நாயன்மார் சரித்திரம்-2

எறிபத்த நாயனார்

இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச்   சேய்ஞலூர், கருவூர்  ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் ஆநிலை என்னும் கோயில் உள்ளது. அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும் நியமம் மிக்க அடியார்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதைக் கடமையாகக் கொண்டவர் எறிபத்த நாயனார் என்ற பெரியோர் ஆவார். அடியார்களின் இடர்களைக் களைவதற்காகத் தமது கரத்தில் மழு (கோடரி) ஆயுதத்தை எப்போதும் தாங்கியிருப்பார்.

கருவூர் ஆநிலையப்பரிடம் அன்பு பூண்ட சிவகாமியாண்டார் என்ற முதிய அந்தணர் அந்நகரில் வாழ்ந்து வந்தார். தினமும் ஆநிலையப்பருக்கு மாலைகள் அளித்து வருவதை நியமமாகக் கொண்டவர் அவர். வைகறையில் தூய நீராடி, நந்தவனத்தை அடைந்து, அங்குள்ள மணமிக்க மலர்களைக் கொய்து, பூக்கூடையை நிறைத்து,அவற்றைக் கொண்டு அழகிய மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார்.

ஒருநாள் தனது தண்டில் பூக்கூடையைத் தொங்கவிட்டவாறு நவமிக்கு முன் தினம் சிவகாமியாண்டார் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கரூரை ஆண்டு வந்த புகழ்ச் சோழரது பட்டத்து யானை திடீரென்று மதம் பிடித்து அவ்வீதி வழியே ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் பயந்தவாறு    ஓடலாயினர். வயோதிகரான சிவகாமியாண்டார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பட்டவர்த்தனம் என்ற அந்த யானை அவரது பூக்கூடையப் பற்றி இழுத்து நிலத்தில் சிந்தி விட்டு விரைந்தது. அதன் காவலர்களோ அல்லது பாகர்களோ அதனைத் தடுக்காது போகவே,  “ சிவதா சிவதா” என்று கதறிக்கொண்டு அந்த யானையின் பின்னர் ஓடினார் சிவகாமியாண்டார். மூப்புக் காரணமாக அவரால் ஓடமுடியாது நிலத்தில் விழுந்தார். அப்போது இறைவனை நோக்கி ஓலமிட்டுக் கதறினார். அந்த ஓலமிடும் ஓசை கேட்டு அங்கு வந்த எறிபத்தர் நடந்ததைக் கண்டு சினமுற்றவராக மதம்பிடித்த யானையைத் தொடர்ந்து சென்று, மலர்களைச் சிந்திய அதன் துதிக்கையைத்  தனது மழுவினால் வெட்டி வீழ்த்தினார். அதனால் நிலத்தில் விழுந்து புரண்ட யானை இறந்தது. அதன் பக்கத்தில் வந்த குத்துக்கோற் பாகர் மூவரும், யானை மீதிருந்து செலுத்திய இருவரும் நாயனாரை எதிர்த்த போது அந்த ஐவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். இதனைக் கண்ட பிற பாகர்கள் விரைந்து சென்று அரண்மனைச் சேவகர்களிடம் யானையும் சேவகர்களும் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அதனைக் கேள்வியுற்ற சோழ மன்னர் முழு விவரங்களையும் கேளாமல், சினம் கொண்டவராகத் தனது சேனைகளுடன் எறிபத்தர் இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு பகைவர்கள் எவரையும் காணாது மழு ஏந்திய கையுடன் நிற்கும் எறிபத்தரை மட்டுமே கண்டார்.

“ இவரே யானையையும் சேவகர்களையும் கொன்றவர்” என்று பாகர்கள் எறிபத்தரைச் சுட்டிக்காட்டியவுடன்,சோழ மன்னர், ” இவர் சிவனடியாரைப் போல் அல்லவா காணப்படுகிறார். நற்குணம் மிக்கவராகவும் காணப் படுகிறார். யானை ஏதோ பிழை செய்திருக்க வேண்டும்.அதன் காரணமாகத்தான் அதனைத் தண்டித்திருப்பார்” என்றார். தனது குதிரையிலிருந்து இறங்கி நேராக நாயனாரை அணுகி அவரைத் தொழுது,     “இந்த யானை செய்த குற்றத்தை அறியேன். அதற்குரிய தண்டனை போதுமோ எனவும் அறியேன்.அருளிச் செய்வீராக.” என்றார் அரசர்.

நாயனார் அரசரை நோக்கி நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னர்,அச்சத்துடன் அவரை மீண்டும் வணங்கி, “ அது எனது பட்டத்து யானை ஆதலால் என்னையும் இந்த உடை வாளால் தண்டித்து அருளுவீராக” என்று எறிபத்தரின் கரங்களில் தனது உடைவாளைக் கொடுத்தார்.

புகழ்ச்சோழரின் பேரன்பினைக் கண்டு திகைத்த நாயனார், அவ்வாளை வாங்கிக் கொள்ளாவிடில் அரசர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார் என்று அஞ்சி இப்படிப்பட்ட பேரன்புடைய மன்னருக்குத் தீங்கு நினைத்தேனே என்று கருதி, அதற்கு முன்பாகவே தாம் உயிர் நீப்பதே முறை என்று எண்ணியவராக அவ்வாளினால் தனது கழுத்தினை அறுக்க முயன்றார். அதனைக் கண்டு பதறிய மன்னர், “ ஆ!! கெட்டேன். பெரியோர் செய்கை அறியாது போயினேன்.” என்றவராக விரைந்து சென்று நாயனாரின் கைகளையும் வாளையும் பிடித்துக் கொண்டார். அதே நேரத்தில், புகழ்ச்சோழர் தமது எண்ணம் நிறைவேறாதது குறித்து வருந்தினார்.

அவ்விருவரது அன்பின் திறத்தை உலகோர் அறிய வேண்டி இறைவர் அருளால் ஓர் அசரீரி வாக்கு விண்ணில் பலரும் கேட்க எழுந்தது. “உங்களிருவரது அன்பின் உயர்வை உலகத்தவர் அறியவே இவ்வாறு நிகழ்ந்தது. இறந்து பட்ட யானையும் பிறரும் உயிர் பெற்று எழுவர்” என்ற சொல் விண்ணிலிருந்து எழுந்தது. அக்கணமே அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அதனைக் கண்ட நாயனார், வாளைக் கீழே போட்டுவிட்டு புகழ்ச் சோழரை வணங்க, அரசரும் எறிபத்தரை வணங்கினார்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவகாமியாண்டாரும் இத்திருவருட் செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். எறிபத்தரின் வேண்டுகோளை ஏற்றவராக புகழ்ச் சோழர் பட்டத்து யானையின் மேல் ஏறிக் கொண்டு,சிவபெருமானின் மலரடிகளைச் சிந்தித்தபடியே தமது அரண்மனையை அடைந்தார். சிவனடியார்களின் பெருமையை எவரே அறிய வல்லார் என நெகிழ்ந்தவராகச் சிவகாமியாண்டார் முன்போல் ஆநிலையப்பருக்குத் தொண்டு செய்து வரலாயினர். எறிபத்தரும் முன்போலவே கையில் மழுவேந்தி சிவனடிடயார்களின் துன்பம் களைந்து வந்தார்.அதன் பயனாகத் திருக் கயிலாயத்தில் சிவகண நாதராகும் பேறு பெற்றார். எறிபத்தரின் தொண்டினையும்,புகழ்ச் சோழரின் பெருமையையும் யாரால் அளவிட்டுக் கூற முடியும்? சிவபெருமான் ஒருவரால்தான் அளவிட முடியும்.

 ஏனாதிநாத நாயனார்

சோழநாட்டில் வளம் மிக்க எயினனூர் என்ற ஊரில் ஈழக்குலத்தைச்      சேர்ந்த ஏனாதி நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். ( எயினனூர் என்பது கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் உள்ளது. தற்போது ஏன நல்லூர் என்று  வழங்கப்படுகிறது). சிவபக்திச் செல்வராக விளங்கிய நாயனார் அரசர்களுக்கு வாட்பயிற்சி செய்துவித்து வந்தார். ஈட்டிய பொருள்களை எல்லாம் சிவனடியார்களுக்கே அளித்து வந்தார். இதே வாட்பயிற்சித் தொழிலைச் செய்துவந்த அதிசூரன் என்பவன் நாயனாரது ஊதியமும் புகழும் பெருகி வருதலைக் கண்டு பொறாமை கொண்டு பகைமை பாராட்டி வந்தான். ஒருநாள் துணையாகச் சிலரை அழைத்து வந்து அதிசூரன் நாயனாரது வீட்டை அடைந்து அவரைப் போருக்கு அழைத்தான். ஏனாதினாதரும் தனது மாணாக்கர்களுடனும் உறவினர்களுடனும்  வெளியில் வந்து,” யார் போரில் வெற்றி பெறுகிறாரோ அவரே வாட்பயிற்சி கற்பிக்கத் தகுதி உடையவர் ஆவார்” என்று அதிசூரன் கூறியதை ஏற்றுக் கொண்டு அவனுடன் போர் புரியலானார். இருபுறத்திலும் அனேக வீரர்கள் மாண்டனர். நாயனாரது ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் அதிசூரனின் படைகள் பின் வாங்கின. அதிசூரனும் புறம் காட்டி ஓடினான். தனது வீட்டை அடைந்த அதிசூரன் உறக்கம் வராமல் வஞ்சனை மூலமாவது ஏனாதிநாதரை வெல்வேன் என்று உறுதி பூண்டான்.

மறுநாள் அதிசூரன் ஒரு ஏவலாள் மூலம் ஏனாதிநாதரை மீண்டும்  துணை யாரும் இன்றித் தனியாக வேறோரிடத்தில் போருக்கு வரும்படி கூறி அனுப்பினான். நாயனாரும் அதன்படி, போர்க்களத்தை அடைந்து அதிசூரனது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.

திருநீறு அணிந்த அடியார்களுக்கு ஏனாதி நாதர் ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்த அதிசூரன், தனது நெற்றியிலும் உடலிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டு வாளையும்,கேடயத்தையும் ஏந்தியவனாக முகத்தைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்தை அடைந்தான்.

போர் துவங்கியதும் தன்னை நோக்கி வந்த நாயனார் காணும்படி அதுவரையில் கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்த தனது முகம் தெரியும்படி நின்றான். அப்போது அவனது முகத்தில் திருநீறு இருந்ததைக்கண்ட நாயனார், “ ஆ கெட்டேன்!! திருநீறு இட்டபடியால் இவர் சிவனடியார் அல்லவா! அவரை எதிர்க்கத்துணிந்தது பிழை அன்றோ! இனி அவர் உள்ளக்குறிப்பின்படியே நிற்பேன் எனக் கருதித்  தனது கேடயத்தையும் வாளையும் நிலத்தில் போட்டார்.

பிறகு,” நிராயுதபாணியாக நின்றவரைக் கொன்றார் என்ற பழி இவருக்கு வந்து விடுமே” எனக்கருதி, வாளையும் கேடயத்தையும் மீண்டும் கைகளால் எடுத்துக் கொண்டு போரிடுபவர் போலப் பகைவன் முன் நின்றார். பாதகனாகிய அதிசூரன் அத்தருணமே தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டான். நாயனாரது பேரன்பைக் கண்ட சிவபெருமான் அவருக்கு ஆகாய வெளியில் காட்சி தந்து, “ இனி நீ நம்மை விட்டுப் பிரியாதிருப்பாயாக” எனக் கூறி அருளினார். நாயனார் திருநீற்றின் மீது வைத்திருந்த பேரன்பினை என்னென்று இயம்ப முடியும்?

 கண்ணப்ப நாயனார்

பொத்தப்பி நாட்டில் மலைகளும் காடுகளும் சூழ்ந்த உடுப்பூர் என்ற பழம்பதி ஒன்று உண்டு.( கடப்பை மாவட்டத்தில் உள்ள புள்ளம்பேட்டை என்ற பகுதியைப் பொத்தப்பி நாடு என்பர். உடுப்பூர் என்பது தற்போது அரக்கோணம்- குண்டக்கல் பாதையில் உள்ள இராஜம் பேட்டைக்கு அருகில் உள்ள உடுக்கூர் என்பர்) அப்பகுதியில் வேட்டையாடும் வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்களுக்குத் தலைவனாக நாகன் என்பவன் விளங்கினான். அவனது மனைவி தத்தை என்பவள் ஆவாள். அவர்கள் நீண்ட காலமாக மகப்பேறு இன்றி வருந்தினர். அக்குறை தீர முருகப்பெருமானது சந்நிதியில் நாள்தோறும் வேண்டி வந்தனர். பெரிய திருவிழா எடுத்துக் குரவைக்கூத்து நடத்திப் பெருமானை வழிபட்டனர். அதன் பலனாகக் கந்தவேள் கருணை புரியவே, தத்தை கருவுற்று ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். வேடர் குலமே மகிழ்ச்சியில் திளைத்தது. பன் மணிகளை வாரி இறைத்தும், உடுக்கை முதலிய மங்கள வாத்தியங்களை முழக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கானகத் தெய்வங்களை வழிபட்டனர். அக்குழந்தையை நாகன் கையில் எடுத்தபோது திண் என்று இருந்ததால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான்.

ஓராண்டு ஆனதும் திண்ணனார் தளர்நடையிட்டார். அவரது நெற்றிக்குப் புலி நகச் சுட்டியையும் மார்புக்குப் பன்றி முள்ளும் புலிப்பல்லும் கோத்த மாலையையும் இடையில் சதங்கையையும் காலில் யானைத் தந்தங்களால் ஆன தண்டையையும் அணிவித்து அலங்கரித்து மகிழ்ந்தனர். மழலை பேசிப் பெற்றோரை மகிழச் செய்தார் திண்ணனார். ஐந்து வயது ஆனபிறகு வேடச் சிறுவர்களுடன் சோலைகளிலும் உடுப்பூரை அடுத்த காடுகளிலும்  விளையாடுவார். புலிக் குட்டிகளையும், பன்றிக் குட்டிகளையும், நாய்க் குட்டிகளையும்,முயற்குட்டிகளையும் பிடித்து வந்து மரங்களில் கட்டி அவற்றை வளர்ப்பார்.

சில ஆண்டுகள் கழிந்தபின், நாகன் தன் மகனார்க்கு வில் வித்தையைத் தக்கோர் மூலம் நல்லதோர் நாளில் விழா எடுத்திக் கற்பித்தான்.புலி நரம்பாலான காப்பினைக் கையில் கட்டி வேடர்கள் வாழ்த்துக் கூறினார். பல்வகை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு வில்விழா ஆறு நாட்கள் நடைபெற்றபின் வில்வித்தையினை ஆசிரியரிடம் நாள்தோறும்  திண்ணனார் பயின்றார். அதோடு படைக்கலப் பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது தோற்றம், புண்ணியங்கள் அனைத்தும் ஒரு   உருவம் பெற்று வந்தது போல விளங்கியது.

நாகனுக்கு வயது முதிர்ந்ததும் முன்போல வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே வேடர்களிடம் தனது மகனை வேடர் குலத் தலைவனாக ஆக்குவதாகத் தெரிவித்தான். அவர்களும் மகிழ்ச்சியுடன் அதற்கு உடன்படவே, தேவராட்டியை அழைத்துத் தன் மகன் முதன் முறையாகக் காட்டில் வேட்டையாடச் செல்ல இருப்பதால், அவனுக்குத் தீங்கு நேராதபடிக் காட்டிலுள்ள தெய்வங்களுக்குப் பூசை செய்யக் கோரினான். அவளும், தான் அங்கு வரும் முன்னர் நல்ல சகுனங்களைக் கண்டதாகக் கூறிப் ,பூசைக்கான பொருள்களை வாங்கிச் சென்றாள்.

வேடர்களுடன் திண்ணனார் நாகனிடம் வந்ததும், நாகன் அவரை ஆரத் தழுவிக்கொண்டு நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்து, தனக்கு மூப்பு வந்து விட்டதால், வேடர்குல ஆட்சியை ஏற்று, மிருகங்களை வேட்டையாடியும்,பகைவர்களை வென்றும்,வேடர் குலக் காவலனாக விளங்குவாய் என்று கூறித் தனது உடைவாளையும் தோலையும் கொடுத்தான். தந்தையின் வார்த்தையை ஏற்ற திண்ணனார்,மீண்டும் நாகனது பாதங்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வேட்டையாடத் தயாரானார்.

மறுநாள் உதயத்தில் நீராடி,வேட்டைக் கோலம் பூண்டு,தேவராட்டியை வணங்கி அவளது ஆசியைப் பெற்றுக்கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார். வேடர் படை தொடரக் காட்டில் வேட்டை தொடங்கியது. விலங்குகளைக் கொன்றபோது அவற்றின் குட்டிகளைக் கொல்லாது விட்டனர். அப்போது அங்கு கரிய காட்டுப்பன்றி ஒன்று தோன்றியது.  திண்ணனாரும் அவரது மெய்க் காவலர்களாகிய நாணன்,காடன் ஆகிய இருவரும் அப்பன்றியைப் பின் தொடர்ந்தனர். ஒரு மலைச் சாரலை அடைந்ததும் திண்ணனார் தனது உடை வாளால் அப்பன்றியை வீழ்த்தினார். வெகுதூரம் அதனைத் துரத்தி வந்தபடியால் மிகுந்த களைப்பும் பசியும் அவர்களுக்கு மேலிட்டது. ஆகவே அப்பன்றியை நெருப்பில் காய்ச்சித் தின்று நீர் அருந்திய பின் காட்டு வேட்டையைத் தொடரலாம் என்று தீர்மானித்தார்கள்.

மலைக்கு அருகில் ஓடும் பொன்முகலியாற்றுக்குச் சென்றால் நீர் அருந்தலாம் என்று அறிந்தபின், பன்றியை அங்கு எடுத்துச் சென்றனர். அப்போது அம்மலையின் தோற்றம் திண்ணனாரை வசீகரித்ததால், நாணன் அவரிடம், அம்மலை காளத்தி மலை என்றும் அதன் மீது குடுமித்தேவர் இருப்பதால் நாம் அவரை அங்கு சென்று வழிபடலாம் என்றும் கூறினான். மூவரும் பொன் முகலிக் கரையை அடைந்ததும், திண்ணனார் காடனிடம் அப் பன்றியைக் காய்ச்சுவதற்காகத் தீக்கோல் மூலம் தீயை உண்டாக்கி வைக்குமாறு கூறிவிட்டு, நாணனும் அன்பும் வழி காட்டக் காளத்தி மலை மீது ஏறத் தொடங்கினார்.

திண்ணனார் திருக்காளத்தி நாதரைத் தரிசிக்கும் முன்பே பெருமானது கருணை நயனம் அவர் மேல் பதிந்தது. அதனால் அவரது முந்தைய வினைகள் யாவும் அப்போதே நீங்கின.அதனால் ஒப்பற்ற அன்பு வடிவம் ஆயினார்.

பெருமானைக் கண்டதும் ஆறாத இன்பம் அன்பு வெள்ளமாக மேலிட ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவி உச்சி மோந்து,புளகாங்கிதம் அடைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இறைவனைப் பார்த்து, “ மிகக் கொடிய மிருகங்கள் வாழும் இப்பகுதியில் நீர் தனித்திருப்பது தகுமோ “ என வருந்தினார்.  பெருமான் மீது பச்சிலைகளும் பூவும் இருக்கக் கண்டு, அவ்விதம் செய்தவர் எவர் என்று கேட்டவுடன்,அருகிலிருந்த நாணன், தான் முன்பு ஒரு முறை நாகனுடன் வேட்டையாட வந்தபோது, ஒரு சிவப்பிராமணர் அப்பெருமானுக்கு நீர்,மலர்,இலைகள் ஆகியவற்றால் பூசித்துத் தாம் கொண்டு வந்த உணவை ஊட்டிப் பின்னர் ஏதோ சில மொழிகளைக் கூறிச் சென்றதைக் கண்டதாகக் கூறினான். அதைக் கேட்ட திண்ணனார் அச்செயல்கள் குடுமித்தேவருக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் போலும் என நினைந்து, தாமும் அவ்வாறே செய்ய உறுதி பூண்டார்.

பெருமான் பசியோடும் தனித்தும் இருக்கிறாரே! நானே சென்று நல்ல இறைச்சியை கொண்டு வருவேன் என்று எண்ணியவராகச் சிறிது தூரம் போவார். பிரிய மனமில்லாமல் மீண்டும் திரும்பி வந்து கண்ணீர் விட்டுக் கதறுவார். ஆனால் பெருமான் பசியோடு இருப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டாதவராக ஒருவாறு போய்வரத் துணிந்து கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராக, நாணன் பின்தொடர மலையை விட்டு இறங்கிப் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தார்.

காடன் அவர்களை எதிர் கொண்டு வணங்கித் தான் நெருப்பைக் கடைந்து, பன்றி இறைச்சியைத் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினான். அப்போது நாணன் காடனிடம் மலையின் மீது நடந்தவற்றைக் கூறி,”திண்ணன் குடுமித்தேவரை உடும்பு போலப் பிடித்துக் கொண்டு விட்டான். இந்த இறைச்சியையும் அவருக்காகவே எடுத்துச்செல்ல இங்கு வந்திருக்கிறான். நமது வேடர்குலத் தலைமையை நீக்கி, அவருக்கே ஆளாகிவிட்டான்” என்று கூறினான். இதைக்கேட்ட காடன், திண்ணனாரைப் பார்த்து, “ திண்ணா , நமது குலத் தொழிலைக் கைவிட்டு இவ்விதம் ஏன் செய்யத் துணிந்தாய்” எனக்  கேட்டான். அதனைக் கேளாதவர் போலிருந்த திண்ணனார், வேக வைத்த இறைச்சியில் நல்ல சுவைப்பகுதிகளை அறிய வேண்டி, அதில் சிறிதை வாயில் போட்டுச்  சுவை பார்த்தார். சுவையான இறைச்சிப் பகுதிகளைத் தனியாக சேமித்து வைத்தார். நாணனும் காடனும் இதைக் கண்டு அதிசயித்து,” சுவைத்த இறைச்சியை இவன் உண்ணாமல் உமிழ்கிறான். நமக்கும் தரவில்லை. அவனிடத்திலிருந்து வாய்ச்சொற்களும்  வரவில்லை. ஏதோ மயக்கம் கொண்டு விட்டான் என்று தோன்றுகிறது. அதைப் போக்கும் வழி நமக்குத் தெரியாததால் உடனே நாகனிடம் இதுபற்றித் தெரிவித்துத் தேவராட்டி மூலம் இம்மயக்கத்தைத் தீர்க்க வேண்டும் “ என்று தமக்குள் முடிவு செய்து, தங்களுடன் வந்த வேடர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.

தம்முடன் வந்த இருவரும் திரும்பிச் சென்றதையும் கவனியாமல் குடுமித்தேவரிடம் விரைந்து செல்லும் ஒரே வேட்கையுடன் திண்ணனார் பெருமானுக்கு அமுதாக இறைச்சியை எடுத்துக் கொண்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதற்குப் பொன்முகலி ஆற்று நீரைத் தன் வாயில் முகந்து கொண்டார். பறித்த இலைகளைத் தந்து சிகையில் செருகிக்கொண்டார். வில்லையும் அம்பையும் கைகளில் ஏந்திக்கொண்டார்.

திருக்காளத்தி நாதரின் சன்னதியை அடைந்தவுடன் பெருமானது திருமுடியில் முன்னம் சார்த்தப்பட்டிருந்த மலர்களைத் தனது செருப்புக் காலால் அகற்றினார். உள்ளத்தில் பொங்கி எழும் அன்பினை உமிழ்பவர் போலத் தனது வாயில் அடக்கிக் கொண்டுவந்த நீரைப் பெருமானது திருமுடி மேல் உமிழ்ந்தார். தனது முடியில் கொண்டுவந்த இலைகளையும் மலர்களையும் இறைவரது திருமுடியின் மேல் சார்த்தினர். பின்னர், தாம் கொணர்ந்த இறைச்சியை இறைவர் முன் வைத்து,” பெருமானே! இதனைத் தேவரீர் ஏற்று அமுதுசெய்தஅருள வேண்டும். பற்களால் அதுக்கிச் சுவை மிகுந்ததைக் கொண்டு வந்துள்ளேன். ஏற்றருள வேண்டும்” என்று  வேண்டினார். அப்போது மாலைப் பொழுது கழிந்து இரவு வந்தது. இரவில் கொடிய விலங்குகள் வந்தால் பெருமானுக்குத் துன்பம் விளைவிக்குமே என்று எண்ணி பேரன்புடன் கையில் வில்லும் அம்பும் தாங்கிப் பக்கத்தில் இரவு முழுதும் நின்று காவல் மேற்கொண்டார்.

மறுநாள் பொழுது விடிந்ததும் பெருமானுக்குத் திருவமுது செய்வதற்கு வேட்டையாடி வரப் புறப்பட்டார். தினந்தோறும் காளத்தி நாதருக்கு ஆகம வழியில் நின்று திருமஞ்சம் செய்து அமுதூட்டி மலரணிவித்து வழிபாடு செய்யும் சிவகோசரியார் என்ற ஆதி சைவர் அன்றும் வழக்கம்போலப் பூசைக்கான பொருள்களுடன் மலை ஏறி வந்து திருச்சன்னதியை அடைந்தார். இறைவர் முன் இறைச்சியைக் கண்டு பதறி, “ ஆ! கெட்டேன். இதுபோல் அனுசிதம் செய்தவர் எவர் என்று தெரியவில்லையே! வேடர்களாகவே இருக்க வேண்டும். இப்படி நிகழுமாறு தேவரீர் திருவுள்ளம் கொள்ளல் முறையோ! : என்று பதறிக் கண்ணீர் விட்டார். பிறகு அங்கு கிடந்த இறைச்சி,எலும்புத் துண்டுகள் ஆகியவற்றை திருவலகால் அகற்றினார். பொன்முகலிக்குச் சென்று நீராடிவிட்டு மீண்டும் வந்து சிவாகம முறைப்படிப் பிராயச்சித்தம் செய்தார். அதன் பின்னர் பெருமானை வேத மந்திரங்களால் துதித்துத் திருமஞ்சனம் செய்து முறையான வழிபாடுகளை நிறைவேற்றியவுடன் தனது இருப்பிடம் திரும்பினார்.

இறைச்சிக்காக வேட்டையாடச் சென்ற திண்ணனார் ஒரு பன்றியையும் கலை மான்களையும் அம்பெய்திக் கொன்று ஓரிடத்தில் கொணர்ந்து, விறகால் தீ மூட்டித் தான் வேட்டையாடி வந்த மிருகங்களின் இறைச்சி மிகுந்த பகுதிகளைத் தீயிலிட்டுப் பக்குவப்படுத்தி, வாயில் சுவைபார்த்து நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துத் தேனோடு கலந்து , முன் போல் வாயில் நீரும் , முடியில் மலர்களும் ஏந்தி மலைமேல் எழுந்தருளியுள்ள காளத்திநாதரைச் சென்று அடைந்தார்.

சிவகோசரியார் பகல் நேரத்தில் பூசித்துச் சென்ற மலர்களைத் தனது   செருப்புக் கால்களால் நீக்கிவிட்டு, முன்போல் வாயே கலசமாகக் கொண்டு வந்த பொன்முகலி நீரால் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து, மலரணிவித்துத் தான் கொணர்ந்த இறைச்சியையும் இறைவனது திருமுன்னர் வைத்து வணங்கினார்.” பெருமானே! அடியேன் சுவைத்துப் பார்த்த இறைச்சி இது. தேனும் கலந்துள்ளேன். ஆகவே தித்திப்பாக இருக்கும். தேவரீர் ஏற்றருள வேண்டும்” என்று விண்ணப்பித்து இரவு முழுதும் பெருமானை விட்டு அகலாது,,கண் துஞ்சாது, காவலாக நின்றார்.     சிவகோசரியாரும் தினமும் இவ்வாறு நடைபெறுவது தொடர்வதைக்  கண்டு கலங்கி, அவ்விடத்தைத் தூய்மை செய்து விட்டு வழிபாடு செய்து வந்தார்.

இதற்கிடையில் நாணனும் காடனும் நாகனிடம் நடந்ததை விவரிக்கவே, பதைத்துப்போன நாகன் தேவராட்டியுடன் திண்ணனாரை அடைந்து தங்களுடன் திரும்பி வருமாறு கூறியும், இராச குளிகையால் இரும்பு பொன்னானது போலக் காளத்திநாதரது திரு நோக்கால் திண்ணனாரது வினைகளும் மும்மலமும் நீங்கி அன்புருவமாகி விட்டதால் அவர்களுடன் செல்ல அவர் உடன்படவில்லை. எனவே நாகனும் பிற வேடர்களும் வருத்தத்துடன் தங்களது இருப்பிடம் திரும்பினர்.

சிவகோசரியாரது பகற்பொழுது வழிபாடும் திண்ணனாரது இராப்பொழுது வழிபாடும் நான்கு நாட்கள் இவ்வாறு நடைபெற்றன.ஐந்தாம் நாள் காலை பூசை செய்ய வந்த சிவகோசரியார் இறைவனது சன்னதியில் இறைச்சி இருக்கக்கண்டு மிக்க துக்கமடைந்து, இத்தகைய அனுசிதம் நடைபெறாமல் திருவருள் புரிய வேண்டும் என்று பெருமானிடம் வேண்டிக்கொண்டு தனது இருப்பிடம் அடைந்தார். அன்றிரவு கனவின்கண் சிவபெருமான் தோன்றி,            ‘ அன்பனே, இவ்வாறு செய்யும் அவனை வேடன் என்று கருதாதே. அவனது வடிவம் நம்பால் கொண்ட அன்பு வடிவமே ஆகும். அவனது அறிவு,நம்மை அறியும் அறிவேயாகும்.அவன் செய்வதெல்லாம் நமக்கு இனியனவே ஆகும். அவன் தனது கால்களால் நீ அன்புடன் சார்த்திய மலர்களை நீக்குவது, முருகனின் மலரடி என்மேல் படுவதைக் காட்டிலும் சிறப்பு  உடையது. அவன் தனது வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரைக் காட்டிலும் சிறந்தது. பிரம- விஷ்ணுக்கள் சார்த்தும் மலர்கள், அவன் அன்புடன் சார்த்தும் மலர்களுக்கு இணை ஆக மாட்டா. அவன் வாயில் சுவைத்துப் பார்த்து அளிக்கும் ஊனமுதம், வேத வழியில் வேள்வி செய்து வேதியர்கள் அளிக்கும் அவிர்ப்பாகத்தைக் காட்டிலும் இனிமையானது. முனிவர்கள் கூறும் மந்திரங்கள்,அவன் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இணை ஆக மாட்டா. அவனது உயர்ந்த பக்தியின் மேன்மையை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். தற்போது மனக்கவலை ஒழிந்து நாளை நமது சன்னதிக்கு வந்து மறைந்திருந்து அதனைக் காண்பாயாக” என்று கூறி  மறைந்தருளினார்.

விடியற்காலையில் கண்ட கனவாதலால் மீண்டும் உறங்காது விடியும் வரை விழித்திருந்த சிவகோசரியார் பொன்முகலியில் நீராடி விட்டுப் பிறகு திருக்காளத்தி நாதரை வழக்கம் போல் பூசை செய்து விட்டு, இறைவனது கட்டளைப்படி மறைவில் ஒளிந்திருந்தார். ஆறாவது நாளான அன்றும் திண்ணனார் முன்போல் வேட்டையாடி இறைச்சியைப் பக்குவமாகச் செய்து, வாயில் திருமஞ்சன நீரையும் தலையில் மலர்களையும் கொண்டவராகக் காளத்தி நாதரின் திருச் சன்னதியை அடைந்தார்.அப்போது தீய சகுனங்களைக் கண்டு பதறிய திண்ணனார் , “ ஆ! கெட்டேன், எம்பெருமானுக்கு நான் இல்லாத நேரத்தில் ஏதோ தீங்குநேர்ந்திருக்குமோ?” என்று கலங்கியபடி விரைந்து வந்தார்.

திண்ணனாரின் அன்பை சிவகோசரியார் அறிவதற்காகக் காளத்திநாதர் தமது வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிவதுபோலக் காட்சி தந்து கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே இதைப் பார்த்துவிட்ட திண்ணனார் பதறிப்போய் விரைந்து ஓடி வந்து இவ்வாறு செய்தவர் யார் என்று அறியாமல் மதி மயங்கலானார். அவர் கொண்டுவந்த ஆற்று நீரும் மலர்களும் தரையில் சிந்தின. கையிலிருந்த இறைச்சியும், வில்லும் அம்பும் நழுவிக் கீழே விழுந்தன. கையால் துடைத்துப் பார்த்தும் இரத்தப்போக்கு நிற்காது போகவே, பெருமானுக்குத் துன்பம் விளைவித்தவர் வேடரோ அல்லது விலங்குகளோ என்று என எண்ணி நெடுந்தூரம் தேடிப்பார்த்தும் எவரையும் காணாது மீண்டும் பெருமானிடமே திரும்பி வந்தார்.பாதமலர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கினார். இத் துயரைத் தீர்க்கும் மருந்தினையும் இப்பாவியேன் அறியேன். என் செய்வேன் என்று கதறினார்.

மலை அடிவாரத்திற்குச் சென்று வேடர்கள் அம்புகளால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தக் கட்டும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பறித்துக் கொண்டு மனோவேகத்தினும் விரைவாகப் பெருமானிடம் வந்தடைந்தார். இரத்தம் ஒழுகும் கண்ணில் அம்மருந்துகளைப் பிழிந்தும் இரத்தம் வருவது நிற்கவில்லை. “ ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்ப்பது “ என்ற பழமொழி அப்போது அவருக்கு நினைவில் வந்தது. தனது கண்ணை அம்பினால் தோண்டிப் பெருமானது கண்ணில் அப்பினால் இரத்தம் நின்றுவிடும் என்று கருதினார். அதன்படித் தனது கண்ணை அம்பாள் அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பரின் கண்ணில் அப்பினார். அப்போது இரத்தம் வருவது கண்டு மகிழ்ச்சி மேலிடக் குதித்துக் கூத்தாடினார். உன்மத்தர் போல் ஆயினார்.

திண்ணனாரின் அன்பை மேலும் சிவகோசரியாருக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தனது இடது கண்ணில் இரத்தம் பெருகுமாறு செய்தருளினார். அதனைக் கண்ட திண்ணனார், “ஆ! கெட்டேன். மறு கண்ணிலும் இரத்தம் பெருகுகிறதே! ஆயினும் இதனைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அஞ்சேன். எனது மறு கண்ணைத் தோண்டி எடுத்துப்      பெருமானாரது கண்ணில் இப்போதே அப்புவேன் “ என்றார்.பெருமானின் உதிரம் ஒழுகும் இடது கண் இருக்குமிடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள அக்கண்ணின் மேல் தன இடது காலை ஊன்றிக் கொண்டு,  அம்பினால் தனது இடக் கண்ணைத் தோண்ட முயன்றார். தேவாதி தேவராகிய திருக்காளத்தி நாதர் இதனைப் பொறுப்பரோ? அக்கணமே தமது கரத்தை வெளியில் நீட்டிக் கண்ணைத் தோண்ட முயலும் திண்ணனாரின் கையைப் பிடித்து, “ நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப” எனக் கூறி அருள் செய்தார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சிவகோசரியார் மகிழ்ச்சி வெள்ளத்தில்; ஆழ்ந்து பெருமானை வணங்கினார். வேதங்கள் முழங்கத் தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்று முதல் திண்ணனார்க்குக் கண்ணப்பர் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. கண்ணப்பரின் கையைப்பிடித்த பெருமான் அவரை என்றும் தமது வலது பாகத்தில் நிற்குமாறு அருளிச் செய்தார். இதனைக் காட்டிலும் அடையத்தக்க பேறு உலகில் வேறு யாது உளது?

,    ,               குங்கிலியக் கலய நாயனார் 

சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் எட்டினுள் தன்னைச் சரணாக அடைந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகப் பெருமான்  இயமனைக் காலால் கடந்த தலம் திருக்கடவூர் என்பதாகும். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார் என்பவர் காலகாலனாகிய சிவபிரானது பொன்னார் திருவடிகளை நாள்தோறும் அன்புடன் வணங்கிப் பூசித்து வந்தார். மணம் மிக்க குங்கிலியம் கொண்டு தூபம் இடும் தொண்டினைத் தவறாது செய்து வந்தார். அதன் காரணமாக அவர் குங்கிலியக்கலயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

குங்கிலியம் இடும் தொண்டினைச் செய்து வரும்போது நாயனாருக்கு வறுமை வந்தது.ஆயினும் தமது திருப்பணியைக் கைவிடாமல் நடத்தி வந்தார். வறுமை மேன்மேலும் அதிகரிக்கவே,தமது நிலங்களையும் பிற உடைமைகளையும் விற்று அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாளடைவில் குடும்பத்தோர் அனைவரும் உணவின்றி வருந்தினார்கள். அப்போது கலயனாரது மனைவியார் தமது தாலியைக் கழற்றிக் கணவரிடம் தந்து நெல் வாங்கி வரும்படி கூறினார். கலயரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கவேண்டிக் கடை வீதிக்குச் சென்றார். அப்போது எதிரில் ஒரு வணிகன் ஒரு மூட்டையை  எடுத்து வரக்கண்டு அது என்ன பொதி என்று அவனிடம் வினவினார். அதற்கு அவன்,   அப்பொதி, குங்கிலிய மூட்டை என்றான். அவ்வார்த்தையைக் கேட்ட நாயனார் மிக்க மகிழ்ந்து, தம்மிடம் இருந்த பொன்னால் ஆன தாலியைக் கொடுத்துக் குங்கிலியம் வாங்கினார். அடுத்த கணமே, குங்கிலி யத்தைப் பெற்றுக்கொண்ட நாயனார் வீரட்டேசுவரர்  ஆலயத்தை அடைந்து குங்கிலியம் ஏற்றி வழிபட்டார். சிவ சிந்தனையுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

அன்றிரவு கலயனாரது மனைவியாரும் மக்களும் பட்டினியுடன் மிகுந்த அயர்வடைந்தவர்களாக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சிவனருளால் குபேரன் நாயனாரது மனையில் நெற்குவியல்,நவமணிகள், பொற் குவியல் ஆகிய எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து நிறைத்து வைத்தான். கலையனாரது  மனைவியாரின் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, தாம் இவ்வாறு அருளியதை உணர்த்தினார். உடனே கண் விழித்த அவ்வம்மையார் திருவருளை வியந்து,துதித்த வண்ணம் கணவனாரது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.

கால காலனும் கருணைக்கடலுமான கடவூர்ப் பெருமான் கலய         நாயனாரின் கனவில் எழுந்தருளி, “ அன்பனே. மிகுந்த பசியோடு இருந்தும் உனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தாய். உடனே உனது மனைக்குச் சென்று உணவு உட்கொண்டு பசித்துன்பம் தீரப்பெறுவாயாக” என்று அருளிச் செய்தார்.வீட்டுக்குச் சென்ற நாயனார் தமது மனையானது  மாளிகையாகத் தோற்றம் அளிப்பதையும், நிதிக் குவியல்கள் நிறைந்திருப்பதையும்,கண்டு வியந்து, இவ்வாறு எங்ஙனம் ஆயிற்று என்று மனைவியாரை வினவ, அவரும், “ நீலகண்டப்பெருமானின் திருவருள்” எனக் கூறினார். இதைக் கேட்டுப் பரவசமான கலயனார், “ அடியேனையும் ஆட்கொண்டு திருவருள் செய்த திறம் தான் என்னே” என்று பெருமானைப் போற்றினார்.பின்னர் அவ்வம்மையார்,தமது கணவனாருக்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ஊட்டினார். பெருமானது திருவருள் வாய்க்கப்பெற்றதால் இருவரும் பலகாலம் சிவனடியார்களுக்கு அமுதூட்டியும்,ஆலயத்தில் குங்கிலியப்பணி செய்தும் வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் தாடகை என்ற பக்தை திருப்பனந்தாள் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள செஞ்சடையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தபோது அவளது அபிஷேகத்தை சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்து  ஏற்றுக் கொண்டபின்னர் அதற்கு அடையாளமாகச் சாய்ந்த நிலையிலேயே நின்று விட்டபடியால் மீண்டும் நிமிர்த்தும் எண்ணம் கொண்ட சோழ மன்னன் தனது யானைகளையும் சேனைகளையும் கொண்டு கயிற்றால் இழுப்பித்து முயன்றும் அது முடியாமல் போயிற்று. அதனால் கவலையில் மன்னன்  ஆழ்ந்ததைக் கேள்விப்பட்ட கலயனார் திருப்பனந்தாளுக்கு எழுந்தருளி,  இலிங்கத் திருமேனியைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த பூங் கச்சினைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். அன்பரது அன்புக்குக் கட்டுப்பட்ட  பெருமான் நிமிர்ந்து நின்றார். சோழ மன்னனும் மிக்க மகிழ்ச்சியடைந்து கலயனாரை வணங்கித் துதித்தான். சில நாட்கள் அங்கு தங்கிவிட்டுப் பின்னர் திருக்கடவூர் வந்தடைந்த நாயனார் முன்போல் குங்கிலியத் தூபப் பணி செய்து வந்தார்.

தல யாத்திரையாகத் திருக்கடவூர் வந்த திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் கலய நாயனார் எதிர்கொண்டு வணங்கித் தமது மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை உணவு படைத்து வழிபட்டு அவர்களது திருவருளையும்,கடவூர் ஈசனின் திருவருளையும் ஒருங்கே பெற்றார். இவ்வாறு பெருமானுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டுகள் பல செய்து வந்த நாயனார் அதன் பலனாக இறைவரது திருவடி நிழலை அடைந்தார்.

**********************

மானக்கஞ்சாற நாயனார் 

சோழ நாட்டில் வளம்மிக்க பதிகளுள் ஒன்றான கஞ்சாறு என்ற ஊரில்   வேளாளர் குலத்தில் மானக் கஞ்சாரர் bbjjஎன்பவர்,பரம்பரையாக அரசனின் படைத்தலைமை புரியும் சேனாபதிக் குடியில் அவதரித்தார். { கஞ்சாறு என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் என்று தற்போது வழங்கப்படும் தேவார வைப்புத் தலம் என்பர், மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சா நகரம் என்ற ஊரும் உள்ளது.. இவ்விரு ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் மானக்கஞ்சாற நாயனாரது திருவுருவங்கள் உள்ளன.}

சிவபெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு தமது செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கே உரிமை ஆக்கி,அவர்கள்   விரும்புவனவற்றை அவ்வடியார்கள் கேட்கும் முன்பே குறிப்பால் அறிந்து கொடுத்து வந்தார். (திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் இவரை வள்ளல் என்று குறிப்பிடுவதும் காண்க)

மகப்பேறின்றிச் சில காலம் வருத்தமுற்று வாழ்ந்த நிலையில் அக்குறை தீர வேண்டி அம்பலக்கூத்தனின் அருளால் அவரது மனைவியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அச்செய்தி அறிந்த கஞ்சாறூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாயனாரும் சிவனடியார்களுக்கு அளவற்ற செல்வத்தை  வாரி வழங்கினார். நாளடைவில் அக்குழந்தை பிறைச் சந்திரன்போல் வளர்ந்து பேதைப் பருவத்தை அடைந்தது. பேரழகுடன் திகழ்ந்த தமது பெண்ணிற்கு மணம் புரிய எண்ணினார் மானக்கஞ்சாரர்  அதே மரபில் வந்தவரும் சிவபெருமானுக்கு அன்பருமான ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் அப்பெண்ணைத் தாம் மணம் புரிய வேண்டிச் சில முதியோர்களை மானக்கஞ்சாரறது மனைக்கு மணம் பேசி வருமாறு அனுப்பி வைத்தார். அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,தமது மகளை ஏயர்கோனுக்கு மணம் செய்து தரச் சம்மதம் தெரிவித்தார்.

சோதிடர் மூலம் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாயனாரது உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.     பொற்கலசங்களில் பாலிகைகளை நிறைத்து, வெண் முளைகளைச் சாத்தினர். திருமண நாளுக்கு முதல் நாள் மானக்கஞ்சாரர் தமது சுற்றத்தாருடன், மங்கல வாத்தியங்கள் முழங்கக் கஞ்சாறூருக்கு அருகில் வந்து தங்கினார்.

நாயனார் கஞ்சாற்றுக்கு வந்து சேரும் முன்னரே, சிவபெருமான் ஓர் மாவிரத முனிவர் வேடம் கொண்டு அங்கு எழுந்தருளினார். அவரது வெண்ணீறணிந்த நெற்றியும், வெண் நூலணிந்த மார்பும் கோவணம் அணிந்த இடையும்,அழகிய மேலாடையும், எலும்பாபரணமும் கண்டோரைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. கையில் விபூதிப் பை ஏந்தி, உடல் முழுதும் விபூதி தரித்து,மாவிரத முனிவர் வேடத்தில் பெருமான் மானக்கஞ்சாரறது வீட்டை அடைந்தார். உலகம் உய்ய வேண்டி அவ்வாறு எழுந்தருளிய பிரானை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,” தேவரீர் இங்கு எழுந்தருளியதால் அடியேன் உய்ந்தேன் “ என்றார்.

அங்கு நடக்க இருக்கும் மண விழாவைப்பற்றி நாயனார் வாயிலாக முனிவர் வேடத்தில் வந்த இறைவன் கேட்டவுடன், அவருக்கு மங்கலம் உண்டாகுமாறு ஆசி வழங்கினார்.நாயனார் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கியபின் தனது மகளையும் அழைத்து வந்து அவரை வணங்கச் செய்தார். தம்மை வணங்கி எழுந்த அப்பெண்ணை நோக்கியருளிய பின் முனிவராக வந்த பெருமான்,நாயனாரை நோக்கி, “ இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். இதனைக் கேட்ட நாயனார், தமது உடைவாளை உருவி, “ இப்படி இவர் பஞ்சவடிக்காகக் கூந்தலைக் கேட்க அடியேன் பேறு பெற்றேன்” என்று கூறியபடி பூங்கொடி போல் அங்கு நின்று கொண்டிருந்த தனது அன்பு மகளின் கூந்தலை அடியோடு அரிந்து, அதனை மாவிரத முனிவரின் மலர்க்கரத்தில் வழங்கினார். அதனை வாங்குவதுபோல நின்ற முனிவர் உடனே மறைந்து, உமாதேவியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வானத்தில் காட்சி தந்தருளினார். அக்காட்சியைக் கண்டு உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்த நாயனார் தனது இரு கைகளையும் தலைமீது கூப்பியவராக நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கினார். வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. நாயனாரை நோக்கிய இறைவன், “ நீ நம்பால் கொண்டிருந்த அன்பை உலகறியச் செய்ய வேண்டி இவ்வாறு செய்தோம் “ என்றருளினார். கண்டவர்கள் களிப்படையவும்,வியப்படையவும் இங்ஙனம் அருள் செய்த பின் பெருமான் மறைந்தருளினார்.

தலை முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணம் செய்து கொள்வது என்று ஏயர்கோன் தயங்கியபோது, அசரீரியாகப் பெருமான், “ மனம் தளர வேண்டாம். அவளது கூந்தலை மீளக் கொடுத்தருளுவோம்” என்ருளியவுடன் அவளது கூந்தல் முன்போல் வளர்ந்தது. திருவருளின் திறம் கண்டு அனைவரும் நெகிழ்ந்து அதிசயித்தனர். ஏயர்கோனும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நாயனாரின் சீரிய தொண்டைக் கண்டு உலகமே வியந்தது. தொண்டர்க்குத் தொண்டரான நாயனார் நிறைவாக இணையில்லாப் பெரும்பதமாகிய சிவானந்தப் பேற்றினை அடைந்தார்.

******************************

அரிவாட்டாய நாயனார்

சோழ வளநாட்டில் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள தண்டலை நீள்நெறி என்ற தேவாரப்பாடல் பெற்ற    தலத்துக்கு அண்மையில் கணமங்கலம் என்ற ஊர் உளது. அவ்வூரில் வேளாளர் குலம் விளங்குமாறு தோன்றியவர் தாயானார் என்பவர் ஆவார். செல்வம் மிக்கவராகத் திகழ்ந்த தாயானார் இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நல்லறம் செய்து வந்தார். சிவபக்தியில் மேம்பட்ட இவர், தினமும் பெருமானுக்கு செங்கீரையும் மாவடுவும் சிவ வேதியர்கள் மூலம் கொடுத்து வந்தார்.

சிவபெருமானின் திருவுள்ளப்பாங்கின் படி நாயனாரது செல்வம் குறைந்து வறுமை மேலிட்டது. ஆயினும் நாயனார் தமது தொண்டினை விடாது செய்து வந்தார். கூலிக்காக நெல்லறுத்துக் கூலியாகப்பெற்ற செந்நெல்லை சிவபெருமானுக்குத் திருவமுதாக ஆக்கினார். கார்நெல்லைத் தமது உணவிற்காக ஆக்கிக் கொண்டார். அவ்வூரிலிருந்த வயல்கள் யாவும் செந்நெல்லே விளையுமாறு பெருமான் திருவுள்ளம் கொண்டார்  தான் செய்த புண்ணியமே இவ்வாறு செந்நெல் மட்டுமே விளைகிறது என்று கருதிய நாயனார், பெற்ற நெல் முழுவதையும் சிவ பெருமானுக்கே ஆக்கிவிட்டுத் தமக்கு உணவின்றிப் பட்டினியாக இருந்தார்.

நாயனாரது மனைவியார் வீட்டின் பின்புறம் விளைந்த கீரையைப் பறித்து வந்து சமைத்துக் கணவனாருக்குப் பரிமாறினார். இருவரும் அதனை மட்டுமே உண்டபோதிலும் இறை தொண்டை விடாது செய்து வந்தனர். வீட்டுத் தோட்டத்தில் கீரைகளும் விளைவது குறைந்து போகவே, இருவரும் தண்ணீரை மட்டும் அருந்தி சிவத் தொண்டை இடைவிடாமல் தொடர்ந்தனர்.

ஒருநாள் நாயனார், பெருமானுக்கு அமுது செய்விப்பதற்காகத் தாம்   வயலிலிருந்து கொண்டு வந்த செந்நெல்லையும், மாவடுவையும், கீரையையும் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்.அவருக்குப் பயனின் அவரது கற்புடை மனைவியார் பஞ்சகவ்வியத்தை மண் கலயத்தில் வைத்து ஏந்திச் சென்றார். பலநாட்களாக உணவு உட்கொள்ளாத களைப்பினால் நாயனார் பசி மயக்கத்தால் தல்லாடியபடிக் கீழே விழுந்தார். ஒரு கையில் பஞ்ச கவ்வியத்தை ஏந்தியபடியே,மற்றொரு கையால் கணவனாரைத் தாங்கிப் பிடித்தார் மனைவியார். இதற்கிடையில் நாயனார் தாங்கி வந்த கூடை நழுவி, அதற்குள் இருந்த பொருள்கள் கமரில் (நிலவெடிப்பில்) விழுந்துவிட்டதன. இதைக்கண்டு பதறிப் போன நாயனார்,       “ இனிமேல் கோயிலுக்குச் சென்று பயன் ஏதுமில்லை.. இன்று பெருமானுக்குத் திருவமுது ஆக்கும் பேறு பெறாததால் யான இனி இருந்து என்ன பயன்” எனக் கூறி அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அது மட்டுமா? தனது பிறவித்துன்பத்தையும் வேரோடு அறுக்கத் துவங்கினார்.

அன்பரின் மனுருதியைக் கண்ட சிவபெருமான் அக்கணமே கமரிளிருந்து கையை உயர்த்தி நாயனாரின் அரிவாள் ஏந்திய கையைப் பிடித்து,அந்தச் செயலைத் தடுத்தருளினார். அப்போது கமரிளிருந்து நாயனாரின் கையைப்பிடிக்கும் ஓசையும், மாவடு விடேல் விடேல் என்னும் ஓசையும் ஒன்றாக எழுந்தன. இறைவனது பெருங்கருணையைப் போற்றிய தாயானார், விடையின் மீது உமாதேவியுடன் காட்சி கொடுத்தருளிய  பரம்பொருளை வணங்கித் துதித்தார். பெருமானும் நாயனாரது தொண்டைக் கண்டு மகிழ்ந்து ,“ நீயும் உனது மனைவியும் நம் உலகை அடைந்து என்றும் வாழ்வீர்களாக” எனக் கூறி மறைந்தருளினார். இவ்வாறு அரிவாளால் கழுத்தை அரிந்ததால் இவர்  அரிவாட்டாயர் என்ற புகழ் நாமம் பெற்றார். பெருமான் அருள் பெற்ற அரிவாட்டாய நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்தனர்.

 

ஆனாய நாயனார்.

சோழ வள நாட்டின் ஒரு பகுதியாகிய மேல் மழநாடு என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் லால்குடி என்று தற்போது அழைக்கப்படும்  திருத்தவத்துறையைத் தலைநகராகக் கொண்டது. இம் மேன்மழ நாட்டிற்கு ஆபரணம் போல் விளங்குவது திருமங்கலம் என்ற ஊராகும். இவ்வூரில் ஆயர்(இடையர்) குலத்திற்கு விளக்குப் போல அவதரித்தவர் ஆனாயர் ஆவார். தூய வெண்ணீற்றின் மீது பேரன்பு பூண்டு ஒழுகிய ஆனாயர் தமது குலத் தொழிலாகிய ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டு, பசுக்களுக்குத் துன்பம் வாராமல் பாதுகாத்து வந்தார். அப்போது புல்லாங்குழலில் சிவ பஞ்சாக்ஷரத்தை சுருதி  லயத்தோடு வாசிப்பார். அவ்விசையைக் கேட்டவுடன் சராசரங்கள் எல்லாம் மெய்ம்மறந்து உருகி நிற்கும்.

ஒரு சமயம் ஆனாய நாயனார் தனது நெற்றியில் திருநீற்றை நிறையப்பூசிக்கொண்டு இடுப்பில் மரவுரி தரித்து அதன் மீது பூம்பட்டினைக் கட்டிக் கொண்டு கோலும் குழலும் ஏந்தியவராகப்  பசுக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு அவற்றை மேய்ப்பதற்காகச் சென்றார். வழியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொன்றைப் பூவினை அணிந்த சிவபிரானைப் போல அழகாகக் காட்சி அளித்ததால் அதனைச் சிவ வடிவாகவே எண்ணி மட்டற்ற அன்போடு மனம் உருகி நின்றார்.உடனே தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்தை அதில் அமைத்துக் கேட்போரைப் பரவசப்படுத்தும்படி குறிஞ்சி ,முல்லை ஆகிய பண்களோடு இசைத்தார்.

இசை நூல் இலக்கணம் வழுவாமல் இன்னிசை பாடியதால் பசுக்கூட்டங்களும் மேய்வதை மறந்து அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றன. கன்றுகளும் தாய்ப்பசுக்களிடம் பால் ஊட்டுவதை விட்டு ஆனாயாரைச் சூழ்ந்து கொண்டன. மான் முதலிய விலங்கினங்களும் அவரிடம் வந்து கூடின. மயில்கள் தோகை விரித்து ஆடுவதை நிறுத்தி விட்டு நாயனார் அருகில் வந்தன. இதனைக் கண்ட பிற ஆயர்களும், நாகர்களும், கின்னரர்களும்,தேவர்களும் இசையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். மிருகங்களும் தங்கள் பகையை மறந்து அவ்விடம் சேர்ந்து நின்றன. அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் ஆனாயரின் இசையில் மயங்கி நின்றன. அந்த இசை நிலவுலகத்தை நிறைத்ததொடு வானத்தையும் தன் வயம் ஆக்கியது. அதோடு பொய்யன்புக்கு எட்டாத பொதுவில் ஆனந்த நடனம் புரியும் சிவபெருமானின் திருச் செவியிலும் சென்று அடைந்தது.

இசை வடிவாய்,இசைக்கு மூல காரணராக விளங்கும் சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, “ நமது அடியார்கள் எப்போதும் இக்குழலோசையைக் கேட்கும்படி இந்நிலையிலேயே நம்பால் வந்தடைவாயாக “ என்று அருளிச் செய்தார். அதன்படி ஆனாயரும் தேவர்கள் மலர் மழை பொழியவும், முனிவர்கள் வேதங்களால் துதிக்கவும், குழலிசையை வாசித்துக் கொண்டே பெருமானைத் தொடர்ந்த நிலையில் நாயனாருக்கு இன்னருள் செய்த இறைவன் தனது பொன்னம்பலத்தைச் சென்றடைந்தருளினார்.

Posted in Nayanmars | Leave a comment

அறுபத்துமூன்று நாயன்மார்கள்

 

47C

                                               பெரிய புராணம் – முன்னுரை

சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச்  செய்த பெரியவர்களது சரிதத்தைச் சொல்வதால் பன்னிரண்டாவது சைவத்திருமுறை நூலான இதனைப் பெரிய புராணம் என்றே அழைத்தனர். இதன் நூலாசிரியரான சேக்கிழார் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் மாக்கதை என்பதாம். மாக்கதை என்பது பின்னர் பெரிய புராணம் என்று ஆயிற்று எனக் கொள்ளலாம்.

பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தீந்தமிழ்ப் பாடல்களால் அமையப்பெற்றது இந்நூல். தில்லை அம்பலவனே அடியெடுத்துக் கொடுத்த பெருமை உடைய பெரிய புராண வாயிலாகவே அறுபத்து மூன்று நாயன்மார்களின் அருட்செயல்களை விரிவாக அறிய முடிகிறது. மேலும் மூவர் அருளிய தேவாரப்பதிகங்களில் பலவற்றின் பதிக வரலாறுகளைச் சேக்கிழார் வாயிலாகவே அறிகிறோம். அவரைத் தவிர வேறு  எவரால் தொண்டர் சீர் பரவ முடியும்?

பெரிய புராணத்தை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இடம்பெறும் நன்னெறிகள் சிலவற்றையாவது கடைப்பிடிக்க முயற்சிப்பதே மிகவும் அத்தியாவசியம் என்ற எண்ணத்துடன் இந்நூலை அணுக வேண்டும்.அந்த எண்ணம் மேளிட்டவுடன் நமது மனக் கறைகள் அகன்று பக்குவம் ஏற்படுவதை அனுபவத்தால் அறியலாம். அப்போதுதான் ஸ்ரீ ரமண மகரிஷி போன்ற மகான்களால் போற்றப்பெற்ற இக்காப்பியத்தின் பெருமையும் அருமையும் புலப்படும்.

உலகம் உய்யவும், சைவம் தழைத்து ஓங்கவும் சிவனருளால் பன்னிரு திருமுறைகள் தோன்றின. தென் திசை செய்த புண்ணியத்தின் பயனாகத் திருவவதாரம் செய்த சிவனடியார்கள் பலர். அவர்களுள் அறுபத்து மூன்று அடியார்களது திருப்பெயர்கள் திருவாரூர் இறைவனருள் சுந்தர மூர்த்தி நாயனாரது வாக்காகத் திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகம் மலர்ந்தது. அதில் அடியார்கள் பெயரைக் கூறி அவர்க்கு அடியேன் என்று சுந்தரர் அருளினார். அதை அடிப்படையாகக் கொண்டு, திருமுறைகளை வகுத்துத் தந்தவரும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரின் அருள் பெற்றவருமான நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர் திருவந்தாதி என்ற பிரபந்தத்தை அருளிச் செய்தார். இவ்விரண்டின் துணை கொண்டு குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் தில்லைக் கூத்தன் “உலகெலாம்” என்று அடியெடுத்துத் தர , திருத்தொண்டர் புராணத்தை இயற்றி அரங்கேற்றினார். பெருமையால் பெரிய அடியவர்களது புராணமாதலால் அதுவே பெரிய புராணம் என்று வழங்கப்படலாயிற்று. அதன் பெருமை கருதிய முன்னோரும் அதனைப் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்த்தனர்.அநபாய சோழனின் அமைச்சராக விளங்கிய சேக்கிழாரது காலம் கி.பி. 12 ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

சுந்தரரின் வரலாற்றை பல நாயன்மார்களது சரிதங்களின் இடையில் அமைத்துள்ளபடியால், சுந்தரரே காப்பியத் தலைவர் ஆகிறார். திருக்கயிலையில் துவங்கி அங்கேயே நிறைவு பெறுவதாக நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை வருணனை, நாட்டுச் சிறப்பு,நகரச் சிறப்பு,ஆகிய அங்கங்களோடு  வீரம், கொடை,நீதி தவறாத அரசியல், கற்பு,தொண்டு, செயற்கரிய செயல்கள், நட்பு, பக்திச் சுவை ஆகிய உயர்ந்த அம்சங்களோடு விளங்குவது இப்புராணம்.

நாயன்மார்கள் பல்வேறு குலங்களில் உதித்தவர்கள். சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சை உடையவர்கள். சிவனடியார்களை சிவனாகவே பாவித்தவர்கள். தாம் செய்யும் தொண்டில் தலை சிறந்து விளங்கியவர்கள். வறுமையிலும் சோர்வடையாத தெளிந்த சித்தம் உடையவர்கள்/ அடியார்களுக்குள் வேற்றுமை பாராட்டாதவர்கள். ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கருதுபவர்கள். பொன்னையும் நவ மணிகளையும் காட்டிலும் சிவனடிகளை  வாழ்த்தும் செல்வமே உயர்ந்த செல்வம் என்ற கொள்கை உடையவர்கள்.

ஒருசமயம் திருக்கயிலாய மலையில் உபமன்யு முனிவர் முதலியோர் குழுமியிருந்த போது வானில் ஒரு பேரொளி தோன்றியது. வானில் ஒளியாகச் செல்பவர் ஆலால சுந்தரர் என்றும் அனைவராலும் தொழப்படுபவர் என்றும் உபமன்யு முனிவர் கூறியதும், மற்ற முனிவர்கள் சுந்தரரது சரிதத்தையும் பெருமையையும் விளக்கமாகக் கூறியருள வேண்டும் என்று விண்ணப்பிக்கவே, முனிவரும் கூறலுற்றார்.

சிவபிரானுக்கு அணுக்கத்தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரர், நந்தவனத்தில் மலர் பறிக்கச் சென்ற போது, உமாதேவியின் தோழிகளான கமலினி,அனிந்திதை ஆகிய இருவரையும் கண்டு அவர்களிடம் ஒரு கணம் மனம் போக்கினார். தென்னாடு வாழ வேண்டி இறைவன் செய்த திருவிளையாடலால் இந்நிகழ்ச்சியைக் காரணமாகக் கொண்டு சுந்தரரை  நிலவுலகில் பிறந்து அவ்விருவரையும் மணம் புரிந்து கொண்டு பின்னர் தன்னை வந்தடையுமாறு இறைவன் பணித்தான். இதனால் பதைத்த சுந்தரர் , நிலவுலகில் மையலுற்றால் தேவரீரே வந்து அடியேனைத் தடுத்து ஆள வேண்டும் என வேண்டவே, சிவபெருமானும் அவ்வண்ணமே அருள் செய்தான்.

புண்ணிய பூமியாகிய தென்திசை பல சிறந்த சிவதலங்களைத் தன்னிடத்தே கொண்டது. தனது தேர்க்காலில் மகனை ஏற்றிக் கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆண்ட பெருமை உடையது திருவாரூர் நன்னகர். அங்குள்ள பூங் கோயிலும் அதிலுள்ள தேவாசிரியன் மண்டபமும் அடியார்கள் ஒன்று கூடும் பெருமை வாய்ந்தது. இத்தகைய அடியார்களது பெருமையை உலகறியவே சுந்தரர் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத் திருவவதாரம் செய்தருளினார். சிறு வயதில் நரசிங்க முனையரையர் என்ற சிற்றசரால் வளர்க்கப்பெற்றார். மணப்பருவம் வந்ததும் அவருக்குச் சடங்கவியார் என்பவரது மகளை மணம் பேசினர்.முன்னம் அருளியபடி,கமலினியாரையும் அநிந்திதையாரையும் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணம் செய்வதைத் தடுத்தாள வேண்டி இறைவன் அத்திருமணப்பந்தலில் வயோதிகராகத் தோன்றி, “ உன் குடி முழுதும் வெண்ணை நல்லூர் பித்தனுக்கு அடிமை”. என்று கூறி முன்னோர்கள் எழுதித் தந்த ஒலையையும் ஆதாரமாகக் காட்டவே, திருமணம் தடைப்பட்டது.

முதியவராக வந்த இறைவனைத் தொடர்ந்து திருவெண்ணை நல்லூர்க் கோயிலுக்குள் சென்றவுடன் இறைவன் மறைந்தருளியதோடு அசரீரியாக “முன்பு  என்னைப் பித்தன் என்று வன்மை பேசியதால் வன்தொண்டன் என்ற நாமம் பெறுவாய். பித்தா எனத் துவங்கிப் பாடுவாயாக என அருளிச் செய்தார்.ஆகவே சுந்தரரின் திருவாக்கிலிருந்து “ பித்தா பிறை சூடி” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகம் உதித்தது. திருத்துறையூரில் தவநெறியும் திருவதிகையில் திருவடி தீக்ஷையும் பெற்றுத் தில்லையை வணங்கியபோது, திருவாரூருக்கு வா எனக் கூத்தப்பெருமானது அருள் வாக்கு ஒலித்தது. அதன்படித் திருவாரூரை அடைந்த நம்பியாரூரர், புற்றிடம்கொண்ட பெருமானைப் பாடித் தொழுது வந்தார். ஒருசமயம் அங்கு வந்த பரவையாரைக் கண்டார். கமலினியின் அவதாரமே பரவை. எனவே இருவரும் ஒருவரைஒருவர் விரும்பினர். அவ்விருவரையும் திருவாரூர் வாழ் அடியார்களைக் கொண்டு மணம் செய்வித்தான் பரமன். மேலும் தன்னையே இறைவன் தோழைமையாகத் தந்ததால் சுந்தரரை அனைவரும் “ தம்பிரான் தோழர்” என்று அழைக்கலுற்றார்கள்.

ஒருநாள் தேவாசிரியன் மண்டபத்திலிருந்த அடியார்களைத் தரிசித்தவாறே தியாகேசப்பெருமானது சன்னதியை அடைந்து, “ இவ்வடியார்களுக்கு அடியவன் ஆகும் நாள் எப்போது “ என நினைக்க, இறைவனும் , பெருமையால் தனக்குத் தானே நிகரான அவர்களைத் “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனத் துவங்கிப் பாடுவாயாக என்று அடி எடுத்துக் கொடுத்தருளினான். சிவனருளால் சுந்தரரின் திருவாக்கிலிருந்து திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் எழுந்தது. தனித்தனியாக ஒவ்வொரு அடியார்க்கும் அடியேன் எனச் சிறப்பித்ததோடு தொகை அடியார்களையும் சிறப்பித்துப் பாடினார் சுந்தரர். அவ்வரிசையைப் பின்பற்றி  நாயனார்களின் சரித்திரத்தை விரித்துரைக்கிறது பெரிய புராணம்.

                                                கட்டுரை ஆசிரியர் அறிமுகம்

                                                            சிவபாதசேகரன்

                                                                       சிவபாதசேகரன்

மயிலாடுதுறையில் பிறந்து பள்ளிப்படிப்புக்குப் பின்னர் சென்னையில் பட்டப்படிப்பை முடித்து, எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றியபின் தனது ஓய்வு காலத்தில் சிவப்பணிகளைத் தொடர்கிறார்.சுமார் நாற்பது ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட் சபையின் செயலாளராகவும், மூன்றாண்டுகளாக ஆர்த்ரா பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிர்வாக டிரஸ்டியாகவும் செயலாற்றிப் பிற்பட்ட நிலையிலுள்ள சிவாலயங்களின் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் இவ்வமைப்புகள் மூலம் தொண்டாற்றி வருகிறார். வருவாயில்லாதபோதும் கிராமக்கோயில்களில் பணியாற்றிவரும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கு உதவுதலும், மக்களிடையே நமது ஆலயங்களின் மேன்மை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதும், திருமுறைகளை ஓதுவதும் ஓதுவிப்பதும், ஆறு வலைப்பதிவுகள் மூலம் தொலைவிலுள்ளோரும் ஈடுபட முயல்வதும், சிறு புத்தக வெளியீடுகள் செய்வதும், ardhra.org என்ற இணைய தளத்தின் மூலம் நாம் செய்ய வேண்டுவதை அறியச் செய்வதும் ,தலயாத்திரைகள் மேற்கொள்வதும்  64 வயதான இவர் ஆற்றிவரும் பணிகள். சைவ ஆதீனங்களின் மாத இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சேகர் என்று அழைக்கப்படும் இவருக்குத் திருமுறைச் செம்மணி, சிவநெறித் திருத்தொண்டர் என்ற பட்டங்கள் அன்பர்களால் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், மறைமலை அடிகளின் மாணாக்கரும்               “  திருக்கோயில்“ பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான திரு ந.ரா. முருகவேள் அவர்கள் பேரன்புடன் அழைத்த சிவபாதசேகரன் என்ற பெயரையே வாழ்நாளில் தாம் பெற்ற பெரிய பேறாகக் கருதுகிறார்.

சென்னையில் வசித்துவரும் இவரது தொலைபேசிகள்: 044-23742189;  09840744337

இ- மெயில் முகவரி: ardhra.sekar@gmail.com

 நாயன்மார்   சரித்திரம் 

                                                        தில்லை வாழ் அந்தணர்

கற்பனை கடந்த சோதி வடிவாகி , ஆதியாய்,நடுவும் ஆகி, அளவில்லா அளவும் ஆகி உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகித் தில்லைப் பெருவெளியில் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் புரியும் பெருமானைப் பூசிக்கும் பேரருள் பெற்றவர்கள் முதல் அடியார்களாகிய தில்லை வாழ் அந்தணர்கள்.முச்சந்தி முட்டாமல் காலம் தோறும் அம்பலவாணனைப் பூசித்தலைக் குறைவறச் செய்பவர்கள்.திருநீறு முதலிய சாதனங்களைத் தரித்து நல்லொழுக்கத்தில் மேம்பட்டவர்கள். நான்கு வேதங்களையும்,ஆறு அங்கங்களையும்,நான்கு உபாங்கங்களையும் ஐயம் திரிபறக் கற்றவர்கள். அந் நூல்கள் விதித்தபடியே, முத்தீ வளர்த்துக் கலியின் கொடுமைகளை உலகிற்கு வாராமே  செய்பவர்கள்.பொற்சபையில் நடமாடும் பெருமானுக்குத் தொண்டு செய்வதையே செல்வமாகக் கருதுபவர்கள். தமக்குக் கிடைத்த விலையற்ற செல்வம் திருநீறே என்று எண்ணுபவர்கள். தானம்,தவம் இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள். எவ்வகைக் குற்றமும் இல்லாமல் மானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். இல்லறத்தை ஏற்று நல்லறம் செய்பவர்கள். இம்மையிலேயே சிற்றம்பலவனின் அருள் கிடைக்கப்பெற்றதால் இதற்கு மேலும் எதையும் வேண்டாதவர்கள். செம்மனம் உடைய இவர்கள் தமக்குத் தாமே ஒப்பாவார்கள். தெய்வத்தன்மை வாய்ந்த தில்லை மூவாயிரம் அந்தணர்களது பெருமையை உலகறிய வேண்டி, திருவாரூர்ப் பெருமானே “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரருக்குத் திருத்தொண்டத் தொகை பாட அடி எடுத்துக் கொடுத்தான் என்றால் இவர்களது பெருமையை யாரால் கூற முடியும்?

திருநீலகண்டநாயனார்  

சிதம்பரம் எனப்படும் தில்லைப்பதியில் குயவர் குலம் உய்யுமாறு அவதரித்தவர் திருநீலகண்டர். சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதை இடையறாது மேற்கொண்டு வந்தார். மட்பாண்டங்களைச் செய்து அடியார்களுக்குத் திருவோடுகளை அளிக்கும் பணியில் தலை நின்றார். அவரது மனைவியார் கற்பில் மேம்பட்டவர். இளமை மீதுரவே, திருநீலகண்டர் சிற்றின்பத்துறையில் நாட்டம் கொண்டார். அப்போதும் தாம் செய்து வரும் தொண்டிலிருந்து சற்றும் மாறவில்லை.

ஒருநாள் ஒரு பரத்தையின் மனைக்குச் சென்று வந்த திருநீலகண்டர்பால் கோபம் கொண்ட அவரது மனைவியார், எம்மை இனி நீர் தீண்ட வேண்டா திருநீலகண்டத்தின் மீது ஆணை “ என்றார்.  இவ்வாறு பெருமானின் திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறியதைக் கேட்ட திருநீலகண்டர், “எம்மை” என்று பன்மையாகக் கூறியதால் இனி உன்னை மட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் மனத்தாலும் தீண்ட மாட்டேன்” என்றார். இந்நிகழ்ச்சியைப் பிறர் அறியாமல் இருவரும் வாழ்ந்துவந்தனர். இவ்விதம் பல்லாண்டுகள் ஆகி,முதுமை வந்தது. ஆயினும் சிவபிரானிடத்தும் அவனது அடியார்களிடத்தும் இருந்த அன்பு ஒரு சிறிதும் குறையவில்லை.

இவ்விருவரின் பெருமையை உலகிற்குக் காட்ட வேண்டி, இறைவன் ஒரு சிவ யோகியின் வடிவெடுத்துத் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான்.கையில் திருவோடேந்தி நீறு தாங்கிய நெற்றியுடனும் புன்னகை தவழும் திருமுகத்துடனும் தோன்றிய சிவ யோகியாரை மிக்க மகிழ்வுடன் வரவேற்று ஆசனத்தில் இருத்தி உபசரித்தார் திருநீலகண்டர். அப்போது சிவயோகியார் ,அடியவரை நோக்கி, “ யான் இந்தத்திருவோட்டை உம்மிடம் கொடுத்து வைக்கிறேன். இது விலை மதிப்பற்றது.நான் மீண்டும் வரும் வரையில் இதனைப் பாதுகாத்து வைப்பீராக.” என்றார். நீலகண்டரும் அதற்கு உடன்பட்டுத் திருவோட்டினைத் தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்தார். வந்த இறைவரும் விடை பெற்றவராய்த் தனது பொற்சபைக்குத் திரும்பினார்.

நீண்ட நாட்களுக்குப் பின் சிவயோகியார் வடிவில் மீண்டும் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான். தான் கொடுத்த திருவோட்டினைத் திருப்பித்தருமாறு அடியவரிடம் கேட்டான். வீட்டில் எங்கு தேடியும் அவ்வொடு கிடைக்கவில்லை. பதைத்து நின்றபடியே வேறு ஒரு ஓடு பழையதைக் காட்டிலும் செய்து தருவதாகக் கூறினார். அதைக்கேட்டு சினம் கொண்ட சிவபெருமான்,” எனது திருவோட்டினைக் கவர்ந்து கொண்டு விட்டு இவ்விதம் பொய் சொல்கிறாய். எனவே உனது மகனைப் பற்றியவாறு குளத்தில் மூழ்கி ,ஓட்டினைக் கவரவில்லை என்று சொல்லுவாய்.” என்றான். அவ்வாறு செய்வதற்குத் தனக்கு மகன் இல்லாததால் வேறு எண்ண செய்ய வேண்டும் என்று திருநீலகண்டர் கேட்கவே, இறைவனும் “ உனது மனைவியின் கரத்தைப் பிடித்தவாறு குளத்தில் இறங்கி சத்தியம் செய்ய வேண்டும் “ என்றான். அப்போது நாயனார், தமக்கும் தனது மனைவிக்கும் இடையில் ஒரு சபதம் உள்ளது என்பதால் அவளைத் தீண்டி சபதம் செய்ய இயலாது என்று உரைத்தார். அதனை ஏற்க மறுத்த சிவயோகியார், அவரைத் தில்லை வாழந்தணர்களிடம் அழைத்துச் சென்று முறையிட்டார். தில்லை வாழந்தணரும் சிவயோகியார் கூறியபடி மனைவியின் கரம் பற்றிக் குளத்தில் மூழ்கி சபதம் செய்வதே முறை என்றனர். வேறு செய்வதறியாது நாயனாரும் அதற்கு உடன் பட்டார். அப்போதுகூட சபதம் பற்றிய விபரங்களை அவர்களிடம் கூறவில்லை.

அங்கிருந்த திருப்புலீச்சரம் என்ற கோயிலின் திருக்குளத்திற்கு மனைவியாருடன் சென்றடைந்தார் திருநீலகண்டர்.(வியாக்கிரபாதர் பூசித்த இத்தலம் தற்போது இளமையாக்கினார் கோயில் என்று அழைக்கப்படுகிறது) சிவயோகியாரின் முன்னிலையில் மூங்கிலால் ஆன ஒரு கோலின் ஒருபுறத்தைத் தாமும் மறு புறத்தைத் தனது மனைவியாரும் பற்றிக்கொண்டு குளத்தில் இறங்கி சத்தியம் செய்யலானார். இதனைச் சிவயோகியார் ஏற்க மறுக்கவே, அனைவரும் கேட்குமாறு தங்களுக்குள் சபதம் செய்து கொண்ட விவரத்தைக் கூறி, அதன் காரணமாகத்  தனது மனைவியின் கரத்தைத் தீண்ட இயலாது என்றபடி,, மனைவியுடன் கோலைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கி எழுந்தார் புலன்களை வென்ற அன்பர். அப்படி மூழ்கி எழுந்தவுடன் முதுமை நீங்கி இருவரும் இளமையோடு திகழ்ந்தனர். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவயோகியார் மறைந்தருளினார். விடைமீது உமா தேவியாரோடு ஈசன் அருட்காட்சி அளித்தான். ஐம்புலன்களை வென்ற இருவரையும் நோக்கி இறைவன், “ என்றும் இளமை நீங்காது நம்மிடத்து இருப்பீர்களாக “ என்று அருளிச் செய்தான். அதன்படி நாயனாரும் அவரது மனைவியாரும் என்றும் இளமையோடு சிவலோகம் அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர்.

இயற்பகை நாயனார்       

தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், ” இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் ” என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் ,காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர். சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள். இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், ” உனது மனைவியை வேண்டி வந்தனம்” என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு ” எம்பிரான் செய்த பேறு ”  என்றவாறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் ” உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் “: என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், ”  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ ” என்று தனது ” தனிப் பெரும் கணவனாரை ” வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், ” யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்” என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், ” இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் ” என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தன மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, ” இயற்பகை முனிவா ஓலம்” என்று அழைத்தான். அதோடு, ” செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் ” என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், ” இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? ” என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், ” உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இளையான்குடி மாறநாயனார்

இளையான்குடி என்ற ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த மாறர் என்பவர் பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானது திருவடிகளை மறவாதவராக வாழ்ந்து வந்தார். உழவுத் தொழில் வாயிலாகப் பெரும் பொருள் ஈட்டிய அவர்,சிவனடியார்களை உபசரித்து அறுசுவை உணவளித்துப் பெருந் தொண்டாற்றி வந்தார். அதனால் அவரது செல்வம் பெருகியது.

செல்வம் இல்லாத காலத்தும் அவர் தமது தொண்டைக் கைவிடமாட்டார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டி நாயனாரிடத்திருந்த செல்வம் குறையுமாறு இறைவன் திருவுள்ளம் கொண்டான். நாளடைவில் இளையான்குடி மாற நாயனாரது செல்வம் குறையலாயிற்று. வறுமை தன்னை வந்தடைந்தவுடன் தன்னிடமிருந்த பொருள்களை விற்று அடியார்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார். அவரது மேன்மையை மேலும் உலகோர்க்கு உணர்த்தவேண்டி ஒரு மழைக்கால இரவு வேளையில் பெருமான் அவரது இல்லத்திற்கு சிவனடியார் வேடத்தில் எழுந்தருளினான். அன்று எவரும் உதவி செய்யாததால் நாயனார் பசியோடு இருந்தார். மழையில் நனைந்தபடி எழுந்தருளிய சிவனடியாரை இல்லத்திற்குள் வரவேற்று அவரது உடல் ஈரத்தைப் போக்கி அமருவதற்கு ஆசனம் அளித்தார். மனைவியாரிடம் சென்று, “ மிகுந்த பசியுடன் வந்துள்ள அடியாருக்கு உணவிட வேண்டும். நம்மிடம் ஏதும் இல்லையே என்ன செய்வது என வினவினார். அதற்கு அவரது மனைவியார், “இந்நேரத்தில் நமக்கு எவரும் உதவ மாட்டார்கள். நாம் பகலில் விதைத்த செந்நெல் வயலில் இந்நேரம் முளை விட்டிருக்கும் அதனை ஒரு கூடையில் கொண்டு வந்தால் அமுது படைக்கலாம் என்றார்.” இதனைக் கேட்ட நாயனார் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதுபோல் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

இருண்ட அவ்விரவில் மழையில்நனைந்தபடி வயலை நோக்கிக் கால்களால் வழியைத் துழாவிக்கொண்டு சென்று அங்கு மழை நீரால் மிதந்து கொண்டிருந்த நெல்முளைகளைக் கையால் தடவிக் கூடையில் சேகரித்துக் கொண்டு இல்லம் திரும்பினார். அதனைக் கண்ட மனைவியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று அதிலிருந்த சேற்றைக் கழுவிச் சுத்தப்படுத்தினார். பிறகு, உலை மூட்டுவதற்கு விறகு இல்லையே என்று கலங்கியபோது, வீட்டுக் கூரையில் கட்டப்பட்டிருந்த அலக்குகளை அறுத்து வந்து தந்தார் நாயனார். அவற்றை அடுப்பிலிட்டுத் தீ மூட்டி நெல்லின் ஈரம் போகுமாறு அதனை வறுத்தார் துணைவியார். அரிசியாகக் குற்றி உலையிலிட்டு அமுது தயாரித்ததும் கறிக்கு என்ன செய்வது என்று நாயனாரை நோக்கினார். உடனே நாயனார் வீட்டின் கொல்லைப்புறம் சென்று அங்கே முளைத்திருந்த சிறிய கீரைகளைப் பாசத்தினை அறவே பறிப்பவர் போலப் பறித்து வந்து மனைவியாரிடம் தந்தார். அதனைக் கழுவித் திறம்படச் சமைத்ததும் சிவனடியாரை அமுதுண்ண அழைக்குமாறு கணவனாரிடம் கூறினார்.

நித்திரை செய்பவர் போல் சயனித்திருந்த அடியாரை நோக்கி,” அடியேன் பிறவிக்கடலிலிருந்து உய்யும் வண்ணம் எழுந்தருளிய பெரியோரே, திருவமுது உண்ண எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அப்போது சிவனடியார் வேடத்தில் வந்த இறைவன் சோதி வடிவாகக் காட்சி அளித்து ,” வறுமையிலும் சிவனடியார்க்கு உணவளிக்கும் நீங்கள் இருவரும் என்பால் வருக. அங்கு குபேரன் சங்க நிதி போன்ற செல்வங்களைக் கையில் ஏந்தி உங்களுக்கு ஏவல் செய்வான். அங்கு பேரின்பத்துடன் என்றும் வாழ்வீராக” என்று அருள் செய்தான். நாயனாரும் அவரது மனைவியாரும் பேரின்ப வீடு பெற்றுப் பெருவாழ்வு பெற்றனர்.             

                                                   மெய்ப்பொருள் நாயனார்

சிவபெருமானது அடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு ஆட்சி செலுத்திய ஒரு அரசரை மக்கள் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைத்தனர்.  திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு சேதி நாட்டை ஆண்டு வந்த மலாடர் மரபினர் இவர். அரச நெறிப்படி மக்களைப் பாதுகாத்தும் பகைவர்களை வென்றும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். சிவாலயங்களில் திருவிழாக்கள் வழிபாடுகள் ஆகியவை நடைபெறுவதற்குப் பெரிதும் உதவி வந்தார்.  தமது பொருள்கள் அனைத்தும் சிவனடியார்க்கே உரியவை எனக் கருதி ,அடியார்களுக்குக் குறைவறக் கொடுத்துவந்தார்.

நாயனாரிடம் பகைமை பூண்ட முத்தநாதன் என்ற சிற்றரசன் படையுடன் பலமுறை போர் புரிந்து தோல்வியுற்றுப் போயினான். ஆனால் அவரை வஞ்சனை மூலம் வெல்வது என்ற எண்ணத்துடன், நீறிட்ட நெற்றியுடனும் முடித்துக் கட்டிய சடையுடனும் தவ வேடம் பூண்டான். உடைவாளைப் புத்தகக் கவளி ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டு நாயனாரது அரண்மனை வாயிலை அடைந்தான். சிவ வேடம் கண்ட வாயிற்காவலரும் தடை ஏதுமின்றி உள்ளே செல்ல அனுமதித்தனர். மன்னர் உறங்கிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது,தத்தன் என்ற அரசரது மெய்க்காவலன், அரசர் உறங்குவதாகக் கூறினான். அது கேட்ட முத்தநாதன் தான் முத்திதரவல்ல ஓர் பொருளைக் கொண்டு வந்துள்ளேன் என்னைத் தடை செய்யாதே என்று கூறிவிட்டு நேராக உள்ளே சென்றான். அரசரின் அருகிலிருந்த அரசியார் சிவவேடம் பூண்டவர் வருவதைக் கண்டு அரசரை எழுப்பினார். சிவவேடப் பொலிவைக்கண்டு தலை வணங்கிய நாயனாரிடம் முத்தநாதன், “ சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். அதனைப் பட்டத்தரசி இல்லாமல் தனிமையில் நாமிருவரும் இருக்கும்போது காட்டுவோம்” என்றான். அது கேட்ட நாயனாரும், தேவியாரை அந்தப்புரத்திற்குப் போகுமாறு செய்தார்.

பொய்த்தவத்தொடு வந்த முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் இருக்கச் செய்தார் அரசர். வஞ்சகனும் மடியிலிருந்த புத்தகத்தை அவிழ்ப்பவன் போல்  மறைத்து வைத்திருந்த உடைவாளை வெளியில் எடுத்துத் தான் முன்னம் நினைத்திருந்த அக்கொடிய செயலைச் செய்து முடித்தான். அந்நிலையிலும் மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனக் கருதிய நாயனார் அவ்வஞ்சகனை வணங்கினார். உடைவாளால் குத்தப்பட்டுக் குருதி பெருக நிலத்தில் விழும் அரசரைக் கண்ட தத்தன் பதைத்து ஓடி வந்து தனது வாளால் முத்தநாதனை வெட்டப்புகுந்தபோது அதனைத் தடுத்த நாயனார், “ தத்தா அவர் நம்மவர். அவரை ஒன்றும் செய்யாதே. அவருக்கு எந்தத் தீங்கும் நேராதபடி கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பி வருவாயாக “ என்றார்.

நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற அனைவரும் அங்கு வந்து முத்தநாதனைக் கொல்வதற்காகச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைத் தடுத்த தத்தன் அரசரது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்கள் அதனைக் கேட்டு விலகியதும் முத்த நாதனைப் பாதுகாப்பாக நாட்டு எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான் தத்தன். இச்செய்தியைக் கேட்பதற்காகவே உயிர் தாங்கிக் கொண்டிந்த அரசரை வணங்கி, முத்தநாதனுக்குத் தீங்கு வராமல் கொண்டு விட்டு வந்ததைக் கூறினான். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நாயனார், தத்தனை நோக்கி, “ ஐயனே, இன்றைக்கு நீ செய்த உதவியைப்போல் வேறு யாரால் செய்ய முடியும்” என்று கூறினார். பின்னர் தனது உற்றார் உறவினர்களை அருகில் அழைத்து, “ நீங்கள் அனைவரும் திருநீற்றின்மீது வைத்த அன்பைப் பாதுகாத்து வாழ்வீர் “ எனக் கூறி,சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தை செய்யலானார். அப்போது இறைவன் காட்சி அளித்துத் தேவர்களும் அறியாத தனது திருவடி நீழலை நாயனாருக்கு அருளி இடையறாப் பேரின்பம் அருளினான்.

விறன்மிண்ட நாயனார்

மலை நாட்டிலுள்ள செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளர் குலம் விளங்கத் தோன்றியவர் விறன்மிண்ட நாயனார். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு பூண்டவர். சிவத்தலங்களுக்குச் சென்று வணங்கி வருபவர். அப்படிச் செல்லுமிடங்களில் சிவனடியார்களை முதலில் வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கி வந்தார்.

ஒருமுறை பலதலங்களையும் தரிசித்தவராகத் திருவாரூர் சென்றடைந்தார். அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை வணங்கிச் செல்லாமல் சுந்தரர் நேராகத் தியாகேசப் பெருமானிடம் செல்வதைக் கண்டு மனம் வருந்தினார். இவ்வாறு செய்வதால் சுந்தரரும் அவரை ஆட்கொண்ட தியாகேசனும் புறகு என்றார். இதனைக் கேட்ட நம்பியாரூரர் அடியார் பெருமையைப் பாட விழைந்து தியாகேசனை நாடினார். அதன் பின்னரே இறைவன் அடி எடுத்துத்தர, திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் உதயமானது. இவ்வாறு சிவநெறியைப் பல காலம் பாதுகாத்துப் போற்றி வந்த விறன்மிண்டர் இறை அருளால் கண நாயகர் ஆகும் பேறு பெற்றார்.

உலகம் உய்யவும் ,நாமெல்லாம் கடைத்தேறவும் சைவம் தழைக்கவும் சுந்தரர் வாயிலாகத் திருத்தொண்டத் தொகை வெளிப்படக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனாரது அன்பின் திறத்தை என்னென்பது?

அமர்நீதி நாயனார் 

சோழ நாட்டில் ( குடந்தைக்கு அருகிலுள்ள ) பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலம் விளங்க வந்து தோன்றியவர் அமர்நீதியார். அவர் பொன்,முத்து, இரத்தினம், ஆடை ஆகியவற்றை வாணிபம் செய்து வந்தார். சிவ பெருமானது சேவடிகளை மறவாமலும் சிவனடியார்களுக்குக் கந்தையும்,கீழும் கோவணமும் அளித்தும் வாழ்ந்து வந்தார். திருநல்லூரிலுள்ள சிவாலய விழாவுக்கு அடியார்கள் வருகை தரும்போது அவர்களுக்கு அன்னம் பாலித்ததோடு மடமும் அமைத்துத் தந்து அருந் தொண்டாற்றி வந்தார்.

நாயனாரது தொண்டை உலகம் அறியவேண்டி ஒருநாள் சிவபெருமான் ஓர் அந்தணர் குல பிரமசாரி வேடத்துடன் அமர்நீதியாரின் திருமடத்திற்கு எழுந்தருளினார்.  எதிர்கொண்டு வரவேற்று வணங்கிய அவரிடம் பெருமான், “ உமது மடத்தில் அடியார்களுக்குத் திருவமுதும்,கந்தையும்,கீளும்,கோவணமும் தருவதாகக் கேள்வியுற்று இங்கு வந்தேன். என்றார். அதக் கேட்டுப் பேருவகை அடைந்த நாயனாரை நோக்கி இறைவன், “ நான் இப்போது காவிரியில் நீராடச் செல்கிறேன், ஒருவேளை மழை வரினும் தரித்துக் கொள்வதற்காக மாற்றுக் கோவணம் கொண்டு வந்துள்ளேன். அதனை நான் வரும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்வீர். ஏனெனில் அக்கோவணத்தின் பெருமையைக் கூற முடியாது” என்றார். அதற்கு இணங்கிய நாயனாரும் அகோவணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்துவிட்டு வந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவிரியில் நீராடிய பிரமசாரி வேட ஈசுவரன், வழியில் மழை வந்ததால் நனைந்தபடியே அமர்நீதியாரது மடத்திற்கு வந்து சேர்ந்தார்.  அதற்குள் அறுசுவையுடன் கூடிய திருவமுதை ஆக்குவித்து அவரை வரவேற்று வணங்கினார். “ ஈரக் கோவணத்தை மாற்ற வேண்டும். யான் உம்மிடம் கொடுத்த மற்றொரு கோவணத்தை எடுத்து வருக” என்று அப்பிரமசாரி கூறியவுடன் நாயனார் அதனை எடுத்து வர உள்ளே சென்றார். வைத்த இடத்தில் அதனைக் காணாது அதிசயித்துப் பதறி அதற்குப் பதிலாக வேறோர் கோவணத்தைக் கொண்டு வந்து கொடுத்து தமது குற்றத்தைப் பொறுக்குமாறு வேண்டினார்.

நாயனார் கூறியதைக் கேட்ட அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான்,” நன்று நீர் கூறுவது ! வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டீர். “ என்றார். அமர்நீதியார் தமது பிழையைக்கு மிக வருந்தி, “ இக்கோவணம் மட்டுமின்றி, பொன்,மணி,பட்டாடைகள் ஆகியவற்றையும் தருகிறேன். அவற்றை ஏற்றுக்கொண்டு அடியேனது தவறைப் பொறுத்தருள வேண்டும்” என்றார். அதற்கு அப்பிரமசாரி , “ பொன்னும் மணியும் எமக்கு வேண்டா. எனது கோவணத்திற்குச் சமமான கோவணத்தைத் தந்தால் போதும்” என்றார். இதைக்கேட்டு முகம் மலர்ந்த நாயனார் ஒரு பெரிய தராசினைக் கொண்டு வந்து நிறுத்தி அதில் ஒரு தட்டில் தண்டிலிருந்து பிரமசாரி ஒரு கோவணத்தை வைக்க, மற்றொன்றில் தான் நெய்ந்த மற்றொரு கோவணத்தை இட்டார். தராசுக்கோல் சமமாக நிமிராததால் தன்னிடமிருந்த பட்டாடைகள்,செல்வம், அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார். அப்போதும் அக்கோல் சமமாக நிமிராதது கண்டு அதிசயித்த அமர்நீதியார், “ இப்போது எஞ்சியுள்ளவை யானும் எனது மனைவியும் சிறு வயது மகனும் மட்டுமே.எங்களையும் தராசில் ஏற அனுமதிக்க வேண்டும் ” என்றார். அவரது அன்பின் உயர்வை உலகோர் காண வேண்டி பிரமச்சாரியாக வந்த சிவபெருமான் அவர்களும் தட்டில் ஏறுவதற்கு உடன்பட்டார். நாயனார் மிக்க மகிழ்ச்சியுடன் அவரது திருவடிகளை வணங்கித் தாமும் தனது மனைவி,  மகன் ஆகியோருடன் அக்கோலை வலம் வந்து, “ நாங்கள் திருவெண்ணீற்று அன்பில் சற்றும் பிழையாதவர்களாக இருந்தால் இத்தட்டு நேராக நிற்பதாக “ எனக் கூறி, திருநல்லூர் இறைவரை வணங்கிப் பஞ்சாக்ஷரத்தை ஓதியபடியே தட்டின் மீது ஏறி நின்றார்கள். அடியவரது அன்பின் திறத்தால் இரு தட்டுக்களும் சமமாக நின்றன. தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். பிரமசாரி வடிவத்தில் வந்த சிவபெருமான் உமாதேவியோடு காட்சி தந்தருளினார். இறையருளால் அத்தராசுக் கோல்  தெய்வ விமானமாக மாறியது. அமர்நீதி நாயனாரும்,அவரது மனைவியாரும், புத்திரனும் அதில் ஏறி சிவலோகத்தை அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர்.   ,

 

Posted in Latest News, Nayanmars | Leave a comment

மார்கழித் திருவாதிரைக் களி Thiruvadhirai Kali

Nataraja Abhishekam is conducted six times in a year. The one in the Tamil month of Margazhi ( Dec/ Jan)  has special significance. It coincides with the star Ardhra  –        Thiruvadhirai in Tamil) . It was on this day , Sendhanaar, a great devotee of Lord Nataraja had offered ” Kali” , a unique ” neivedhyam” made of jaggery. Many households still follow this offering on this day. We hereby give details of the process of making ” Kali” for the benefit of the readers.

 

47C

மார்கழித்    திருவாதிரைக்   களி  செய்யும்  முறை

Procedure for making”Ardhra Kali”

தேவையான பொருள்கள் :Materials Required:

பச்சரிசி – ஒரு டம்ளர்  Raw Rice: One cup

வெல்லம் – ஒரு டம்ளர் Jaggery*: One cup ( *Bella in Kannada; Bellam in Telugu; Gur(a) in Hindi and Gujarathi;

நெய் – தேவையான அளவு Ghee: Based on requirement and taste

தேங்காய்- ஒரு மூடி Coconut chips( well shaved) : One cup

முந்திரி,ஏலக்காய் ,திராக்ஷை ( Cashew nut, cardamom ( elaichi in Kannada and Telugu; choti elaichi in Hindi and dry grapes.)

செய்முறை: அரிசியை சிவக்க வறுக்க வேண்டும். பிறகு மென்மையாக மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும்.

Take the required amount of rice in a bowl and heat it gently until it becomes pale red in colour. Powder it in a mixie.

அடுப்பை மூட்டி, இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் பொடி செய்த வெல்ல த்தைப் போட வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் வடி கட்டவும். தேங்காய்த்  திருகலை  அதில் போடவும்.

Take two mugs of water in a vessel and add powdered jaggery and dissolve it. Filter it and add coconut chips prepared earlier. Heat the mixture

வறுத்துவைத்த அரிசி மாவை மேற்கூறிய கொதிக்கும் நீரில் போட வேண்டும்.  கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும். அப்பாத்திரத்தைக்  குக்கருக்குள் வைக்க வேண்டும். மூன்று விசில் சப்தம் வந்தவுடன் அடுப்பை  அணை த்து விடவும்.

Add the well roasted rice into the above hot mixture.Mix it well and keep it inside a closed cooker for further heating. Stop heating when the cooker blows the whistle for the third time.

பிறகு குக்கரைத் திறந்து  ஏலக்காய் பொடியைப் போட்டு அதோடு நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷையைப் போட்டு நன்கு கிளற வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட  களியை சுவாமிக்கு  நிவேதிக்கலாம்.

Open the cooker and add elachi powder and then the mixture of cashew nut, and dry grapes,roasted with ghee.

Now ” Kali” is made ready to be offered to the Lord on Ardhra day.

 

 

 

 

 

 

Posted in Worship | Leave a comment

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Thirugnanasambandar
வேதமும் சைவமும் தழைக்கவும், பிற சமயங்களின் பிடியிலிருந்து சைவ நெறியைக் காக்கவும் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கவுணிய(கௌண்டின்ய)கோத்திரத்தில் அவதாரம் செய்தருளியவ்ர் திருஞான சம்பந்தர்.

சைவ சிகாமணி என்று போற்றப்பெறும் காழிப்பிள்ளயாரைத் தவம் செய்து பெற்றோர் சிவபாத இருதயரும் பகவதி அம்மையும் ஆவார்கள். மூன்றாண்டு ஆகியபோது தனது தந்தையுடன் ஆலயத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பிரமதீர்த்தத்தில் தந்தை மூழ்கி ஜபம் செய்கையில், குழந்தைக்குப் பசி மேலிடத் தனது கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு தோணியப்பரின் சிகரத்தைப் பார்த்து அம்மே,அப்பா என்று அழுதருளினார். குழந்தையின் அழுகை தீர்த்தருள வேண்டி இறைவன்,உமா தேவியுடன் விடை (ரிஷபத்தின்) மேல் தோன்றியருளி, அக்குழந்தைக்குப் பால் அளித்து வருமாறு அம்பிகையைப் பணித்தான். தேவியும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்தருளி,பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலைக் கறந்தருளி சிவஞானத்து இன்னமுதத்தைக் குழைத்து அக்குழந்தைக்குத் தந்தருளினாள் .அக்கணமே, அம்மறைச் சிறுவனுக்கு எல்லையில்லாததும் ,உவமை இல்லாதததுமான கலை ஞானமும் சிவஞானமும் உண்டாயின. எனவே சிவஞானசம்பந்தர் ஆயினார். கரையேறிய தந்தையார் குழந்தையின் வாயில் பால் ஒழுகக் கண்டு, ” உனக்குப்பால் தந்தது யார்” என்று கோல் ஓச்சிக் கேட்டவுடன், தோணிச் சிகரத்தை நோக்கிக் கையால் சுட்டிக் காட்டித்  ” தோடுடைய செவியன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை அடையாளங்களுடன் தந்தைக்குக் காட்டியருளினார்.

தந்தையுடன் அருகிலுள்ள திருக்கோலக்கா என்ற தலத்தை அடைந்து,கையால் தாளமிட்டுப் பாடுகையில், இறைவரருளால் அவரது கைகளில் பஞ்சாட்சரம் பொறித்த பொற்றாளம் வந்து அடைந்தது. பின்னர் தந்தையின் தோளில் அமர்ந்தவாறு தனது தாயின் பிறந்த ஊராகிய திரு நனி பள்ளியைச் சென்று வணங்கிப் பாலையாய் இருந்த அந்நிலத்தை ” ஆணை நமது” எனப் பாடி நெய்தலாக்கினார். அதன் பின்னர் பல தலங்களைத் தரிசித்து விட்டு சீர்காழிப் பதிக்கு மீண்டும் வந்து அடைந்தார்.

அப்போது அவரை, யாழில் வல்லவரும் எருக்கத்தம்புலி யூரைச் சேர்ந்தவருமான திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் தன் மனைவியார் மதங்க சூளாமணியுடன் வந்து தரிசித்தார். அதுமுதல் சம்பந்தரோடு தலயாத்திரை மேற்கொண்டு அவரது பாடல்களை யாழில் வாசித்து வந்தார். பின்னர், பாணனாருடன் தில்லை முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு, நெல்வாயில் அரத்துறையை அடைந்தார். பாதம் நோவ நடந்துவந்து, அருகிலுள்ள மாறன்பாடியில் தங்கியபோது, அரத்துறைப் பெருமானது அருளால் அவருக்கு முத்துச் சிவிகை குடை, சின்னம் ஆகியவை வந்தடைந்தன.அதுமுதல் சிவிகையில் ஏறி சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளலானார்.

சீகாழியை வந்தடைந்த ஞானசம்பந்தப்பிள்ளையாருக்கு வேத விதிப்படி உபநயனம் நடைபெற்றபோது அங்கிருந்த அந்தணரிடம், ” வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” எனப் பதிகம் பாடி உணர்த்தினார்.
தன்னைக் காண வந்த திருநாவுக்கரசருடன் அளவளாவிய பின்னர் இருவருமாகப் பல சிவத்தலங்களைத் தரிசித்தனர். அப்பர் பெருமான் தனித்து யாத்திரை மேற்கொண்ட பிறகு, சம்பந்தர் திருப்பாசிலாச்சிராமத்தை அடைந்து கொல்லிமழவனின் மகள் முயலகன் என்ற நோயால் துன்புறுவதைக் கண்டு இரங்கி, அத்தலத்து இறைவர் மீது பதிகம் பாடியவுடன் அப்பெண் நோய் நீங்கப்பெற்றாள் பிறகு, திருச்செங்குன்றூரை அடைந்தவுடன் உடன் வந்த அடியவர்களும் ஊர் மக்களும் குளிர் சுரத்தால் வருந்துவதைக் கண்டு, திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்நோய் அகலச் செய்தார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து விட்டுப் பட்டீச்சரத்தை அடைந்தபோது இளவேனிற் கால வெய்யில் வாட்டியது. அத்தல இறைவர் சம்பந்தப்பெருமானுக்கு முத்துப் பந்தர் தந்தருளினார்.

திருவாவடுதுறைக்குச் சென்றபோது  சீகாழியிலிருந்து அவரது  தந்தையார் வருகை தந்து,தாம் செய்ய இருந்த சிவ வேள்விக்குப் பொருள் வேண்டவே, “இடரினும் தளரினும் ” எனப் பதிகம் பாடி சம்பந்தர் வேண்டியதும், மாசிலாமணீசர் திருவருளால் ஒரு சிவபூத கணம் ஆயிரம் பொன்னைப் பலிபீடத்தின் மீது கொண்டு சேர்த்தது. அதனை வேள்வி செய்வதற்காகத் தந்தையிடம் கொடுத்து விட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டார். உடன் வரும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் வாழ்ந்துவந்த திருத் தருமபுரத்தை அடைந்தவுடன் பாணரின் யாழால்தான் சம்பந்தரின் பதிகங்களுக்குப் பெருமை எனும்படி உறவினர்கள் பேசியதைக் கேட்டுப் பொறாத பாணனார், யாழில் அடங்காப் பதிகம் ஒன்று பாடுமாறு விண்ணப்பிக்க, பிள்ளையாரும், ” மாதர் மடப்பிடியும்” எனத் துவங்கும் பதிகத்தை யாழில் அடங்காதவாறு பாடியருளினார். திருச்சாத்த மங்கையில் திருநீல நக்கராலும்,புகலூரில் முருகனாராலும், திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டராலும் உபசரிக்கப்பெற்றுத் திருமருகலை வந்தடைந்தார். தன்னை மணம் முடிக்க இருந்த வணிகன் பாம்பு கடித்து மாண்டதால் கதறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு இரங்கி, மருகல் பெருமானைப் பாடி அவ்வணிகனை உயிர்ப்பித்து இருவருக்கும் மண முடித்தருளினார்.

திருப்புகலூரில் திருநாவுக்கரசர் வாயிலாகத் திருவாரூர் ஆதிரை நாள் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்து ஆரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார். திருக்கடவூரில் குங்கிலியக் கலயனாரை சந்தித்து அளவளாவிய பின்னர் திருவீழிமிழலையை அப்பர் பெருமானுடன் சென்றடைந்தார். அப்போது அங்கு பஞ்சம் நிலவிப் பலரும் துயரமுறுதல் கண்டு இறைவரிடம் வேண்ட, பெருமான் கைத்தொண்டு செய்ததால் அப்பருக்கு நல்ல காசினையும், தம் மகனார் ஆனதால் வாசியுள்ள காசினையும் அளித்தருளினான். சம்பந்தப்பெருமான் வாசி தீரக் காசு வேண்டி இறைவர் மீது பதிகம் பாடியாவுடன் பெருமான் அருளால் வாசியில்லாக் காசு பெற்றார் . அதனைக் கொண்டு இருவரும் பஞ்சம் தீரும் வரை அனைவருக்கும் உணவிட்டனர். வீழி விமானத்தில் காழிக் காட்சியும் காணப் பெற்றார் ஞானசம்பந்தர்.

இருவருமாகத் திருமறைக்காட்டைச் சென்றடைந்து வேதங்கள் திருக்காப்பிட்ட கதவினைப் பதிகங்கள் பாடி மீண்டும் திறக்கவும் மூடவும் செய்தனர்.

அப்போது பாண்டிய நாட்டிலிருந்து மங்கர்க்கரசியாரது அழைப்பு வரவே, மதுரைக்குச் செல்லப் புறப்பட்ட சம்பந்தரை, ” இன்று நாளும் கோளும் தீயனவாக உளதே ” என்று அப்பர் தடுக்க, சம்பந்தப்பெருமான், ” நாளும் கோளும் அடியார்க்கு நல்லனவே செய்வன எனுமாறு ” வேயுறு தோளி பங்கன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடியருளி,மதுரை மாநகருக்குப் புறப்பட்டார்.

மதுரையில் பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் அவரை வரவேற்றனர்.அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் தீ வைத்ததும், சம்பந்தர் பதிகம் பாடவே, அது வெப்புநோயாகப் பாண்டிய மன்னனைப் பற்றியது. சமணர்களால் பாண்டியனைக் குணப்படுத்த முடியாமல் போகவே, சம்பந்தர் அங்கு சென்று, மந்திரம் ஆவது நீறு எனப் பதிகம் பாடி வெப்புநோய் தீரச் செய்தருளினார். அதுகண்டு பொறாத சமணர்கள் அவரை அனல் வாதம்,புனல் வாதம் செய்ய அழைத்தனர். தாங்கள் ஒருக்கால் தோற்றால் கழுவேறுவதாகவும் மன்னனிடம் கூறினர். இவற்றிலும் சம்பந்தர் வென்றதால், தமது சபதப்படிசமணர்கள் கழுவேறினர். பாண்டியன் மீண்டும் சைவனானான். மன்னனும்,அரசியாரும் உடன் வர, சம்பந்தப்பெருமான் ஆலவாய் அண்ணலை வழிபட்டு அந்நாட்டிலிருந்த ஏனைய சிவப்பதிகளையும் தரிசித்துப் பதிகங்களால் பரமனைப் பரவினார்.

பின்னர் சோழ நாட்டை நோக்கிப் பயணிக்கையில், புத்த நந்தி ஒருவன் இகழவே,அதைக் கண்டு மனம் பதைத்தவராக, சம்பந்தரின் பஞ்சாக்ஷரப்பதிகப் பாடலொன்றை உடன் வரும் அடியார் பாடியவுடன் அப்புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது.

பல தலங்களையும் தரிசித்துவிட்டு அப்பர் எழுந்தருளியிருந்த திருப்பூந்துருத்திக்கு அண்மையில் செல்லும்போது, அப்பர் பெருமான் அவரது சிவிகையைத் தாமும் சுமந்து வருவதை அறிந்து, சிவிகையிலிருந்து இறங்கி அப்பரை வணங்க, வாகீசரும் இவரை வணங்கி மகிழ்ந்தார்.

பின்னர் தொண்டை நாட்டுத் தலங்களைத் தரிசித்து வரும்போது திருவோத்தூரில் பதிகம் பாடி ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் புரிந்தார்.காளத்தியை வணங்கி விட்டு அங்கிருந்தபடியே வடநாட்டுத் தலங்களைப்பாடினார்.

மயிலாப்பூருக்கு எழுந்தருளி, கபாலீசப்பெருமானைப் பதிகத்தால் பரவி,அரவம் கடித்து மாண்டிருந்த சிவநேசரின் மகளான பூம்பாவையை உயிர்ப்பித்தருளினார்.

பல தலங்களை வணங்கி விட்டுச் சீகாழியை அடைந்ததும், அவரை மணம் செய்து கொள்ளுமாறு பெற்றோரும் ஏனையோரும் வேண்டி, நல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பி என்பவரது மகளை மணம் பேசினர்.அவர்களது வற்புறுத்தலுக்கு இணங்கிய சம்பந்தப்பெருமானுக்குத் திருமணம் அத்திருப்பதியில் நடைபெற்றது. தான் மணந்த பெண்ணுடன் சம்பந்தர் அக்கினியை வலம் வந்து, காதலாகிக் கசிந்து எனத் துவங்கும் பஞ்சாட்சரப் பதிகத்தைப் பாடியருளியவுடன், ஒரு சோதி தோன்றியது, திருமணத்திற்கு வந்திருந்த அடியார்கள் அனைவரும் அதில் புகுந்ததும், தாமும் தனது மனைவியாருடன் வைகாசி மூல நன்னாளன்று அந்த சிவசோதியில் கலந்தருளினார்.

பதினாறு ஆண்டிகளே வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சைவ சமய பிரதம ஆசாரியராக விளங்கும் திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

” திருஞானசம்பந்தர் பாத மலர்கள் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.” — பெரிய புராணம்.

Posted in Nayanmars | Leave a comment

திருநாவுக்கரசு நாயனார்

Appar swamigal
சைவ சமயாசார்யர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகவாகத் தோன்றியருளியவர். இவரது தமக்கையான திலகவதியாருக்கு கலிப்பகையார் என்பவரை மணம் பேசிய நிலையில், போர்முனையில் அக்கலிப்பகையார் வீர சுவர்க்கம் அடைந்தார்., தமது பெற்றோர்களும் இறையடி சேர்ந்ததால் மனம் நொந்த திலகவதியார் தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அதைப் பொறாத மருள்நீக்கியார் தாமும் அவ்வாறே செய்து விடுவதாகக் கூறவே, தம்பியார் வாழ வேண்டும் என்ற தயையினால் அம்முடிவை மாற்றிக் கொண்ட தமக்கையார், திருவதிகை வீரட்டானத்து இறைவர்க்குத் தொண்டு செய்து வந்தார்.

சில ஆண்டுகளில் கல்வி கேள்விகளைக் கற்ற மருள்நீக்கியார் சமண சமயத்தைச் சேர்ந்து அச்சமய நூல்களைக் கற்று , தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார். இதனைக் கேள்வியுற்ற திலகவதியார், திருவதிகை இறைவனிடம் தனது தம்பி மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்ப அருளுமாறு வேண்டி வந்தார். இறைவனும் மருள்நீக்கியாரின் வயிற்றில் சூலை நோய் பற்றச் செய்யவே, அதனால் துன்புற்றவராக வேறேதும் செய்ய இயலாமல் மீண்டும் தமக்கையாரிடமே வந்து குறை இரந்தார்.

தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார்,அவருக்குத் திருநீறளித்து வீரட்டேசப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். அதன்படி ஆலயத்தினுள் சென்று, பெருமானிடம் முறையிட்டவுடன், இறையருளால் செந்தமிழ் மாலைகள் பாடும் திறன் பெற்றுக் ” கூற்றாயினவாறு ” எனத் தொடங்கித் தேவாரப் பாமாலை சூட்டலானார். அதனைத் திருச்செவியில் கேட்டு மகிழ்ந்த இறைவர் இன்னருளால் வானத்திடையே, ” நாவுக்கரசு என்னும் நற்பெயர் வழங்குவதாக” என்ற அசரீரி ஒலித்தது.

சமண சமயத்தை நீங்கி மீண்டும் தருமசேனர் சைவராக மாறி நாவரசர் என வழங்கப்படுவதைக் கேட்டு வெதும்பிய சமணர்கள் அவருக்குத் தீங்கு விளைவிக்கக் கருதினர்.பல்லவ மன்னனும் சமண சமயத்தவனாக மாற்றப்பட்டிருந்ததால் அதனைப் பயன்படுத்தி,நாவுக்கரசரை நீற்றறையில் இட்டும்,நஞ்சை அருந்தச் செய்தும், யானையின் காலால் இடறச் செய்தும் துன்பப்படுத்தினர். இவற்றால் அவருக்கு எந்தத்தீங்கும் விளையாததால் கல்லோடு அவரைக் கட்டிக் கடலில் விட்டனர். அப்போது நாவுக்கரசர் பஞ்சாட்சரத் திருப்பதிகம் பாடவே, கல் மிதந்து அதுவே தெப்பமாகி அவரைக் கரை சேர்த்தது. தனது தவறை உணர்ந்த மன்னன் மீண்டும் சைவனானான்.

சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று உழவாரப் பணி செய்து திருப்பதிகங்களால் இறைவனைப் போற்றி வழிபட்டு வந்தார் நாவுக்கரசர். பெண்ணாகடத்தில் சூலக் குறியும் ரிஷபக் குறியும் பெற்று, தில்லையைச் சென்று தரிசித்து மகிழ்ந்தார் வாகீசர். பின்பு சீகாழிக்குச் சென்று ஞானசம்பந்தப்பெருமானை நேரில் கண்டு மகிழ்ந்தார். சம்பந்தரும் அவரை ” அப்பர்” என்று அழைத்து வணங்கி மகிழ்ந்தார்.

திருச்சத்திமுற்றத்துப் பெருமானிடம் தமக்குத் திருவடி தீக்ஷை செய்யமாறு வேண்டிய அப்பர் பெருமானுக்கு இறைவரருளால் திருநல்லூர் என்ற தலத்தில் அப்பேறு கிட்டியது. பின்னர் திங்களூரில் அரவம் கடித்து மாண்ட அப்பூதி அடிகளின் மகனைப் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்தார்.

திருவாரூரில் தியாகேசப் பெருமானைப் பதிகங்களால் துதித்து விட்டுத் திருப்புகலூரை அடைந்து, முருக நாயனாரது மடத்தில் ஞான சம்பந்தரோடு தங்கியிருந்தார்.பிறகு இருவரும் திருவீழிமிழலையை அடைந்து அங்கு நிலவிவந்த பஞ்சம் தீருமாறு பெருமானைப் பாடினர். அதன்பிறகு இருவருமாய்த் திருமறைக்காட்டிற்குச் சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர். அங்கிருந்து இருவரும் திருவாய்மூரை அடையும் போது இறைவர் எதிர் காட்சி கொடுத்தருள, அக்காட்சியை சம்பந்தர் காட்டத் தாமும் தரிசித்துப் பரவசமடைந்தார் வாகீசர்.

பாண்டிமாதேவியின் அழைப்புக்கிணங்கி சம்பந்தப்பெருமான் மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், அப்பர் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துப் பணி செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொள்ளவே, இறைவரருளால் அதனை அறிந்த அரசன் அக்கோயிலை மீண்டும் திறப்பித்தான். இவ்வாறு பல தலங்களை வணங்கியவராகத் திருப்பைஞஞீலியை அடைந்த அப்பர் பெருமானுக்குப் பசி மேலிட்டபோது , இறைவன் அவருக்குக் கட்டமுது தந்தருளினான்.

தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட அப்பர் பெருமான், காளத்தி மலையைத் தரிசித்தவராய்க் கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரைப் பெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக் குளத்தில் எழச் செய்து அங்கேயே கயிலைக் காட்சியைக் காட்டினான்.

பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்த வாகீசப்பெருமான், திரு மடம் ஒன்று அமைத்துக் கொண்டு இறைவனைப் பாமாலைகளால் துதித்து வரலானார். அப்போது அங்கு ஞான சம்பந்தர் எழுந்தருளி வருவது கண்டு மிக மகிழ்ந்தவராக அவரது சிவிகையைத் தாங்கினார். இருவரும் தமது தல யாத்திரைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்த பின்னர், பாண்டிய நாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார் அப்பர்.

பின்னர் தமது 81 வது வயதில் திருப்புகலூரை அடைந்த வாகீசர் திருத்தொண்டு செய்து வரும் போது, உழவாரம் செய்யுமிடத்தில் பொன்னும் மணியும் தோன்றச் செய்தான் இறைவன்.ஆனால் அப்பரோ தமக்கு அவற்றால் என்ன பயன் என்று எண்ணி அவற்றை நீரில் எறிந்தார். தேவலோக மகளிர் தோன்றி அவரது உறுதியைச் சோதிக்கும் போது, தாம் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆட்பட்டதால் அவர்களால் மயக்குறேன் என்று திடமாக இருந்தார், ” புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்” என்று விண்ணப்பித்த அப்பர் பெருமானுக்கு இறைவன் ஓர் சித்திரை மாதத்து சதய நன்னாளில் சிவானந்த ஞான வடிவளித்துத் தம் சேவடிக்கீழ் ஆட்கொண்டருளினான்.

திருநாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூறாண்டின் இடைப் பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்.

Posted in Nayanmars | Leave a comment

அரிவாட்டாய நாயனார்

Thandalaicheri (2)சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள பாடல் பெற்ற தலமான தண்டலை நீள் நெறி ( தண்டலைச்சேரி)க்கு அருகாமையில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தாயர் என்பவர். இவரும் இவரது மனைவியாரும் மிகுந்த அன்போடு சிவபெருமானது திருக்கோயிலுக்குத் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நிவேதனத்திற்காக  வழங்கும் அரும்பணியைச் செய்து வந்தனர். மனைவியார் ஆன் ஐந்தும் எடுத்துக் கொண்டு கணவனாரைப் பின்தொடர்ந்து உடன்சென்று பணி ஆற்றி வந்தார்.

Thandalaicheri (1)நாளடைவில் அவரது செல்வம் வேழம் உண்ட விளாங்கனி போல் மறைய ஆரம்பிக்கவே, கூலிக்கு வயலில் வேலை செய்து நெல் கொண்டு அதைக் கொண்டு செந்நெல் பெற்று, இறைத்தொண்டு ஆற்றி வந்தனர். ஒரு சமயம் கூலி நெல் முழுவதும் செந்நெல்லாகவே இருந்தது. தனக்கு உணவுக்கு நெல் இல்லாமல் போனாலும் இறைவரது பணி முட்டாமல் செந்நெல் கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ந்து, அதனை முழுவதுமாக  அமுது படைத்தார். இது  அடியேன் செய்த புண்ணியம் எனக் கருதினார்.

பசியினால் மிகத்தளர்வுற்ற நாயனாரும் அவர்தம் மனைவியாரும் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்த இலைகளை உண்டும் நீர் அருந்தியும், சிவத் தொண்டை விடாமல் செய்து வந்தனர்.

ஒருநாள் நாயனார் தமது  கூடையில் செந்நெல் அரிசியும்,செங் கீரையும், மாவடுவும், ஏந்தி முன்செல்ல, ஆன் ஐந்தை ஏந்தியவராக மனைவியார் பின் தொடர்ந்தார். அவ்வாறு செல்லும்போது தளர்ச்சி மேலிட்டுத் , தாயனார் நிலத்தின் மீது விழும்போது, மனைவியார் அவரைத் தாங்கினார். அப்பொழுது கூடையில் இருந்த அரிசியும், கீரையும், மாவடுவும்  கமரில்          ( நில வெடிப்பிற்குள்) சிந்தி விட்டன. இதைக் கண்டு தாயனார் மனம் பதைத்தவராக, எல்லையில்லாத தீயனேன் இன்று பெருமானுக்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றிலேன் என்று கருதி ,அக்குற்றத்திற்காகத் தனது கழுத்தினை அரிவாளைக் கொண்டு அரியலுற்றார்.

மாசில்லாத அன்பரது அச்செயலைக் கண்டு தரியாத இறைவரது திருக்கை அக்கமரிலிருந்து வெளிப்பட்டு நாயனாரின் கையைப் பிடித்துத் தடுத்ததோடு  “ மாவடு விடேல் விடேல் “ என்ற ஓசையும் எழுந்தது. பெருமானின் கருணையைக் கண்டு நெகிழ்ந்து போற்றிய தாயனாருக்கும்  அவரது மனைவியாருக்கும் இறைவன் ரிஷப வாகனனாய்க் காட்சி அளித்து, இருவரும் சிவலோகத்தில் வாழும் பேற்றையும் அளித்து அருள் செய்தான்.

அன்பின் காரணமாகத் தனது கழுத்தையே அரிவாளைக் கொண்டு அரிய முற்பட்ட தாயனார் அன்று முதல் அரிவாள் தாயர் எனப்படுவாராயினார்.

நாயனாருக்கு முக்தி அளித்த தை மாதத் திருவாதிரை நாளன்று தண்டலைச்சேரி சிவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

Posted in Nayanmars | Leave a comment

செருத்துணை நாயனார்

IMG_1716IMG_1717மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள சன்னா நல்லூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள திருமருகலில் இருந்து திருச்செங்காட்டங்குடி வழியாகத் திருப்பயத்தங்குடி(திருப்பயற்றூர்) என்ற பாடல் பெற்ற தலத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கீழத்தஞ்சை என்ற ஊரில் தோன்றியவர் செருத் துணை நாயனார். இவ்வூரை ” மருகல் நாட்டுத் தஞ்சாவூர் ” எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான்.

இவர் திருவாரூர்ப் பூங்கோயில் பெருமானிடம் அளவிறந்த பக்தி பூண்டவர்.   ”  மெய்யன்புடைய சைவர்” என்று உலகோர் புகழும் வகையில் காலம் தோறும் திருவாரூர் ஆலயம் சென்று அரும் பணிகள் செய்து வந்தார்.

ஒருநாள் அக்கோயிலுக்கு வந்த பல்லவ மன்னரான கழற்சிங்கரது பட்டத்து அரசியானவர் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்ததைக் கண்டு வெகுண்ட செருத் துணை நாயனார்  அதனைச் சிவாபராதமாகக் கருதி அரசியின் மூக்கைத் தனது குறு வாளால் துணித்து வீழ்த்தினார். அதனை கேள்வியுற்ற கழற்சிங்க நாயனாரும் அங்கு வந்து விவரம் அறிந்தபின், அரசியார் பூவை எடுத்ததற்குக் காரணமான அவளது கையையும் துணித்தார். இவ்வாறு திருப்பள்ளித்தாமத்தை மோந்த குற்றத்திற்காக அரசியின் மூக்கை அரிந்த செருத்துணையார் சிவப்பணிகள் பல செய்து பொன் அம்பலத்தாடுவாரது பாத நீழலை அடைந்து ” இறவா இன்பம் எய்தினார்”

நாயனார் சிவமுக்தி பெற்றது, ஆவணிப் பூச நன்னாளாகும்.

Posted in Nayanmars | Leave a comment

அதிபத்த நாயனார்

20140824_150548நாகப்பட்டினத்தில் பரதவர் குலம் விளங்கத் தோன்றியருளியவர் அதிபத்தர். நுளையர்பாடிக்குத் தலைவராக இருந்த இவர், சிவ பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு , தங்கள் குலத் தொழிலான மீன் பிடித்தலைச் செய்து வந்தபோது, வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென்று கடலில் விட்டு விடுவதை நியமமாகக் கொண்டிருந்தார்.

20140824_180315

நாயனாரது பேரன்பை உலகு அறியும் வண்ணம் இறைவர் செய்த திருவிளையாடலால், நாள் ஒன்றுக்கு ஒரு மீனே வலையில் அகப்பட்டது. இருப்பினும் தனது உறுதி தளராமல் அம்மீனைக் கடலிலேயே விட்டு வந்தார். இப்படிப் பல நாள்கள் ஒரு மீனே அகப்படுவதும் அதனைக் கடலில் விடுவதும் தொடர்ந்தது. நாயனாரும் அவரைச் சேர்ந்தவர்களும் பலநாட்கள் உணவின்றி உடல் மெலிந்தனர். இருப்பினும் அதிபத்தர் தான் செய்துவரும்  தொண்டிலிருந்து சிறிதும் மாறாதிருந்தார்.

ஒருநாள் மீன்வலையில் விலைமதிப்பில்லா நவமணிகளைக் கொண்ட பொன்மீன் ஒன்று அகப்பட்டது. உலகெலாம் வியப்ப வெளிப்பட்ட மீனை “இது என்னை ஆளுடைப் பரமனுக்கே ஆகும்” என்று  கடலில் விட்டார். மெய்த்தொண்டரின் இச்செயலால் விண்ணில் ரிஷபாரூடராகப் பெருமான் வெளிப்பட்டருளி, அவரைத் தமது அடியார்களோடு இருக்கும் சிவலோக வாழ்வளித்தார்.

20140824_152326நாயனார் முக்திப்பேறு பெற்ற ஆவணி மாத ஆயில்யத்தன்று, நாகையில் காயாரோகண சுவாமி ஆலயத்தில் சுமார் 3 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. அதிபத்தரது உற்சவத் திருமேனியும் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள பரதவ குலத்தோர் அவரைப் படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சிறிது தூரம் செல்கிறார்கள். தங்க மீன் பதுமை ஒன்று வலையில் அகப்படுவதைத் தொடர்ந்து அதனைக் கடலில் எறியும் ஐதீகம் நடைபெறுகிறது கரைக்கு வந்து சேரும் நாயனாருக்கு ரிஷப வாகனக் காட்சியும் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

Posted in Nayanmars | Leave a comment

செம்பியன் மாதேவியார்

  

Sembianmadevi

செம்பியன் மாதேவி சிவாலயம்

சோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார்.

செம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த இந்த ராஜமாதா , தனது பரம்பரையினருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டியவர். கி.பி. 910 முதல் 1001 வரை வாழ்ந்த இப்பெருமாட்டியார், செங்கல்லால் ஆன கோயில்களைக் கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தார். இவரது கணவனார் கண்டராதித்த சோழர்,தில்லை நடராஜப் பெருமான் மீது பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இருப்பதைக் காணலாம்.

தமது கொழுந்தனாராகிய சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலர், அருள்மொழிவர்மர்(ராஜராஜர்) , மகளான குந்தவைப் பிராட்டியார் ஆகியோரை வளர்த்து நல்வழி காட்டியவர். பிற்காலத்தில் ராஜராஜர் தஞ்சைப் பெரிய கோயில் கட்டியதற்கு உறுதுணையாக இருந்தவர். தமது மகன் உத்தம சோழன் சிறு வயதினனாக இருந்தபோதே கண்டராதித்தர் இறையடி சேர்ந்து விடவே, அவரது சகோதரர் அரிஞ்சய சோழர், இவரது வேண்டுகோளின் படி அரியணை ஏறினார். இவரது ஆட்சியிலும் ,ராஜ மாதாவின் ஊக்கத்தால் பல சிவாலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றன. அரிஞ்சயருக்குப்பின் உத்தம சோழனுக்குப் பதிலாக ராஜ  ராஜன் ஆள்வதையே விரும்பியவர் இம்மாதரசி. கண்டராதித்தர் சிவ பூஜை செய்வது போன்ற சிற்பத்தைத் தான் கற்றளியாக்கிய திருநல்லம் சிவாலயத்தில் அமைத்துள்ளார். திருநல்லம், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்),தென்குரங்காடுதுறை ,திருவாரூர் அரநெறி,திருமணஞ்சேரி,திருக்கோடிகாவல்,ஆனாங்கூர், திருவக்கரை,திருச்சேலூர் போன்ற ஏராளமான சிவாலயங்கள் இம்மாதேவியாரால் திருப்பணி செய்யப்பெற்றவை.

கி.பி. 1019 ல் இராஜேந்திர சோழன், இம்மூதாட்டியின் நினைவாக அவரது திருவுருவத்தை நிறுவி, நிபந்தங்கள் அளித்ததைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. உத்தம சோழரின் மனைவியார், தங்களது மாமியாராகிய இவரது  பிறந்த தினமாகிய சித்திரை மாதக் கேட்டை நட்சத்திரத்தன்று விழா எடுத்தனர். இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரும் செம்பியன் மாதேவி எனப்பட்டது. இங்குள்ள கைலாச நாதர் ஆலயம் மிகப்பெரியது. நாகை திருவாரூர் வழியில் உள்ள கீவளூரிலிருந்து தேவூர் வழியாகக் கச்சனம் செல்லும் வழியில் தேவூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரைக் கேட்டையன்று செம்பியன் மாதேவியாருக்கு  ஊர் மக்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.   

Posted in More Shiva Devotees | Leave a comment

முனையடுவார் நாயனார்

DSC01024சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் முனையடுவார் நாயனார். இத்தலத்து இறைவரை இந்திரன், சூரியன்,காளி,நண்டு ஆகியோர் பூசித்துள்ளனர். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் இத்தலத்தின் மீது தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.
உலகில் பிறந்த பயனை அடைவது, சிவனடியார்களுக்கு உணவளிப்பதும், பெருமானது திருக் கோயில்களில் திருவிழாக் காண்பதும் ஆகிய சிவ புண்ணியங்களால் அடையலாம் என்பதை நாயன்மார்கள் பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களுள் சிவனடியார்களுக்கு உணவிடுவதை வழித் தொண்டாகக் கொண்டவர் இவர். அதிலும் அச்செயலை மிகுந்த அன்போடும் நெறி பிழையாமலும் ஆற்றியவர்.
போர்க் களத்தில் தோற்றவர்கள் தன்னிடம் வந்து அப்பகைவர்களை வென்று வந்தால் மாநிதியம் தருவதாகக் கூறினால்,அதனை ஏற்றுப் போர்க்களத்திற்குச் சென்று,பகைவரை வென்று, அப் போது கைப்பற்றிய பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து அவற்றைக் கூலியாக ஏற்றார்.. இவ்வாறு போர் முனைக்குச் சென்று பகைவரை வென்று வந்ததால் முனை அடுவார் என்று அழைக்கப் பட்டார்.
இவ்வாறு பெற்ற பொருள்கள் அனைத்தையும் சிவனடியார்களுக்கு நிரம்பக் கொடுத்ததோடு, சர்க்கரை, வாசனை உள்ள நெய், கறி, தயிர், பால் ஆகியவற்றோடு கூடிய சுவை உணவை அளித்து வந்தார். இதனைப்                   ” பன்னெடுநாள் ” செய்துவந்ததால் பெற்ற சிவபுண்ணியம், உமைகணவனது திருவருளால் அவரைச் சிவலோகத்தில் என்றும் இருக்குமாறு செய்தது. அதற்குக் காரணம் , நாயனாரது ” மாறாது அளிக்கும் வாய்மை ” என்று பெரிய புராணம் வாயிலாக அறிகிறோம்.
முனையடுவரது குருபூசைத் திருநாள்: பங்குனி மாதத்துப் பூரம்.

Posted in Nayanmars | Leave a comment