- ஆலயத்திற்குச் சுற்றுச்சுவர் (குறைந்தது எட்டு அடியாவது)இருத்தல் மிகவும் அவசியம்.
- சுவற்றைச் சுற்றிலும் தூய்மை காக்கப் படவேண்டும்.
- சுவர்களில் எவ்வித விளம்பரமும் இருக்கக் கூடாது.
- கோவில் வாயிலிலும் சுவற்றை ஒட்டியும் ஆலயக் குப்பைகளைக் கொட்டக் கூடாது.
- ஆலயத்தின் தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகை இருத்தல் வேண்டும்.
- ஆலய சொத்து மற்றும் வரவு பற்றிய அறிவிப்புப் பலகை இருக்க வேண்டும்.
- ஆலய பிராகாரத்தில் கடைகளோ, கழிப்பிடமோ இருக்கக் கூடாது.
- ப்ராகாரங்களில் உள்ள அலங்கார மண்டபம் மற்றும் திருக் கல்யாண மண்டபம் போன்றவை அதற்குரிய வகையில் பயன் படுத்தப்பட வேண்டும். தேவை இல்லாத காலங்களில் இம்மண்டபங்கள் பூட்டி வைக்கப் பட வேண்டும்.
- வாகன மண்டபங்களில் மட்டுமே வாகனங்கள் மூடி வைக்கப் படவேண்டும். மாதம் ஒருமுறை அம்மர வாகனங்கள் கரையானால் பாதிக்கப்படாமல் இருக்கிறனவா என்று நிர்வாகத்தினர் பார்வையிடவேண்டும்.
- மர வாகனங்கள் வண்ணம் பூசப்பெற்று பொலிவுடன் விளங்க வேண்டும்.
- பிராகார நடைபாதையில் முட்களோ கற்களோ இருத்தலாகாது.
- ப்ராகாரங்களில் புதர்கள் மண்டுவதை அனுமதிக்கக்கூடாது.
- இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது பிராகாரங்களிலும், விமானங்களிலும்,கோபுரத்திலும் துளிர்விடும் நிலையில் உள்ள சிறு செடிகள் கண்டிப்பாக அகற்றப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- பாடல் பெற்ற தலமாக இருந்தால் , பதிகக் கல்வெட்டு, மக்கள் படிக்க வசதியான, வெளிச்சம் உள்ள இடத்தில் அமைக்கப் பட வேண்டும்.
- மேற்கூரை ஒழுகாமல் இருக்கிறதா என்பதை மழை நின்றவுடன் கண்டறிந்து உடனே ஆவன செய்ய வேண்டும்.
- மின் சாதனங்கள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்று தக்கோர் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை கண்டறிய வேண்டும்.
- கர்பகிருகத்தில் மின்சார விளக்குகள் பயன் படுத்தக் கூடாது.
- ஆலயக் கதவுகளும், சன்னதிக்கதவுகளும் உறுதியாக இருக்க வேண்டும். அவற்றில் தொட்டிப் பூட்டு போடும் வசதி இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
- பிரதான வாயிலில் கதவில் எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட வேண்டும்.
- மெய்க்காவலாளி மறைவிடத்திலிருந்து கண்காணிப்பதோடு, திருடர் வரும்போது, அவர்கள் கண்ணில் படாத இடத்திலிருந்து, ஆலய மணியை அடிக்கச் செய்யவேண்டும்.
- மின்சாரம் தடைப்பட்டால், ஒளி வழங்க இன்வெர்ட்டர் பொருத்தப்பட்டு ஆ ண்டு தோறும் பராமரிக்கப்படவேண்டும்.
- உற்சவ மூர்த்திகள் ஆலயத்தில் தகுந்த பாதுகாப்புக் கொண்ட அறைகளிலேயே இருக்க வேண்டும்.
- ஆலயம் தினமும் தூய்மையாக இருக்கவும், நந்தவனப் பூக்களைப் பறித்துத் தொடுத்துத் தரவும் ஒரு பணியாளர் இருக்க வேண்டும்.
- நந்தவனம் தகுந்த அளவில் பாதுகாக்கப்படுவதோடு, நீர் பாய்ச்சப்பட வேண்டும்.
- ஆலயத் திருக்குளம் பாசிகள் இன்றிப் பராமரிக்கப்படவேண்டும். நீர் வறண்ட காலத்தில் தூர் வாரப்படவேண்டும். நீராடும் படித்துறைகள் நன்கு அமைக்கப்படவேண்டும். நீரில் சோப்பு, துணி கழுவுதல், காய்கறிகளை அலசுதல்,குப்பைகளைக் கொட்டுதல் ஆகியவை தடை செய்யப்படவேண்டும்.
- பிராகாரக் கிணற்றிலிருந்தே அபிஷேக நீர் நேராகவோ, பம்ப் மூலம் உரிஞ்சப்பட்டோ அபிஷேகத்திற்கு (மட்டும்) பயன் படுத்த வேண்டும்.
- ஆலயச் சுவர்களிலும் சன்னதிகளிலும் சுவற்றில் எழுதவோ, எண்ணெய்க் கைகளைத் தடவுவதோ கூடாது.
- விளக்கேற்றும் சன்னதிகளில் அகல்கள் வைக்க ஒரு “ட்ரே ” வைக்கப்படவேண்டும்.
- அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் , பிற நேரங்களில் மூடிவைக்கப் படுவதால் , எலி,பாம்பு போன்றவை கர்பக்கிரகத்துள் நுழைவதைக் கட்டுப்படுத்தலாம்.
- கோமுகத்திலிருந்து வெளியேறும் நீர், தகுந்த வகையில் உடனுக்குடன் அகற்றப்பட்டு , துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சன்னதிகளில் தூண்களில் விபூதி-குங்குமத்தைக் கொட்டாதபடி, சிறு கிண்ணங்கள் அமைக்கப்படவேண்டும்.
- பசுஞ் சாணத்திளிருந்து தயாரிக்கப்பட்ட விபூதியும், தூய மஞ்சள் குங்குமமும் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
- ஏற்றப்படும் விளக்குகளை வாரம் ஒருமுறையாவது சுத்தப்படுத்தவேண்டும்.
- அழுக்கான ஆடைகள் தெய்வத் திருமேனிகளுக்கு ஒருபோதும் சார்த்தக்கூடாது. தினமும் தோய்த்து உலர்த்தப்பட்ட ஆடைகள் மட்டுமே அணிவிக்கலாம்.
- செயற்கைப் பூக்கள்,மற்றும் ஆபரணங்களைத் தெய்வத்திருமேனிகளுக்குச் சார்த்தக்கூடாது.
- சன்னதிக்குள் தேவையில்லாத பொருள்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளக் கூடாது.
- கர்பக்ருகச் சுவர்களில் “டைல்ஸ்” பொருத்தக் கூடாது.
- மடைப்பள்ளி ஊழியர் ,கோயிலுக்குள் தயாரித்த நைவேத்தியங்கள் மட்டுமே தெய்வத்திற்கு அர்பணிக்க வேண்டும்.
- மடைப்பள்ளி, தூய்மையாக நிர்வகிக்கப்பட வேண்டும்.
- ரூபாய் நோட்டு மாலை போன்றவை அணிவிக்கப்படக்கூடாது.
- பூஜா காலங்களில் நாதஸ்வரம் இசைக்கப்படவேண்டும். இயலாவிட்டால், நாதஸ்வர இசை ஒலிபெருக்கி மூலம் இசைக்கப் பட வேண்டும். பின்னர் தேவாரம் முதலிய அருட் பாடல்கள் ஒலிபெருக்கவேண்டும். ஓதுவார் இருந்தால், அவரே மாலைகளில் பாடலாம்.
- அபிஷேகத்தில் கலப்படம் உள்ள பொருட்களைச் சேர்க்கக் கூடாது. குறிப்பாக, பாக்கெட் பால் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- வஸ்திரங்கள் வீணாகாதபடி, பாதுகாக்கப்பட வேண்டும்.
- தினமும் நான்கு கால பூஜைகள் நேரம் தவறாது ஆகம விதிப்படி நடத்தப்பெற வேண்டும்.
- பிரதோஷம், மாத சிவராத்திரி,சோம வாரம், கிருத்திகை, சஷ்டி,சங்கட ஹர சதுர்த்தி, அஷ்டமி போன்ற விசேஷ நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படவேண்டும்.
- விநாயக சதுர்த்தி, ஸ்கந்த சஷ்டி,நவராத்திரி, மஹா சிவராத்திரி,கார்த்திகை சோம வாரம்,நடராஜர் அபிஷேகங்கள், தனுர் மாத பூஜை போன்றவையும் சிறப்பாக நடத்தப் பெறவேண்டும்.
- பிரம்மோற்சவம் , கோயில் மரபுப்படி நடைபெறவேண்டும்.
- கோவிலில் ஆலயம் பற்றிய தல வரலாற்றுப் புத்தகம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவேண்டும்.
- ஆலய அர்ச்சகரின் வீடு தக்க முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
- கல்வெட்டுக்கள் பாதுகாக்கப் பட வேண்டியது முக்கியம். அவற்றை மறைப்பதோ, அவற்றின் மீது வெள்ளை அடிப்பதோ,எழுதுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- ஆலய சுவர்களை sand blast செய்யக்கூடாது.
நல்ல முயற்சி! வளரட்டும்!
ஆதரவுக்கு நன்றி