மகா வைத்யநாத சிவன்

கயிலாய நாதனாகிய சிவபெருமானைப் பல மார்க்கங்களின் மூலம் வழிபட்டு நற்கதி பெற்ற மகான்கள் பலருள் நாதோபாசனை மூலம் ஆராதனை செய்து அருள்பெற்ற பக்தர்களுள் மகா வைத்யநாத சிவன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

நன்றி : வலைத் தளம்

தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் ஸ்ரீ துரைசுவாமி ஐயருக்கும் ஸ்ரீமதி அருந்ததி அம்மையாருக்கும் மகவாக 26.5.1844 அன்று தோன்றியவர் இந்த மகான். ஐவரும் இவருடன் தோன்றிய ஸ்ரீ ராமஸ்வாமி என்பவரும் இளம் வயது முதலே கர்நாடக இசையில் மிக்க ஆர்வம் கொண்டிருந்த படியால். தக்க குருமார்களிடம்சென்று சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார்கள். இதே ஊரில் ஸ்ரீ மங்கள நாயகி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயிலுமிருந்ததால் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் வைத்யநாத சிவன்.

ஏழு வயதில் அவருக்கு உபநயனம் நடை பெற்றது. அதற்குப் பல சங்கீத மேதைகள் வருகை தந்தனர். அவர் சங்கீதத்தில் நிபுணராகத் திகழ்த்ததைக் கண்டு வியக்காத வித்வான்கள் இல்லை எனலாம். பல சமஸ்தான மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் இவரைக் கௌரவித்தனர்.அவரது பன்னிரண்டாவது வயதில் மகான் என்ற பட்டம் வழங்கப்பெற்றது. பதினாறாவது வயதில் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளிடம் மந்திரோபதேசம்பெற்றார். தந்தையிடம் பஞ்சாட்சர மந்திர உபதேசம் பெற்றார்.

திருவையாற்றுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள பிரணதார்த்தி ஹரனாகிய பஞ்ச நதீசுவரர் மீது 72 மேளகர்த்தா ராகங்களைக் கொண்ட ராக மாலிகைக் க்ருதி ஒன்றை இயற்றினார். தமையனாருடன் இணைந்து பெரிய புராணக் கீர்த்தனைகளை இயற்றினார் .

வையச்சேரி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் நடராஜ மூர்த்தி விக்ரகம் ஒன்றை இவர் மூலம் அளித்தார். கோயில் குளத்தில் சிவகாம சுந்தரி விக்ரகம் கிடைத்தது. இரண்டையும் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். எளிய வாழ்க்கையை மேற்கொண்ட இவர் நியமத்துடன் விபூதி- ருத்ராக்ஷம் தரித்தவராய் சிவபூஜையைத் தினமும் செய்து வந்தார். இவரது இசைக் கச்சேரிகளின் நிறைவில் தேவாரத் திருவாசகப் பாடல்கள் இடம் பெறும் .

இவரது 49 வது வயதில் உடல் நலம் குன்றியது. 27.01.1893 அன்று திருவையாற்றில் தங்கியிருந்த போது சிகிச்சை பலன் இன்றிப் போனது. தனது கைகளைக் கூப்பிக் கொண்டு ” சிவ சிவ ” என்று உச்சரித்தவாறு சிவனது பாத கமலங்களைச் சென்றடைந்தார்.

Posted in Latest News | Leave a comment

ஆன்மீக அனுபவங்கள் – 2

சிவபாத சேகரன்

                                                               

Photo Couurtesy : From WEB

மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவைகளாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் சில கசப்பான அனுபவங்களாகவும் இருக்கலாம். மனத்தைக் காயப் படுத்தி இருக்கலாம். அதனால் அச் சம்பவத்தை மறந்துவிடவே முயற்சி செய்கிறோம். ஆனால் அம்முயற்சி பல தருணங்களில் பலனற்றுப் போய் விடுகிறது. மனத்தில் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்தி விடுகிறது. எனவேதான் அவை தீயினால் ஏற்பட்ட புண்ணைக் காட்டிலும் ஆறாத தன்மை உடையவை என்று வள்ளுவர் கூறினார். இதற்கு முற்றிலும் மாறாக இனிய அனுபவங்கள் தரும் இன்பம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நின்று இன்பத்தைத் தருபவை. இவ்வனுபவங்களில் ஆன்மீகத்தின் பங்கு சொல்லில் அடங்காதது.

ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும்போது மெய் சிலிர்க்கும் அனுபவங்கள் பலருக்கும் ஏற்படுவது உண்டு. இவ்வாறு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பலவற்றுள் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்ற போது ஏற்பட்ட இனிய அனுபவம் மறக்க முடியாதது. மீண்டும் மீண்டும் இன்பத்தை வாரி வழங்குவது. ” தன் அடைந்தார்க்கு இனியன் இடைமருதனே” என்பது தேவாரவாக்கு. அந்த இன்பம் பழச்சுவையையும்,கரும்புச் சாற்றின் சுவையையும், பெண்டிர், அரசர் ஆகியோரால் பெறக் கூடிய இன்பத்தையும் விட இனியது என்பதால் இடைமருதனை இனியன் என்கிறார் அப்பர் பெருமான்.

நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை சிதம்பரத்தில் நடை பெறுவது போலவே அனைத்துச் சிவாலயங்களிலும் மகாபிஷேகம் நடைபெறுகிறது. ஒருமுறை அந்த அபிஷேகத்தைத் தரிசிக்கத் திருவிடை மருதூர் செல்லும் வாய்ப்பு இறையருளால் அமைந்தது. காலை பத்து மணிக்கு மேல் துவங்கி அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை நடைபெறும்போது நண் பகல் ஆகிவிடும் என்று தெரிந்தது. ஒன்பது மணிக்கே ஆலயத்தை அடைந்து எல்லா சன்னதிகளையும் தரிசனம் செய்தபின்னர் நடராஜர் சன்னதியை அடைந்தேன். சில பெண்மணிகள் திருவாசக பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒருவேளை திருநெல்வேலிப் பக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அபிஷேகம் ஆரம்பிக்கும்வரை திருவாசகம் கேட்கலாம் என்று நானும் சன்னதியில் அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்தில் அபிஷேக சாமான்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.

அபிஷேகம் ஆரம்பிக்கும்போது சுமார் 11 மணி ஆகியிருக்கலாம். ருத்ர பாராயணத்தை செய்துவிட்டு திருவாசகப் பாடல்கள் சிலவற்றையும் ஓதும் பேறு கிட்டியது. எவ்வளவோ வேத பாராயணங்கள் நடைபெற்ற இந்த ஆலயத்தில் அபிஷேக காலத்தில் வேத பாராயணம் செய்ய யாருமே இல்லையே என்ற எண்ணம் மேலிட்டது. அங்கிருந்தபடியே திரும்பிப் பார்த்தால் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்கலாம். வேத நாயகனாகிய உன் சன்னதியில் இப்படி நேரலாமா என்ற ஏக்கத்துடன் சுவாமியைப் பார்த்தபடியே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். கண்ணில் நீர் பெருகியது. எனக்காக எதுவும் வேண்டவில்லை. உனக்காகத்தான் வேண்டிக் கொண்டேன் என்று மனத்தால் கேட்டபடி நின்றுகொண்டிருந்தேன்.அபிஷேகம் அநேகமாக நிறைவடையும் அத்தருணத்தில் அந்த அதிசயம் நடந்தது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு வேதியர் தனது மகளுடன் அங்கு ஓடோடி வந்தார். அபிஷேகம் நிறைவாவதற்குள் வந்து விட வேண்டும் என்ற அவரது நோக்கம் நன்றாகவே புலப்பட்டது. நேராக நடராஜர் சன்னதி வாயிலருகில் நின்று கொண்டு ருத்ரம் , சமகம் ஆகியவற்றை பாராயணம் செய்தார். அலங்காரம் நடைபெறும்போது திரை இடப்பெற்று இருந்ததால் அவரிடம் சென்று, தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், தான் திருவானைக்காவலில் இருந்து வருவதாகவும், மாலையில் சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் நடராஜர் அபிஷேகத்தைக் காண வேண்டித் தன் மகளுடன் பஸ்ஸில் சிதம்பரத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும், திருவிடைமருதூர் அருகில் பஸ் வந்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு உள்ளுணர்வு தன்னை அங்கேயே இறங்கி கோயிலுக்கு உடனே செல்லும்படிகே கட்டளை இட்டதாகத் தோன்றியதால் அங்கேயே இறங்கி விட்டதாகவும் கூறினார். தீபாராதனைக்குப் பிறகு அர்ச்சகரிடம் சென்று விபூதி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார். நானும் விபூதியை அர்ச்சகரிடம் பெற்றுக் கொண்டபின் மீண்டும் ஒரு முறை அந்த வேதியரிடம் உரையாடவேண்டும் என்ற விருப்பத்துடன் அவர் நின்ற இடத்தை நோக்கினேன் ஆனால் அவரை அங்குக் காணவில்லை ! ஒருவேளை மகாலிங்க சுவாமியின்
உட்பிராகாரத்தில் இருக்கிறாரோ என்று தேடியும் அவரைக் காண இயலவில்லை. கோபுர வாசல் வரையிலும் அவரைக் காண முடியவில்லை. சில நிமிடங்களில் அவர் மாயமாக மறைந்தவுடன் திரும்பவும் மகாலிங்கப் பெருமானை நோக்கினேன். ஒருவேளை அவ்வேதியனாகி வந்தது நீயே தானோ, இந்த அற்பனின் மனக்கருத்தைப் பூர்த்தி செய்யத்தான் இப்படித் தோண்றினாயோ என்று சிந்தித்தேன். அங்கிருந்து அகல மனமே வரவில்லை. ” வேண்டுவார் வேண்டுவதே ஈவான் ” என்ற அப்பர் வாக்கை நினைவுபடுத்தத்தான் பெருமான் இவ்வாறு திருவிளையாடல் செய்தானோ என்று தோன்றியது.

Posted in Latest News | Leave a comment

ஆன்மீக அனுபவங்கள்

சிவபாதசேகரன்

நாத்திகரையும் ஆத்திகர் ஆக்கிய திருவாசகம்

ஆன்மிகம் என்பது மத நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கையின் அளவு சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் காணப்படும். மற்றும் சிலருக்குத் துளிக்கூட இல்லாமலும் காணப்படும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் இத்தகைய வேற்றுமைகள் காணப் படுவதைப் பார்க்கிறோம். வளர்க்கும் விதம் ஒன்றாகவே இருந்தாலும் எப்படி இவ்வாறு நிகழ்கிறது? சூழ்நிலைகளும் அவ்வப்போதுவரும் சோதனைகளும் துன்பங்களும் இதற்கு வழி வகுக்கின்றன. ஆனால் சோதிடர்களோ ஒருவனது ஜாதகத்திலே இவன் தெய்வ நம்பிக்கை உள்ளவனாக இருப்பானா இல்லையா என்று காண முடிகிறது என்பார்கள். முன் பிறவிப்பயன் என்பார்கள் மற்றொரு சாரார்.எது எப்படியாக இருந்தாலும் திடீரென்று ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆவதையும் ஆத்திகன் நாத்திகன் ஆர்வத்தையும் பார்க்கிறோம்.

பல்லாண்டுகளுக்கு முன் மிகவும் தெய்வநம்பிக்கை கொண்டிருந்த ஒரு மரத்தச்சர் தனது பத்து வயது மகள் பெரியம்மையால் தாக்கப்பட்டு உயிர் இழந்தவுடன் நாத்திகராக மாறியதைக் கண்டிருக்கிறேன். அந்தத் துயர சம்பவம் அவரது மனத்தை அவ்வாறு பாதித்து இருந்தது. நோய் வாய்ப்பட்டவர்களும் மருத்துவர் கைவிட்டு விட்டால் தெய்வமே காப்பாற்றவேண்டும் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஒருக்கால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக நிகழ்ந்துவிட்டால் தெய்வத்தை இகழத் தொடங்கி விடுகிறார்கள்.

ஒரு நாத்திகவாதி ஏதோ ஒரு காரணத்தால் திடீர் என்று ஆன்மீகத்தைத்தேடி வருவதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கும். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை நினைக்கும்போது வியப்பு பன்மடங்காக அதிகரிக்கிறது. அப்போது எனது நண்பரின் வேண்டுகோளின்படி தினமும் திருவாசகப் பாடல்களைச் சொல்லி யான் அறிந்த அளவில் அவற்றிற்கு விளக்கமும் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவரோ முழு நூலையும் கேட்க ஆவலாக இருந்தார்.அவ்வாறு ஒரு நாள் சொல்லிக் கொண்டு வரும்போது திடீர் என்று பின்னால் திரும்பிப் பார்த்தால் மற்றொரு நெருங்கிய நண்பர் நின்றுகொண்டு இருந்ததைப் பார்த்தேன். அவர் பழகுவதற்கு இனியவர். நாத்திகவாதியும் கூட. அவர் அங்கு வந்து சுமார் 20 நிமிடங்கள் ஆயிற்று என்கிறார். எனக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதற்காக எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். நான் அவரது கொள்கைக்கு மாறாக இருந்தாலும் என் மீது நன்மதிப்பு கொண்டவராதலால் அவ்விதம் நடந்து கொண்டார். அவர் வந்து விட்டபடியால் திருவாசகப் பாராயணத்தை மறு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துப் புத்தகத்தை மூடி வைக்கத் தொடங்கினேன். ஆனால் அவரோ ஒரு நாற்காலியை என் அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து விட்டு என்னைத் தொடர்ந்து திருவாசகப் பாடல்களை படிக்கச் சொன்னார். இத்தனை நேரமும் அப்பாடல்கள் சிலவற்றைப் பின்னால் நின்றபடி கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். எனக்கோ நடப்பது கனவு போலத் தோன்றியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு பாடல்களை வாசித்து விளக்கம் சொல்லத் தொடங்கினேன். முழுவதும் கேட்ட அவர், தொடர்ந்து இரண்டு நாட்களும் கேட்க வந்து விட்டார்! மூன்றாவது நாள் வந்த அவர், தனக்கு ஒரு திருவாசகப் புத்தகம் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது வினாடிகள் ஆயிற்று. ஒப்புக் கொண்டபடி, மறுநாளே ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தேன். அன்றுமுதல் அவர் பரம ஆத்திகர் ஆகிவிட்டார். பாடல் பெற்ற தலங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் அவரும் கூடவே வருவார். இது திருவாசகம் செய்த அற்புதம் அல்லவா !

Posted in Latest News | 1 Comment

TEMPLE PROTECTION

Formation of legal cell to protect the interests of temples.

SCOPE

1 Invite updated status of temples where legal aid is required. All such information must be based on clear documents, photos and videos which are original.

2 Site visit by the legal committee is essential to ensure the genuineness of the status.

3 The commitee should examine all supporting documents/evidences and recorded voices.

4 After arriving at a conclusion that the feedback really needs to be proceeded based on facts, the panel may refer the findings to HR & CE and seek the reply within a reasonable time.

5 In the event of a non reply or unsatisfactory response from HR &CE department, the lawyers may take up the case in the appropriate court with all necessary procedures.

6 If the judgement is pronounced in favour of the temple, implementation of the same must be followed. Failure to implement the same by HR &CE as per the directions of the court can lead to contempt of court .

THE LEGAL CELL

1 Advisory board

1To consist knowledgeable persons in the field of temple affairs with wide exposure/experience in the administration of temples.

2 To consist Philanthropists and businessmen who have faith in good governance of the temples.

3 Volunteers who can put forth their suggestions

4 Lawyers who are willing to extend their services for preparation and filing of documents at the courts.

5 The panel of say 3 leading selfless lawyers who can present the case at the courts.

THE BOTTLE NECKS

The probable icebergs are

  1. Selection of lawyers ( Who will select them . Will all the three sail in the same boat? Who will lead the top panel?
  2. Though the advocates may carry the process without any fees the court fees must be borne by Philanthropists and businessmen . More cases can be fought only when the concept is welcomed in large numbers.

Your comments/suggestions are most welcome

Posted in News | 1 Comment

ஆலயத் தகவல் பலகைகள்

பெரும்பாலான ஆலயங்கள் மிகப் பழமை வாய்ந்தவைகளாக இருந்தும் அவற்றின் புராணவரலாறுகள், விழாக்கள், கல்வெட்டுச் செய்திகள் ஆகிய தகவல்கள் முழுமையாக மக்களிடம் சென்று அடையவில்லை என்றே கூறலாம். அர்ச்சகர்களிடமிருந்தும் ஆலயத் தகவல்கள் முழுதும் அறியப் பட இயலவில்லை. தல வரலாறு புத்தகம் பெரிய கோயில்களில் மட்டுமே கிடைக்கக் கூடும். அதுவும் தமிழில் மட்டுமே அச்சிடப் படும். ஆலயத்தின் மீது அருளாளர்களும் புலவர்களும் இயற்றிய பாடல்கள் மற்றும் செய்யுள் வடிவில் உள்ள தல புராணங்களும் அச்சிடப் படாமலேயே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டு வருவதால் மூல நூல்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் படுகின்றன என்று கூறலாம். இம்முயற்சி முழுவதுமாக நிறைவேற்றப் பட வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகக் கோயில்களைத் தரிசிக்க வருவோர் எண்ணிக்கை கூடி வரும் இந்நாளில் அவர்களுக்கு ஆலயச் சிறப்புக்களை ஆங்கிலத்திலாவது எடுத்துக் கூறுவோர் இல்லாவிடினும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்ட தல வரலாற்றுப் புத்தகங்களாவது கிடைக்க வழி செய்ய வேண்டும். குறைந்த பட்சமாக அத்தகவல்களை சுருக்கமாக அறியும்படி தகவல் பலகைகள் வைக்கப் பட வேண்டும். அண்மையில் உள்ள பிற தலங்கள் பற்றியும் அவற்றிற்குச் செல்லும் வழி பற்றியும் குறிப்பிட வேண்டும். வசதி படைத்த அன்பர்கள் இச்சிறு கையேடுகளைத் தங்கள் ஊரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் இரயில் நிலையங்களிலும் கிடைக்கும்படி செய்யலாம்.

வெளி மாநிலத்தோர் வருகை தரும் ஆலயங்களில் உள்ள சன்னதிகளில் மூர்த்திகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி வைக்கலாம். வெளி நாட்டவர்கள் வருகை தரும் ஆலயங்களில் ஆங்கிலம் தெரிந்த அன்பர்கள் அவர்களிடம் தாமாகவே அணுகி , ஆலயச் சிறப்புக்களையும் மூர்த்திகள் பற்றிய புராண வரலாறுகளையும் எடுத்துக் கூறினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதை இன்றும் பார்க்க முடிகிறது.

Posted in Temples | Leave a comment

ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம:

ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம:

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம:

ஓம் ஸ்ரீ விபவே நம:

ஓம் ஸ்ரீ வேதவிதே நம:

ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம:

ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம:

ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே நம:

ஓம் ஸ்ரீ விந்திய கர்வாபஹாகாய நம:

ஓம் ஸ்ரீ விதயே நம:

ஓம் ஸ்ரீ விதிக்ஞாய நம:

ஓம் ஸ்ரீ வித்யேசாய நம:

ஓம் ஸ்ரீ வைத்ய சாஸ்த்ர ப்ரவர்த்தகாய நம:

ஓம் ஸ்ரீ விச்வக்ஞாய நம:

ஓம் ஸ்ரீ விச்வ ஸாக்ஷிணே நம:

ஓம் ஸ்ரீ விச்வ கர்ம விசாரதாய நம:

ஓம் ஸ்ரீ வீத ராகாய நம:

ஓம் ஸ்ரீ வீத பயாய நம:

ஓம் ஸ்ரீ வித்வத் ச்ரேஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ விலக்ஷணாய நம:

ஓம் ஸ்ரீ தனுர் வேதப்ரதாய நம:

ஓம் ஸ்ரீ தீமதே நம:

ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்த்ரப்ரவர்த் தகாய நம:

ஓம் ஸ்ரீ ஸர்வ மந்த்ரார்த்த தத்வக்ஞாய நம:

ஓம் ஸ்ரீ ஸர்வம்கஷ பராக்ரமாய நம:

ஓம் ஸ்ரீ ஸர்வசாஸ்த்ரப்ரதாய நம:

ஓம் ஸ்ரீ தீராய நம:

ஓம் ஸ்ரீ ராகவப்ரியதர்சனாய நம:

ஓம் ஸ்ரீ ஜ்யோதி:சக்ரப்ர மாணக்ஞாய நம:

ஓம் ஸ்ரீ ஜ்யோதி: சாஸ்த்ர விசாரதாய நம:

ஓம் ஸ்ரீ ஜ்யோதிஷ க்ரந்த்த கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ ஜ்யோதிர்லோக கமாகமாய நம:

ஓம் ஸ்ரீ தேவாதி வந்த்யாய நம:

ஓம் ஸ்ரீ தேவாத்மனே நம:

ஓம் ஸ்ரீ தேவாநாமிஷ்டதாய நம:

ஓம் ஸ்ரீ சுபாய நம:

ஓம் ஸ்ரீ சிவப்ரியகராய நம:

ஓம் ஸ்ரீ சாந்தாய நம:

ஓம் ஸ்ரீ சிவ சாஸ்த்ர பராயணாய நம:

ஓம் ஸ்ரீ சிவபக்தி ரதாய நம:

ஓம் ஸ்ரீ சிவ கல்யாண லாலஸாய நம:

ஓம் ஸ்ரீ மகாமதயே நம:

ஓம் ஸ்ரீ மகாமேதஸே நம:

ஓம் ஸ்ரீ மகா ஸாம்ராஜ்ய தாயகாய நம:

ஓம் ஸ்ரீ மலயசாலவாஸினே நம:

ஓம் ஸ்ரீத்ராவிடக்ரந்த்தகாரகாய நம:

ஓம் ஸ்ரீ த்ராவிடாக்ஷர கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ த்ராவிடானாம் ப்ரியகராய நம:

ஓம் ஸ்ரீ பாஷாக்ருதே நம:

ஓம் ஸ்ரீ ஸங்க க்ருதே நம:

ஓம் ஸ்ரீ பாஷ்ய க்ருதே நம:

ஓம் ஸ்ரீ பக்தவத்ஸலாய நம:

ஓம் ஸ்ரீ பவரோகாபஹாரிணே நம:

ஓம் ஸ்ரீ பவபேஷஜதத்யராய நம:

ஓம் ஸ்ரீ பவஸாகர நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதாய நம:

ஓம் ஸ்ரீ பாண்ட்ய மண்டல வாஸினே நம:

ஓம் ஸ்ரீ மதுராஸங்க காரகாய நம:

ஓம் ஸ்ரீ மீனாக்ஷீ சரணாஸக்தமானஸாய நம:

ஓம் ஸ்ரீ த்யானபாரகாய நம:

ஓம் ஸ்ரீ ஹாலாஸ்ய நாதகல்யாண ஸேவாஸக்த த்ருடவ்ரதாய நம:

ஓம் ஸ்ரீ மித்ராவருண தேஜஸ்விநே நம:

ஓம் ஸ்ரீ மைத்ராவருண ஸம்பவாய நம:

ஓம் ஸ்ரீ மிதபாஷிணே நம:

ஓம் ஸ்ரீ மிதாஹாராய நம:

ஓம் ஸ்ரீ மிதரூபாய நம:

ஓம் ஸ்ரீ அமித த்யுதயே நம:

ஓம் ஸ்ரீ அயோனிஜாய நம:

ஓம் ஸ்ரீ அப்ரமத்தாய நம:

ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த விக்ரஹாய நம:

ஓம் ஸ்ரீ ரிஷி ச்ரேஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ முனி ச்ரேஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ முனித்ராத்ரே நம:

ஓம் ஸ்ரீ முனிஸ்துதாய நம:

ஓம் ஸ்ரீ மானினே நம:

ஓம் ஸ்ரீ மானவிதாம் ச்ரேஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ மகா ஞான விதே நம:

ஓம் ஸ்ரீ உத்தமாய நம:

ஓம் ஸ்ரீ இந்த்ர சிக்ஷõகராய நம:

ஓம் ஸ்ரீ வீராய நம:

ஓம் ஸ்ரீ ஹ்ரஸ்வரூபிணே நம:

ஓம் ஸ்ரீ ஹிதம் கராய நம:

ஓம் ஸ்ரீ ப்ரும் ஹிஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ ப்ராம்மண ச்ரேஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ பாலாதப தனுத்யுதயே நம:

ஓம் ஸ்ரீ பருஸி நிஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ ப்ரம்ம நிஷ்டாய நம:

ஓம் ஸ்ரீ ப்ரம்ம ஞான விபோதகாய நம:

ஓம் ஸ்ரீ ஹயக்ரீவாத்த ஸ்ரீவித்யா பாரகாய நம:

ஓம் ஸ்ரீ குரவே நம:

ஓம் ஸ்ரீ அச்யுதாய நம:

ஓம் ஸ்ரீ தேவி பக்தி நிரதாய நம:

ஓம் ஸ்ரீ மந்த்ர சாஸ்த்ர விசாரதாய நம:

ஓம் ஸ்ரீ பூஜா கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ த்யான கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ மந்த்ர கர்த்ரே நம:

ஓம் ஸ்ரீ விசக்ஷணாய நம:

ஓம் ஸ்ரீ மஹநீயாய நம:

ஓம் ஸ்ரீ மஹா யோகினே நம:

ஓம் ஸ்ரீ மஹா த்யாகினே நம:

ஓம் ஸ்ரீ மஹா பலாய நம:

ஓம் ஸ்ரீ மஹா ஸாகர பாயினே நம:

ஓம் ஸ்ரீ கணேச ப்ரீதிகராய நம:

ஓம் ஸ்ரீ கணேச பக்தி நிரதாய நம:

ஓம் ஸ்ரீ கணேச த்யான தத்பராய நம:

ஓம் ஸ்ரீ கணேச மந்த்ர ஸுப்ரீதாய நம:

ஓம் ஸ்ரீ குஹ சிஷ்யாய நம:

ஓம் ஸ்ரீ குஹாக்ரண்யே நம

Posted in Latest News | Leave a comment

தியாகராஜ லீலை

                                சிவபாதசேகரன் 
Thyagaraja Temple, Thiruvarur

திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு நிகழ்ந்த அற்புதம் மனத்தை விட்டு நீங்குவதில்லை.

சாயரக்ஷை தரிசனம் செய்த நிறைந்த மனத்தோடு மேற்கு கோபுரம் வழியே வெளியே வந்து கொண்டு இருந்தேன். அங்கிருந்து பேருந்து நிலையம் சென்று கும்பகோணத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் வெளிப் பிராகார வலத்தை முடித்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலை நெருங்கும் சமயத்தில் கால்களில் கடுமையான வலி ஏற்பட்டது.ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கூட யாரும் வராததால் அதே இடத்தில் நின்று கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கோயிலின் உட்பக்கத்தைத் திரும்பி நோக்கியபடி , தியாகேசா என்று முறையிட்டபடியே சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலைக் கடந்து கமலாலயக் கரையை அடி மேல் அடி வைத்தபடி மெதுவாக வந்தடைந்தேன். வலியோ நிற்பதாக இல்லை.

அந்த சமயம் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எனக்கு அருகில் வந்து இறங்கினார். கோயிலுக்கு உள்ளே அவர் செல்ல ஆரம்பித்தபோது நான் அவரிடம் என் நிலைமையைச் சொல்லிவிட்டு, நான் கும்பகோணம் செல்ல இருப்பதால் பேருந்து நிலையம் செல்லக் குறுக்குவழி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், பேருந்து நிலையம் தூரத்தில் இருப்பதால் இந்த நிலையில் நடந்து செல்வது கடினம் என்று சொன்னார். நான் இருக்கும் இடத்தில் ஆட்டோ கிடைப்பதும் துர்லபம். அதற்கும் வெளி வீதி வரை நடக்க வேண்டும். பிறகு அவருக்கு இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ” ஐயா, தங்களை வடக்கு வீதி வரை எனது ஸ்கூட்டரில் கொண்டு விடுகிறேன். அங்கேயே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளில் தாங்கள் ஏறிக் கொள்ளலாம். உங்களை அங்கு இறக்கி விட்டுப் பிறகு கோயிலுக்குள் செல்கிறேன்” என்கிறார். என் கண்களில் நீர் கசிந்தது. பிறகு என்னை அங்கு கொண்டுபோய் இறக்கிவிட்டு உடனே கோயிலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. மிகுந்த சிரமப்பட்டுப் படிகளில் ஏறினேன். அதிர்ஷ்ட வசமாக உட்கார இருக்கையும் கிடைத்தது.

எனது அடுத்த கவலை, கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும் முன்பாக உள்ள மேம்பாலத்தில் இறங்கினால் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கிடைக்க வேண்டுமே என்பது. என்னால் வீடு வரை நடந்து செல்ல நிச்சயமாக முடியாது என்று தோன்றியது. எப்படியோ கும்பகோணம் மேம்பாலத்தை அடைந்து ஒருவழியாகப் பேருந்தை விட்டு இறங்கினேன். சாலையைக் கடக்க வேண்டும். கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. நான் பயந்தபடியே ஆட்டோக்களும் அங்கு அந்த சமயம் வரவில்லை. மீண்டும் ஆரூரானைத் துணைக்கு அழைத்தேன். ” தியாகேசா, இதென்ன சோதனை” என்று கதறவே முடிந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

கைப்பேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. சாலை ஓரம் நின்றபடியே பேச முற்பட்டேன். பேசியவர் எனக்கு மிகவும் தெரிந்தவர். அப்போதுதான் சென்னையிலிருந்து வந்தாராம். தாராசுரத்தில் நண்பரைப் பார்த்துவிட்டு என்னையும் வீட்டுக்கு வந்து பார்ப்பதற்காக நண்பரின் பைக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். வீடு பூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காகக் கைப்பேசியில் பேசியிருக்கிறார். நான் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னேன். அதற்கு அவர், ” நீங்கள் அங்கேயே இருங்கள். நான் ஐந்து நிமிடங்களில் அங்கு வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அதேபோல ஐந்து நிமிடத்திற்குள் வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறுநாள் வைத்தியரிடம் போகலாம் என்கிறார். மறுநாள் காலை வலி இருந்தால் தானே வைத்திரிடம் போவதற்கு ! எனக்கோ வழக்கம் போல் நடக்க முடிந்தது. இவ்வளவும் கனவில் நடந்ததுபோல் இருந்தது.

Posted in Latest News | 1 Comment

ஆகமக் கல்வி

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.

                                  — சுந்தரர் தேவாரம்

“ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் எழுந்தருளித் தனது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களைப் பெருமான் தோற்றுவித்து அருளியதாகத் திருவாசகம் கூறுகிறது. “ எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.தமிழகம் செய்த தவப்பயனாக இன்றளவும் ஆகம வழியில் சிவாலயங்களில் நித்திய பூஜைகள், கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது ஈசன் திருவருட் துணையினால் மட்டுமே ஆகும்.

இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம்,காமிகம் போன்ற சில ஆகமங்களே தற்போது கிடைப்பதோடு மட்டும்  அல்லாமல் பின்பற்றப் படுவனவும் ஆகும். பிற ஆகமங்கள் எவ்வாறு, எக்காலத்தில் மறைந்து போயின என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை. அவற்றை மீட்டெடுக்கும் தீவிர முயற்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் புலப்படவில்லை. எஞ்சிய ஆகமங்களையே தற்போதுள்ள ஆகம பாடசாலைகள் கற்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் இக்கல்வி முறை பின்பற்றப் படுகிறது.

ஆகமத்தொடு, வாழ்வியல் கல்வியும் தக்கோரைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் பாட திட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் சிறிது வேறுபாடுகள் இருக்கலாம். ஆகமக் கல்வியோடு, தற்காலக் கல்வியும் பன்னிரண்டாம் வகுப்பு வரை இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டையும் இணைத்துக் கற்கும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவு பெற்றாலும் அனைவரும் அறிந்த காரணத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே, ஆகமப் பாடசாலைகளே கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கொடுக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு எவ்வாறு பயன் தருகின்றன என்பது அடுத்த கேள்வி.அதிக வருமானத்தை விரும்பி சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூருக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள் அவ்வாறு செல்லுமிடங்களில் இச் சான்றிதழ்களைக் காட்டித் தனது தகுதியை நிரூபிக்க முயலுகிறார்கள். அப்படியானால் சொந்த ஊர்களில் வாழையடி வாழையாகத் திருக்கோயில்களில் பணியாற்றி வந்தவர்கள் அக்கோயில்களைப் புறக்கணிக்கும் நிலையைப் பாடசாலைகள் ஆதரிக்கின்றனவா? பாடசாலைத் தரப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெளியேறுகையில் அவனுக்கு ,அவனது பூர்வீக ஊரிலேயே வாழும்படி வாழ்வாதாரம் செய்து தரப் படவில்லையே !

பாடசாலை நடத்துவதும் அத்தனை எளிது அல்ல. வெளியிலிருந்து பெரிய மனம் உள்ளவர்களின் துணையுடனும், நிரந்தர வைப்பு நிதியின் வட்டி வருவாயுடனும் மாணவர்களின் கல்வி, உணவு,உடை ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதை நாம் அறிவோம். இச் சிவபுண்ணியத்தில் வெளிநாடுகளில் வசித்து வரும் நம்மவர்கள் பங்கேற்க மேலும் முன்வந்தால் பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உண்டு.அவர்களை இத்தருமத்தில் ஈடுபடச் செய்ய வேண்டிவர்கள் மடாதிபதிகளும், வெளிநாடுகளுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களும் ஆவார்கள். தனவந்தர்கள் பலர் அங்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை ஆதி சைவர் நல சங்கங்களும் இணைந்து செய்யலாம்.

ஆகமம் கற்ற மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி நடந்து விட்டால் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மோகமும் ஒழிந்து விடும். ஆகமமும் தமிழும் ஒருங்கே பயில ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கல்வி ஸ்தாபனமே அரசு ஆதரவோடு நடை பெற வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பத்தை விட, இம்முறையில் கிடைக்கும் பலனைப் பல மாங்காய் என்றும் சொல்ல முடியும். இன்று ஆதிசைவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிவனுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் சமூகம் பாதை மாறி சம்பந்தமில்லாத,  மற்றும் மரியாதை முற்றிலும் கிடைக்காத இடங்களில் வேலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. சொந்தக்  காலில் நிற்கும்போது சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. வறுமை முற்றிலும் நீங்கிவிடும். திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருபாலார்க்கும் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். இத்தனையும் நடைபெற வேண்டுமானால் மேற்கூறியபடி போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்பு மூலம் ஒரே ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். சிவனருள் என்றென்றும் துணை செய்யும். சம்பந்தப் பட்டவர்கள் களப் பணி செய்ய முன்வர வேண்டும் என்று, வேதமாகவும்,ஆகமமாகவும், திருமுறைகளாகவும் நின்று அண்ணிக்கும்  பரம்பொருளை இறைஞ்சுவோமாக.

— சிவபாதசேகரன்

Posted in General, Upcoming Events | Leave a comment

பஞ்ச கவ்யம்

பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக் குறிக்கும்.

காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என்ற மந்திரத்தால் கோ மயத்தையும், ஆப்யாஸ்வ மந்திரம் சொல்லி பசும் பாலையும், ததிக் ரா வண்ண என்ற ரிக்கால் பசும் தயிரையும் சுக்ரம ஸி என்ற மந்த்ரத்தால் பசு நெய்யையும் தேவஸ் யத்வா மந்ரத்தால் தர்பை சேர்க்கப்பட்ட நீரையும் ஒரே கிண்ணத்தில் கீழ்க்கண்ட அளவுப்படி சேர்க்க வேண்டும் :

கோமயாத த்விகுணம் மூத்ரம் மூத்ராத் ஸர் பி சதுர் குணம் I ததி பஞ்சகுணம் ப்ரோக்தம் ஷீ ரம் அஷ்ட குணம் ததா II

என்றபடி, கோமயத்தை( பசும் சாணியை) விட இரண்டு பங்கு கோ மூத்ரமும், அதைவிட நான்கு பங்கு பசு நெய்யும் , நெய்யைவிட ஐந்து பங்கு பசும் தயிரும, தயிரை விட எட்டு பங்கு பசும்பாலு ம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கலந்த பஞ்ச கவ்யம் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும.

இதனை காலையில் வெறும் வயிற்றில் உட் கொண்டால் பாவ வினைகள் நீங்கி உடல் தூய்மை பெறலாம்.

நன்றி: வைதீக ஸ்ரீ ஜூன் 2020 இதழிலிருந்து.

Posted in Temple Rituals | 1 Comment

ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

சிவபாதசேகரன், சென்னை

 

ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை” என்கிறது அப்பர் தேவாரம். தாருகாவனத்தில் கஜாசுரனை யானை வடிவில் ஆபிசார ஹோமம் மூலம் ஏவிவிட்ட யானையை அடக்கிக் க்ருத்திவாசனாக அந்த யானையின் தலை மீது வீர தாண்டவம் ஆடிய பின்னர், அம்முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்து அருளியதாகப் புராணம் கூறும். ஞானமே முக்திக்கு எதுவாகிறபடியால் அதனை ஈசுவரனே அருளியதாக , “ முத்தியும் ஞானமும் முறை முறை பலபல நெறிகளும் காட்டி “ என்று பாடுவார் சுந்தரர்.

ஞானம் இருக்கும் இடத்தில் அமானுஷ்ய சக்தி தானே வந்துவிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் சமண மதமும் புத்த மதமும் மேலோங்கியிருந்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் திறன் படைத்த புத்திரன் தமக்கு வேண்டும் என்று சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் பரமசிவனை நோக்கித் தவம் செய்தார். அத்தவத்தின் பலனாக , வேத-சைவநெறிகள் மீண்டும் தழைத்து ஓங்குமாறு சீர்காழிப் பிள்ளையார் திரு அவதாரம் செய்தருளினார். தந்தையுடன் ஆலயக் குளக்கரையில் பசி மேலிட்டு  தோணியப்பரின் விமானத்தை நோக்கி “ அம்மே,அப்பா “ என்று குழந்தை அழுதபோது உமாதேவியுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளி, அப் பாலகனுக்குப் பாலளித்து வருமாறு தேவியிடம் கூறவே, அம்பிகையும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்துப் பொற்கிண்ணத்தில் சிவஞானம் கலந்த திருமுலைப்பாலைத் தந்தருளினாள். சிவஞானம் உண்டதால் அப்போதே அக்குழந்தை சிவஞானசம்பந்தர் ஆகி, தனக்குப் பால் தந்தருளிய அம்மையப்பர்களைத் தந்தைக்குக் காட்டி, “ தோடுடைய செவியன் “ எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் அருளிச் செய்தார். ஞானம் உண்டதால் எல்லாக் கலைகளும் கைவரப்பெற்றார் ஞான சம்பந்தர்.

உபநயன காலத்தில் வந்திருந்த அந்தணர்களுக்கு, நால் வேதங்களின் உட்பொருள் பஞ்சாக்ஷரமே என்று பதிகம் பாடினார். “ நான் மறை கற்றவன் “ என்று அவர் தம்மை சொல்லிக் கொண்டாலும், நான்மறைகள் தாமாகவே அவரிடம் சென்று அடைந்தன என்பதே உண்மை. பதினாறே ஆண்டுகள் இந்நிலவுலகத்தில் வாழ்ந்து சிவத்தல யாத்திரைகள் செய்து தேவாரப் பதிகங்கள் அருளியுள்ளதால் அப்பனுவல்கள் வேத சாரமாகவே ஆயின. எனவே இவரை, “ வேத வாயர் “ “ ஞான மா முனிவர் “ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். வேத வாக்கானது மெய்ம் மொழி என்பதால், இவரது ஞான மயமான பனுவல்களும் பொய்யா மொழி ஆயின. அவற்றைப் பாராயணம் செய்வோர் அடையும் பலனை ஆணையிட்டுக் கூறுகிறார் ஞான சம்பந்தர்.

சம்பந்தர் தேவாரம் முழுதுமே ஞானம் கலந்த தேனாகச் சுவைக்க வல்லவை. பண்ணும்,தாளமும் கொண்ட இசைப்பனுவல்கள் அவை. இன்றைய காலத்திலும் வேண்டுவார் வேண்டியதை அருள வல்ல மந்திர மறை அப்பனுவல்கள். இடம் கருதி அவரது ஒரு பதிகத்தையாவது இங்கு சிந்திப்போமாக.

அப்பதிகமாவது திருவாவடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் மீது பாடப் பெற்றது. திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்த காலத்தில் அவரது தகப்பனார் சீர்காழியிலிருந்து புறப்பட்டுவந்து தனது மகனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். சீர்காழியில் தாம் ஒரு சிவ யாகம் செய்வதால்  அதற்குப் பொருள் வேண்டும் என்பதே அவ்விண்ணப்பம்.

தந்தையின் விருப்பத்திற்கிணங்கிய சம்பந்தர் அப்போது திருவாவடுதுறைப் பெருமானை நோக்கிப் பாடியருளிய பதிகம் அற்புதமானது. இறைவன் அருளால் ஒரு பூத கணம் மூலமாக ஆயிரம் பொன் பெற்றார் என்பது வரலாறு. அப்பதிகம் நமக்கு உணர்த்தும் கருத்துக்கள் ஒப்புயர்வற்றவை.

நமக்குத் துன்பம் வந்தாலும், பிணியினால் உபாதை  தொடர்ந்தாலும், இறைவனை விடாப்பிடியாகப் பற்றாமல் மேலெழுந்தவாரியாக நினைக்கிறோம் அல்லவா? ஆனால் இத்தருணங்களில் பெருமானின் திருவடிகளை மறவேன் என்கிறார் சம்பந்தர்:

“ இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்” என்பது அவ்வுயர்ந்த கருத்து.

வாழ்க்கையில் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் இறைவனது நினைப்பு நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது ?  ஆனால் சம்பந்தரோ, “ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன் “ என்கிறார்.

வழிபாடு என்பது இரு சில மணித் துளிகள் மட்டுமல்லாமல் இமைப்பொழுதும் இறைவனை நெஞ்சை விட்டு நீங்காதபடி நினைத்திருத்தலாகும் என்பதை, “ நனவினும் கனவிலும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் “ என்பதால் அறியலாம்.

நோய்கள் பலவிதம். தும்மல்,இருமல் போன்றவை தொடர்ந்தால் ஏற்படும் தொல்லை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். “ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பதால், அந்நிலையிலும் தளராமல் சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர வைத்தருளுவார்.

கையிலுள்ள செல்வம் யாவும் இழந்த நிலையிலும் அதற்கு அஞ்சாமல் இறைவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை, “ கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் “ என்று வலியுறுத்துகிறார்.

உண்ணும்போதும்,பசித்திருந்தாலும் உறங்கினாலும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதை, “ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடியலால் சிந்தை செய்யேன்” என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தர்.

சித்த சுவாதீனம் உள்ளவர்களே இறைவனை நினையாமல் இருக்கையில், அதனை இழந்தவர்கள் எவ்வாறு நினைக்கக் கூடும் ? ஆனால் பித்துப் பிடித்துத் திரிந்தாலும் தீராத நோய் வந்தாலும் உன் பாதங்களை மறவேன் என்கிறார் சம்பந்தர். “ பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பன அவ்வுயர்ந்த வரிகள்.

இப்பதிகத்தை நாள் தோறும் பாராயணம் செய்து அருள் பெறுவோர் பலர் இன்றும் இருக்கிறார்கள். இதுபோன்ற திருப்பதிகங்கள் தேவாரம் முழுதும் விரவி உள்ளன. பாராயணம் செய்வதற்கு நாம் பேறு பெற்றிருக்க வேண்டும்.

****************************

Posted in Latest News | Leave a comment