படும்” என்றார். நாயனாரும் அக்கந்தையை மாலைக்குள் தந்துவிடுவதாகக் கூறி அதனை எடுத்துப் போனார்.

தடாகத்திற்குக் கந்தையை எடுத்துச் சென்ற நாயனார் அதன் அழுக்கு நீங்கத் துவைக்கையில் சிவபெருமானின் திருவிளையாடலால் மேகங்கள் திரண்டு வந்து பெருமழை கொட்டியது. அதைக் கண்டு பதறிய நாயனார்,தாம் தவசியார்க்குத் தந்த வாக்கு பொய்யாகி விட்டதே என வருந்தினார். மழையோ நிற்காமல் இரவு நேரம் வரை பெய்தது. தவசியாரின் திருமேனி குளிரில் வருந்துமாறு செய்து விட்டேனே என எண்ணினார். அப்பிழைக்குத் தண்டனையாகத் தன் தலையைத் துணி துவைக்கும் கல்லில் மோதிக் கொள்ளத் துவங்கினார். அப்போது காமாக்ஷி அம்பிகையின் வளைத் தழும்பு பட்ட ஏகாம்பர நாதரது மலர்க்கை நாயனாரைப் பிடித்து நிறுத்தியது. அடை மழை நின்று, வானம் பூமாரி பெய்தது. கொன்றை மலர் அணிந்த சிவபிரான் உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தொண்டருக்குக் காட்சி வழங்கினான். பேரன்பு பெருகத் தலை மீது கரங்கள் கூப்பியபடிப்  பெருமானைத் தொண்டர் வணங்கி நின்றார். “ உனது பெருமை மூவுலகும் அறியுமாறு செய்தோம். “ இனி நீ நம்முடன் வந்து நம்மைப் பிரியாது இருப்பாயாக “ எனத் திருவாய் மலர்ந்தருளிய இறைவன், திருஏகம்பத்தில் புகுந்தருள,அன்பரும் இறைவனது மலரடிகளை அடைந்தார்.

***********************************

சண்டேசுர  நாயனார்  

பொய்யாக் காவிரி பாயும் சோழ வள நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் சேய்ஞலூர் என்ற பழமையான ஊர் உள்ளது.இத்தலம்  முருகப்பெருமானால் வழிபடப்பட்டதால் இப்பெயர் பெற்றது.சேய் என்பது இங்கு முருகனைக் குறிக்கும். ( கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் இவ்வூருக்குச் செல்லும் சாலை பிரிகிறது. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது). இங்கு வெண்ணீறணிந்து,நான்மறை ஓதி,ஐம்புலனடக்கி, முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கு வீதிகளில் வேதஒலி முழங்கிக்கொண்டிருக்கும்.பால் சொரியும் பசுக்கூட்டங்கள் சென்று கொண்டிருக்கும். இயற்கை வளம் மிக்க நீர்நிலைகளும்,வயல்களும்,சோலைகளும் மிகுந்திருக்கும். சோழ மன்னர்கள் முடி சூட்டிக்கொள்ளும் ஐந்து நகரங்களில் இதுவும் ஒன்று. பண்ணுக்குப் பயனாக நல்ல இசையும், பாலின் பயனாக இனிய சுவையும், கண்ணுக்குப் பயனாக அது காட்டும் ஒளியும், கருத்துக்குப் பயனாக அஞ்செழுத்தும் விண்ணிற்குப் பயனாக மழையும், வேதத்தின் பயனாகச் சைவமும் இருப்பதைப்போல மண்ணுக்குப் பயனாக விளங்கியது       சேய்ஞலூர்.

பெருமைகள் பல பெற்ற திருச்சேய்ஞலூரில் அந்தணர் குடியில் காசிப கோத்திரத்தில் எச்சதத்தன் என்பவன் இருந்தான். அவனது மனைவியின் பெயர் பவித்திரை என்பதாகும்.அவள் சிவபக்தி மிக்கவள். அவளது திருவயிற்றில் வேத நெறி தழைக்கவும், மறைக்குலம் மேன்மைபெறவும், சைவத் திறம் ஓங்கவும் விசாரசருமர் என்பவர் அவதரித்தார்.

ஐந்து ஆண்டுகள் கடந்ததும்,கலைகள் பலவும் கற்கத் தொடங்கிய விசார சருமருக்கு ஏழாண்டுகள் ஆனதும் மரபுப்படி உபநயனம் செய்விக்கப்பட்டது. வேதங்களை அவர் எளிமையாகக் கற்றதைக் கண்ட ஆசிரியர்கள் வியந்தார்கள். அளவிலாக் கலைகளுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது தில்லைக் கூத்தனின் திருவடிகளே என்று விசார சர்மர் உணர்ந்ததால் அவரது மனம் சிவபெருமானிடம் மேலும் பேரன்பு கொண்டு விளங்கியது.

ஒருநாள் தெருவழியே பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்ற ஆயன் ஒருவன் அக்கூட்டத்திலிருந்த ஒரு பசு அவனை முட்டப்புகவே, அதனைக் கோலால் அடித்தான். இதனைக்  கண்ட விசார சர்மர் அவனைக் கண்டித்ததோடு, பசுக்களின் பெருமையை அவன் அறியும்படி உணர்த்தி அருளினார். உலகிலேயே பசுக்கள் பிற உயிர்களிலும் மேம்பட்டவை என்றும்,எல்லா நதிகளும் அவற்றின் பால் உள்ளன என்றும் தேவர்களும் முனிவர்களும் அவற்றின் அங்கங்களில் உள்ளனர் என்றும் சிவபெருமானுக்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் உரிமை உள்ளவை என்றும் பெருமானும் பிராட்டியும் எழுந்தருளும் இடப தேவரின் குலத்தைச் சார்ந்தவை என்றும் அவை பாதுகாக்கப்படவேண்டியவை என்றும், அதுவே சிவபெருமானை வழிபடும் நெறியும் ஆகும் என்றும் அறிவுறுத்தினார். இனிப் பசுக்களைத் தாமே மேய்ப்பதாகவும் கூறினார். மறையோர்களின் இசைவு பெற்றுப் பசுக்களை அன்றுமுதல் மேய்க்க முன்வந்தார்.

விசார சருமர் பசுக்களை மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரே புற்களைப் பறித்துக் கொண்டு வந்து அவற்றிற்குத் தருவார். அவற்றை நீர்நிலைகளில் நீர் அருந்தச் செய்வார். பிற மிருகங்களால் அவற்றிற்குத் துன்பம் நேராதவாறு காப்பார். வெய்யில் நேரங்களில் அவற்றை மர நிழல்களில் தங்கச் செய்வார். மாலையில் பால் தரும் நேரத்தில் அவரவர் வீட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டு விட்டு வருவார். அதனால் பசுக்கள் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பால் சொரிந்தன.

பசுக்கள் விசாரசருமரிடம் சென்று கன்றுக்குக் கருணை பாலிப்பது போலத் தாமாகவே பால் சொரிந்தன. அதனைக் கண்ட விசார சருமர் அப்பாலை சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாக்க எண்ணினார்.

மண்ணியாற்றங்கரையில் ஒரு ஆத்தி மரத்தடியில் இருந்த மணல் திட்டில் மணலால் சிவலிங்கம் அமைத்தார். மனத்தினாலே அப்பெருமானுக்குத் திருக்கோயிலும்,கோபுரமும்,மதியும் அமைத்தார். ஆத்தி மலர்களையும் பிற நன் மலர்களையும் கொண்டு வந்து சேர்த்தார். புதிய குடங்களை எடுத்துக் கொண்டு பசுக்களிடம் சென்றதும் அவை அக்குடங்கள் நிறையுமாறு பாலைப் பொழிந்தன. அவற்றைத் தாம் அமைத்த மனக் கோயிலருகே வைத்துப் பேரன்போடு இறைவரைப் பாலினால் அபிஷேகம் செய்தார். அதுவே எம்பிரான் மகிழ்ந்து ஏற்ற பூஜை ஆயிற்று. பின்னர் மலர்களால் அர்ச்சித்து விட்டு இல்லம் திரும்புவார். இவ்வாறு பூசையினைத் தினமும் செய்து வந்தார். பசுக்கள் வீடு திரும்பியதும் முன்னை விடச் சற்றும்  குறைவில்லாமல் பால் தந்தன.

விசாரசருமர் இவ்வாறு பசுக்களிடம் பால் கறந்து சிவபூஜை செய்வதைக் கண்ட அயலான் ஒருவன் பசுக்களின் உரிமையாளர்களிடம் சென்று பாலை விசாரசருமர் வீணாக்குவதாகப் புகார் செய்தான்.அதக் கேட்ட அந்தணர்கள் விசார சருமரின் தந்தையான எச்ச தத்தனிடம் நடந்ததைக் கூறினார்கள். இனி அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வதாக அவர்களிடம் கூறிவிட்டு வீடு திரும்பிய எச்சதத்தன் மறுநாள் தானே சென்று நடப்பதைக் கண்டறிவதாக எண்ணினான்.

மறுநாள் காலை வழக்கம்போல் விசாரசருமர் பசுக்களை அழைத்துக் கொண்டு மண்ணியாற்றங் கரையை அடைந்தார். அவரைத் தொடர்ந்த எச்ச தத்தன் அவர் அறியாதபடி ஒரு குராமரத்தின் மீது ஏறிக் கொண்டு ஒளிந்திருந்தான். மண்ணியாற்றில் நீராடிவிட்டு வந்த விசார சருமர், முன்போல் மணலால் திருக்கோயில் அமைத்து மலர்களைக் கொய்து கொண்டு வந்தார். மேய்ந்துவிட்டு வந்த பசுக்கள் தாமாகவே சொரிந்த  பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு ஆகம வழிப்படிப் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டினார்.

ஒளிந்திருந்து தன மகனாரது செய்கையைக் கண்ட எச்சதத்தன் மிக்க சினம் கொண்டான். மரத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து கையிலிருந்த கோலால் விசாரசருமரை முதுகில் அடித்தான். அவரைப் பலவாறு கடிந்தான். ஆனால் சிவபூஜையில் ஒன்றியிருந்த விசார சருமர் அவற்றைக் கவனியாமல் பெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதிலேயே சிந்தை செலுத்தி இருந்தார். இதனால் மேலும் கோபமடைந்த எச்சதத்தன் பால் குடங்களைக் காலால் உதைத்தான். தியானம் களைந்த விசாரசருமர் பாலை இடறியது தந்தை என்று அறிந்தார். தந்தையே ஆயினும் சிவாபராதம் செய்ததால் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணி அருகில் கிடந்த ஒரு கோலை எடுத்தார். அக்கோல் உடனே மழுவாக மாறியது. அதனைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டி வீழ்த்தினார். எச்சதத்தனும் கால்கள் இழந்து குருதி பெருக, மண் மேல் விழுந்து இறந்தான். சிவபூஜைக்கு வந்த இடையூறு நீங்கியவுடன் பழையபடி அப்பூஜையைத் தொடர முற்பட்டார் விசார சருமர்.

பாலகனின் ஒப்பற்ற பூசைக்கு மகிழ்ந்த ஈசனும் உமாதேவியோடு விடை ஏறி, பூதகணங்கள் சூழ வந்து காட்சி கொடுத்தருளினார். தேவர்களும் முனிவர்களும் வேத மொழிகளால் துதித்தனர். காட்சி தந்த இறைவனைக் கண்ட அப்பாலகனும் மகிழ்ச்சி பொங்கப் பெருமானது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

விசாரசருமரைத் தனது திருக் கரங்களால் எடுத்து அனைத்து,உச்சி மோந்த எம்பெருமான் , “ நம் பொருட்டு உனது தந்தையின் கால்கள் வெட்டினாய். இனி உனக்கு அடுத்த தந்தை யாமே ஆவோம்” என்று அருளி அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கி “ நாம் உண்ட கலமும் சூடும் மாலை,அணிகலம் ஆகியவையும், உடுக்கும் உடைகளும் உனக்கே ஆகுக. உனக்குச் சண்டீசன் என்ற பதவியையும் தந்தோம்” எனக் கூறியருளினான். பின்னர், தனது திருமுடியிலிருந்த கொன்றை மாலையையும் அப்பாலகனுக்குச் சூட்டியருளினான்.

தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹர நாமம் கூறி ஆர்ப்பரித்தனர்.இசைக்கருவிகள் முழங்கின சிவகணங்களும் மறைகளும் துதித்தன. இவ்வாறு சைவம் ஓங்குமாறு விசார சருமர் சண்டேச நாயனார் ஆகிச் சண்டீச பதம் பெற்றார். நாயனாரால் கால்கள் வெட்டுண்டு இறந்த எச்சதத்தன் இறையருளால் அப்பிழை நீங்கியவனாகிச் சுற்றத்தாருடன் திருக் கயிலை அடையும் பேறு பெற்றான்.  இதனால்  சிவனடியார்கள் பிழைக்கினும் அது தவமாவது பெறப்பட்டது.

****************************************************

 

Posted in Nayanmars | Leave a comment