திருவையாற்றில் சப்த ஸ்தான விழா

31012013880தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில்  சித்திரை மாதத்தில்  திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது. , காவிரியின் வறண்ட படுகையில் கொதிக்கும் மணலில் கால்கள் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்து  பல்லக்குகளைச் சுமந்து வருவார்கள். கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனப்பட்ட்டால் தான் , பல்லக்கை ஏற்ற முடியும். சுடுமணலில் தென்னை ஓலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். கரை ஏறியவுடன் வீதிகளில் நீரைத் தெளித்தும் ,பல்லக்குத் தூக்கிகளுக்கு நீரும், மோரும் வழங்கியும் ஊர் மக்கள் தொண்டு செய்வார்கள்.

DSC01374சப்த ஸ்தான விழாவின் பின்னணியை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சிலாத முனிவருக்குத் தவப்புதல்வனாகத் தோன்றிய அதிகார நந்திகேச்வரருக்குத்  திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகை என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும் தர்மசம்வர்தனி அம்பிகையும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்குப்  பல்லக்கில் எழுந்தருளுகிறார்கள். அன்று இரவே, புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து, திருவையாற்றை அடைகிறார்கள்.

புது மணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு ,சித்திரை மாதத்தில் பௌ ர்ணமியை ஒட்டி வரும் விசாகத்தன்று திருவையாற்றை விட்டுக் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள ஆறு ஊர்களுக்கு எழுந்தருளி அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இவ்விழாவின் அடிப்படை. நோக்கம்.

திருவையாறு பல்லக்கு முதலில் கும்பகோணம் செல்லும் சாலையில்  சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பழனத்தை அடைகிறது. இது திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற தலம். இத்தலத்து இறைவரான ஆபத்சகாயர் , அம்பிகையுடன் பல்லக்கில்; எழுந்தருளி வீதி வலமாகத் திருவையாற்றுப் பல்லக்குடன் , திருவேதிகுடியை அடைகிறார். வேதங்களால் வழிபடப்பெற்ற வேதபுரீஸ்வரரும் தமது பல்லக்கில் மற்ற இரு பல்லக்குகளுடன் சேர்ந்துகொள்கிறார்.

DSC01348மூன்று பல்லக்குகளும் திருச்சோற்றுத்துறையை அடைகின்றன. மூவர் பாடலும் கொண்ட இத்தலம்  , கண்டியூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் அண்மையில் புதியதாகச் செய்யப்பெற்ற கண்ணாடிப்பல்லக்கில், ஒதனவநேச்வரரும்,அன்னபூரணி தேவியும் எழுந்தருளுகிறார்கள். தலத்தின் பெயருக்கு ஏற்ப அன்னதானம் செய்யப்படுகிறது. ஊரே விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது.

DSC01392நான்கு பல்லக்குகளும்  அஷ்ட வீரட்டத்துள் ஒன்றான திருக்கண்டியூரை வந்து அடைகின்றன. அங்கு பிரம்ம சிர  கண்டீஸ்வரர் அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளி, வீதி வலமாகத் திருப்பூந்துருத்தி என்ற பாடல் பெற்ற தலத்தை  அடைகிறார். அப்பர் பெருமான் பல காலம் தங்கி, சிவப்பணி செய்த இத்தலத்திலிருந்து ஆறு பல்லக்குகளும் காவிரிக்கரையில் உள்ள திரு நெய்த்தானத்தை வந்து சேர்கின்றன. தில்லைஸ்தானம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இப்பாடல் பெற்ற தலத்தில் ஏழு பல்லக்குகளையும்  கோயிலுக்குள் காணலாம். பாலாம்பிகையும் க்ருதபுரீஸ்வரரும் பல்லக்கில் எழுந்தருளி, ஏனைய ஆறு பல்லக்குகளுடன் திருவையாற்றை நோக்கிப் புறப்படும்போது தீபாராதனை, வாணவேடிக்கைகள் ஆகியன நடைபெறுகின்றன. ஏழு பல்லக்குகளும் திருவையாற்று வீதிகளில் எழுந்தருளி , ஐயாறப்பரின் திருக்கோயில் வாயிலை அடைந்தவுடன் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பிற தலங்களில் இருந்து வந்த பல்லக்குகள் தமது ஊருக்குத் திரும்புகின்றன.

கண் பெற்ற பயன் கண்ணாடிப் பல்லக்கைத் தரிசிப்பது தான். அது உண்மை என்பதை இவ்விழாவை நேரில் கண்டு களித்தவர்கள் உணர்வார்கள். ஒரே நேரத்தில் ஏழு தலத்து மூர்த்திகளையும் தக்ஷிண கயிலாயமான திருவையாற்றில் காணும்போது நம் கண்கள் நீர் பனிக்க,  அப்பர் பெருமானின் வாக்கான ” கண்டேன் அவர் திருப்பாதம் ; கண்டறியாதன கண்டேன்” என்ற பாடல் வரிகளை இசைத்து,  சிந்திப்பரிய ஐயாறன் அடித்தலத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கிறோம். கண்கள் அத்திருவடிகளை விட்டு அகல மறுக்கின்றன.

Posted in TEMPLE NEWS | Leave a comment

மயிலாடுதுறையில் கடைமுக உற்சவம்

ThulaUtsavam_Mayuram_Nov09 053”  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  ” ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர்,மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள். அதிலும் மயிலாடுதுறையில் பல இடங்களில் காசி விஸ்வநாதர் ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். காவிரிக் கரையில் காசியைப்போலவே டுண்டி கணபதிக்கும் கால பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. உத்தர மாயூரத்தில் வதான்யேச்வரர்  கோவிலில் உள்ள மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரசித்தி பெற்றது. ஐப்பசி அமாவாசை அன்று கைலாச வாகனத்தில் மேதா தக்ஷிணாமூர்த்தியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தம் தருகிறார்கள். அன்று காவிரியே கங்கை ஆகிவிடுகிறது. வரங்களை வாரிவழங்கும் வள்ளலாராக மூலவர் மேற்குப் பார்த்த சன்னதியில் காட்சி அளிக்கிறார். அம்பிகையும் ஞானத்தை வழங்கும் ஞானாம்பிகையாகத் தரிசனம் தருகிறாள்.

மாயூர நாதருக்கு நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்களில் வள்ளலாராக சிவ  பெருமான் கோயில் கொண்டுள்ளார். கிழக்கே விளநகரில் துறைகாடும் வள்ளல் , மேற்கில் மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், தெற்கில் வாக்கு வழங்கும் வாகீஸ்வர வள்ளல், வடக்கில் வதான்யேச்வர வள்ளல் ஆகிய நாற்றிசை வள்ளல்களுக்கு மத்தியில் கௌரி மாயூர நாதர் பெரிய கோவிலில் அபயாம்பிகையுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இப்பகுதியில் உள்ள உயர்ந்த ராஜ கோபு ரங்களில் இந்த ஆலயத்தின் கோபுரமும் ஒன்று.

DSC01540இவ்வளவு பெருமைகளுக்கும் மேலாக, ஐப்பசி முப்பது தினங்களும் காவிரியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள பெரிய கோவிலில் இருந்தும், வள்ளலார் கோவிலில் இருந்தும் சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் தரும் தனிச் சிறப்பு உடையது இந்த ஊர். கடைசி நாள் அன்று பெரியகோவிலில் இருந்து மட்டும் அல்லாமல், ஐயாறப்பர் கோயில், பாலக்கரை விஸ்வநாதர் கோயில், கடைத் தெரு விச்வநாதர் கோயில், வடகரையில் உள்ள துலாக்கட்ட விஸ்வநாதர் கோயில், வதான்யேச்வர சுவாமி கோயில் ஆகிய கோயில்களிருந்தும் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளுவர். இந்த உற்சவத்தை முன்னிட்டுப் பல வீடுகளில் வேத பாராயணங்கள் நடத்துகிறார்கள். தங்கள் வீட்டு வைபவமாகக் கருதி, வீதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று இறையருள் பெறுகிறார்கள்.

DSC01530தஞ்சை மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் பல தவில் வித்வான்களோடு இணைந்து ராஜ கோபுரத்தருகில் மல்லாரி வாசிப்பதைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம். கடைமுக உற்சவத்திலும் இப்படித்தான்.மழை விடாது பொழிந்தாலும்  இசைமழை நிற்காது. குடையைப் பிடித்தவாறே வாசிப்பார்கள். அவர்களது இந்த ஈடுபாட்டுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

DSC01526சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளுவதற்கு முன்பாகவே, மக்கள் கூட்டம் காவிரியில் இறங்கி ஆவலோடு பஞ்சமூர்த்திகள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் உற்சாகத்துடன் நீச்சல் அடித்த வண்ணம் இருப்பர் . நிறைவாக இருகரைகளிலும் தமது வாகனங்களோடு பஞ்ச மூர்த்திகள் நிற்பதைக் காண இரண்டு கண்கள் போதாது. தீர்த்தவாரி முடிந்து சுவாமி மண்டபத்தில் தங்கிவிட்டு இரவு ஒன்பது மணி அளவில் கோயிலுக்குத் திரும்புகிறார்.

வழி நெடுகிலும் பட்டு சார்த்தித் தீபாராதனைத் தட்டு சமர்ப்பிப்போர் பலர். சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு ரிஷப வாகனங்களில் எழுந்தருளுவதை எவ்வாறு வருணிக்க முடியும்? சுவாமிக்கு வெட்டி வேர் ஜடை சார்த்தியும், அம்பிகைக்குக் கல் இழைத்த ராக் கோடி சார்த்தியும் பின் அலங்காரங்கள் செய்யப்பட்டு நம் கண்களை விட்டு அகலாமல் நிற்கின்றன. இந்த தம்பதியரை தரிசிக்க என்ன தவம் செய்தோமோ என்று கண்ணீர் மல்க நெகிழ்கிறோம்.

இத்திருவிழாவைத் தரிசிக்க ஒரு முடவன் வடதிசையிலிருந்து இங்கு வந்து  சேர்ந்தபோது, ஐப்பசி மாதம் முடிந்து  கார்த்திகை மாதம் பிறந்து விட்டதால் தமக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே என்று மனம் உடைந்தபோது, அவனுக்கு இரங்கிய பெருமான், இன்றும் உனக்காகக் காவிரியில் தீர்த்தம் தருகிறோம். அதில் மூழ்கினால் ஐப்பசி முப்பது நாளும் மூழ்கிய பலன்களைப் பெறுவாயாக என்று அருள் செய்தார் அக் கருணாமூர்த்தி. இப்போதும் அதுபோலவே கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் முழுக்கை,  முடவன் முழுக்கு என்று அழைக்கிறார்கள்.

Posted in TEMPLE NEWS | Leave a comment

திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் உற்சவம்

 IMG_1720

திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்குவதற்காக விநாயகப் பெருமான் சிவபூஜை செய்ததால் சுவாமிக்குக் கணபதீஸ்வரர் என்றும் ஆலயத்திற்குக் கணபதீச்வரம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அசுரனுடைய இரத்தம் பெருகி ஆறாக ஓடியபடியால், இத்தலம் செங்காட்டங்குடி எனப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி, திருமருகலில் இறங்கி அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். ரயிலில் வருபவர்கள் நன்னிலத்தில்     இறங்கிக்  காரைக்கால் ,நாகை செல்லும் பேருந்துகள்  மூலம் திருமருகலை அடையலாம். திருவாரூரிலிருந்தும்  பேருந்து மூலம் திருச்செங்காட்டங்குடியை வந்து  அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் நந்தி,கொடிமரம்,அலங்கார மண்டபம் அம்பாள் சன்னதி ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, உள்ளே நுழைகிறோம். அடுத்த பிராகாரத்தில் அமைந்துள்ள திருமாளிகைப்பத்தியில்  சிறுத்தொண்ட நாயனார்  தனது குடும்பத்தினருடன் உத்திராபதீஸ்வரர் சன்னதியை நோக்கி அஞ்சலி செய்தவராகக் காட்சி தருகிறார். எதிரில் மிகப்பழமையான ஆத்தி மரம் இருக்கிறது. மூல சன்னதியில் கணபதியால் வழிபடப்பெற்ற கணபதீஸ்வரர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் வாதாபி கணபதியின் சன்னதி இருக்கிறது.

சிவனடியார்க்கு நாள் தோறும் அமுதளிப்பதை நியமமாகக்கொண்ட சிறுத்தொண்டரைச்  சோதிக்க ,பைரவக் கோலத்தோடு உத்திராபதியாராக வந்த சிவபெருமானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சிறுத்தொண்டர், வந்தவர் கேட்டபடியே, மனமுவந்து, தனது ஒரே மகனான சீராளனைத் தன் மனைவியார் பிடிக்கத்,  தானே அரிந்து அமுதாக்கி , அடியவர்க்குப் படைத்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் திருவருளால் அக்குழந்தை உயிர்பெற்றதோடு, அவனது பெற்றோரும்,தாதியாரும் காணும்படியாக, உமையும் கந்தனும் தன்னோடு ரிஷப வாகனத்தில் வர, அவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார். வழி நெடுகிலும் சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.

நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். சிவனடியாரைத்தேடிக்கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்ட படியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர் , பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடுகிறார்கள். இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார் , சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமுது படைக்கும் பொது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி,தாதி ஆகியோருடனும்  கோயிலை  நோக்கி வரும்போது,தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. பாடல்கள் இசைக்கப்படுகின்றன. தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார்.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவபுண்ணியம் தான்! ” சிறுத்தொண்டன் பணி செய்ய” அதனைப் பெருமான் அன்று ஏற்று அருளியவாறு, இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் அமுது படையல் உற்சவத்தில் காணலாம். எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் “செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே”  என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.

Posted in TEMPLE NEWS | Leave a comment

உருத்திர பசுபதி நாயனார்

“உருத்திர பசுபதிக்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்றவர்   தலையூர் என்ற தலத்தில் தோன்றிய ருத்திர பசுபதி நாயனார். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளது. குருபூஜை இந்த இரண்டு இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பசுபதி என்ற இயற்பெயரோடு விளங்கிய நாயனார், அனுதினமும் கழுத்தளவு நீரில் நின்று ,இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததைப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மறையின் பயனாக ருத்ர மந்திரம் திகழ்வதைச்  சேக்கிழார் பெருமான்,

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை

வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே  திருமலர்

பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்

ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

இவ்வாறு இரவும் பகலும் முறை வழுவாது ருத்ர பாராயணம் செய்தமையால் உலகத்தோர் அவரை ருத்ர பசுபதியார் என்று அழைக்கலாயினர்.

பாராயணம் செய்வோரது கவனத்திற்குப்  பெரியபுராணத்திலிருந்து உணரப்படும் கருத்துக்களைக் காண்போம். பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை ,

” தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி  நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்.”

என்ற வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

அவரது பாராயணம் அரும் தவமாகிறது. கழுத்தளவு நீரில் அத்தவச்சுடர் நிற்பதை ,

” நீரிடை நெருப்பு எழுந்தனைய ” என்று காட்டுவார்  தெய்வச் சேக்கிழார். பிரமதேவனைப்போல் ஜொலிக்கிறார் நாயனார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது  ” ஆடு சேவடி அருகுற அணைந்தனர்.”  என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஸ்ரீ ருத்ர பாராயணத்தை உள்ளன்போடு இடையறாது நாயனார் செய்து வந்ததால்  ஸ்ரீ பரமேச்வரனை மகிழ்வித்தது.. அதைத்தான் சேக்கிழாரும், ” உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.” என்கிறார்.

புரட்டாசி மாத அச்வினி நன்னாள், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ பரமேச்வரனது குஞ்சித பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூஜை  பலதலங்களில் நடைபெறுகிறது.

நாம் அனு  தினமும் பாவங்களைச் செய்கிறோம். அதற்குப் ப்ராயச்சித்தமாகச் சொல்லப்படுவது ருத்ர பாராயணம். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் எல்லாப் பாவமும் நீங்குவர். பிணிகளிலிருந்து விடுபடுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வம் பெறுவர். இவ்வாறு அதன் பலன் அளவிடமுடியாததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருளுமாறு இறைவனை ருத்ர மந்திரம் வேண்டுகிறது. நம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறது.

ருத்ர பகவானே! எங்களது பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தவேண்டாம்   (மாநோ மஹாந்த முத மாநோ அர்ப்பகம் மாந உக்ஷந்த முதமான உக்ஷிதம் ) யௌவனர்களையும் ,   கருவிலுள்ள சிசுக்களையும் துன்புறுத்தவேண்டாம்.மேலும் எமது தாய் தந்தையரையும் , பிரியமானவர்களையும் துன்புறுத்தவேண்டாம்.( மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ் தனுவோ ருத்ர ரீரிஷா:) உமது மங்கள உருவத்துடன் எங்களிடம் காக்க வேண்டி வருவீராக.இந்த அழியும் சரீரத்தில் அழியாத சுகத்தை அளிப்பீராக. உமது கணங்கள் சத்ருக்களை அழிக்கட்டும்.  (ம்ருடா ஜரித்ரே ருத்ரஸ்தவா நோ அன்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேனா: ) இப்படி பினாகபாணியும், நீலக்ரீவனும் , ஸஹஸ்ராக்ஷனும், கபர்தியும் ,பசுபதியும் ஆகிய பரமேச்வரனை வேதம் துதிக்கிறது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக பஞ்சாக்ஷர மஹா மந்திரம் நடுநாயகமாகத் திகழ்வது இதன் ஒப்பற்ற பெருமையைக் காட்டுகிறது. எனவே ஸ்ரீ ருத்ரத்தின் பெருமைகளை அறிந்து  அதனை ஜபித்து, ஆத்ம பூஜையும், ஆலய பூஜையும் நடைபெற்றால் வீடு மட்டுமல்ல. நாடே நலம் பெறும்.

Posted in Nayanmars | Leave a comment

இயற்பகை நாயனார் சரித்திரம்

DSC01646

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு  சுவாமிகளாலும் பாடப்பெற்றது.  சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார். உட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.

எதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும்  சொல்லும் காலம் இது.  தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், ” இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் ” என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள். இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், ” உனது மனைவியை வேண்டி வந்தனம்” என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு ” எம்பிரான் செய்த பேறு ”  என்றவாறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் ” உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் “: என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், ”  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ ” என்று தனது ” தனிப் பெரும் கணவனாரை ” வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், ” யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்” என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், ” இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் ” என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தன மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, ” இயற்பகை முனிவா ஓலம்” என்று அழைத்தான். அதோடு, ” செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் ” என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், ” இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? ” என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், ” உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இயற்பகை நாயனார்  வீடு பேறு பெற்ற திருநாளான  மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

Posted in Nayanmars | Leave a comment

ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்

ஸ்ரீ  மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்

Manikkavasagar2

மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு  அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் “தென்னவன் பிரமராயன்” என்ற பட்டத்துடன் விளங்கினார் வாதவூரர். இளமையிலிருந்தே சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

பாண்டியனது குதிரைபடைகளுக்குக் குதிரைகள் வாங்குவதற்காக அரசனிடம் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்று, பல ஊர்களைக் கடந்து திருப்பெருந்துறை என்ற தலத்தை அடைந்தார். அங்கு ஓர் குருந்த மர  நீழலில் சீடர்களோடு பரம குருநாதனான சிவபெருமானே எழுந்தருளி இருந்தார்.நாம் இதுவரை நாடிய குரு நாதர்  இவரே எனத் தெளிந்தார்.இறைவனும் அவருக்குத் தீக்ஷைகள் தந்தருளி, உபதேசம் செய்தருளினார். தன்னை ஆட்கொண்ட குருநாதரைத் துதிக்கு முகமாகத் திருவாசகப்பாடல்கள் பாடலாயினர் வாதவூரர். இதைக்கேட்டு மகிழ்ந்த பரமன், அவருக்கு மாணிக்க வாசகன் என தீக்ஷா நாமம் வழங்கினான்.

பாண்டியன் குதிரை வாங்குவதற்காகத் தந்த பொருளைக் கொண்டு  திருப்பெருந்துறையில் திருக்கோயிலைக் கட்டினார் . இச்செய்தி பாண்டியனுக்குத் தெரிந்தவுடன் குதிரைகளுடன் உடனே புறப்பட்டு வருமாறு ஓலை அனுப்பினான். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொல்லி அனுப்புமாறு குருநாதர் அருளவே, மணி வாசகரும்  அவ்வாறே தெரிவித்தார். உண்மையில் குதிரைகள் வாங்கப்பெறவில்லை என்பதை அறிந்த பாண்டியன் அவரைப் பலவாறும் துன்புறுத்தினான். வாதவூரரின் துன்பத்தைத் தீர்க்க வேண்டிப்  பெருமானே, வேதக்குதிரையின்  மீது அழகனாக எழுந்தருளினான். நரிகளைக் குதிரைகளாக்கிப் பின் வரச்செய்தான்.

பாண்டியன் அதிசயிக்குமாறு குதிரைப்படைகளை நடத்திக் காட்டினான் படைத்தலைவனாக வந்த பரமன். பாண்டியன் தந்த பட்டாடையைத் தன செண்டால் ஏற்றுக்கொண்டான். இதனால் வெகுண்ட மன்னன் சினம் கொள்ள, அதனை மாற்றினார் மணிவாசகர். குதிரைகளைக் கயிறு மாற்றிக் கொடுத்தபின்னர் , இறைவன் மறைந்தான். அன்று இரவு, குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறின. அரசனும் சினம் கொண்டு, வாதவூரது தலை மீது கல்லை ஏற்றி வைகைச் சுடு மணலில் நிற்கச் செய்தான். துன்பம் கெடுத்து இன்பம் அருளும் பெருமான், வைகையில் வெள்ளம் வரச் செய்தான். நகரவாசிகள் மன்னன் ஆணைப் படி மண் கொண்டு வைகைக் கரையை அடைக்கலாயினர். வந்தி என்ற  பிட்டு விற்கும் மூதாட்டிக்கு உதவ யாரும் இல்லாததால் இறைவனே கூலியாளாக வந்து அவளிடம் பிட்டைப் பெற்று  உண்டு மகிழ்ந்தான். ஆனால் அவன் வேலை செய்யவில்லை என்று பணியாட்கள் மூலம் அறிந்த பாண்டியன், தனது பிரம்பால் பெருமானின் முதுகில் அடிக்கவே, அகில உலகில் உள்ள உயிர்கள் மீது அந்த அடி விழுந்தது. கூடையில் இருந்த மண்ணை ஆற்றில் கொட்டிவிட்டுப் பெருமான் மறைந்ததும் ஆற்று வெள்ளம் நின்றது. பிழை உணர்ந்த பாண்டியனும் வாதவூராரிடம் மன்னிப்பு வேண்டினான். வாதவூரடிகள் தனது அரச பதவியைத் துறந்து, சிவத் தொண்டாற்ற விரும்பவே, அரசனும் இது இறைவனது திருவுள்ளம் எனத் தெளிந்து அவருக்கு விடை கொடுத்தான்.

மீண்டும் தன் குருநாதரை அடைந்து திருவாசகப் பாமாலை சூட்டி மகிழ்ந்திருந்த வேளையில் , பல தலங்களையும் தரிசித்துவிட்டுத் தில்லைக்கு வருவாயாக என்று அருளியபின் பெருமான் மறையவே , பிரிவால் துன்புற்றார் மணிவாசகர்.

உத்தரகோசமங்கை,திருவிடைமருதூர்,திருவாரூர்,சீர்காழி, ஆகிய தலங்களை வணங்கித் திருவண்ணாமலையை அடைந்து திருவெம்பாவைப் பாடல்களை அருளினார். பின்னர் தில்லையை அடைந்து, பொன்னம்பலைக்கூத்தனைத் தரிசித்துப் பல பாடல்கள் பாடியருளினார் அடிகள். அப்போது ஈழ நாட்டரசனது  பெண்ணின்  ஊமைத்தன்மை நீங்குமாறு திருச் சாழல் பாடினார். புத்தர்களை   வாதில் வென்றார். இறைவனே அந்தணனாக எழுந்தருளி அவர் பாடிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் தனது திருக் கரங்களால் எழுதிக் கையொப்பமிட்டு, தில்லைச் சிற்றம்பலத்தின் பஞ்சாக்ஷரப் படியில் வைத்து மறைந்தான்.

மறுநாள் காலை அவ்வோலைச்சுவடிகளைக் கண்ட தில்லை வாழந்தணர்கள் , இறைவனது கட்டளைப்படி மாணிக்கவாசகரைத் தில்லை அம்பலவனின் திருச்சன்னதிக்கு அழைத்து வந்து அத் தெய்வீக நூல்களின் பொருளை விளக்கியருளுமாறு வேண்ட, அடிகளும் எல்லோரும் காணுமாறு அதன் பொருள் அம்பலவனே என்று கூறி, குஞ்சித பாத கமலங்களில் இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைப் பெற்றார்.

 

Posted in More Shiva Devotees | Leave a comment

திருமூலதேவ நாயனார் சரித்திரம்

                                             திருமூலதேவ நாயனார்  சரித்திரம்

Sidhdha

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூலரை , ” நம்பிரான் திருமூலன் ” என்று பரவுகிறார் சுந்தர மூர்த்தி நாயனார். திருக்கயிலாயத்தில் நந்திதேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள்   ஒருவர் திருமூலர். அஷ்ட சித்திகளையும் ஒருங்கே பெற்ற இந்த சித்த புருஷர், அகத்திய முனிவரைத் தரிசிக்க வேண்டித் தென் திசையில் உள்ள பொதிகை மலையை நோக்கிப் பயணிக்கையில், வழியில் திருக்கேதாரம், நேபாளத்திலுள்ள பசுபதி நாதம், காசி, திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலம், காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை வீரட்டானம், சிதம்பரம் ஆகிய தலங்களைத் தரிசித்தவராகத் திருவாவடுதுறைக்கு அண்மையில் உள்ள சாத்தனூர் என்ற ஊரை அடைந்தபோது , பசுக்களை மேய்க்கும் மூலன் என்ற இடையன் ஒருவன் மாண்டு கிடப்பதையும் அவனைச் சுற்றி நின்று, அவன் மேய்த்த பசுக்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதையும் கண்டார்.

பசுக்களின் துயரம் தீர்க்க வேண்டித் தனது உடலை ஓரிடத்தில் வைத்து விட்டு, மூலனது உடலில் புகுந்தார். உயிர் பெற்று எழுந்த மூலனைக் கண்டு பசுக்கள் துயரம் நீங்கி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன. மூலனது மனைவியார் அவரைத் தனது கணவன் என்று எண்ணி , வீட்டுக்கு வரும்படி கூப்பிட, அதனை மறுத்த  திருமூலர் அவளை நீங்கினார். தனது பழைய உடலைக் காணாது போகவே, மூலனது உடலில் இருந்தபடியே திருவாவடுதுறையை அடைந்து அரச மர  நீழலில் அமர்ந்து யோகத்திலிருந்து, ஆகம சாரமாகத் தமிழில் ஆண்டுக்கு ஒரு பாடலாக,மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தார். பன்னிரு திருமுறைகளுள், இந்நூல் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது. இந்நூலின் அமைப்பினைச் சுருங்கக் காண்போமாக:

பாயிரம்: கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திருமூலர் வரலாறு ஆகியன.

முதல் தந்திரம்: உபதேசம்,யாக்கை நிலையாமை,செல்வம் நிலையாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணாமை  ஆகியன.

இரண்டாம் தந்திரம்: அட்ட வீரட்டம்,இலிங்க புராணம், பஞ்ச கிருத்தியம்  கர்ப்பக் கிரியை, சிவ நிந்தை, குருநிந்தை ஆகியன.

மூன்றாம் தந்திரம்: அட்டாங்க யோகம்,அட்ட மாசித்தி ஆகியன.

நான்காம் தந்திரம்: திரு அம்பலச் சக்கரம்,நவகுண்டம்,வயிரவி மந்திரம் ஆகியன.

ஐந்தாம் தந்திரம்: சரியை,கிரியை,யோகம்,ஞானம்,சத்தினி பாதம் ஆகியன.

ஆறாம் தந்திரம்: குரு தரிசனம் , திருநீறு, துறவு, தவ வேடம், ஞான வேடம் ஆகியன.

ஏழாம் தந்திரம்: ஆறாதாரம், சிவ பூஜை, குரு பூஜை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் ஆகியன.

எட்டாம் தந்திரம்: அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி ஆகியன.

ஒன்பதாம் தந்திரம்: பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷனை, தோத்திரம் ஆகியன.

மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவரன்றே.

— திருமந்திரம்

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு

முடிமன்னு கூனற் பிறையாளன்  தன்னை முழுத் தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டு எ(ன்)னுச்சி

அடிமன்ன வைத்த பிரான் மூலனாகின்ற அங்கணனே.

— திருத்தொண்டர் திருவந்தாதி

Posted in Nayanmars | Leave a comment

Transformation at Karupur

Karupur Kumbabishekam (29) Karupur Kumbabishekam (36)

It is unbelievable but true. The scene we saw at Karupur, near Aduthurai, a year back has transformed completely. Lord Garbapureeswara whose sanctum was the only shrine left behind as the sub shrines of the age old Temple had completely dilapidated. Even the eldest of the village could not say when the ruin had started. They assumed that this was the status for many centuries and nobody came forward to rebuild it. But the place continued to carry the historic name as Karupur in official records. It was known as Garbapuri as it granted the prayer of couples who prayed for a child. The Lord and the Goddess,Garba Prathambikai grant the wish even today. It is amazing to see such a powerful place getting transformation during our lifetime.
We saw the Temple for the first time when Ardhra Foundation involved itself in building a shrine for the Goddess at Peravur,located about 2 km from Karupur. The sorry state of the totally crumbled structure of the Sanctum at Karupur had a severe impact on us. We felt that the Temple had to be restored at the earliest . Sharing the news through social media had little impact and it was dissapointing to note people failing to extend even a verbal support. But the Grace of God was the only source of strength to go ahead with the project with the liberal contibution from our Trust members. We knew the limitation of the villagers who relied only on agriculture . Since they could not take over a sizable part of the renovation and consecration, AF took away the pressure from them and completed the project with the set target of conducting the consecration ceremony in the Tamil month of “Thai ” which is the beginning of “Utharayanam ” with the auspicious day in Suklapaksham.
It was originally thought to remove the tall trees rooted deep into the vimanam of Swami vimanam. Once the work started,it was realised that the whole structure right from the foundation was too weak as it was made of bricks. Reloading with fresh bricks was just impossible since the foundation could not withstand the load over it. Hence it was decided to take photographs of the old structure and rebuild on the same lines. Granite stones were used for laying the foundation. The entrance to both Swami and Devi Sannadhis were also provided with granite stones.
After carefully studying the old structure, vimanam was raised over the Sanctum. The next big task was to go for new idols of Ganapathi,Subramanya,Gabaprathambika, Nandi, Chandikeswara as the same were not there. These idols were made after careful selection of suitable granite stones and sent to Karupur. They were placed under grains for about a fortnight and also under water for the same period.
The Prakaram was cleaned well and the new Sannadhis for Ganapathi, Subramanya, Goddess, and Chandikeswara were built. But then the dire need of the hour was a compound wall. Since there were no donors for the ambitious work that could cost very high, we were content to build a fence around the Temple complex.
Ardhra Foundation wishes to place on record the timely support extended by well wishers who arranged for Ashtabandhanam, flowers and Homam materials meant for Yagasalai.
The holy water was brought from River Veera Chozhan , a tributory of Cauvery that flows nearby. It was kept in front of Sri Athitheswara Swami at Peravur ,2km from Karupur. Then it was brought to Karupur Temple and the priliminary Pujas like Ganapathi Homam,Navagraha Homam,Mruthsangraharanam began simultaneously. Yagasala Pravesam was followed by Kala Pujas in the evening.
Rituals as pescribed by Agamas were carried out for new idols ,by performing Pujas to the Holy Cow, Dhampathis, Veda Vith, Kanya,Brahmachari and Suvasini.
The new idols were installed in the respective places and Ashtabandhanam was applied for all Murthis.
People assembled to witness 4th Kala Puja and Poornahuthi on Sunday, 1st February in large numbers. Thiruvavaduthuai Mutt Thambiran Swamigal and Komal Sri Sekar graced the occasion. Gatams were taken in a procession and reached the top of the Vimanams. The crowd was thrilled to see Garuda making circles around the Temple at the Time of Consecration. The Holy water was poured over the Kalasams of all vmanams and sprinkled on the devotees. It was followed by Mahabhishekam at all Sannadhis.
Good arrangements were made duing the occasion and AF thanks all those who worked together to receive the blessings of Sri Garbapureeswara Swami and Sri Garbapradhambika Devi. May The Divine couple shower their blessings to all. It was indeed a great satisfaction not only to Ardhra Foundation but to the villagers of Karupur as well.

Posted in Renovation | Leave a comment

Ardhra Festival at Chidambaram

  • : Dwajarohanam
  •  Night: Chandra Prabha vahana Dharshan
  • Night: Surya Prabha Vahana Dharshan
  • Night: Bootha Vahana Dharshan
  • Night: Elephant Vahana Dhashan
  • Morning: Elephant Vahana Dhashan
  • Night: Kailasa Vahana DharshanNight: Bhikshadana Dharshan
  • : Nataraja Rathothsavam
  •  3 A.M: Nataraja Abhishekam
  • Noon: Ardhra Dharshanam. Sithsabha Pravesam

Please check the exact dates.

Posted in TEMPLE NEWS | Leave a comment

சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம்

Thirunavalur_Sundarar

                                                   சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம் 

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றி ,இறைவனிடம் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், ஒருசமயம் யாவரும் நெருங்கவும் முடியாத ஆலகால நஞ்சை இறைவனின் ஆணைப்படிக் கொண்டு வந்ததால் ஆலால சுந்தரர் எனப்பட்டார். ஒருநாள் நந்தவனத்தில் மலர் கொய்யும்போது,,உமாதேவியின் சேடியர்களான கமலினியும் அனிந்திதையும் அங்கு வந்தனர். இறைவனது திருவிளையாட்டினால் அவர்களிடையே அன்பு மலர்ந்தது. இதனைக் காரணமாகக் கொண்டு, அம்மூவரையும் நில உலகில் பிறக்குமாறு கட்டளை இட்டருளினான் பெருமான். இவ்விருவரையும் மணம் புரிந்து வருமாறு சுந்தரருக்குப் பணித்தான் பரமன்.

ஆலால சுந்தரரும் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகனாக அவதரித்தார். அவரை நரசிங்க முனையரையர்  என்ற சிற்றரசர் வளர்த்து வந்தார். மணப்பருவம் வந்தபோது புத்தூர் சடங்கவி என்பவரது பெண்ணை மணம் செய்ய நிச்சயித்தனர். திருமணச் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வயதான அந்தண வடிவில் சிவபெருமான் அங்கு எழுந்தருளி, சுந்தரன் எனக்கு அடிமை. என்று கூறி அம்மணத்தைத் தடுத்து ஆண்டார். முன்னோர்கள் எழுதித்தந்த ஓலையைக் காட்டியவுடன் சபையோர்கள் இனி எதுவும் செய்ய இயலாது. நீ இந்த வெண்ணெய்நல்லூர் அந்தணனுக்கு அடிமை என்றனர். ஓலை காட்டி ஆண்ட வள்ளலும் சுந்தரரைத் திருவெண்ணெய் நல்லூர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று மறைந்தருளினார். அர்ச்சனை நமக்குப் பாட்டே ஆவதால் தமிழால் நம்மைப் பாடுக என்று கூறிப் , “பித்தா” என்று அடி எடுத்துக் கொடுத்தான் அருட்துறை அண்ணல். சபையில் வன்மை பேசியதால் “ வன்தொண்டன் ” என்ற நாமத்தையும் தந்தருளினான்.சுந்தரரும் ஆண்ட வள்ளலைப் “ பித்தா பிறை சூடி” எனப் பாடத் தொடங்கினார்.

பல தலங்களிலும் இறைவனைப் பாடும் தொண்டை மேற்கொண்ட சுந்தரர்,திருவதிகையில் இறைவனது பாத தீக்ஷை பெற்றார். தில்லையைத் தரிசித்தபோது, சிவபிரான் அசரீரியாகத் திருவாரூருக்கு வா என்று அருளினான்.ஆரூர்ப் பெருமான் இவரைத் தோழனாக ஏற்றமையால், “தம்பிரான் தோழர்” என்ற நாமம் ஏற்பட்டது. அங்கு பணி செய்து வந்தவரும் கமலினியின் அவதாரமுமான பரவையைத் தியாகேசன் அருளால் மணந்தார். ஆரூர்க் கோயிலில் தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த அடியார்களை முதலில் வழிபடாமல் நேராக இறைவனது சன்னதிக்கு சுந்தரர் சென்றதைக் கண்டு விறன்மிண்ட நாயனார் வருந்தவே, இறைவன் சுந்தரருக்குத் திருத் தொண்டத் தொகை பாட அடி எடுத்துக் கொடுத்தான்.

சிவதருமத்திற்காக நெல் வேண்டி திருக் கோளிலி இறைவரைப் பாடியவுடன் குண்டையூரிலிருந்து நெல் மலை ஆட்களுடன் ஆரூருக்கு வந்து சேர்ந்தது. திருநாட்டியத்தாங்குடியில் கோட்புலியாரின் மகள்களைத் தன மக்களாகவே எண்ணிப் பாடலாயினார். திருப்புகலூரில் செங்கல்லில் தலை வைத்துப் படுத்துக் கண் விழித்தபின் அது பொன்னாக மாறி இருக்கக் கண்டு, திருவருளை வியந்து பதிகம் பாடினார். திருமுதுகுன்றில் பாடிப் பெற்ற பரிசான பன்னீராயிரம் பொன்னையும் மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் திருக்குளத்தில் பதிகம் பாடி மீண்டும் பெற்றார். திருக்குருகாவூரிலும் திருக்கச்சூரிலும் இறைவனே நேரில் எழுந்தருளி கட்டமுது தந்து இவரது பசி தீர்த்தார்.

திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்கு எழுந்தருளியபோது, அங்கு வந்த அனிந்திதையின் அவதாரமான சங்கிலியாரைக் கண்டார். இருவருக்கும் சிவனருளால் திருமணம் நடந்தது. ஒற்றியூரை நீங்கேன் என மகிழடியில் சபதம் செய்திருந்தும், ஆரூர்ப் பெருமானது வசந்த உற்சவம் வருவது கண்டு ஒற்றியூரை நீங்கும் போது கண் பார்வையை இழந்தார். வெண்பாக்கத்தில் இறைவன் கோலைக் கொடுத்து அருளினார். பின்னர் காஞ்சியில் இடக்கண்ணும் திருவாரூரில் வலக்கண்ணும் பெற்றார். பரவையாரின் பிணக்கு நீங்கப் பரமனே தூது சென்றார். இதற்கு வருந்திய ஏயர்கோன் கலிக்காம நாயனாரைத் திருப்புன்கூரில் சுந்தரருக்கு நண்பராக்கியது திருவருள்.

சேரஅரசரான சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரின் ஆருயிர் நண்பராயினார். திருவையாற்றில் பதிகம் பாடியவுடன் காவிரி ஆறு விலகி வழி விட்டது.அவினாசியில் முதலை உண்ட அந்தணச் சிறுவனை அவிநாசியப்பர் அருளால் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஆரூரர்.

திருவஞ்சைக்களத்தில் சேரர் அரண்மனையில் தங்கியிருந்த காலத்தில் தம்மைக் கயிலைக்கு வரப் பணித்தருளுமாறு அஞ்சைக்களத்து அப்பரிடம் விண்ணப்பிக்க, இறையருளால் அங்கு வந்த வெள்ளை யானையின் மேல் ஏறிப் பதிகம் பாடியவாறே சுந்தரர் கயிலைக்குச் சென்றடைந்தார். பரவையும் சங்கிலியும் முன்போலவே அம்பிகையின் சேடியர்கள் ஆயினர். சேரமானும் தமது குதிரையில் ஏறி சுந்தரருடன் கயிலை அடைந்து பெருமான் முன்னிலையில் தான் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றினார். 8-ம் நூற்றாண்டில் பதினெட்டே ஆண்டுகள் வாழ்ந்தருளிய சுந்தரர் திருக்கயிலையை ஆடி மாதம் சுவாதி நன்னாளன்று அடைந்தார். “ வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி”

Posted in Nayanmars | Leave a comment